வடக்கு வீதி வணங்காமுடி – 5
கதிரவன் சோம்பலாக கண்ணைக் கசக்கி கொண்டு விழிக்க உணர்வு குவிலாகத் தான் விடிந்தது இந்த விடியல்.
அது என்ன உணர்வு குவியல்? ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணம் செய்யலாம் என்ற கூற்றுக்கு எதிர் பதமாக.
பல ஆயிரம் உண்மை சொல்லி நிதர்சனம் உணர்த்திப் பேச்சோ பேச் சென்று பேசி பெண்ணை அலசோ அலசென்று அலசி.
முரண்டி நின்றவனே முன் நின்று சம்மதம் சொல்ல வைத்து ஷ்!…. ப்பா!….. அத்தனையும் சரி கட்டி இதோ திருமணம் வைபவம் இனிதே தொடங்கியது.
அன்பு, பாசம், நேசம், காதல், கடமை என்று பல உணர்வுகளைத் தீண்டி பார்க்க போகிறது இந்தத் திருமணம் வைபவம்.அதனாலோ என்னவோ இந்த விடியல் உணர்வுகளின் குவியல் தான் போலும்.
வானதி, அகிலா, பானு என மூத்த பெண்கள் சமையலில் இறங்க அவர்களுக்கு உதவியாக வந்து நின்றனர் அவ்வீட்டுப் பேரிளம் பெண்களான கன்னிகாவும் சித்ராவும்.
அவர்களுக்குத் துணையாக இந்துமதி மற்றும் மதுமிதா சிறு சிறு உதவி செய்து கொண்டு இருந்தனர். உறவினர்கள் அனைவரும் காலை விருந்துடன் சென்றுருக்க வீட்டில் உள்ளர்வர்களுக்கு மட்டும் சமையல் தயாராகி கொண்டு இருந்தது.
விசு மற்றும் விமலா முன் தினமே வந்து நல்ல பிள்ளையாக விசேஷத்தில் கலந்து கொண்டனர். இன்று காலை தான் முகூர்த்த கால் ஊன்றி பசுபதியின் திருமணத்திற்கு பிள்ளையார் சுழியிட்டனர்.கூட்டத்தை பார்த்து பயந்த விமலா மட்டும் அறைக்குள் முடங்கிக் கொண்டாள் அது தனி அத்தியாயம்.
“பானு விமலா பொண்ணு எங்க? வந்ததுல இருந்து பார்க்குறேன் அது முகமே சரியில்லை”
“என்கூடவே சரியா பேசலக்கா” பானு கை வேலை செய்து கொண்டே பதில் சொன்னார் அதற்குள் கன்னிகா இடையிட்டு.
“ம்மா சொல்றேன்னு கோச்சுக்காதீங்க ஸ்வாமி பொண்டாட்டியும் சரி, விசு பொண்டாட்டியும் சரி, கல்யாணம் ஆகும் போது பார்த்தது,
அப்புறம் அவங்க வலைகாப்பு, பாப்பா பொறந்ததுனு ஒரு நாலு அஞ்சு தடவை பார்த்து இருப்போம் அவ்வளவு தான். பேசி பழகுனா தானே ஓட்டுதல் வரும்” விமலாவின் விலகலை சரியாகக் கணித்தாள் கன்னிகா.
“அதுவும் போக அந்தப் பொண்ணுக இந்த மாதிரி கூட்டத்தைப் பார்த்து இருக்காதுங்க அந்த பயம் கூட இருக்கலாம்” அகிலாவும் அவர் பங்கிற்கு நாடி பிடித்தார்.
“ம்மா!… இந்துவும், மதுவும் வயசு பொண்ணு தானே அவங்க கிட்ட கூடப் பேச மாட்டேங்குதுங்க நீங்க வேற” அங்கலாய்த்துக் கொண்டாள் சித்ரா.
“நீ சொல்லுறதும் சரி தான் சிட்டு (பானுவின் செல்ல பிள்ளை சித்ரா ) உங்க சித்தப்பாக்கு கோபமே அதான் பெரியவன் கல்யாணம் பண்ணும் போதே இதெல்லாம் சொல்லிட்டார், ஆனா உன் தம்பிங்க ஒத்த காலுல நின்னுல கல்யாணம் பண்ணானுங்க”
“சித்தி கல்யாணம் பண்ணது தப்பில்ல இப்போ காதல் திருமணம் எல்லாம் சகஜம் தான் பெத்தவங்க எல்லாம் பிள்ளைகள் விருப்பமனு விட்டு கொடுத்து போயிடுறாங்க அதே போல அவங்களும் இருக்கனும் தானே,
பழகச் சில காலம் எடுத்தும், நம்பக் கூடச் சகஜம் ஆகலனா எப்படி? நம்ப குடும்பம் நம்ப மனுஷால்னு எண்ணம் வேணும் அதான் இங்க வருத்தம்” கன்னிகா மெய்யாக வருந்தினாள்.
“நீ சொல்லிட்ட நாங்க சொல்லல” பானு பெரு மூச்சு விட
“அடுத்து என்ன ரகமோ தெரியல வாரததுக்கு முன்னாடியே ஏகபோகமா வாக்கு வாதம். வந்த பிறகு என்னவோ? ஒன்னும் புரியல எல்லாம் கடவுள் கையில” வானதி புலம்பினார்.
“இத்தனி வருஷ குடும்ப வாழ்க்கையில சண்டை முரண் எல்லாம் எங்களுக்குள்ள வந்ததுண்டு நானும் சரி, வானதி அக்காவும்,பானுவும் சரி அப்பவே பேசி, கத்தி, சண்டை போட்டு முடிச்சுடுவோம் மனசுக்குள்ள கசப்பை அண்ட விட மாட்டோம், ஆனா இதுங்க மூணும் மூணு திசையால இருக்கு” அகிலா குரலில் அத்தனை கலக்கம்.
“நீங்க சொல்லறது சரிதான் க்கா எனக்கும் அந்தப் பயம் இருக்கு ஒருவேளை சகிக்க முடியாத சூழ்நிலை வந்தா……….” பானு அதற்கு மேல் யோசிக்க முடியாமல் வார்த்தைகளை முழுங்க.
“கண்ணும் வாயும் அது கூட சேர்த்து காதையும் இறுக்க முடிக்க வேண்டியது தான்” என்று முடித்து வைத்தார் வானதி.
அவரது கூற்றில் இரு காலப் பருவ பெண்களும் வியந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.பொதுவாக மாமியார் ஓரகத்திகள் என்றால் சில முரண்கள், உரசல்கள் இருக்கத் தான் செய்யும்.
வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த பெண்கள் ஓர் இடத்தில் வசிக்கும் போதுக் கருத்துக்கள் வேறு படுவது இயல்பு தானே, ஆனால் எந்த வித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் அதனை அழகாக இவர்கள் கடந்த விதத்தை எண்ணி வியந்து தான் போனார்கள்.
அதுவும் மருமகள்கள் இடுபாடு நடந்தால் என்ன செய்ய? என்ற பானுமதி கேள்விக்குத் தனியாக சென்று விடுவோம் என்ற பதிலை இளைய தலைமுறை எதிர்பார்த்து நிற்க. மூன்று மந்திகள் நிலையில் இருந்து கொள்ளலாம் என்று முடித்து வைத்த வானதியை என்னவென்று சொல்ல.
பெண்கள் இவ்வாறு பேசி கொண்டு இருக்கும் போதே வெளியில் ஸ்வாமிநாதனின் குரல்.. அவன் குடும்பத்தோடு உள்ளே நுழையும் அரவம் கேட்டு அனைவரும் வெளியில் வந்தனர்.
கூடத்தில் மனைவி மகள் சகிதம் நுழைந்தவனை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் ஈஸ்வர் “வா!… வா!…. ஸ்வாமிநாதா!… வா!…” என்றவர் தம்பி மகனை இறுக்க அணைக்க அருணகிரியும் எழுந்து வந்து அவனது கையைப் பற்றிக் கொண்டார்.
அவனும் அனைத்து “நல்ல இருக்கீங்களா பெரியப்பா?” என்றவன் அவர்களுடன் பேசி கொண்டு இருக்க மூத்த பெண்கள் அனைத்தும் பிள்ளையை கண்ணில் நிறைத்து நின்றனர்.
மீனு தயங்கி தயங்கி நிற்க வணங்காமுடி பொதுவாக வரவேற்றார் “எல்லாரும் வாங்க!..” என்றவர் தனது பேத்தியிடம் ஆசையாக நெருங்க. அவர் நெருங்குவதைப் பார்த்த குட்டி அனு தனது தந்தையின் நெஞ்சில் புதைந்து கொண்டு ரோஜா இதழை பிதுக்கி அழுக தயாராக.
ஒரு நொடி நின்றுவிட்டார் பெரியவர். தான் நெருங்கினால் பிள்ளை அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் என்பதைக் கணித்தவர் மேலும் நெருங்காமல் நின்று கொள்ள ஸ்வாமிநாதனுக்கு என்னவோ போல் ஆனது.
தன் நெஞ்சில் முகத்தை மறைக்கும் மகளது முகத்தை நிமிர்த்தி “பாப்பு தாத்தா டா!.. தாத்தா பாரு!” என்க மகனது அறிமுகத்தில் எரிச்சல் தான் வந்தது பெரியவருக்கு.
“அப்பாரு ரொம்ப சீக்கரம் சொல்லி கொடுத்துட்டாரு சாமி!….” நக்கல் குரலில் சொல்லியவர் மேலும் “இப்போ சொல்லுங்க தாத்தான்னு புதுசா எங்கன இருந்து வந்தான் இந்தத் தாத்தான்னு பிள்ளை யோசிக்கட்டும்,
அடிக்கடி வந்து போனா பழக்கம் வரும் ஆடிக்கு ஒருக்கா வந்து தாத்தா பாருனா அது எங்கன பார்க்கும் பாவம். இதோ இப்ப மாதிரி அழுகை தான் வரும்”
தந்தையின் நேரடி தாக்குதலில் தலை குனிந்து நின்றான் ஸ்வாமிநாதன் அவனுக்கே இந்த நிலையென்றால் மீனுவை சொல்லவே வேண்டாம்.
மீண்டும் ஓர் அடி நெருங்கிய வணங்காமுடி சற்று குனிந்து குழந்தையிடம் தேன் தடவிய மென்மை குரலில் “அழகு சிட்டுக் குருவி தாத்தா உங்கள தொட மாட்டேன் நீங்க உங்க அப்பாரு கிட்டையே இருங்க என்ன,
ஆனா இந்தப் பட்டுக் கன்னத்தை மட்டும் ஒரு தடவ தொட்டுக்கவா பாவம் தானே தாத்தா… கொஞ்சமா இதோ இப்படி” என்று ஒரு விரல் கொண்டு அதன் குண்டு கன்னம் தீண்ட அந்த மென்மையான வருடலில் கொஞ்சமே கொஞ்சம் பயம் குறைந்தது குருவிக்கு.
தந்தையின் நெஞ்சில் இருந்து முகத்தை நிமிர்த்தி வணங்காமுடியை பார்த்து கண்ணை சுருக்கி மீண்டும் தந்தையின் நெஞ்சில் தஞ்சம் கொண்டது சிட்டு அதன் ஒவ்வொரு அசைவையும் ரசித்தவர்.
“இப்போ இது போதும் பிறவு கொஞ்சம் கொஞ்சமா சிட்டுக் குருவி தாத்தா கிட்ட வருமா” என்றவர் குழந்தையிடம் பேசி விட்டு யாரையும் கருத்தில் கொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்க்க செல்ல.
போகும் தந்தையை ஏக்கமாக பார்த்து நின்றான் ஸ்வாமிநாதன் மீனுவிற்கு அடுத்த என்ன? எங்கு செல்ல? என்ன பேசவென்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மனைவியின் தடுமாற்றம் கண்டு கோபத்தின் உச்சியில் நின்றான் ஸ்வாமிநாதன்.
“எத்தனை நேரம் இங்கையே நிற்க போற என்னமோ யாரோ வீ…..” அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கன்னிகா அவர்களை நெருங்கி விட்டாள்.
இத்தனை நேரம் குடும்பமே அங்கே தான் இருந்தது வணங்காமுடியின் பேச்சு, ஸ்வாமியின் முக வாட்டம் மீனுவின் தடுமாற்றம் என அனைத்தும் அவர்கள் கண்ணில் இருந்து தப்பவில்லை.
இருக்கும் சூழல் அவர்களது கையைக் கட்டி போட கையறு நிலை தான் பெரியவர்களுக்கு.தம்பி தனது மனைவியைக் கடிந்து கொள்வது தெரிய அதற்குள் கன்னிகா நிலையை உணர்ந்து அவர்களை திசை மாற்றும் பொருட்டு.
“வா ஸ்வாமிநாதா! வாம்மா மீனு!..” முதல ரூமுக்கு போயி பாப்பாவை கவனி விமலா பொண்ணும் அந்த ரூமுல தான் இருக்கு” பட படவென பேசி சூழலை மாற்றி விட்டாள்.
“சரிங்கண்ணி” என்ற மீனு விட்டால் போதுமென ஓடியே விட்டாள்.
மீனு உள்ளே செல்ல ஸ்வாமிநாதன் “க்கா அம்மா எங்க?” அதுவரை அடுக்களை வாசலில் நின்றவர் அவன் அருகில் வந்து
“வா தம்பன்” எப்படி இருக்க?” என்க
“ம்மா!…” என்ற அழைப்பில் ஓராயிரம் தவிப்பு அடங்கியிருந்தது தாயை இறுக்கி அனைத்து கொண்டான். பானுவுக்குக் கண்கள் கரித்துக் கொண்டு வந்தாலும் அதனை அடக்கி கொண்டார்.
எதோ வேலையாக வந்த வணங்காமுடி ஒரு நொடி நின்று இக்காட்சியை கண்டவர் மீண்டும் தனது வேலையில் மூழ்கி விட்டார்.
ஸ்வாமிநாதன் தன்னை நிலை படுத்திக் கொண்டு “ம்மா விசு, பசுபதியெல்லாம் எங்க?”
“மேல இருக்கானுங்க நீ முதல சாப்பிடு அப்புறம் போயி அவனுகளைப் பாரு”
“மதியம் சாப்பிட்டுகிறேன்மா அவனைப் போயி பார்த்துட்டு வரேன்” என்றவன் தாயின் பதிலை எதிர் பார்க்காமல் மாடிக்கு விரைந்து விட்டான்.
*********
அங்கே மாடியில் மாமரத்து நிழலில் தம்பிகள் பேசி சிரித்துக் கொண்டு இருக்க. அவர்களை ஆர்ப்பாட்டமாக நெருங்கினான் “அடேய் நல்லவனே!…..”
ஸ்வாமிநாதனின் அரவத்தில் அவனைத் திரும்பி பார்த்த இருவரும் எழுந்து அவனிடம் விரைந்தனர்.பசுபதி அவனை இறுக்க அனைத்து விடுவிக்க “என்னடா புது மாப்பிள்ளை எப்படி இருக்க”
“எனக்கு என்ன நல்ல இருக்கேன் நீ எப்படினே இருக்க?”
சலிப்பு குரலில் “ஆமோகம் டா!….” அதை விடு பொண்ணு கூடப் பேசுனியா? வேணான்னு இருந்த பிறகு என்னடா ஆச்சு?”
“அதை தான் கதை கதையா சொல்லிக்கிட்டு இருக்கான் நீயும் ஜோதில கலந்துக்கோ…சான்சே இல்ல ஸ்வாமி நீ சொன்ன மாதிரி அப்பா தேர்வு செம தான் போ”
“அப்படி என்னடா ஆச்சு?” ஆர்வமாக ஸ்வாமி கேட்க இங்கு நடந்த கூத்தும், பெண் பேசியதையும் அதற்கு பசுபதியின் சேட்டையும், விசு சொல்ல சொல்ல ஒரே சிரிப்பு தான்.
வெகு வருடங்கள் சென்று கிட்டிய தனிமை உடன் பிறப்புகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது போலும் அப்படி ஒரு ரகளை.
உடன் பிறப்புகளின் கேலி கூத்தும் சிரிப்பு சத்தமும் கீழ் அறை வரை கேட்டது பெண்கள் எல்லாரும் சிரித்துக் கொண்டனர்.
இந்துமதி “மூணு மாமாவும் செட் ஆகியாச்சு”
“ஆமா! ஆமா! இனி அவங்களை சமாளிக்க முடியாது” மதுமிதா.
“விடுங்க டி! வேலை வேலைனு ஓடுற பிள்ளைங்க இது மாதிரி சுப நிகழ்வு நடந்தா தான் போச்சு. இல்லனா வீடு ,வேலைனு தான் வாழ்க்கை போகும்.
இந்த ஒரு வாரம் தானே அதுங்க நிம்மதியா இருக்கட்டும்” வானதி சொல்ல அனைவரும் அதனை ஆமோதித்தனர்.
*********
அங்கே அறைக்குள் வந்த மீனு கண்டது அழுது கொண்டு இருந்த விமலாவை தான்.அமர்ந்த வாக்கிலே முழங்காலில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டு இருந்தது பெண்.
“அச்சோ விமலா ஏன் அழகுற?” குழந்தையை இறக்கி விட்டு அவளிடம் விரைந்து முகத்தை நிமிர்த்த மீனு போராட அது முடியாமல் போகவும்.
“என்னமா? சொன்னா தானே தெரியும்? நானே நீ இருக்குற தைரியத்துல தான் இருக்கேன் அழாதே விமலா” பக்கத்தில் நின்ற அனு விமலாவை தொட்டு தொட்டு பார்க்க அந்த தொடுகையில் நிமிர்ந்தவள் அனு வை அனைத்து கொண்டு மீண்டும் அழுகை.
அடிக்கடி இருவரும் பார்த்து கொள்வதால் குழந்தைக்கு விமலா நல்ல பழகிய முகம். ஆனால் சித்தி என்றெல்லாம் உறவு கொண்டு அழைத்ததில்லை. அது சரி அவர்கள் உறவை கற்றுக் கொடுத்தால் தானே அது பழகும்.
“விமலா என்ன ஆச்சு அத்தைங்க மாமாங்க எதுவும் சொன்னாங்களா?”
“இல்ல மீனு”
“அப்புறம் என்ன”
“காலையில முகூர்த்த கால் வச்சாங்களா அப்போ என்னையும் அத்தைங்க மஞ்சள் வைக்கச் சொன்னாங்க. அவங்க சொன்ன படி நானும் செஞ்சிட்டு வந்தேன், அப்போ ஒரு பாட்டி என்ன நிறுத்தி ஏன் நீ இன்னும் உண்டாகலனு கேட்டாங்க எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு”
“உப்…. அது தானே வேற ஒண்ணுமில்லயே நான் கூடப் பயந்துட்டேன்”
“அவங்க மட்டும் இல்ல இதோட அஞ்சு ஆறு பேர் வந்து கேட்டுட்டு போயிட்டாங்க ஒருமாதிரி இருக்கு மீனு.இவர் நேத்து இங்க வந்ததோட சரி என்ன கண்டுக்கவே இல்லை அப்படியும் நான் பேச போனா என்ன சொல்லறார் தெரியுமா?”
“என்ன சொன்னாரு” பயந்து கொண்டே மீனு கேட்க.
“வருஷம் முழுக்க உன்கூடத் தானே பேசுறேன் இந்த ஒரு வாரம் என்ன விடுன்னு சொல்றார். இதுக்கு என்ன அர்த்தம் மீனு? அப்போ அவருக்கு நான் கடுப்பா தெரியுறேன் அதானே” மீனுவின் பயம் இன்னும் கூடியது.
“எனக்கு என்ன பதில் சொல்லுறதுனே தெரியல விமலா நானும் அதே நிலையில தான் இருக்கேன்” என்றவள் தற்போது நடந்ததைச் சொல்ல இரு பெண்களுக்கும் இந்த ஒரு வாரத்தை எண்ணி கதி கலங்கி போனது.
இவர்களுக்கு இத்தனை தயக்கம் எதனால்? எட்ட நின்று பார்த்து பழகும் உறவா இது? ஊன் கலந்து, உயிர் உருகி தன்னுள் ஒரே உதிரமாகக் கலந்து நின்ற கணவனின் வேர்கள் அல்லவா சதாசிவம் இல்லம்.
தன்னில் கொண்ட தலைமுறைகளுடன் கணவனது தலைமுறையும் கலந்து. இந்த வேரில் வேர் விட்டு நிற்கும் பெண்கள் அல்லவா இவர்கள்.தங்கள் உரிமையை நிலை நாட்டி வளம் வர வேண்டிய இடத்தில் ஒதுங்கி மருகி நிற்பது யார் தவறு.
இவர்கள் பேசி கொண்டு இருக்க வானதி கதவை திறந்து கொண்டு வந்தார் இரு பெண்களும் அவரது தீடீர் வருகையில் ஒரு நொடி தடுமாறி எழுந்து நின்றனர்.
“பாப்பா என்ன சாப்புடுவா? பால் எதுவும் குடிப்பாளா? நீங்க எதுவும் சாப்பிடுறீங்களா?” என்று கேட்டு கொண்டிருந்தவர் கண்ணில் விமலாவின் கண்ணீர் பட பதறி போனார்.
“விமலா பொண்ணு ஏன் அழகுற? என்ன ஆச்சு?” என்க.
அவரது கேள்வியில் இன்னும் அழுகை வந்தது பெண்ணுக்கு அதுவரை அமைதியாக அழுத விமலா இப்போது ஸ்ருதி ஏத்தி அழுக” வானதி பயந்தே போனார்.
“பானு! அகிலா! இங்க வாங்க” அவர் போட்ட கூச்சலில் குடும்பமே வந்து நின்றது. பெண்கள் அனைவரும் அறைக்குள் மீனுவையும் விமலாவையும் சூழ்ந்து கொள்ள.
குட்டி அனு முட்டை கண்ணை வைத்து கொண்டு ஒவ்வொரு உறவு பெண்களையும் உத்து பார்த்து கொண்டு இருந்தது.
“அக்கா என்ன ஆச்சு”
“விமலா பொண்ணு அழுகுது என்னனு தெரியல பிள்ளைகளை கவனி பானு என்றவர் நீங்கெல்லாம் வாங்க” என்று மற்ற பெண்களை வெளியில் அழைத்துச் சென்றார்.
கன்னிகா,“ம்மா நான் போயி பேசவா”
“இல்ல கன்னி அது சரிவராது முதல அதுங்க பானுக்கிட்ட பேசட்டும் அப்போதான் சரி வரும்” வானதி சொல்ல அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
அனைவரும் சென்ற பின் உள்ளே வந்த பானு “அம்மாடி என்ன ஆச்சு? எதுக்கு இந்த அழுகை? யாரும் எதுவும் சொன்னாங்களா?” பானுவின் தன்மை பேச்சில் அழுகை மட்டுப்பட விமலா நடந்தவற்றைச் சொல்ல.
என்னவோ ஏதோவென்று பதறிய பானுவுக்கு அப்போது தான் மூச்சே வந்தது. ‘இந்தப் பொண்ணு கேட்டதுக்கே இந்த அழுகை அழுகுது இதே வேற மாதிரி பேசிருந்தா என்ன பண்ணி இருக்கும்’ யோசிக்கவே முடியவில்லை அவரால்.
“அம்மாடி இது போலப் பேச்செல்லாம் சகஜம்…..” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வெளியில் வணங்காமுடியின் குரல் பானு!…………
பெயர் சொல்லி பொதுவில் அவர் அழைப்பதில்லை ,ஆனால் இன்று அழைத்தார் குரலில் அத்தனை கடுமை. இத்தனை வருட திருமண வாழ்வில் அவர்களுக்குள் வரும் இரண்டாவது உரசல் இது.
‘தென்னை வைத்தால் இளநீர்!
பிள்ளை பெற்றால் கண்ணீர்!’ என்ற கூற்று மெய்ப்பித்து நின்று மூத்த ஜோடியின் அன்பை சோதித்துப் பார்ப்பதை விதியென்று சொல்வதைத் தவிர வேற வழியில்லை.