பூமி சென்னை திரும்பும் பயணம் முழுக்க மனதில் புவன், புவன் மட்டுமே நிறைந்திருந்தான்.
“நீ பூமி நான் புவன் உன்னை எப்பவும் ஆள்றவன்” என்று க்ரிஞ்சு டயலாக் எல்லாம் பேசியிருக்கிறான், இவள் ரசித்திருக்கிறாள். அதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது, அதே சமயம் எவனிடம் பேசக்கூடாது என்று இருந்தாளோ அவனிடம் பேசி விட்டாளே!!
“சீக்கிரம் வா” என்றான் மனம் சீக்கிரம் போக துடிக்கிறது.
பள்ளி காலத்தில் விவரம் அறிந்த நாள் முதல் அம்மா “உனக்கு ஏதாச்சும் தேவைனா அருண் அண்ணா கிட்ட சொல்லணும் சரியா” என்று சொல்லிச் சொல்லி ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ‘அருண் அண்ணா’ என்று அவன் முன்னே சென்று நிற்பது இவள் வழக்கம். கடுகடு முகமாக இருந்தாலும் அருண் அவளிடம் தன்மையாக ‘ஹோம் ஒர்க் செஞ்சுட்டியா, மேத்ஸ் புரிஞ்சதா’ என்று கேட்பான். ஒருமுறை அவர்களுடன் சேர்ந்து சாப்பிடும் போது அவள் உணவை சிரஞ்சீவிக்கும் கொஞ்சம் கொடுத்தாள். சிரஞ்சீவிக்கு அவள் சாப்பாடு பிடித்துவிட்டது. ஒரு வாரத்தில் அம்மா கேட்டுவிட்டார் “அது என்னடி காலைல சாப்பாடு மிச்சம் வைக்குற மதிய சாப்பாடு காலி பண்ணிடுறே”
“சிரஞ்சீவி சாப்பிடுறான் மா” என்றாள். அடுத்த நாளிலிருந்து இன்னமும் பெரிய கேரியரில் சாப்பாடு கொடுக்கத் தொடங்கினாள் அம்மா. வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் தயங்காமல் முந்தின நாளே ‘பையன்களிடம் நாளை லஞ்ச் எடுத்து வர வேண்டாம் என்று சொல்லு’என்று சொல்லி அனுப்புவார்.
சிரஞ்சீவி பூமி எது செய்தாலும் அவளை பழித்து காட்டுவான்.சிரஞ்சீவியை அறிந்த நாள் முதல் அவள் அணிந்திருக்கும் ரிப்பன், ஷூ, அவளுக்கு பிடித்த யுனிகார்ன், மேஜிக் ஸ்டிக் எதுவுமே அவனுக்கு கிண்டலுக்கு தான் உதவும். அருண் அவளை ‘பார்பி டால்’ என்று சொன்னால் ‘குப்பை தொட்டி டால்’ என்பான் சிரஞ்சீவி. அவள் அழுதால் ‘ஐய்ய அழுமூஞ்சி’ என்று கிண்டல் செய்வான்.அதுவே அடுத்தவர் கிண்டல் செய்தால் அவர்கள் மூக்கை உடைப்பான். ஆனால் இருவரும் சண்டை செய்வதை வேலையாக வைத்திருப்பார்கள். புவன் சமாதானம் செய்வதை வேலையாக வைத்திருப்பான். நுணுக்கமாக கவனிக்கும் திறனும்,கணக்கில் வல்லவனாக இருப்பவன் அமைதியாக இருப்பான். கோபத்திலும் அதை சாந்தமாக வெளியிடுவான் அதுவே சீண்டி பார்த்தால் அதிகாரமாக ஓர் பார்வை பார்ப்பான். சுற்றி எல்லாமே அடங்கி போகும்.
டீன் ஏஜ்களில் பையன்கள் பாஷை முழுக்க ஸ்போர்ட்ஸ்,குத்துசண்டை,கார் என்று மாற இவள் இசை, நடனம் கலர் காம்பினேஷன் பார்த்து துணி எடுப்பது என்று மாறத் தொடங்கினாள். ஏழாம் கிளாஸ் படிக்கும் போது ஸ்கூலில் ‘டேலண்ட் ஷோ’ ஒன்று நடந்தது. புவன் செஸ் விளையாடி கலக்க,பூமி பாட்டு பாடலாமா வேண்டாமா என்று குழப்பத்திலேயே இருந்தாள். புவனிடம் யாரேனும் கிண்டல் செய்தால் அழுகை வந்துவிடும் என்று சொல்லி பயந்தாள் . “நீ பாடு யாரும் கிண்டல் செய்ய மாட்டாங்க” என்று அவளை ஊக்குவித்தவன் சிரஞ்சீவியுடன் சேர்ந்து அங்கே ஹாலில் இருந்த அத்தனை பேரையும் யாரும் பூமியை கிண்டல் செய்யக்கூடாது என்று மிரட்டி வைத்தான்.அந்த பாட்டு போட்டியில் பூமிக்குதான் பரிசு கிடைத்தது.
வகுப்புகள் கூட கூட கொஞ்சம் கொஞ்சமாய் இவன்களின் சேட்டை அதிகமானது. பத்தாம் கிளாஸ் தேர்வு ‘ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறது’ என்று இவர்களை உற்சாகப்படுத்த கபிலன் அப்போதே இவர்களுக்கு கார் வாங்கி கொடுத்தார். புவனும் சிரஞ்சீவியும் அந்த காரில் இவளுக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்தார்கள். அந்த வயதிற்கே உரிய ‘சைட் அடித்தல்’ எல்லாம் இருக்கும். ஒருமுறை இவள் சிரஞ்சீவியை பார்த்து “போடா நீ ஓவரா கிண்டல் கேலி பண்ற,என்னையும் தப்பா பார்க்கமாட்டன்னு என்ன நிச்சயம்” என்று கேட்க சிரஞ்சீவி “ச்சை அவங்கல்லாம் பொண்ணுங்க, நீ பூமி அந்த கேட்டகிரிலே வரமாட்ட” என்றான்.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு டென்ஷன் குறைய மலேசியா டூர் அனுப்பி வைத்தார் கபிலன். திரும்ப வரும்போது இவளுக்கு நிறைய மேக்கப் கிட் வாங்கி வந்தார்கள். அருணுக்கும் அவளுக்கும் அண்ணன் தங்கை பாசம் இருந்தது, அவளுக்கும் சிரஞ்சீவிக்கும் நட்பு இருந்தது அதை ‘ஃப்ரெண்டெனிமி’ என்று சொல்லலாம். புவனுக்கும் அவளுக்கும் நடுவில் இருந்த அந்த உறவை அப்போது பேர் வைக்க தைரியம் வரவில்லை. அதுவே பூமி பிளஸ் ஒன் படிக்கும்போது அடுத்த வருடம் புவன் இருக்கமாட்டான் கல்லூரி சென்றுவிடுவான் என்பது பேச்சில் அடிக்கடி வர மிஸ் செய்வேன் என்று இவள் சொல்லச் சொல்ல புவன் “நான் காலேஜ் போயிட்டாலும் உன்ன ஸ்கூல் வந்து பார்க்கிறேன் சரியா” என்று சொல்ல காதலை உணர்ந்தாள்.
பூமி எப்போதுமே அம்மாவுடன் நெருக்கமென்றாலும் இசை,நடனம், தையல் பயிற்சி, மேத்ஸ் டியூஷன் என்று பிஸியாக இருப்பாள். வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அம்மா எப்போதும் கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருப்பாள் அப்பா ஆடிட்டிங் ரூமில் பிஸியாகவே இருப்பார். வயது கூடக் கூட அப்பா கோபக்காரர், சில சமயம் அவர் கோபத்தில் அம்மாவை அடிக்கிறார் என்பது புரியத் தொடங்கியது. ஒருநாள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை என்பது வீட்டில் பொருட்கள் சிதறி கிடக்க,அம்மா முகம் சோகமாய் இருப்பதும் கன்னத்தில் சிவந்திருப்பதும் கண்டு தெரிந்துக்கொண்டாள் . என்ன ஆயிற்று என்று கேட்டபோதும் அவள் அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. ப்ளஸ் ஒன் படிக்கும்போது இவள் காமர்ஸ் குரூப் எடுக்கவும் அம்மாவும் அப்பாவும் பேசும் ஒரு சில வார்த்தைகள் புரிய தொடங்கியது. அதேசமயம் அம்மாவின் உடல் மொழியில், பேச்சில் மாற்றங்கள் தெரிந்தது. இவளுக்குத் தெரியாமல் இவளுக்கு பின்னால் அப்பா அம்மாவை மிகவும் துன்புறுத்துகிறார் என்பது தெரிகிறது ஆனால் அது என்ன எதற்காக என்பது புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தாள். புவனுடன் பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கும், இவளை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான். சிரஞ்சீவியுடன் வார்த்தையில் சண்டையிட புவன் இவளுடன் கூட்டு சேர்ந்து அவனை வாரிவிடுவது மகிழ்ச்சியாகவே இருக்கும். அதுவே நண்பர்கள் யாரும் பக்கத்தில் இல்லை என்றால் அப்பா அம்மாவுக்கு என்ன பிரச்சனை என்பதே மனதில் ஓடும். அம்மா அப்பாவிடம் அடி வாங்குவதும் அதை மறைத்துக் கொண்டு ஏதோர் அறையில் இருந்து கொள்வதும் தெரிய தொடங்கியது. நேரடியாக அம்மாவிடம் சென்று கேட்டாலும் அம்மா “இதெல்லாம் ஒரு விஷயம் இல்ல,அவருக்கு பிரஷர் ஜாஸ்தியா இருக்கு பாத்துக்கலாம் அம்மாவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றெல்லாம் பேசி மழுப்புவார். அப்போதெல்லாம் கபிலன் இவர்களிடம் பேசாமல்தான் இருந்தார். கபிலன் அங்கிள் ஏன் வீட்டுக்கு வருவதில்லை என்கிற சந்தேகம் தொடங்கியது. பூமி சோகத்தை மறைக்காமல் சிரஞ்சீவியிடம் கேட்டதும் அடுத்த நாள் மாலை கபிலனை அவர்கள் வீட்டில் பார்த்தாள். கபிலன் அவள் தந்தையிடம் சத்தமாக பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
இப்போது பிரச்சனை ஓரளவு புரிந்தது. அம்மாவுக்கு பிடிக்காத தப்பான விஷயத்தை அப்பா செய்கிறார். அம்மா செய்யாதே என்று சண்டையிடும் போதெல்லாம் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்துகிறார். விஷயம் ஒவ்வொன்றாக புரிய தொடங்கும் நேரம் புவனும் பூமியும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி இருந்தார்கள். பூமி பிளஸ் டூ படிக்கும் போது புவன் காலேஜிலிருந்தான். அவள் ஸ்பெஷல் கிளாஸ் முடித்து ஆறு மணிக்கு வீட்டுக்கு திரும்பும் போது அவனும் வருவான், அவளிடம் பேசிவிட்டு அவளுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து வீட்டிற்கு அனுப்புவான். அம்பிகாவின் மகள் அக்கௌண்ட்ஸில் வீக்காக இருக்கிறாள் என்பது பள்ளியில் அழுத்தமாக இருக்க, அப்பாவும் அம்மாவும் சண்டை இடுவதும் அம்மா அழுவதும் வீட்டில் வாடிக்கையாக இருக்க இடையில் ஒரே மகிழ்ச்சி புவன் என்று இருக்க… பூமி எங்கேயோ கருந்துளையுள் மாட்டியிருப்பது போல் உணர்ந்து கொண்டிருந்தாள். ஒரு நாள் புவன் அவர்கள் வீட்டு வாசலில் வைத்து அவள் கையை பிடித்துக்கொண்டு எதையோ பேசிக் கொண்டிருக்கும் போது அவள் தந்தை வெளியே வந்து இதை பார்த்த நிமிடம் புவனை இழுத்து பிடித்து அவன் கன்னத்தில் அறைந்து ‘இந்த மாதிரி பொறுக்கி வேலைய வேற எங்கயாச்சும் வச்சுக்க’ என்று அதட்டி அனுப்பினார்.
முதல் முறை புவன் ஒரு பெண்ணின் தந்தை என்ன செய்வாரோ அதை தான் அங்கிள் செய்தார் என்பதைப் போலத்தான் எடுத்துக் கொண்டான்.
அடுத்தடுத்து புவன் அருண் சிரஞ்சீவியை பார்க்கும் போதெல்லாம் அவள் தந்தை அவர்களை அசிங்கமாக திட்டி பேசவும் ஒரு கட்டத்தில் “பூமி அப்பா ஆச்சேன்னு பார்க்கிறேன்” என்று புவனும் கோபத்தை காட்டினான்.
அடுத்து வந்த நாட்களில் புவன் பணக்கார திமிரை காட்டுவதில் ஆர்வமாக இருந்தான். ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கியபோது கூட தன்னடக்கத்துடன் இருந்தவன் கல்லூரி நாட்களில் பணக்காரன் என்று காட்டிக் கொள்வதில் ஆர்வமாக இருந்தான். அவன் அகங்காரத்தை அவள் அப்பாவிடம் அவன் காட்டும்போது முதல் முறை புவனிடம் ஒரு விஷயம் பிடிக்காமல் போனது.
ஸ்கூலில் எக்ஸாமில் பெயில் ஆகியிருந்தாள். டியூஷனிலும் டியூஷன் மாஸ்டர் அவளை எழுப்பி கேள்வி கேட்டபோது பதில் தெரியாமல் நின்றவளை அசிங்கமாக திட்டினார். புவன் மட்டுமே அவளை அவளுக்கு பிடித்தது போல நடத்தினான். “பாத்துக்கலாம் விடு” என்றவனை அழுத்தம் தாங்காமல் இவள் கட்டிப்பிடித்து அழுகவும் ஒரு குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சியவன் அவள் உச்சி நெற்றியில் முத்தம் வைத்தான். “இந்த வீட்டுக்குள்ள போகவே பிடிக்கல புவன்” என்று சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அந்நேரம் வீட்டு வாசலுக்கு வந்த அவள் தந்தை புவன் அவளை தோள்மீது சாய்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து பூமியை இழிவாக ” என்னடி அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வேற ஆம்பள கேக்குதா” என்று கேட்டு விடவும் பூமிக்கு அதிர்ச்சியும் கோபமும் மிகுந்ததில் அழுகை வந்தது.
பதிலுக்கு சண்டையிட்டவன் புவன் “இந்த மாதிரி வார்த்தை உங்க வாயிலிருந்து இன்னொருமுறை வந்தது பேசுறதுக்கு ஆளே இருக்க மாட்டீங்க ” என்று அதிகாரமாய் மிரட்டினான். “பாத்துக்கோ பூமி” என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
அடுத்து ஒரு வாரத்தில் அவள் தந்தை இறந்த செய்தி கேட்டபோது முதலில் நினைவுக்கு வந்தவன் புவன்தான். தந்தை இறந்ததும் அவள் சூழலில் அவள் மனதில் அவள் எண்ண போக்கில் மாற்றம் தொடங்கியது. பூமிகாவிடம் உயிர்ப்பு இன்னமும் கொஞ்சமாய் ஒட்டி இருக்கிறது என்றால் அது தமயந்தியால் மட்டும்தான். தமயந்தியின் குணாதிசயம் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. ஒருநாள் கூட என்ன நடந்தது என்று துருவியதில்லை. இவளாக புலம்பினால் அவள் கேட்டுக் கொள்வாள், அதைக்கூட சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதில்லை அந்த நேரம் ஆறுதலுக்கு ஏதேனும் ஒன்றிரண்டு வார்த்தை சொல்வாளே ஒழிய என்றைக்குமே இவளை அசிங்கமாகவோ மட்டமாகவோ கேள்வி கேட்டு அவள் நடத்தியதில்லை. தமயந்தி அவள் செய்யும் வேலையில் ஆர்வமாக அது முடிக்கும் வரை அந்த ஆர்வத்தை எடுத்துக்கொண்டு செல்வது பார்க்க பார்க்க இவளுக்குள்ளும் ஒரு உத்வேகம் பிறக்கும். யாரிடமும் பேச தயங்கும் தமயந்தியை யாருடனும் எளிதில் ஒட்டிக்கொள்ளும் பூமியை கோர்த்த விதியை நினைத்து பல நாள் சிரித்திருக்கிறாள். இப்போதெல்லாம் “ஏன் இது நடந்தது” என்று கேள்வி கேட்கிறாள்.
புவன் “சீக்கிரம் வா” என்று சொல்லியதும் அவள் “வருகிறேன்” என்று பதில் சொன்ன நிமிடம் திரும்பவும் பழைய காலத்திற்கு அவர்கள் சென்றுவிட்டது போல் உணர்ந்தான்.
புவனுக்கு தாத்தா பாட்டி இருவரும் அடுத்தடுத்து வருடம் இறந்தபோதும் அவனை அவன் பெற்றோர்கள் கபிலனிடம் ஒப்படைத்த போதும் “நம்மள யாருக்கும் பிடிக்கலையோ. பாரமாக இருக்கிறோமோ” என்கிற தாழ்வு மனப்பான்மை எழும். அப்போதெல்லாம் ஆறுதல் பூமியின் சின்ன சின்ன சேட்டைகளும் சிரஞ்சீவியின் கிண்டல் பேச்சுகளும்தான். பூமியின் தந்தையுடன் சண்டை வந்ததுமே பூமிக்கும் தன்னை பிடிக்காமல் போய்விடுமோ என்கிற அதே பயம் மேலெழுந்தது. அவன் பயந்தது போலவே அவரும் இறந்துப் போனார். துக்கத்திற்கு இவர்கள் போனபோது பூமி அவர்களை கண்டு கொள்ளாமல் கதறி கதறி அழுது கொண்டிருந்தாள். அருணை கூட கண்டுகொள்ளவில்லை. அருண் வீட்டின் நிலமையில் யாரேனும் பெண்களை கஷ்டப்படுத்தினாலே அவன் உணர்ச்சி வசப்படுவான்.அதிலும் பூமி ‘அருண் அண்ணா’ என்று சிணுங்கினாலே “சும்மா இருங்கடா’ என்று கோபமாக சொல்வான். பூமி சும்மாவே நடித்தாலும் அவள் விஷயத்தில் அவன் ‘சீரியசாக’தான் இருப்பான். அதனாலே பூமிக்கு அருண் மீது பாசம் அதிகம். அப்படிப்பட்டவள் அன்று அவன் முகம் கூட பார்க்காமல் ஒதுங்கி நின்றாள்.
தாளமுடியாத சோகத்தில் புவன் கல்லூரியில் யாரோ ஒரு பையனிடமிருந்து போதை பொருள் வாங்கி உபயோகித்து பார்த்தான். வந்ததே கபிலனுக்கு கோபம்!! இழுத்து வந்து தண்ணீர் தொட்டியில் தள்ளி குளிக்க வைத்து இரண்டு நாட்கள் பக்கத்தில் இருந்து கவனித்து கொண்டார்.
அவன் நிலையை அவனிடம் பேசி அறிந்து கொண்டவர் “அட லூசு பையா அந்த ஆளு சீனால இருந்து டிரக்ஸ் இறக்குமதி செஞ்சி இங்க விக்கிற ஆட்களோட சேர்ந்து பிசினஸ் பண்ணிருக்கான். போர்ட்ல திருடுற கும்பல் கூட பார்ட்னெர்ஷிப் வச்சு பெரிய பெரிய பிஸ்னஸ் எல்லாத்தையும் அழிச்சிருக்கான். ட்ரக்ஸ் டீலிங் செய்றவங்கள அதிக லாபம் கொடுக்கச்சொல்லி மிரட்டி இருக்கான். இவன அவங்க போட்டு தள்ளிட்டாங்க. எப்பேர்ப்பட்ட குடும்பம் தெரியுமா அது. அந்தம்மா அம்பிகாவோட அப்பாகிட்ட சம்பளம் வேணா சி.ஏ படிக்க ஹெல்ப் பண்ணுங்கன்னு வந்து சேர்ந்து அந்த புள்ளைய கல்யாணம் பண்ணிகிட்டான். மொத்த குடும்பத்தோட நல்ல பெயரையும் கெடுத்துட்டான். இதுல அந்த அம்மா அம்பிகா பேருக்கேத்த மாதிரி கோயில் சிலை போல கம்பீரமா அழகா இருக்கும்,அத அடிச்சு உதைச்சு பேசிப்பேசியே உசுரோட கொன்னுட்டான். நான் இன்னிக்கு ஒரு தொழில்ல இருக்க அவங்க அப்பாதான் காரணம். அந்தாள் எவ்வளவு அசிங்கப்படுத்துனாலும் அந்த புள்ளைக்காக அவங்க வீட்டுக்கு போய் பார்த்துட்டு இருந்தேன். கேட்கிற வேலையெல்லாம் செஞ்சு கொடுத்துட்டு இருந்தேன். இனியும் அந்தம்மா அவ பொண்ணு நல்லா இருக்க என்னால முடிஞ்ச உதவி செஞ்சு தருவேன். கண்ணா! அந்த பொண்ணு எங்கும் போயிடப்போறதில்லை, இந்த ஊர்லதான் வாழப் போகுது. என் கண்ணு எதிர்க்கதான் இருக்க போகுது. இருபது வயசுக்கு மேல நாம நேர்ல போய் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்டா. அதுக்காக இந்த மாதிரி தப்பு காரியம் எல்லாம் செய்ய போகாதடா ராசா. வீட்டுக்கு ஒரே ஆம்பள புள்ளடா நீ. தாத்தா உன்னை இதுக்காகவா இவ்வளவு ஒழுக்கமா வளர்த்து வச்சாரு சொல்லு. இப்படியெல்லாம் செய்யாதடா கண்ணா” என்று கண்கள் கலங்கி பேசியவர் மூன்று பேரையும் கவனிக்க தனியாக ஆள் போட்டார்.இவர்களுக்கு பார், பப் என்று செல்வதற்கு தடை விதித்தார். போதை பொருட்கள் விற்பனை செய்யும் சங்கிலியை மொத்தமாக அழிக்க என்ன செய்ய முடியுமோ அதை செய்தார். அடிக்கடி மூவரையும் அமர்த்தி எந்த வீட்டு ஆண்பிள்ளைகள் எப்படி கெட்டு போனார்கள் என்று கதைகள் சொல்ல தொடங்கனார். எப்படி வாழக்கூடாது என்று சொல்லி வளர்க்க தொடங்கினார். பாக்சிங், ஹேக்கிங், ட்ரெக்கிங்,ரைபிள் ஷூட்டிங் என விதவிதமாக பொழுதுபோக்கை அறிமுகம் செய்தார்.
கபிலனின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி மூவரும் அவர்கள் பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்து அந்த வட்டத்துக்குள் இருந்துக்கொள்ள பழகிக்கொண்டார்கள். புவன் “அவளுக்கு என்னை பிடிக்காமல் போச்சே” என்று உள்ளுக்குள் உருகி போனான், சிரிப்பை மறந்துபோனான்.