அந்தரங்கம் பயிலும் ஏகாந்த இரவு போலும்.நிலவு காதலியை தன்னுள் புதைத்துக் கொள்ளத் துடித்த மேகம் தன்னைக் கொண்டு பெண்ணை மூட,
அவர்களது காதல் விளையாட்டைப் கண்ட காற்றுக்கு ஏக கடுப்பு.ஒவ்வொரு முறை நிலவை மேகம் மூடும் போதும் பலம் கொண்டு வீசி அவர்களது காதலை கலைத்து தனது கடுப்பை காட்டி நின்றது.
இயற்கைக்கே இந்நிலை என்றால் நம் வணங்காமுடியின் நிலை சொல்லவா வேண்டும்.
பசுபதி தனது அறையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான், அவனது எண்ணம் முழுதும் வீட்டின் நடப்பை சுற்றியே. அத்தைகளுடன் அடுக்கலை வேலைகளை முடித்து விட்டு வந்த கன்னல் மொழி கணவனது தோற்றம் கண்டு அவனை நெருங்கி மாமா!.. என்றழைக்க
“ஹ்ம்ம்!……” அதில் கலைந்தவன்
“என்ன யோசனை?” என்றவளை ஆழ்ந்து பார்த்தனே ஒழிய எதுவும் பேசவில்லை.
“என்ன மாமா அப்படி பாக்குறீங்க”
ஒரு பெருமூச்சுடன், “பல யோசனை” என்றவன் எழுந்து அமர்ந்து கொண்டான்.
“மாமா நடு மாமாவை பத்தி யோசிக்கீறீங்களா?”
“அவரை மட்டும் இல்லை எங்க அப்பா, அம்மா, பெரிய அண்ணன், அப்புறம் நீ..”
“நானா? என்ன பத்தி என்ன யோசனை?” சிறு புன்னகையுடன் பெண் கேட்டு வைத்தது அவளுக்கு வியப்பு வேறு.
“உன் கூட என் வாழ்க்கை பயணம் வெறும் பத்து நாள் தான், ஆனா எனக்கு அது போலவே தெரியல எதோ கல்யாணமாகி பல வருஷம் போன மாதிரி இருக்கு, அது எப்படி வெகு நாள் பழக்கம் போல அப்படி ஒரு இயல்பு” அவனது பேச்சில் மீண்டும் புன்னகை கொண்ட பெண்.
“எனக்கும் எல்லார் போலவும் கொஞ்சமா பயம் இருந்துச்சு, ஆனா இப்போ அது இல்லை.எனக்கு முன்னாடியே அத்தை மாமாவா தெரியுமே பார்க்க போனா நீங்க தான் புது ஆள்….
அதுவும் இங்க நல்ல இருக்கு…எங்க வீட்டுல நான், அம்மா, அப்பா மட்டும் தான்.எங்கையும் என்னை போக விட மாட்டாங்க, எங்க வீட்டுக்கும் உறவுகள் போக்கு வரத்து கணிசம்,
ஆனா இங்கன எத்தினி பேர் இருக்கீங்க .அத்தைங்களோட பொழுது நல்லாவே போகுது, இன்னும் இந்து, மது வந்துட்டா ஜாலியா இருக்கு” குழந்தையின் குதூகலத்தோடு தனக்கு எட்டிய வரையில் பிடித்தம் சொன்னது அரிவை.
“அடிப்பாவி!.. ஜாலியா இருக்கியா?”
“ஆமா! மாம்ஸ் இது எல்லாத்தையும் விட இந்தக் கருவா குஞ்சை ரொம்பப் புடிச்சு போச்சு” என்றவள் அவனது மீசையைப் பற்றி இழுக்க அது கொடுத்த வலியில் சன்னமாக அலறினான்.
“ஆ!….. விடுடி” என்றதும் கல கலவெனச் சிரித்துக் கொண்டே விட்டவள்.விளையாட்டை சற்று நிறுத்தி அவனது கைகளைப் பற்றித் தன்னுள் பொத்தி கொண்டு.
“மாமா எதுவும் யோசிக்காதீங்க எல்லாம் நல்ல படியா முடியும்” அவள் எதைச் சொல்கிறாள் என்பதைக் கண்டு கொண்டவன்.
“ப்ச்…. அண்ணனுக்குப் போன் அடிச்சா எடுக்க மாட்டேங்குறார் ஸ்வாமி அண்ணன் பண்ணியும் எடுக்கலையாம் எனக்கு பயமா இருக்குடி”
“விட்டு பிடிப்போம் யோசிக்கட்டும் மாமா”
“குழந்தை இல்லனு ரொம்ப வருந்தி இருக்கார், அண்ணன் கிட்ட வேலை டென்ஷன் வேற, எல்லாம் சேர்ந்து தான் அவர் அப்படி நடந்துக்குறார்”
“மாமா உங்க அண்ணனை மட்டுமே பாக்குறீங்களே”
“அண்ணியும் பாவம் தான் ஆனா……” அவனை தடுத்தவள்
“இது எல்லாம் அலட்சியம்….இப்போ இருக்குற கால கட்டத்துல நூத்துல எண்பது சதவீத பெண்களுக்குக் குழந்தை வரம் சிக்கல் தான்.இது கால மாற்றம் மாமா,
அந்தக் காலத்துல இருந்த வாழ்க்கை முறையே வேற” முகத்தை வெகு தீவிரமாக வைத்துக் கொண்டு பெண் பேச தொடங்க மெல்லிய அதிர்வு கொண்டு மனைவியின் பேச்சை உள் வாங்கினான் பசுபதி.
“அப்போ வேலைக்குப் போற பெண்கள் குறைவு. வீட்டு வேலை மட்டும் தான் அதை வேலைனு சொல்லுறதை விட ஆரோக்கியமான உடல் பயிற்சின்னு கூடச் சொல்லலாம். அதுவும் போக வேண்டிய ஓய்வு, தூய்மையான காற்று, சத்தான சாப்பாடுனு எல்லாமே கிடைச்சுது ஆனா இப்போ?..
வேலை,வீடு,ஓட்டம்,அசுத்தம்,நோய்னு வாழ்க்கை ஓடுது.வேண்டிய தனிமை இல்லை அப்படியே தனிமை இருந்தாலும் அதை முழுசா அனுபவிக்க முடியல அன்னைக்கு மாமா எப்படி பாயிண்டை பிடிச்சார் பார்த்தீங்களா?..
“அதெல்லாம் ஒன்னுமில்ல அவர் பேச்சுல நியாயம் இருக்கு அதான் சொன்னேன்”
“என்ன பெரிய நியாயம். எல்லார் முன்னாடியும் வச்சு குழந்தை விஷயம் கேட்பாங்களா” தந்தை தனது அண்ணன் அண்ணியை நிற்க வைத்து பேசியது பசுபதிக்கு அத்தனை கோபத்தைக் கொடுத்தது.
தனியாக வைத்து இதையெல்லாம் கேட்டால் என்ன? என்ற எண்ணம் அவனுக்கு.
“ஹலோ!…. உங்க செய்தி நாலு சுவத்துக்குள்ள இருந்தா அவர் ஏன் கேட்க போறார்? வீட்டார் முன்னாடி பேச்சு வரவும் தானே மாமா கேட்டார்.அதுமில்லாம தப்பெல்லாம் நடு மாமா மேல வச்சுக்கிட்டு அவர் என்ன செய்வார்?”
“எங்க அண்ணன் என்னடி பண்ணார்”
“உங்க அண்ணன் எதுவுமே பண்ணலை அதான் இங்க பிரச்சனை”
“என்ன நக்கலா”
“ப்ச் கோப படாதீங்க மாமா எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் மாமா எதுவும் பண்ணலை அது தான் பிரச்சனைக்கு மூல காரணம்.
உட்காந்து பேசி குழந்தைக்கு மருத்துவம் பார்த்து இருக்கலாம்.கையில வேண்டிய காசு இருக்கு பிறகு எதுக்கு வீம்பு?..
நல்ல வசதியான ஊரு… நல்லா மருத்துவம் இருக்கு, எதுவுமே முடியாத பட்சத்துல எங்கன திரும்புனாலும் செயற்கை கருத்தரிப்பு இருக்கு பிறகு என்னங்க.
சரி குழந்தையை விடுங்க விமலாக்கா கூட நேரம் செலவு பண்ணலாம் தானே.உட்காந்து நேரம் ஒதுக்கி பேசுனாலே பாதி பிரச்சனை முடிஞ்சுடும்”
“அருப்புக்கோட்டை!…. சென்னையைப் பத்தி என்ன தெரியும் உனக்கு? அங்க வாழ்க்கை முறையே ஓட்டம் தான் இதுல பேச எங்க நேரம்”
“கொழுப்பு தானே உங்களுக்கு ரொம்ப அலட்டிக்காதீங்க. திங்க கூட நேரமில்லாம ஓடி… உடம்பு கெடுத்து, அது மேலும் கெட்டு போக, வார இறுதி நாளுல கண்டதையும் தின்னு குடிச்சுத் திரியிறது அம்புட்டுப் பெருமை ஹ்ம்ம்!…”
“அடியேய்!…… உல்லாச வாழ்க்கை முறையை ரொம்பத் தான் அசிங்க படுத்துற”
“பின்ன என்ன நீங்க? கதிர் வீச்சு தர மினசாரச் சாதனம் கணினி. அந்த அக்கா அதுல தான் வேலை செய்றாங்க.ஒரே இடத்துல எட்டு மணி நேரம் உட்காந்து வேலை பார்த்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்” படிக்காத பெண் பகுத்தறிவு பேசி நிற்க வாயடைத்துப் போனான் பசுபதி.
“நேரத்துக்கு சாப்பாடு இல்லை நல்லா தூக்கமில்லை பிறகு எப்படி?”
அவனது மௌனம் பெண்ணை தளர்த்த “சரி விடுங்க இதுக்கு ஒரு வழி இருக்கு மாமா”
“என்ன?”
“அந்த அக்கா இங்கன வந்து கொஞ்ச நாள் இருந்தா. இந்த வம்பு சண்டைக்கே வேலை இருக்காது கொஞ்சம் பிரிவு கொடுத்தா போதும் மனசு தெளிஞ்சு போகும்,
நான் இருக்கேன் அத்தைங்க இருக்காங்க உடம்பையும் தேதி விட்டுரலாம் ரொம்ப நாள் வேணாம் கரு தங்குற வரைக்கும் நடு மாமா வாரம் ஒருமுறை சிரமம் பார்க்காம வந்து போக…” முடிக்க விடாமல் மனைவியைக் கட்டி கொண்டவன்.
“படிக்காத மேதைடி நீ!…… எங்க அப்பா ஒரு தீர்க்க தரிசி தான் போ” என்றவன் அணைப்பு இறுகியது.
படிப்பில்லை, ஓயாத வெகுளி பேச்சு, காட்டு சிறுக்கி என்றெல்லாம் பேசிய வாய் கன்னல் மொழியின் நுண் அறிவை கண்டு திகைத்து நின்றது.
‘புத்தக அட்டையை வைத்து உள்ளிருக்கும் கதையைத் தீர்மானம் செய்யாதே’ என்ற கூற்றுக்கு ஏற்ப இருந்தாள் கன்னல் மொழி.
இந்த நல்ல புத்தகத்தை ஆழ்ந்து நோக்கி அதன் கருத்துக்களை நுகர்ந்து, ரசித்து, ருசித்துப் படிக்கச் தொடங்கி விட்டான் பசுபதி. மனம் அவ்வப்போது யாரும் அறியாமல் தந்தையின் தேர்வை ரகசியமாக மெச்சியது.
***********
இங்கு வணங்காமுடி அறையில்……….
“அது என்னங்க அது? சின்னவர் மூச்சுக்கு முன்னூறு டி!…. சொல்லி மருமக பொண்ணைக் கூப்பிடுறார்” என்றதும். கட்டிலில் சாய்ந்து புத்தகம் வசித்துக் கொண்டு இருந்த பானுமதி வணங்காமுடியை பார்த்து முறைத்து வைத்தார்.
“என்னங்க பார்வை?”
“உங்க மருமக பொண்ணு மட்டும் எப்படி கூப்பிடறாங்களாம்?”
“அவங்க என்ன?,,, வாய் நிறைய மாமான்னு தான் கூப்பிடுறாங்க”
“ஹான் அது வெளில உள்ளர என் மகனை கருவா குஞ்சினு கூப்பிடுறா.நேத்து தான் அகிலா அண்ணி பார்த்து சொன்னாங்க” என்றதும் படுத்திருந்தவர் அதிர்ந்து எழுந்து எழுந்தவர்.
“சுத்தம்” என்று தலையில் கை வைக்க அவரை பார்த்துச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது மேலும் அவரை வம்பு செய்யும் பொருட்டு.
“தண்டல் காரரே! இதுக்கே இப்படின்னா அடுத்து நான் சொல்ல போறதை கேளுங்க”
“டைப்பிஸ்ட்டம்மா வேணாமுங்க நான் பேசாட்டு படுத்துக்குறேன் இனி யாரையும் குத்தம் சொல்ல மாட்டேன்” என்றவர் படுக்கப் போக அவரது கையைப் பற்றி படுக்க முடியாதவாறு தடுத்தவர்.
“அது எப்படி?… கேளுங்க தண்டல் காரரே!.. நான் ஒரு பாட்டு படிக்கிறேன் அதுல புரியும் உங்களுக்கு”
“எனக்கு ஒன்னும் புரிய வேணாங்க” மனைவியின் குறுப்புச் சிரிப்பில் வில்லங்கத்தைக் கண்டவர் உஷாராகப் பின் வாங்கினார்.
“அதெல்லாம் முடியாது கேளுங்க” என்றவர் அவர் மறுக்கும் முன்னே
‘நான் உன்னையே ‘டி’ போட்டு கூப்பிட்டால் உரிமை கூடும் அல்லவா…
நான் உன்னையே ‘டா’ போட்டு கூப்பிட்டால் உறவு கூடும் அல்லவா….’ பாடியே காட்ட அதுவும் அந்த ‘டா’ வில் அவர் கொடுத்த அழுத்தத்தைக் கண்டு கொண்டவருக்கு அத்தனை கடுப்பு.
“ரொம்ப நல்லதுங்க புருஷன் பொஞ்சாதிக்குள்ள உரிமையும் உறவும் வர்றதுக்கு ‘டி’ ‘டா னு’ பேசிகனுமோ? கஷ்டம் காலம்” என்றவர் சில நொடி யோசனைக்கு பின் சிறு அலறலோடு
“ஏங்க? டைப்பிஸ்ட்டம்மா!… இது போல உறவும், உரிமையும் கூட உங்களுக்கு எதுவும் ஆசை இருக்கா என்ன?…. இருந்தா நான் தாங்க மாட்டேங்க” அவர் சொன்ன தினுசில் அப்படி ஒரு சிரிப்புப் பேரிளம் பெண்ணுக்கு.
“ஹா!…ஹா!…. பொழைச்சு போங்க தண்டல் காரரே!.. எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை”
“அப்பாடி நெஞ்சுல பாலை வார்த்தீங்க போங்க”
“தண்டல் காரரே! அது செல்ல அழைப்பு அதுவும் இந்தக் காலத்துல ரொம்ப சகஜமாகி போச்சு நீங்க கூடத் தான் என்ன…” என்றவர் சொல்ல வருவதை கணித்தவர் போல.
“டைப்பிஸ்ட்டம்மா என்ன சொல்ல வாரீங்கனு புரியுது.அந்தி பொழுதுல அந்தரங்கம் படிக்கும் போது உணர்ச்சி வேகத்தை என்னங்க செய்ய முடியும்,
நானும் மனுஷன் தானே அப்போ ‘டி’ சொல்லி இருக்கேன் ஆனா அது வேறங்க” என்றதும் வெட்கம் கொண்டு அவர் கையைக் கிள்ளி வைத்தார் பானுமதி.
“ஸ்…. வலிக்கிதுங்க” என்றவர் பார்வை கிறங்க அவரை நெருங்க கரடியாக அலறியது கைபேசி.
“அது எப்படிதான் மூக்கு வேர்க்குமோ போங்க” என்றவரை சன்ன சிரிப்போடு பார்த்துக் கொண்டே போனை காதில் வைக்க அந்தப் பக்கம் விமலா ஒரே அழுகை.
எதுவும் பேசாமல் ஓ!…… வென்று அவள் அழுது வைக்க பதறியவர் “அம்மாடி எதுக்கு அழுகுறீங்க என்றதும்” போனை வேகமாகப் பானுமதியிடமிருந்து வாங்கிய வணங்காமுடி.
“மாமா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. அம்மாவும் ரொம்பத் திட்டுறாங்க பேசுறாங்க நான் வேலையை விட்டுட்டு அங்க வரேன்” விமலாவின் பேச்சில் இறுகி கிடந்தவர் சற்று தளர்ந்து நின்றார்.
“நல்ல முடிவு வாங்க, ஆனா இப்போ இல்லை விடியட்டும் உங்க வீட்டுக்காரர் கிட்ட முறையா சொல்லிட்டு வாங்க”
“சொன்னா அவர் திரும்பச் சண்டை போடுவாரே”
“செய்ய வேண்டிய கடமையை சரியா செய்வோமே. நாளை பின்ன ஏன்? என்கிட்ட சொல்லாம போயிட்டாங்கனு? பேச்சு வராது பாருங்க அதான் என்ன பேசினாலும் கேட்டுக்கோங்க எதிர் வாதம் வேணாம்”
“சரிங்க மாமா”
“அம்மாடி தெளிவாத்தானே முடிவு பண்ணி இருக்கீங்க” அவளது முடிவை உறுதி செய்யும் பொருட்டு மீண்டும் கேட்டு வைத்தார்.
“ஆமா மாமா எனக்கு மனசே சரியில்லை இங்க இருந்தா கண்டிப்பா பைத்தியமாகி போவேன்”
“என்னங்க சாமி பேச்சு இது இங்கன வாங்க பிறகு பேசுவோம்….. சரி சாப்டீங்களா?” என்றதும் பெண் மௌனமாக கண்ணீர் வடிக்க.
அவளது நிலையை கணித்தவர் “சாப்பிட்டு வாங்க தூக்கம் பிடிக்கும் வரை உங்க அத்தைகிட்ட பேசலாம்”
“சரிங்க மாமா”
“சாப்புடுவீங்க தானே”
“கண்டிப்பா சாப்பிட்டு போன் போடுறேன் மாமா” என்றவள் முதல் வேலையாகச் சாப்பிட சென்றாள்.
அன்று நடந்த பேச்சுக்கு பிறகு விமலாவின் தயார் அவளை வெகுவாகக் காய்ச்சி எடுத்து விட்டார். அவரது வயதும் உடலும் சில நாட்களாக அவரது பேச்சை கேட்காமல் போகப் பெண்ணும் அவ்வாறே வம்பு செய்து வைக்க ஓய்ந்து போனார் அந்தப் பெண் மணி.
பெண்ணுக்கு ஒரு தயாராக அவர் சில அறிவுரைகளைச் சொல்ல அதனைக் கேட்கும் நிலையில் இல்லாத விமலா சண்டை பிடித்துக் கொண்டு தாயிடம் பேசுவதில்லை.
விசுவும் இயல்பாக இல்லை அன்று அனைவர் முன்பு தன்னைப் பேசி விட்டார்களே என்ற கோபத்தை அவனுக்குத் தெரிந்த வகையில் வித விதமாகக் காட்டி வைக்கப் பெண் சோர்ந்து போனது.ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறும் நிலையில் வேலையை விட்டுவிட்டு வந்து விட்டாள்
அதைக் கொண்டு தொடங்கிய வாக்கு வாதம் தான் எல்லை மீறி போக. அந்நேரம் பார்த்து தாயின் துணையும் இல்லாமல் போக மாமனார் மாமியாரை அழைத்து விட்டாள்.
ஐந்து வருட திருமணம் வாழ்க்கையில் இது தான் முதல் அழைப்பு அதுவும் விசுவின் போனில் இருந்து பெண் பேசியது குறிப்பிடத்தக்கது.
தற்போது உள்ள கலி காலத்தின் உறவு நிலை அபாரம்.
*****************
“டைப்பிஸ்ட்டம்மா கொஞ்ச நேரம் போகட்டும் திரும்ப அந்தப் பொண்ணுக்கு பேசுங்க” என்றவர் சோர்ந்து போயி படுக்க அவரது கையில் படுத்துக் கொண்டார் பானுமதி.
“…………….”
“என்னங்க” கலக்கமான அழைப்பு அவரிடம்.
“எதுவா இருந்தாலும் சரி பண்ணிடலாம் யோசிக்காதீங்க டைப்பிஸ்ட்டம்மா”
“சரி ஆகிடுமா”
“ஆகணும்”
“பெரியவன் போக்கும் சரியா படல தண்டல் கராரே”
“ஹ்ம்ம்… கொஞ்சம் நாள் போயி வெடிக்கட்டுங்க முதல இவரை பார்ப்போம்”
“சின்னவன்” பெண்ணுக்கு பசுபதி கவலை வேறு.
“அவர் பொழைச்சுக்குவார் இல்லாம போனாலும் மருமக பொண்ணு பொழைக்க வச்சுடும்” என்றவரது தாடையைத் தன் புறம் திருப்பி அவரது கன்னத்தில் மூக்கை வைத்து வழமை போல் ஆழ்ந்து நுகர்ந்தார்.
அவரது செயலில் கண்களை மூடி கொண்டவர் “லஞ்சம் தாறீங்களா டைப்பிஸ்ட்டம்மா”
“ப்ச்…”
“என்னங்க தயவு செஞ்சு அழுது வைக்காதீங்க. அப்புறம் நான் பொல்லாதவனா மாறிடுவேன் சொல்லிட்டேன்” என்றவரை இன்னும் இறுக்கி கொண்டவர் அழுகையை அடக்கப் போராடினார்.
வளமையான வாழ்க்கை, வற்றாத செல்வம், தேவைக்கு ஜீவனம் நற்பெயர் கொண்ட குடும்பம், அன்பான உறவுகள் எல்லாமுமாகக் கணவன் இருந்தும் அல்லல் பட வைக்கிறது இந்த வாழ்க்கை.
கற்ற அனுபவத்தை நினைவு கொண்டு பயில வைக்கின்றனர் பிள்ளைகள் இவர்களது நிலையை இப்படி தான் சொல்ல வேண்டுமோ.