அதிகாலையை எட்டி பிடிக்க காத்து நிற்கும் வேளையில் ஸ்ரீ ரங்கம் பூக்கடை என்று சொல்ல படும் வீதியில் நின்று தர்க்கம் செய்து கொண்டு இருந்தார் வணங்காமுடி.
எதிரில் இருப்பவனைப் பேசவே விடாமல் அவர் தன் போல் அவனை சாடி கொண்டே சென்றார்.மணி அதிகாலை 3.30 இன்னும் சில மணி நேரத்தில் விடிந்து விடும்.
இன்று திருமணத்தை வைத்துக் கொண்டு பூ கார பையனிடம் தர்க்கம் செய்து கொண்டு இருக்கும் வணங்காமுடியை என்னதான் செய்வது என்று முழித்துக் கொண்டு நின்றார் வேலன்.
இனி விட்டால் பேசி கொண்டே இருப்பான் என்று எண்ணியவர் அவர்களிடம் நெருங்கி “வணங்கா மணி என்னானு பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல விடிய போகுது தூங்கலனாலும் செத்த படுக்கனுமுடா இல்லாட்டி என் உடம்பு தாங்காது”
திருமணம் வேலை சுழட்டி அடிக்க ஓய்ந்து போனார் வேலன் அவரால் இனி சற்று நேரம் கூட நிற்க முடியாத நிலை.
உடலெல்லாம் ஓய்வுக்கு அழைக்கத் தூங்க சொல்லி இமைகள் கெஞ்ச சோர்வாகத் தனது நண்பனிடம் கெஞ்சி கொண்டு இருந்தார்.
“வேலா! படிச்சு படிச்சு சொன்னேன்டா ஜாதி முல்லை வேணும்னு இப்போ வந்து மறந்துட்டேனு சொல்லுறான் இவனை என்ன செய்ய” பல்லை கடித்தார் மனிதன்.
“ஷ்.!….. முடியல சாமி” வேலன் தலையை இருபுறமும் ஆட்டி கொண்டவர் அந்தப் பையனிடம் திரும்பி “ஏண்டாப்பா மறந்த” பாவம் போல் கேட்டு வைக்க.
அவரை விடப் பாவமாகப் பதில் அளித்தான் பூக்காரன் “அண்ணே பையன் புதுசு சொல்லி அனுப்பியும் மறந்துட்டு வந்துட்டான் நான் என்ன செய்ய,
கொஞ்சம் பொறுத்தா வந்துரும்ணே புதுசா கட்டி தரேன் பூ எடுக்கத் தான் திரும்ப பையன் மார்க்கெட் போயி இருக்கான்” என்றவனை எப்படி கடிந்து கொள்வது
“வணங்கா அவன் தான் புதுசாவே கட்டி தரேன்னு சொல்றான்ல வா டா கொண்டு வந்து மண்டபத்துக்கு கொடுக்க சொல்லுவோம்”
“வேணாம் வேலா இருந்து வாங்கிக்கிட்டே போவோம் உனக்கு முடியலைன்னா நீ கிளம்பு” அவர் பிடியில் நின்றார்.
“உன்ன!………… நான் அந்தக் கடை வாசல் படுகிறேன் நீ பூ வாங்கிகிட்டு எழுப்பு” என்றவர் வணங்காமுடியின் பதிலை எதிர் பார்க்காமல் எதிர் கடை வாசலில் துண்டை விரித்துப் படுத்து விட்டார் பாவம்.
இன்னும் வணங்காமுடி பூக்காரனை முறைத்துக் கொண்டே நிற்க அடித்துப் பிடித்து வண்டியை ஓட்டி வந்து அவரிடமிருந்து காப்பாத்தினான் கடை பையன்.
அவனது தலை தெரியவும் ஓடியவன் “வந்துட்டியா? வா! வா! வணங்கா அண்ணே உயிரை வாங்கிட்டாரு டா மூட்டையைப் பிரி…”
வண்டியை கூட ஒழுங்காக நிறுத்த விடாமல் அவசரமாக ஓடி முட்டையைத் தூக்கி வந்த பூ காரர். மூட்டை யை பிரித்து ஒரு கை ஜாதி முல்லையை அள்ளி கைலியில் போட்டுக் கொண்டு, அதனைப் பூ கட்டும் மேஜையில் கொட்டி நூலை எடுத்து பூ தொடுக்க போக.
“நல்ல உருட்டி பந்தா கட்டு என் கை அளவு போதும்”
“சரிண்ணே” என்றவன் அவர் சொல்வது போல உருட்டி பந்து போல் கட்ட தொடங்கினான். இப்படி கட்டினால் பூ மலர்ந்தால் அழகாக இருக்கும்.
பூவை கட்டி வாங்கிக் கொண்டவர் பணத்தைக் கொடுத்து விட்டு வேலனிடம் நெருங்கி “வேலா வா” என்றழைக்க
“அப்..பா!… செத்த படுக்க விட மாட்டேங்கர டா” என்றவர் அலுத்துக் கொண்டே வண்டியில் ஏறினார்.
அவரிடம் கையில் உள்ள பூவை கொடுக்க அந்தச் சிறு பொட்டலத்தைப் பார்த்தவருக்கு மனம் விட்டே போனது அத்தனை ஆதங்கம்.
“அடேய்!… வணங்கா!… ஒரு கையளவு பூவுக்காடா அந்த வசவு பாவம் டா பூக்காரன். நீ பேசுன பேச்சுக்கு நான் பத்து முழமாவது வாங்குவேன்னு பார்த்தேன்”
“அவங்களுக்குப் பூ தொங்குனா பிடிக்காது…. என் சம்சாரம் அதுக்கு மேல வைக்க மாட்டாங்க டா”
“ரொம்பத் தான்” என்றவருக்கு மனது ஆறவில்லை போலும்
“நீ போட்ட சண்டைக்காவது வாங்கி இருக்கலாம்…..சரி உன் சம்சாரத்துக்குத் தான் முடி இருக்கா வூட்டுல பொண்ணுகளுக்கா பஞ்சம் கூடப் பூ வாங்க வேண்டியது தானே” என்றவருக்கு அசராமல் பதில் அளித்தார் வணங்கா.
“ப்ச் நேத்தே மல்லிகை பூ எல்லாருக்கும் வாங்கிக் கொடுத்துட்டேன், ஆனா என் சம்சாரம் தான் பளிச்சுனு தெரியனும் அதான் அவங்களுக்குப் பிடிச்ச ஜாதி முல்லை” வணங்காமுடியின் பேச்சில் நோந்த மனிதர் இனி பேசினால் தாங்காது என்று எண்ணினார் போலும் கப்பென வாயை மூடி கொண்டார்.
இருவரும் மண்டபத்தை நெருங்கியது தான் தாமதம் வண்டியில் இருந்து இறங்கிய வேலன் “அப்பா சாமி இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு என்ன தேடாத” என்றவர் நிற்காமல் வேகமாக நடக்க.
நண்பனது செயலை பார்த்துச் சிரித்துக் கொண்டே மேல் அறைக்குச் சென்றார் வணங்காமுடி.அன்று பானுமதியை வாங்கு வாங்கென்று வாங்கியவர் தான். அதன் பின் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே இருவரிடமும்.
அதுவும் வணங்காமுடி முகத்தைப் பார்த்து பேச பானு தரையைப் பார்த்து தான் பதில் அளிப்பார்.
இப்படியே ஒரு வரம் சென்று இதோ திருமண நாளும் வந்தாயிற்று அத்தனை வேலையிலும், உரசல்களிலும் பானுக்குப் பார்த்து பார்த்து எடுத்த சேலையை அவரிடம் கொடுத்து,
அதற்குத் தோதாக நகை கொடுத்து இதோ அவருக்குப் பிடித்த ஜாதி முல்லை மலரை வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்க செல்கிறார்.
அறையின் கதைவை தட்ட வந்து திறந்தது என்னவோ வானதி தான் பாதித் தூக்கத்தில் இருந்தவரை பார்த்து “அண்ணி பானு எங்க? பூ கொடுக்க வந்தேன்” பேச்சு அவரிடம் இருந்தாலும் பார்வை தூங்கி கொண்டு இருந்த மனைவியை கண்டு கொண்டது.
“பூவா?.. நேத்து பூ கடை பரமசிவம் வந்து கொடுத்துட்டாரே கொழுந்து”
“அது உங்களுக்கு அண்ணி” என்று அலட்டாமல் சொல்ல புரிந்து கொண்டவர் முகத்தில் சிறு குறும்பு சிரிப்பு
“ஓ!…. பானுக்கா கொழுந்து சரிதான்” என்றவர் பூ வை வாங்கிக் கொண்டு “ஆனா நீங்க இரண்டு பேரும் சண்டை அதானே” என்க பக்கென சிரித்தவாறே மறுமொழியின்றி கீழே சென்று விட்டார்
பூவை மேஜையில் வைத்து விட்டுப் படுத்தவரை.
“அக்கா யாரு”
“கொழுந்து தான் அகிலா”
“என்னவாம் எதுவும் விட்டு போச்சா”
“அதெல்லாம் இல்லை பொண்டாட்டிக்கு பூ கொடுத்துட்டு போறார் அதுவும் ஜாதி முல்லை”
“ஓ !………….”
“விடியட்டும் வச்சுக்குவோம் பானுவை அகிலா” கண்டிப்பா என்று ஓரகத்திகள் சிரித்துக் கொண்டனர். மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் வீட்டு மக்கள் குடும்பமாகத் தங்கி கொள்ள இந்த அறைக்குள் ஓரகத்திகள் மூவரும் சேர்ந்து கொண்டனர்.
****************
இங்குத் தந்தையை விட அலும்பு செய்து கொண்டு இருந்தான் மகன். தூங்கி கொண்டு இருந்த கன்னல் மொழி இயற்கை உபாதைக்காக வெளியில் வர,
அதே சமயம் நண்பர்களுடன் அங்கே கொட்டம் அடித்துக் கொண்டு இருந்த பசுபதி கண்ணில் பதமாக விழுந்து வைக்க யார் கருத்தையும் கவராமல் கன்னலை கவர்ந்து சென்றான் கள்வன்.
தன் கையைத் திடீரென ஒரு கரம் பிடித்திழுக்கப் பயந்தவள் கத்த போக “நாந்தான்” என்றவன் அவளை மேல் மாடிக்கு இழுத்துச் சென்று,
படியின் வளைவில் நிறுத்தி வைத்து அவள் முகம் பார்க்க தூக்கத்தில் கண்களைப் பிரிக்க முடியாமல் இருந்தாள் பெண்.
“அடிபாவி! இழுத்துட்டு வந்து இருக்கேன் கொஞ்சமாவது பயம் இருக்கா தூங்கி வழியிற”
“நீங்க தானே….. என்ன செய்யணும் இப்போ விடுங்க தூக்கமா வருது”
“விளங்குமடி ஏய்! முழிடி….” என்றதும் பிரிக்க முடியாத இமைகளைப் பிரித்து ஓர் நொடிக்கு குறைவாக அவனைப் பார்த்தவள் மீண்டும் கண்ணை மூடி கொண்டு அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“கிழிஞ்சுது இந்தத் தூங்கு தூங்குறாளே!… புலம்பியவன் அடியேய்!….ஆறு மணிக்கு முகூர்த்தம் நியாபகம் இருக்கா”
“ஹ்ம்ம் ……..”
“சரிதான் இப்படி ஒரு மருமகளுக்குத் தான் எங்க வீட்டு ஆளு அந்த ஆட்டம் போட்டாரா விடியட்டும்” என்றதும் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்த அண்ணாந்து பசுபதியின் முகத்தைப் பார்த்தவள்.
“இந்தக் கருவா குஞ்சுக்கு நான் போதும்” என்றதும் தான் அவளை இழுத்து வந்த நோக்கம் பிடிபடத் தன்னிடமிருந்து அவளைப் பிரித்தவன்.
“என்ன திமுருடி உனக்கு அன்னைக்கு மனுஷன் என்ன நிலைமையில இருந்தேன் புரியாம அந்தப் பேச்சு பேசுற நீ” என்றதும் தூக்கம் கலைய அவனிடமிருந்து தள்ளி நின்றவள் விளையாட்டை கைவிட்டு.
“அகிலா அத்த அம்மா கிட்ட சொன்னாங்க அப்போதான் விஷயம் தெரியும்” என்றவள் தலையைக் குனிந்து கொண்டு “மன்னுச்சுக்கோங்க நீங்க பொண்ணு பார்க்க வந்து பிடிக்கலைனு என்கிட்டையே சொல்லவும் கோபம் அதான் வம்பு பண்ணிட்டேன்”
அவளது பேச்சில் பதறியவன் “ஏய்!… ஏய்!… நான் எங்க பிடிக்கலைனு சொன்னேன் படிக்கலைனு தான் சொன்னேன்மா”
“அதான்….. நான் என்ன பண்ண? பள்ளி கூடம் அம்மாவும் அனுப்பலை எனக்கும் அது பிடிச்சு போச்சு வீட்டுலையே இருந்துட்டேன்” என்றதும் ஒரு மாதிரி ஆகி போனது.
“சரி!.. சரி!… அதுக்குன்னு என்ன அப்படி கூப்புடுவியா நீ வெள்ளை தோளுங்குற திமிராடி” கோபம் போல் நெருங்க பயந்து விட்டது பெண்.
“என்ன பிடிக்கலையா?…” கலக்கமாகக் கேட்டு வைக்கத் தூக்கி வாரி போட்டது என்னவோ பசுபதிக்கு தான்.
“அம்மா தாயே! இந்த பேச்சை விடு தயவு செஞ்சு யார் காதுலையாவது விழ போகுது….. என்னடி!.. இரண்டு மணி நேரத்துல கல்யாணத்த வச்சுக்கிட்டு இந்தக் கேள்வி கேக்குற”
“அப்புறம் ஏன் என்னைக் கொண்டு சண்டை கட்டுறீங்க வீட்டுல. நான் அந்த வீட்டுக்கு வரத்துக்கு முன்னாடியே இப்படியானு பயமா இருக்கு” உண்மையில் கலங்கி விட்டது அரிவை பெண் திருமணம் முடிவாகி வந்த தினத்தன்றே உரசல் தானே.
“யார் சொன்னது உன்னைக் கொண்டுனு அப்படி பார்த்தா நான் தான் ஆரம்பம்” தன்னையே நொந்து கொண்டான் பசுபதி.
“சரிடி அப்புறம் பேசலாம் உன்ன தேட போறாங்க உன்னைக் கொண்டு எதுவும் இல்லை சரியா. யோசிக்காத இந்த நாள் திரும்ப வராது இந்த நிமிசத்தை அனுபவி போ” என்றவன் செல்ல போனவளை பிடித்து இழுத்து வைத்து,
புது மாப்பிள்ளையின் மயக்கத்தை அப்பட்டமாக கண்ணில் தேக்கி “போனா போற எதுவும் இல்லையா!” என்று கேட்டு வைக்க
“என்… என்ன வேணும்” அவனது பார்வையில் தடுமாறியது பெண்.
“எது கொடுத்தாலும் வாங்கிப்பேன்” என்றதும் குறும்பு பெண் சரியாகக் கொடுக்க அலறி விட்டான் பசுபதி அவனை நன்றாகக் கிள்ளி விட்டு ஓடியவள் கடைசிப் படியில் நின்று கொண்டு அவனைப் பார்த்துப் பழிப்பு காட்ட.
“இருடி இன்னும் சில மணி பொழுது போகட்டும் அப்புறம் இருக்கு உனக்கு” என்றவன் படியில் இறங்க ஓடியே போனது அரிவை பெண்.
பார்த்து வைத்த திருமணம் அதுவும் உறவு முறையில் என்றாலும் ஒரு முறை பேசிய பசுபதியும், கன்னலும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டும் உரிமையாகச் சீண்டிக் கொண்டும் இருப்பது எப்படி?
வெகு சுலபமான பேச்சும் அழைப்பும் வெகு நாள் பழகியது போல் உணர்வை ஏற்படுத்த அதை இருவருமே கவனிக்க வில்லைப் போலும்.
இதைக் கணித்துத் தான் வணங்காமுடி பொருத்தம் செய்தாரோ என்னவோ.அது சரி அவரது அனுபவம் வயதை கொண்டு பார்த்தால் நாற்பதை நெருங்குகிறதே அவருக்குத் தெரியாதா என்ன? தனது மகனுக்கு ஏற்ற இணையை.
*********
திருமணத்திற்கே உரிய பரப் பரப்புடன் சதாசிவ பிள்ளை இல்லத்துத் திருமணம் வெகு உற்சாகமாகத் தொடங்கியது.
சந்தனமும் பன்னீரும் போட்டி போட்டு கொண்டு மனம் வீச திசை எங்களிலும் தேவதைகளின் தரிசனம் காளைகளின் ஓர விழி பார்வையும் கன்னியரின் கேலி கூத்தும் அத்தனை அழகு.
உறவினர்கள் வந்த வண்ணம் இருக்க அவர்களை வரவேற்று கொண்டு இருந்தனர் அவ்வீட்டு ஆண்கள்.
வீட்டின் மாப்பிள்ளைகளாகக் கன்னிக்காவின் கணவனும் சித்ராவின் கணவனும் ஈஸ்வர்,அருணகிரி மற்றும் வணங்காமுடியுடன் இருந்து வரவேற்றனர்
நுழை வாயிலில் இந்துமதி, மதுமிதா அவர்களது அண்ணிகள் என்று நான்கு பெண்கள் வரவேற்கும் பொறுப்பை கையிலெடுக்க கலை கட்டியது திருமணம் வைபவம்.
“பானு பொண்ணை அழைச்சுட்டு வர போறாங்க நீ வா” தனது சம்பந்தியான விமலா மற்றும் மீனு தாயாரிடம் பேசி கொண்டு இருந்தவரை அகிலா அழைக்க.
“இதோ வரேன் க்கா…” என்றவர் நீங்களும் வாங்க என்று இருவரையும் அழைக்க அனைவரும் மேடைக்குச் சென்றனர்.
“அகிலா கொழுந்து கொடுத்த பூ எங்க” சத்தமாக தான் கேட்டு வைத்தார் வானதி.
“ஐயோ!… மறந்துட்டேன்” என்றவாரே மீண்டும் அறைக்குச் சென்று வணங்காமுடி கொடுத்த பூவை எடுத்து வந்து பானு கையில் திணித்தார் அகிலா அத்தனை பெண்களும் மல்லிகை சரத்தில் மின்ன.
“அக்கா எனக்கு மட்டும் ஏன் ஜாதி முல்லை” பூவை தலையில் சூடி கொண்டே பானு கேட்க.
“அதை கொழுந்து கிட்ட தான்மா கேட்கணும் மூணு மணிக்கு மார்க்கெட்டுல ஒரே தகராறு பண்ணி வாங்கிட்டு வந்து இருக்கார்”
வானதி கேலி புரியாமல் பக்கத்தில் உள்ள விமலாவின் தயார் தகராறு என்றதில் பயந்து “ ஐயோ!… ஏங்க?”
“அவர் பொண்டாட்டிக்கு அந்தப் பூ தானே பிடிக்கும்” என்றதும் பெண்கள் கொல்லெனச் சிரிக்கச் சங்கடமாகி போனது பானுவுக்கு.
சம்பந்தி, முக்கிய உறவின் சிறு பெண்கள் அது போக இரு மருமகள்கள் இருக்க அவருக்கு ஒருமாதிரி ஆகி போனது.
“அக்கா!…” சிணுங்கி வைத்தார்
“சரி!.. சரி!…. பானு பேரன் பேத்தி எடுத்தாச்சு கொழுந்து கிட்ட சொல்லி வை” விடாமல் வார மீண்டும் சிரிப்பு வெடித்தது இதனையெல்லாம் விமலாவும் மீனுவும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இது தான் முதல் முறை புகுந்தகம் வந்து சீராடுவது. அதுவும் இந்த ஏழு நாட்களில் இரு பெண்களும் கண்டது அவர்களது பிணைப்பை தான் இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி வேறு பெண்களுக்கு.
விமலாவும் மீனுவும் ஓரகத்திகள் தான் என்றாலும் உறவு கொண்டு அழைத்ததில்லை பெயர் கொண்ட அழைப்பு அதுவும் மரியாதையான அழைப்பு மட்டுமே.
ஒரு சில விடயங்கள் மட்டுமே பேசி கொள்வார்கள்.அது போக வருடத்தில் ஒரு முறை புத்தாண்டு அன்று நேரில் பார்ப்பது தான் அவர்களது உறவு நிலை இத்தனைக்கும் ஒரே ஊரில் வசிப்பவர்கள் வேறு.
ஆனால் இங்குத் தன் மாமியார் படித்தவர் அந்த பகட்டு சிறிதுமின்றி பழகுவதை பார்த்து ஆச்சிரியம் தான் இரு பெண்களுக்கும்.
இங்கு நடந்த உரசல்கள் பெரியவர்களின் கோபம், பாசம், அன்பு, விட்டு கொடுத்து போவது என்று அவர்களுக்குள் பிணைப்பை பார்த்து அசந்து நின்றனர்.
இருவரும் பேச்சின் போது “விமலா இவங்க எல்லாம் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு ஆடாதது தான் குறை’ என்று கிண்டல் அடிக்க.
“ப்ச் அப்படியெல்லாம் இல்ல விமலா அவங்கவங்க சுயத்தை விட்டு கொடுக்காம… விட்டு கொடுத்து வாழறாங்க.
மத்த படி குடும்பம்னா பேச்சு, சண்டை, சச்சரவு எல்லாம் இருக்கு ம் தான். என்ன அதை உடனே பேசி முடிச்சுடுறாங்க அதான் வெளில தெரியல” சரியாகக் கணித்துக் கூறினால் மீனு.
கணிப்பை கட்சிதமாக பிடித்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும் ஆனால் அதற்கு நாட்கள் பிடிக்குமோ?……
********
திருமணச் சடங்கு நடக்க வணங்காமுடியை அழைத்து வர சொல்லி பெற்றவர்களுக்குப் பாத பூஜை செய்தான் பசுபதி.
மணப்பெண்ணும் அவ்வாறே தனது பெற்றவர்களுக்குச் செய்ய அனைத்தையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு நின்றனர் ஸ்வாமியும், விசுவும்.
அவர்கள் திருமணமும் இது போல் தான் நடந்தது, ஆனால் பெண் வீடு தெற்கையும், ஆண் வீடு வடக்கையுமாக முறுக்கி நின்றனர்.
ஒரு மனதாகி நின்ற திருமண நிகழ்வில்லை காதல் மட்டுமே இனித்துக் கிடக்க மற்றவை காண அப்போது நேரமில்லை போலும் இவருக்கும், ஆனால் இப்பொழுது ஒவ்வொரு நிகழ்வும் ஏக்கத்தைக் கொடுத்தது.
“கெட்டி மேளம்!… கெட்டி மேளம்!….” ஐயர் குரல் கொடுக்க மங்கள நாணை பெற்றவர் மகிழ பெண்ணுக்குப் பூட்டினான் பசுபதி.
உற்றார், ஊரார் சூழ அத்தனை தேவர்களையும் அழைத்துச் சாட்சியாக நிறுத்தி. இதோ தனது வாழ்வின் அடுத்தக் கட்டத்தை எட்டி பிடித்தான் பசுபதி தகப்பன் துணையோடு.
யாரும் அறியா வண்ணம் நீயே சதம் இனி என்பது போல் ஓர் இனிய அணைப்பு வேறு பெண்ணுக்கு கொடுத்து கலக்கம் போக்கி தங்கப்பனது பெயரை நிலை நாட்டினான். அதன் பின் திருமண விளையாட்டுகள் வர அதில் லயித்தனர் இளவட்டங்கள்.
***************
காஞ்சிபுர பச்சை வண்ண பட்டு பானுவின் உடலில் கொஞ்சி விளையாட. அதற்குத் தோதாக அட்டிகை மின்ன தலையைப் பின்னி,
ஒரு கையளவு ஜாதி முல்லை வைத்து, போதை கொள்ளச் செய்த தன்னவள்,மீது மித மிஞ்சிய ஏக்கம் கொண்ட வணங்காமுடி ஒட்டி உரசி ரகளைச் செய்து கொண்டு இருந்தார்.
உறவினர்களை அழைத்து பார்த்து பார்த்து சாப்பிட அமர வைத்தவருடன் நின்று கொண்டு இருந்த பானுவை வேண்டுமென்றே இடித்துக் கொண்டே இருக்கப் பொறுத்து பொறுத்து பார்த்தவர் ஒரு கட்டத்துக்கு மேல் வணங்கா எல்லை மீற
“தண்டல்காரரே என்ன அராஜகம் இது” என்று பல்லை கடிக்க
“அப்பாடா டைப்பிஸ்டாம்மா பேசியாச்சா சந்தோஷம் இனி ஒன்னும் செய்ய மாட்டேன். வந்தவங்களைக் கவனிக்க போறேங்க…. பிறகு வரேன் உங்கள கவனிக்க” என்றவர் அடுத்தப் பந்திக்கு ஆட்களைக் கூப்பிட செல்ல போகும் அவரைச் செல்லமாகத் திட்டி கொண்டார் பானு
“சேட்டை!.. சேட்டை!…” கணவன் தன்னை பேச வைக்க எடுத்த முயற்சியை எண்ணி சிரித்தவரை கலைத்தது அம்மா என்ற குரல்.
“ம்மா!” என்றழைத்து கொண்டே விசு வர
“என்ன பட்டு” முகம் கொள்ளா சிவப்புடன் பானு கேட்டு வைக்க
“என் மாமியார் உங்கள கூப்புடுறாங்க” முகத்தை முந்நூறு கோணத்தில் வைத்துக் கொண்டு விசு சொல்ல கலவரமாக அவனுடன் விரைந்தார் பானு. கணவன் கொடுத்த சில நேர இனிமையைச் சுவைக்க முடியாமல் செய்தது பிள்ளை வரம்.
தங்களது அறையில் கணவன் மிதமிஞ்சிய காதலோடு மனைவியை அணைக்க வரும் போது அம்மா!… என்று இருவருக்கும் நடுவில் வந்து பிள்ளை படுத்துக் கொள்ளும்.
அதற்கு என்ன எதிர்வினை புரிய முடியும் கணவன் மனைவியால்?…. அப்படி ஓர் நிலையில் நின்றனர் பானுவும் வணங்காமுடியும்.