மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில். இதில் சிவ பெருமான் அமிர்தகடேஸ்வரர், அம்பாள் அபிராம சுந்தரியாக வணங்க படுகின்றனர்.
இரு வேறு வரலாறு தாங்கி நிற்கும் இக்கோவில் சிவன் 108 திருத்தலங்களில் ஒன்றாகும்.
சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் மூவராலும் தேவாரம் பாட பட்ட ஸ்தலம் என்ற பெயரும் உண்டு. கூடுதல் சிறப்பாக அபிராமி பட்டரால் அபிராமி அந்தாதி பாட பட்ட ஸ்தலமும் இதுவே.
இதன் வரலாறு என்று பார்த்தால்….
மார்க்கண்டேயன் என்ற பதினாறு வயது விடலை பருவம் கொண்டவனை. எமன் தனது பாச கயிற்றை வீசி அவரது ஆயுளை முடிக்க எண்ண.
சிவன் மீது தீராத பக்தி கொண்ட மார்க்கண்டேயன் ஈசனை இறுகப் பற்றுகிறார்.அதனால் எமன் வீசிய கயிறு சிவன் மீது விழ.
கோபம் கொண்ட சிவ பெருமான் தனது காலால் எமனை உதைத்து தள்ளி மார்க்கண்டேயனை காத்து அவருக்கு என்றும் பதினாறு என்ற வரத்தை கொடுக்கிறார்.
அதே போல் சரபோஜி என்ற மன்னன் தீவிர அபிராமி பக்தரான அபிராமி பட்டரிடம் வம்பு செய்ய எண்ணி, இன்று பௌர்ணமியா? அல்லது அம்மாவாசையா? என்று கேட்டு வைக்க.
அவரோ கண்களை மூடி கொண்டு அம்பாளை முன் நிறுத்தி. அவர் முகம் கண்டு பௌர்ணமி என்று சொல்லி வைக்க.
அன்றோ அம்மாவாசை தினம் போலும்.பொய் சொன்ன குற்றத்திற்கு பட்டருக்கு மரண தண்டனை அளிக்கிறார் மன்னன்.
அப்பொழுது அபிராமி காட்சி கொடுத்து தனது காதில் உள்ள சக்கரத்தை கழட்டி வீசி நிலவை வர வைத்து பௌர்ணமியாக்கி, அவரது கூற்றை மெய்ப்பித்து அவரைக் காத்தருளினார்.
இந்த இரு நிகழ்வுமே ஆயுளை மைய படுத்தி அமைந்தமையால்.இக்கோவிலில் திருமணம் செய்பவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்ற கூற்று உண்டு.
அதனால் தான் இங்கு 60 ,70 ,80 , திருமணங்களும், ஆயுள் கூட ஆயுஷ் ஹோமமும் நடைபெறுகிறது.
*********************
இன்னும் கதிரவன் எழுந்து கொள்ளச் சில மணி நேரங்கள் இருக்கக் கோவிலில் யாகம் வளர்த்து பூஜையைத் தொடங்கி விட்டனர்.
அனைவரும் ஜோடி ஜோடியாக அமர்ந்திருக்க.முன் வரிசையில் ஈஸ்வர் – வானதி, அகிலா – அருணகிரி தம்பதிகள் அமர்ந்திருக்க.அவர்களுக்கு எதிரில் பானுமதி வணங்காமுடி ரோஜா பூ மாலை அணிந்து அமர்திருந்தனர்.
மூன்று ஐயர்கள் மந்திரம் ஓத அதனைப் பின் பற்றி அவர்களும் சொல்லி கொண்டு இருந்தனர்.முதலில் குலதெய்வ பூஜை செய்த பின்.
கணபதி ஹோமம்,
லட்சுமி ஹோமம்,
ஆயுஷ் ஹோமம்,
அபிராத்த ஹோமம்,
ம்ரிதுஞசய ஹோமம்,
தன்வந்திரி ஹோமம்,
கலச பூஜை என்று இரண்டு மணி நேரம் நடந்தது.
கலச பூஜை முடித்த ஐயர் “மகன்கள், மகள்கள் மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் எல்லாரும் வாங்கோ!…
இந்த ஜலத்தை சல்லடை வைச்சு நல்லா வேண்டிண்டு பெரியவா தலையில் ஜலத்தை விடுங்கோ” என்க
வணங்காமுடி – பானுமதி கைகூப்பி அமர்ந்திருக்க உறவு பெண் மணி சல்லடையை வைத்துக் பிடித்து கொள்ள.ஒவ்வொருவராக வந்து தண்ணீர் ஊற்றி சென்றனர்.
தலையில் பட்ட நீர் சிறு குளிரை கொடுக்க அந்நிலையிலும் அதனை உணர்ந்தார் போலும் “டைப்பிஸ்ட்டம்மா!… என்னங்க? குளிர் எடுக்குதா?” அவர் கேட்டது பக்கத்தில் இருக்கும் வானதிக்கும் கேட்டு வைக்க.
“கொழுந்து அநியாயம் பண்ணாதீங்க குடம் வாங்க சொன்னா பிள்ளைங்க விளையாடுற சொப்பு சாமான் மாதிரி வாங்கிட்டு,
குளிர் எடுக்குதான்னு கேள்வி வேற தலை கூட ஒழுங்கா ஈரமாகல” என்று கடிந்து கொள்ளச் சுற்றி இருந்த இளசுகள் பலமாகச் சிரித்து வைத்தது.
வானதி சொல்வது போல் கைக்குள் அடங்கும் சிறு குடமாகத் தான் இருந்தது.கடைசி குடம் மட்டுமே பெரிய பித்தளை குடமாக இருக்க.
அதை ஈஸ்வர் -வானதி, அகிலா -அருணகிரி நால்வரும் ஒன்றாகப் பிடித்து ஊற்றினர்.
“கோவிலை சுத்தி வந்து உடுப்பை மாத்திக்கோங்க, பத்து நிமிஷம் டைம் அதுக்குள்ள வந்துடுங்கோ, நல்ல நேரம் முடியிறதுக்குள்ள மாங்கல்யம் கட்டிடனும்” ஐயர் சொல்ல விரைவாகச் சென்று உடுப்பை மாற்றிக் கொண்டு வந்தனர்.
இத்திருமணத்தின் நோக்கமே இத்தனை வருட திருமணக் காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் பெறுவதற்கும்,
அத்தம்பதியருக்கு நோய்,ஆரோக்கியக் குறைவு ஆகியவை நீங்கி, நீண்ட ஆயுளை தருவதற்கும் செய்வதே ஆகும்.
அது போக உடல் மற்றும் மன பலத்தையும் தருவிக்கும் .மனைவிக்குத் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைத் தருவதே இத்திருமணத்தின் நோக்கமாகும்.
வேகமாகத் துணியை மாற்றிக் கொண்டு இருவரும் வந்து மணவறையில் அமர, அனைவர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து நின்றனர் வணங்காமுடியும் பானுமதியும்.
என்னதான் இளசுகள் புதுப் பட்டுத்தி அதற்கேற்ற நகைகள் அணிந்து, மிதமாக அலங்காரம் செய்து தலை நிறையப் பூ வைத்து, அலங்கார பதுமைகளாக நின்றாலும் பானுமதி அழகிற்கு ஈடில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மாந்துளிர் பச்சை பட்டு புடவை அணிந்து. அதற்குத் தோதாக ஏழு கல் கம்மல் அணிந்து.வைர முக்குத்தி,சிறு கல் அட்டிகை, தாலி கோடி மட்டுமே…
மருதாணியிட்ட கையில் இரு தங்க வளையலும். ஒரு ஜோடி கண்ணாடி வளையல்கள் அணிந்து வழமை போல் ஜாதி முல்லை வைத்து அழகோவியமாக நின்றார் பானுமதி.
அதே போல் பட்டு வேட்டி சட்டையில் முதல் இரு பொத்தன்கள் கழட்டி விட்டு. கழுத்தில் முறுக்கிய சங்கிலி, இரு கைகளிலும் மோதிரமென நிரை கூடிய வயதிலும் மகன்கள், பேரன்களை மிஞ்சி நின்றார் வணங்காமுடி.
பானுமதி கண்கள் அவ்வப்போது இன்று கள்ள தனம் செய்து கணவனைக் களவாடி சென்றது.அதற்கு முக்கியக் காரணம் வழமைக்கு மாறாக இருந்த அவரது தோற்றம் தான். நகைகள் வேறு கூடுதல் பொலிவை கொடுத்தது.
நொடிக்கு ஒரு முறை தன்னைத் தீண்டும் மனையாளின் பார்வை உணர்ந்தாலும். அவரைக் கண் கொண்டு பார்க்காமல் சிறு புன்னகையோடு ஐயர் சொன்ன சடங்கை செய்து கொண்டு இருந்தார் வணங்காமுடி.
கெட்டிமேளம்!… கெட்டிமேளம்!…. ஐயர் குரல் கொடுக்கப் பெரும் மகிழ்வாகத் தன்னுடன் இத்தனை ஆண்டுகள் மனமொத்து பயணித்த மனையாளை சிறப்பிக்கும் பொருட்டு மீண்டும் ‘நீயே! சதமென்று’ எண்ணி திருமாங்கல்யத்தைப் பூட்டினார் வணங்காமுடி.
தன்னைச் சிறப்பித்த கணவரை அவரும் சிறப்பிக்க எண்ணினார் போலும். தனது கண்ணீர் கொண்டு, சிறு துளி வணங்காமுடியின் கையில் பட்டு தெறிக்க மீதமாக அனைத்துக் கொண்டார்.
“அவா தரிசனம் பண்ணி வந்த உடனே. நீங்க எல்லாம் அவா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க அவாளை போல சகல வளங்களையும் பெற்று வாழனும் வேண்டிக்கோங்க” என்றதும்.
பெரியவர்களுடன் இளைய வட்டங்களும் சென்று அப்பன் அமிர்தகடேஸ்வரரையும், அபிராம சுந்தரி அம்பாளையும் வணங்கிய பின் நேராக அவர்கள் பதிவு செய்த மண்டபத்திற்கு வந்து விட்டனர்.
கோவிலை விட்டு சில அடி தூரத்தில் தான் மண்டபம் இருந்தது.மேடையில் இருவரையும் அமர வைத்து ஒவ்வொரு உறவினர்களாக வந்து ஆசி பெற்று சென்றனர்.
ஈஸ்வர்,அருணகிரி அவர்களுடன் விசு, ஸ்வாமி, மது, பசுபதி, சங்கரன் என அனைவரும் மதிய சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய சென்று விட்டனர்.
ஆசி பெற்று வந்தவர்களுக்குச் சிறு வெண்கல காமாட்சி விளக்கை வணங்காமுடி – பானுமதி நினைவாகக் கொடுத்துக் கொண்டு இருந்தனர் விமலா மற்றும் மீனு.
கன்னல், இந்து, மது, அனைவரும் மேடையில் இருந்தனர்.சில மணி நேரத்திற்குப் பிறகு மதிய உணவு என முடிவாகச் சோர்ந்திருந்த மனைவியைப் பார்த்தவர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மெதுவாக.
“என்ன தண்டல் காரரே!.. விளையாடுறீங்களா? ஆள் வந்த வண்ணம் இருக்காங்க நான் போயி படுத்தா நல்லவா இருக்கும்”
“எல்லாம் சரிங்க ஒரு அரை மணி நேரம் என் சொல் பேச்சு கேளுங்க. எதையாவது இழுத்து வைக்காதீங்க அதுவும் இன்னைக்கு…” அவர் இழுத்து நிறுத்த,அவரது பேச்சில் வெடுக்கென அவர் முகம் பார்க்க பெரும் குறும்பு அவர் பார்வையில்.
“அப்படி பார்த்து வைக்காதீங்க டைப்பிஸ்ட்டம்மா!.. உங்க யானை, சேனை படை முழுக்க நம்பப் பக்கம் பார்த்துட்டு இருகாங்க ,
நீங்க பார்த்து வச்சீங்க அப்புறம் நான் ஒன்னும் சொல்றதுக்கில்ல” என்றதும் நல்ல பிள்ளையாகத் திரும்பி கொண்டார்.
வணங்காமுடி சொல்வதும் சரி தான் இளசுகள் அனைத்தும். இவர்கள் மேல் ஓர் கண்ணை வைத்தே வேலை செய்து கொண்டிருந்தனர்.
அது என்னவோ அவர்களுக்குப் பிடித்துப் பொழுதுபோக்காகி போனார்கள் வணங்காமுடியும் பானுமதியும்.
**********
பாவாடை சட்டையில் சிறகு முளைத்த தேவதையாக அனு குட்டி தத்தி தத்தி நடந்து வந்து, மேடையில் ஏறி வணங்காமுடி வேட்டியை பிடித்திழுத்து தூக்க சொல்ல.
“அடடே யாரு இது? என் சிட்டு குருவியா” என்று கொஞ்சியவர் அனுவை தூக்கி கொள்ள. தூக்கிய வேகத்தில் கழுத்தை இறுக்கக் கட்டி கொண்டது, அவரும் சிறு நொடிகள் இறுக்கி கொண்டார்.
சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அவரது முகத்தைப் புருவ சுளிப்புடன் பார்த்து வைக்க.
“என்னங்க? உங்க தாத்தா மாறு வேசத்துல இருக்கேனா? உங்க பாட்டி மாதிரி உத்து உத்து பாக்குறீங்க” என்றதும் பேசிய அவரது உதட்டை பிரித்து அவரது பற்களை ஆராய்ச்சி செய்ய தொடங்கி விட்டது.
அதைப் பார்த்த பானுமதிக்குச் சிரிப்பு “உங்க தாத்தாக்கு நாலு பல்லு இல்லை அனுகுட்டி” கேலி போல் பானுமதி.
“ஆமாங்க” என்றவரை ஒரு வழி செய்து கொண்டு இருந்தது சிட்டுக் குருவி அதற்கு என்ன தோன்றியதோ?…
பானுமதி வணங்காமுடி அனு மூவரும் கொஞ்சி கொள்ளும் இக்காட்சியும் ரகசியமாகப் படம் பிடிக்கப் பட்டது.
************
வெகு நேரம் உட்கார முடியாமல் பானுமதி நெளிய தூரத்தில் இருந்து. இவர்கள் மேல் கண்ணை வைத்துக் கொண்டு இருந்த வானதி, பானுமதியின் முக வாட்டத்தைக் கண்டு வேகமாக அவரை நோக்கி வந்தார்.
“பானு முடியலைன்னா கொஞ்ச நேரம் படு. ஆளுங்க வந்தா நான் உட்கார வைக்கிறேன்” என்றவர் பானுமதி மறுக்க அவரை பிடிவாதமாக அழைத்து அறைக்குள் விட்டு,
“பாப்பா!.. தாத்தா அம்மாச்சிக்கு எதாவது குடிக்கக் குடு. இன்னும் சாப்பிடல கரெக்டா ஒரு மணிக்கு உட்கார வச்சுடலாம் என்ன?”
“சரி அம்மாச்சி” என்றவள் இருவருக்கும் பால் எடுத்து வர சென்றாள்.
அதன் பின் நேரம் விரைவாக ஓட மதிய உணவை உறவுகளை உண்ண வைத்து தாம்பூலம் கொடுத்து அனுப்பி வைத்து கொண்டு இருந்தனர் பெரியவர்கள் .
விடியலில் முழித்தது, காலை உணவை உண்ணாமல் இருந்தது என்று அனைத்தும் சேர்த்து பெரியவர்களுக்குச் சோர்வை கொடுக்க இருவரும் நன்றாகத் தூங்கி விட்டனர்.
வீட்டு மக்கள் மட்டுமே எஞ்சி நின்ற நிலையில் மீனுவின் பெற்றவர்களையும், விமலாவின் தாயாரும் கிளம்புவதாகச் சொல்ல. அகிலா வணங்காமுடி பானுமதியை எழுப்ப சென்றார்.
“பானு!..” என்று அழைக்க அப்பொழுது தான் முழித்தவர் வேகமாக வந்து கதவை திறக்க,
“கொழுந்த கொஞ்சம் பானுவை எழுப்பிட்டு சீக்கரம் வாங்க மீனு அம்மா, அப்பா, விமலா அம்மா எல்லாரும் கிளம்புறாங்க”
“சாப்பிட்டாங்களா க்கா!..”
“சாப்பிட வச்சுட்டோம் பானு நீயும் வா” என்று அவரைத் துரித படுத்த. கணவனை எழுப்பி முகம் கழுவி தலையை மட்டும் ஒதுக்கி கொண்டு வந்தனர் இருவரும்.
அறையின் வாசலில் காத்து நின்றவர்களிடம் வேகமாக நெருங்கிய வணங்காமுடி “மன்னிக்கணும் ரொம்பச் சோர்வாகி போச்சு அதான் அசந்துடோம்”
“அது ஒன்னுமில்லை” என்ற மீனுவின் தந்தை சில நொடிகள் பேசி விட்டு அவரிடம் கை குலுக்கி விடை பெற. மீனுவின் தாய் ஓர் சிறு தலையசைப்புடன் விடை பெற்றார்.
விமலாவின் தாயும் “வரேன் அண்ணே!.. வரேன் அண்ணி!..” என்றவர் பானுமதி கைகளைச் சற்று இறுக்கப் பற்றி விடுவித்தார் சிறு கண்ணீர் கூட அவருக்கு எட்டி பார்த்தது.
வானதி, “சம்பந்தி என்ன இது?”
“ஒன்னுமில்லங்க அண்ணி சந்தோசமா இருக்கு, கண்ணனுக்கு நிறைவா” என்றவர் பேச வார்த்தைகளற்று விடைபெற,
அவரது கண்ணீருக்கான காரணம் உணர்ந்து அமைதியாக விடை கொடுத்தனர்.
“விமலா!.. இனி உன்னைக் கொண்டு கவலை இல்லை” என்றவர் மகளுடன் பேசி கொண்டே வாயிலுக்கு வந்தார்.விமலா அவருக்கு விடை கொடுத்து விட்டு வர,
அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் ஈஸ்வர்.பந்தியில் அமராமல் இளசுகள் அனைத்தும் வணங்காமுடி- பானுமதிக்கு எதிரில் வந்து அமர ‘சரிதான்’ என்று எண்ணி கொண்டார் வணங்காமுடி.