“என்னங்க!… சம்பந்தியம்மா வந்து இருக்காங்க” காலை குளியலை முடித்து கிளம்பி கொண்டு இருந்தவரை பார்த்து பதற்றத்தோடு பானுமதி சொல்ல.
மனைவியைப் பார்த்துக் கொண்டே வேட்டியை கட்டியவர் “எதுக்குங்க இந்தப் பதற்றம்”
“பயமா இருக்குங்க”
“வர வர சின்னப் பிள்ளையா ஆகிட்டே வரீங்க போங்க…. நீங்க நிக்கிறது பார்க்க எப்படி இருக்கு தெரியுமா?” குறும்பாக கட்டு வைக்க.
“எப்படி இருக்கு?”
“வீட்டுப் பாடம் எழுதாத புள்ள வாத்தியார் கிட்ட பயந்து முழிக்குமே அது மாதிரி இருக்கு நீங்க என் முன்ன நிக்கிறது” மீசை துடிக்க சொல்ல
“தண்டல்காரரே விளையாடுற நேரமா இது பயந்து வருதுங்க ”
“அட வாங்க டைப்பிஸ்ட்டம்மா எதுவா இருந்தாலும் பார்த்துக்கிடலாம்” என்றவர் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
**********************
அன்று பசுபதி திருமணத்தன்று விசு பானுமதியை அழைக்க அவரோ என்னவோ? ஏதோ? என்று பதறிக் கொண்டு வந்தார்.
பானுவின் பதட்டத்தை பார்த்த ஈஸ்வரும் அவர் பின்னே செல்ல அங்கே விமலா தனது தாயாருடன் துணி பையை கையில் வைத்து கொண்டு வெளியில் செல்ல காத்திருந்தாள்.
பானுமதி அவரை நெருங்கி “என்னங்க சம்பந்தி” என்றவர் பார்வை கலவரமாக விமலாவின் பையில் பதிந்து மீள அதனை கண்டு கொண்ட பெரியவர்.
“பதறாதீங்க சம்பந்தி நான் விமலாவை என்கூட எங்க அண்ணன் வீட்டுக்கு அழைச்சுட்டு போறேன்” என்றதும் இன்னும் பயம் கூடியது அதற்குள் ஈஸ்வர் அவர்களை நெருங்கி “என்னம்மா பானு? என்ன ஆச்சு?”
“இல்லங்க பெரிய மாமா விமலாவை அவங்க மாமா வீட்டுக்கு அழைச்சுட்டுப் போறாங்களாம்” பானுவின் பேச்சுக்கு ஓர் நிமிடம் மௌனம் கொண்டவர்.
“சாப்பிட்டு பிறகு போகலாம் சம்பந்தி”
“கண்டிப்பாங்க சாப்பிட்டு தான் போவேன் ஒரு வார்த்தை சொல்லிட்டு அழைச்சுட்டு போகலாம்னு தான் வர சொன்னேன்”
“சரி இருங்க நான் வணங்காவை அனுப்பி வைக்கிறேன்” என்றவர் விரைந்து தனது தம்பியிடம் விடயத்தைச் சொல்லி அனுப்பி வைக்க அவரும் இவர்களை நோக்கி வந்தார்.
அருகில் நெருங்கியவர் தனது மகனையும் மனைவியையும் ஓர் பார்வை பார்த்து வைக்க இருவரும் அவரது பார்வையில் அரண்டு நின்றனர்.
“சொல்லுங்கம்மா? என்ன அவசரம் யாரோ போல உடனே கிளம்புறேனு சொல்லுறீங்க…. இங்க எதுவும் சங்கடமா? யாரும் எதுவும் பேசிட்டாங்களா?”
“அய்யயோ அதெல்லாம் இல்லங்க சம்பந்தி இங்க வச்சு எதுவும் சொல்ல முடியாத நிலை என்ன தப்பா எடுக்காதீங்க” என்றவரை மேலும் சங்கடப் படுத்தாமல்.
“சரிங்க சாப்பிட்டு போங்க” என்றவர் தனது மகனிடம் “திரும்பி சாப்பிட வச்சுக் கொண்டு போயி விட்டுட்டு வாங்க என்ன”
“சரிப்பா”
மீண்டும் அவர்களிடம் திரும்பியவர் “ஒரு மூணு நாள் போகட்டும் சம்பந்தியம்மா வீட்டுல வச்சுப் பேசலாம் வீட்டுக்கு வாங்க” என்றவரை பார்த்து
“நானே இந்த விஷியத்தை எப்படி பேசுறதுனு பயந்துகிட்டு இருந்தேன் நீங்களே சொல்லிடீங்க இதுவே போதும் கண்டிப்பா வரேன்” என்றவர் மகளை அழைத்துக் கொண்டு சாப்பிடும் இடம் நோக்கி செல்ல.
அனைவரும் ஒரு வித குழப்பத்தோடு அடுத்த வேலைகளைப் பார்க்க செல்ல. விசு விமலாவை முறைத்து கொண்டே சென்றான்.
**************
இதோ இன்று திருமணம் முடிந்து மூன்று நாட்கள் கடந்து விட்டது .திருமண ஆரவாரம் சற்று அடங்க மணமக்கள் மறு வீட்டு சடங்கு மட்டுமே மீதம் இருந்தது.
அதுவும் இரு நாட்கள் தள்ளி என்று முடிவாக தற்போது வீட்டு மக்கள் மட்டுமே.இதுவே பேச சரியான தருணம் என்று வந்திருந்தார் விமலாவின் தாய்.
ஈஸ்வர், வானதி, அருணகிரி, அகிலா, மகன்கள் மூவரும் மற்றும் அவரது மனைவிகள் மட்டும் இருந்தனர். பேத்திகள் இருவரும் தங்கள் பெற்றோருடன் தஞ்சைக்குச் சென்று விட்டனர்.
மீனு குழந்தைக்கு உணவை ஊட்டி கொண்டு இருக்க விமலா தாயுடன் அமர்ந்திருந்தாள். புதுவரவு கணவனின் பின் நின்று வேண்டிகை பார்த்தது.
அவளுக்கு இது புதுச் சூழல் அல்லவா பார்க்கும் அனைத்தும் புதுமையாக இருக்க படு ஸ்வாரஸ்யமாக வேடிக்கை பார்த்தது.
அறைக்குள் இருந்து வெளியில் வந்த வணங்காமுடி “வாங்க சம்பந்தியம்மா” என்று வணக்கம் வைக்க அவரும் வணங்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
நவ நாகரிகமாக இருந்தாலும், விமலாவின் தயார் பழமைவாதி தான் போலும். அவரது பேச்சும் நடத்தையும் வணங்காமுடியை அப்படி தான் எண்ண வைத்தது.
“சொல்லுங்கம்மா நானும் உங்க உடன் பிறப்பு மாதிரி தான் என்ன சங்கடம் உங்களுக்கு” ஆரம்பமே நீயும் என் குடும்பம் பார்த்து பேசு என்பது போல் பங்காக சொல்லி வைத்தார்.
“உங்களை கொண்டு சங்கடம் இல்லங்க சம்பந்தி எல்லாம் நம்ப பிள்ளைங்களைப் பத்தி தான்” நான் வணங்காமுடி சம்பந்தியாக்கும் என்று ஒரே வார்த்தையில் அடித்து விட்டார் விமலாவின் தாயார்.
“என்ன பத்தி நான் சிலது சொல்லிக்கிறேன் சம்பந்தி, விமலா அப்பா இறக்கும் பொது அவளுக்கு வயசு ஆறுங்க,
நான் எங்க அண்ணண் வீட்டுக்கு வந்துட்டேன்.அவர் தான் எங்களைப் பார்த்து கிட்டது,வயசு போயி தான் கல்யாணமே பண்ணிகிட்டார் அதுக்கும் காரணம் நாங்க தான்,
அவரை பேசி சரி கட்டி தான் கல்யாணம் பண்ணி வச்சேன்.கல்யாணம் பண்ணதும் தனியா வந்துட்டேன் ஒரே வீட்டுல இருக்க முடியாத சூழ்நிலை”
“சரிதாங்க வந்த பொண்ணும் நம்மை அனுசரிக்கனும் இல்லையா?” சரியாக அவரது பேச்சை கணித்தார் வணங்காமுடி.
“ஆமாங்க அதே தான் அவளும் நல்ல பொண்ணு தான் ஆனா நமக்குன்னு ஒரு இடம் வேணும்…… ஆண் இல்லாத வீடுனு, தனியா அனுப்ப மாட்டேன்னு அண்ணன் ஒரே சண்டை. ஏன்னா? அப்போ எனக்கு வயசு முப்பது தான்” ஒருவித சங்கடத்தோடு நிறுத்தினார் அவர்.
“புரியுதுங்க தனுச்சு நிக்கிற வயசு இல்ல. சமூகத்துல தனியா வந்தாலும் பல போராட்டத்தைப் பார்க்கனும், மானமா பொழைக்கனும் இல்லையா?” யோசனை போல் வணங்காமுடி பேசினார்.
“அதனால தாங்க அண்ணண் வீட்டு பக்கமே வீடு பார்த்து இருந்துக்கிட்டேன்.இவங்க அப்பா உதவி பணம் வந்துச்சு .அது போக அரசு வேலை அவருக்கு அதுல பென்ஷன் பணம் வரும் இதையெல்லாம் வச்சு தான் அவளை வளர்த்தேன்,
அவளும் நல்ல படிச்சா, நல்ல வேலை, கல்யாணம் பேச்சு எடுக்கும் பொது மாப்பிள்ளையைக் கொண்டு வந்து அறிமுகம் படுத்துனா எனக்குப் பெருசா மறுப்பில்ல ஆனா எங்க அண்ணனுக்கு இவ மேல ரொம்ப வருத்தம்,
நீ பார்த்த கல்யாணம் தானே இனி நீயே எல்லாம் பார்த்துக்கோனு சொல்லிட்டார்.எனக்கு அவர் தானே எல்லாமே, ஆனா பிள்ளைக்காக அவரையும் பகைச்சு கிட்டேன்,
இப்போ என்கிட்ட வந்து என் பொண்ணு அழுகுறா . என்ன? ஏதுன்னு? கேட்க நான் மட்டும் தான் இருக்கேன்” என்றவர் நிலை அப்பட்டமாகப் புரிய வணங்காமுடியின் பார்வை விசுவை தொலைத்தது.
***************
தந்தையின் பார்வையில் எச்சில் விழுங்கி நின்றான் மகன்.
“சம்பந்தியம்மா உங்க நிலை எனக்கு நல்லா புரியுது ஆம்பளைங்களே குடும்பத்தை நடத்த முடியாம ஓடுற காலத்துல,
ஓத்த பொம்பளையா இருந்து பொண்ணை நல்ல வளர்த்து கரை சேர்த்து இருக்கீங்க,இதுவே பெரிய செயல் என்ன ஒரு வருத்தம் இதெல்லாம் எங்களுக்கு இப்போதான் தெரிய வருது”.
“அப்போ ஆற அமர பேசி தெரிஞ்சுக்க நேரமில்லையே அந்த நேரத்தை நம்பப் பிள்ளைங்க கொடுக்கலை”
“சரியான வார்த்தை …. அந்த வருத்தம் எனக்கும் இருக்கு சரி சொல்லுங்க இப்போ என்ன பண்ணலாம்”
“சம்பந்தி கல்யாணமாகி வருஷம் அஞ்சு போகுது குழந்தை இல்லை. அதைக் கொண்டு சின்னச் சின்ன விரிசல் வருது போல.இந்த விரிசலை இப்போ பார்த்து சரி பண்ணலனா…..” இந்த இடத்தில் அவர் நிறுத்த.
“மொத்தமும் போயிடும்” என்று முடித்து வைத்தார் வணங்காமுடி சில நொடி கண்களை மூடி மௌனம் கொண்டவர் கண்களை திறந்து.
“அம்மாடி மருமக பொண்ணே!.. இங்க வாங்க!….” விமலாவை பார்த்து வணங்காமுடி அழைக்க ஒருவித பயத்தில் வந்து நின்றாள் விமலா.
“நடுவரே நீங்களும் தான்” விசுவையும் அழைத்தார் பொதுவாக அவர் நடு மகனை சீனி பட்டு என்று தான் அழைப்பது என்று திருமணம் ஆனதோ அன்றே அந்த அழைப்பை நிறுத்தி விட்டார் மனிதர்.
மகன்களிடம் பேச்சையும் குறைத்து கொண்டார். பிள்ளைகள் மீது எதிர்பார்ப்பு கூடுதல் போலும் அது சரியும் போது நாசுக்காக விலகி கொண்டார் வணங்காமுடி .
இருவரும் அவர் முன் வந்து நிற்க இருவரையும் பார்த்தவர் “உங்க தினசரி வேலை என்னம்மா? அதாவது விடியல் தொடங்கி இரவு வரை”
“அங்கிள்!……” விமலா சொல்ல தொடங்கும் முன் அவசரமாகக் குறுக்கிட்டவர்.
“அம்மாடி!… சாமி!.. அந்த வார்த்தை சொல்லாதீங்களேன் வாய் நிறைய மாமான்னு சொல்லுங்க,
இல்லையா அப்பான்னு சொல்லுங்க.இந்த அங்கிள் வேணாமே நான் என்னங்க உங்க பக்கத்து வீட்டுக் காரனா” சற்றுக் கடுமையாகத் தான் கேட்டு வைத்தார்.
அவரது கடுமையில் பயந்த விமலா “இல்ல… இல்லங்க மாமா!…”
“ஆஹான் இப்படியே கூப்புடுங்க…. சரி சொல்லுங்க உங்க தினசரி வழமை என்ன?”
“காலையில ஏழு மணிக்கு அவர் போகனும், நானும் எட்டு மணிக்கு கிளம்பிடுவேன் வேலை முடிஞ்சு இரண்டு பேரும் வீட்டுக்கு வர எட்டு மணி ஆகிடும்”
“இது போலத் தான் மீதி உள்ள அஞ்சு நாளும் போகும் இல்லையா?”
“ஆமாங்க மாமா!”
“எட்டு மணிக்கு வந்து திரும்பச் சாப்பாடு தயார் பண்ணி சாப்பிட்டு அப்புறம் சின்ன சின்ன வேலை செய்ய இருக்கும்”
“ஆமாங்க மாமா!”
“அதுலையே உடம்பு அலண்டு போயிடும் அப்புறம் தூங்கிடுவீங்க” என்றதும் தான் அவர் கேட்க வரும் உட்பொருள் புரிந்தது இருவரிடமும் மௌனம்.
“சனி? ஞாயிறு?”
“சனி கிழமை அம்மாவை பார்க்க போயிடுவேன், ஞாயிறு முழு நாளும் வெளில தான் மாமா”
“சரிதான் இதுல எங்க இருந்துங்க பிள்ளை வரும்” என்றதும் இருவரும் ஒரு சேர தலையைக் குனிந்து கொண்டனர் குடும்ப உறுப்பினர்கள் என்றாலும் இந்த பேச்சு இருவருக்கும் சங்கடம் தானே.
இருவரும் மௌனம் சாதிக்க “சம்பந்தியம்மா அவங்க வாழ்க்கை முறை உங்களுக்குப் பிடிபடுதா?…. தனி குடித்தனம் செய்றவங்களுக்கு தனுச்சு இருக்க நேரமில்ல என்னத்த சொல்றது” அலுத்து கொண்டார் மனிதர்.
“எனக்கும் அது புரியாம தான் சம்பந்தி தவிக்கிறேன்” அவருக்கும் அதே எண்ணம் தான். தனி குடித்தனம், வேண்டிய தனிமை இருந்தும் விரிசலுக்கு என்ன காரணம் என்று தான் புரியவில்லை.
“அம்மாடி விமலா நான் சொல்லுறதை புரிஞ்சுக்க முடியுதான்னு பாருங்க” என்றவர் தனது நீண்ட வாக்கு வாதத்தை தொடங்கினார்.
“காலையில தொடங்குற வேலை பொழுது சாயும் வரை அதுவும் எட்டு மணி நேரம் உட்காந்தே செய்யனும் இல்லையா?”
“ஆமா!.. மாமா!… ஆனா பிரேக் உண்டு”
“ஹ்ம்ம்………. அது போக வேலை பளு இருக்கும் அவங்களுக்கும் அதே நிலை தான் இல்லையா?” தனது மகனை சுட்டி காட்டி கேட்க.
“ஆமா மாமா!…. என்ன விட அவருக்கு வேலை கூடத் தான் அவர் பெரிய போஸ்டிங் வேற”
“ஆகா இரண்டு பேரும் சரி சமமா தான் ஓடுறீங்க?…. ஆனா யாருக்காக ஓடுறீங்க?…… குடும்ப சுமை? கடன் எதாவது இருக்கா? இல்ல நீங்க உங்க அம்மாவுக்காகவும், அவர் அவங்க அப்பா அம்மாக்காக ஓடுறாரா ?” சபாஷ் சரியான கேள்வி தம்பியை மெச்சியது அருணகிரி மனம்.
“ஐயோ!… கடன் சுமையெல்லாம் இல்ல மாமா அப்பா பணத்தை பேங்க்ல போட்டு இருக்கு, அது போகப் பென்ஷன் வரும் அந்தப் பணமே அம்மாக்கு போதும்?” விமலா வேகமாக சொல்ல
விசுவோ “நான் கொடுப்பேன் நீங்க தான் வாங்க மாட்டீங்களே” சமயம் பார்த்து சலித்து கொண்டான்.
“எந்த வித பிக்கள் பிடுங்கல் இல்ல அப்போ எதுக்கு இந்த ஓட்டம்?”
“அந்த ஊருல இந்தச் சம்பாத்தியம் ரொம்பக் கம்மி தான்ப்பா அது போக எங்க வேலையெல்லாம் இருக்குற வரை சம்பாரிச்சுக்கன்னும்”, விசு.
“அது அவ விருப்பம் எனக்கு அவ வேலைக்குப் போகலான கூடப் பிரச்சனை இல்ல குடும்பத்தை நான் பார்த்துக்குவேன்” முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு விசு பதில்.
“சரி இது ஒரு பகுதி அடுத்து…………உங்க சம்சாரம் மூணு வேளையும் சரியான நேரத்துக்கு சாப்பிடு வாங்களா?” இதைக் கேட்டதும் பேய் முழி முழித்தான் விசு.
இந்தக் கேள்வியைக் கேட்க காரணம் உண்டு இங்கிருந்த இந்த ஏழு நாட்களில் விமலா காலை உணவை தொடவே இல்லை என்பதைப் பானு கவனித்து சொல்லி வருத்தப்பட்டார் அதை எண்ணி தான் கேள்வி.
“பதில் சொல்லுங்க”
“தெரியலப்பா எனக்கு அதைப் பார்க்கவெல்லாம் நேரமில்ல சில நேரம் நானே காலையில சாப்பிட மறந்துடுவேன்” பெரும் உண்மை விளம்பியாக விசு சொல்லி வைக்க.
“ரொம்ப நல்லது” என்றவர் பார்வை பானுவிடம் செல்ல தலையைக் குனிந்து கொண்டார் பெண்.
“இந்த அலட்சியம் எப்போ இருந்து கல்யாணத்துக்கு முன்னாடி………..” வணங்காமுடி கேட்டு முடிக்கவில்லை பதில் அம்பாக பெண்ணிடமிருந்து வந்தது.
“அதெல்லாம் கேட்பார் மாமா மூணு நேரம் போன் பண்ணுவார்.இப்போ கொஞ்ச வருசமா தான் என்னைப் பார்த்தாலே எரிஞ்சு பேசுறார்,
பாதி நாள் பேசவே மாட்டேங்கரார் நானே பேசுனாலும் எதாவது பேசிக்கிட்டே இருப்பியானு திட்டுறார்,
இப்போ கூட இங்க வந்து என்ன விட்டதோடு சரி கல்யாணத்துல கூட என்னை கண்டுக்கவே இல்லை மாமா, நான் எது செஞ்சாலும் அவருக்குப் பிடிக்கலை,
குழந்தை இல்லனு யோசிக்கிறார் போல, இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஆனா சொல்ல முடியல சுருக்கமா சொல்ல போன என்ன சுத்தமா ஒதுக்குறார் மாமா,இதே நிலையில போன நாங்க பிரி…………” பட படவென வார்த்தையை கொட்டியவளை நிறுத்தினார் வணங்காமுடி.
“அம்மாடி பொறு” பிரிவு என்ற வார்த்தையை முடிக்கக் கூட விடாமல் தடுத்தார் மனிதர்.
விமலா முகத்தை மூடி கொண்டு கதறி அழுக விசு திகைத்துப் போனான்,விமலாவின் தாயின் கண்ணிலும் கண்ணீர்.
பானு ஓடி வந்து மருமகளை அனைத்துக் கொள்ள வானதி விமலாவின் தாய் அருகில் வந்து அவரது கைகளை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்.
“அம்மாடி அழுகாத” விமலாவின் முதுகை ஆதரவாக தடவி கொண்டே சொன்னார் அகிலா.
அருணகிரி, “ஏதா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம் சாமி நம்பி வந்த பொண்ணை விட்டுருவோமா அழுகாதப்பா” என்றார்.
அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த புது வரவு விமலாவின் அழுகையை பார்க்க சகிக்காமல் கணவனைத் தாண்டி வந்து விமலாவை தூக்கி நிறுத்தி
“அக்கா என்னக்கா இம்புட்டு பெரியவுக இருகாக விட்டுருவாங்களா? வாங்க முகம் கழுவிட்டு வரலாம்” என்று அழைத்துச் செல்ல வணங்காமுடி முகத்தில் சிறு புன்னகை அவரது பார்வைப் பசுபதியை தீண்ட அவன் பார்வையோ மனைவியிடத்தில்.
கன்னல் விமலாவை அழைத்துச் செல்ல அவளது தாயாரை பார்த்த வணங்காமுடி.
“சம்பந்தியம்மா செய்தி இது தான், உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் தொன்னூறு நாள் இவங்களுக்கு வாழ்க்கை புரியலை வயசு அப்படி” என்றதும்
தலையை ஒப்புதலாக ஆட்டி வைத்தார்.
“வாழ்க்கை புரியும் போதுக் கையில குழந்தை இருந்து இருக்கனும் இவங்களுக்கு அதுவுமில்ல…. ஏன்னா? குழந்தைனு வந்துட்டா அதைச் சுத்தியே உலகம் போகும் ஒருத்தருக்கு ஒருத்தர் குறை சொல்லவோ தப்பு கண்டு பிடிக்கவோ நேரம் இருக்காது”
“நூறு சதவீதம் உண்மை வணங்கா” ஈஸ்வர்.
“அதுனால தான் அந்தக் காலத்துல கல்யாணம் ஆன உடனே பிள்ளையைப் பெத்துக்கச் சொல்றது.எத்தினி நாள் தான் காதல் இனிக்கும் சொல்லுங்க?,
இதுங்க இரண்டும் தான் வீட்டுல… ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு எத்தனை நாள் இருக்க முடியும், அதான் சின்னச் சின்ன உரசலுக்கு கூட பலமா பிராண்டி நிக்குதுங்க”
“நீங்க சொல்லுறது எல்லாமே சரிதான் சம்பந்தி இதுக்கு என்ன வழி?”
“அப்பா நான் குழந்தையைப் பத்தி யோசிக்கல அவ என்னவோ சொல்றா, அவளைக் கேக்குற மாதிரி தான் என்னையும் கேட்குறாங்க”
“சரிதான், ஆனா அவங்க பொண்ணு பேச்சு கொஞ்சம் எடக்காதான் வரும்” மகனுக்கு பதில் கொடுத்தவர் முகத்தைக் கழுவி கொண்டு வந்து நின்ற விமலாவை பார்த்து.
“அம்மாடி நீ விரும்பி தானே கல்யாணம் பண்ண”
“ஆமா மாமா”
“அப்போ எத்தினி அடம் பண்ணி கல்யாணம் பண்ணிங்களோ அதை விட அடமா இருந்து வாழ்ந்து காட்டனும் அது தான் வைராக்கியம் கையை இறுக்கி பிடிச்சுக் கோங்க விடாதீங்க ,
பல வருஷம் தாண்டி கூடப் பிள்ளை வரம் கிடைக்கட்டும். அதுவும் இல்லையா? நீ அவனுக்குப் பிள்ளை அவன் உனக்குப் பிள்ளை எந்த ஒரு நிலையிலும் பிரிவை பத்தி பேச்சே கூடாது”