மகிழன் ,’உன்னிடம் இன்னொரு விஷயம் கூறவா?’ என கேட்டு தருணியை அதிர வைத்திருந்தான்.
“என்.. என்னது?” என்று தடுமாறிக் கேட்டவளுக்கு அதிரடியான சிரிப்பே பதிலாய் கிடைத்தது.
“அதை நான் இப்போ சொல்ல மாட்டேன். இனியொரு முறை வதனி கிட்ட ஏதாவது அவள் இன்செக்யூரா ஃபீல் பண்ற மாதிரி பேசி இருந்த அப்படின்னா, அப்போ சொல்வேன். கேட்டுட்டு நீயே சூசைட் பண்ணிக்கிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. இப்பவும் என் மனைவியை நல்லா பார்த்துக்கிட்டன்ற ஒரே ஒரு எண்ணம் என் மனதில் இருக்கிறதால மட்டும் தான் நீ தப்பிச்சு இருக்க. நெருப்போடு எப்போதும் விளையாடக் கூடாது தருணி.” என்று இணைப்பைத் துண்டித்தான்.
தருணி வியர்த்து விறுவிறுத்து அமர்ந்திருந்தாள்.
“மகேன்…!”என அவனை அழைத்திட,” சொல்லு தருணி.”என்றான் மகேந்திரன்.
“உங்க அண்ணா எனக்கு ஆர்டர் போடுறார், என் தங்கச்சி கூட பேசக் கூடாது’னு அவர் ஏன் சொல்றாரு?” என்றாள் ஆத்திரமாக.
“ஏன்னா அவங்க அவரோட வொய்ஃப். அது மட்டுமில்லாமல் அவங்க உன் தங்கை கிடையாது அக்கா. தென் அவர் வொய்ஃப் கூட யார் பேசணும் பேசக் கூடாதுன்னு அவங்க ரெண்டு பேரும் தான் டிசைட் பண்ணனும், நானோ நீயோ இல்லை என்றவன் அவர் பேசக் கூடாதுனு சொல்லறார்னா அப்போ அந்த அளவுக்கு ஏதோ நடந்திருக்கு அப்படித் தானே…?! நேத்து நடந்த சண்டைக்கும், உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே?” என கூர்மையாக அவளை பார்த்தபடி கேட்க
விஷயம் விபரீதமாக தன் பக்கம் திரும்புவதை உணர்ந்தவள், உடனேயே பேச்சை மாற்றினாள்.
“அதெல்லாம் எதுவுமில்லை. அவர் அதிகாரமா பேசுறது எனக்குப் பிடிக்கலை, அதான் சொன்னேன்.” என்பதோடு முடித்துக் கொண்டாள்.
முதல் நாள் வதனியிடம் பேசியதெல்லாம் நினைவில் வந்து சென்றது அவளுக்கு.
வதனி மகிழனின் உடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“ப்ரகா என்ன செய்யிற?”என்றபடி வந்த தருணியை முகம் மலர வரவேற்றவள்,” சும்மா தான் தருணிக்கா, துணி மடிக்கிறேன் உட்காருங்க. இருங்க நான் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்று எழுந்தாள்.
“அதெல்லாம் வேண்டாம் உட்காரு.” என்ற தருணி அறையை சுற்றி பார்வையை சுழற்றினாள்.
மணமக்களாய் மகிழனும், வதனியும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அழகாய் ஜொலித்தது சுவற்றில்.
“ஓஓஓ! மாமா லேப்டாப் எல்லாம் யூஸ் பண்ணுவாரா…?விவசாயம் மட்டும் தான் தெரியும்’னு நினைச்சேன்.” என பேச்சைத் துவங்கினாள் தருணி. நவீனரக மடிக்கணினியாக இருக்கவே மனதினுள் வியந்து போனாள் அவள்.
“ஆமாக்கா…அக்ரி சம்பந்தப்பட்ட படிப்பு தான் படிக்கிறாங்க. அவங்க மும்பை ஐஐடில படிச்சவங்க அங்கே தான் பிஹெச்டியும் பண்றாங்க.” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.
‘இவ்வளவு திறமையானவனா…?’ வியந்தே போனாள் தருணி.
அப்போது தான் அங்கிருந்த கண்ணாடி அலமாரியில் இருந்த புத்தகங்களை கவனித்தாள். அத்தனையும் அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தான். நாவல் படிக்கும் பழக்கம் கூட இருக்கும் என்பதை அவன் வைத்திருந்த பொன்னியின்செல்வன், வேள்பாரி படமிட்டு காட்டியது. அப்படியே அடுத்த பக்கம் பார்வையை சுழற்ற ரிம்லெஸ் கண்ணாடி அணிந்து ஃபார்மல் உடையில் கைகளை ஃபேண்ட் பாக்கெட்டில் விட்டவாறு பக்கவாட்டில் நின்று போஸ் கொடுத்திருந்தான். நிச்சயம் பத்தொன்பது இருபது வயதில் எடுத்த புகைப்படமாக இருக்கக் கூடும். இப்போது உள்ள மகிழன் கட்டை மீசை வைத்து கண்ணாடி இல்லாமல் விறைப்பாய் இருக்கிறானே…
“ம்ம்ம் ,உன் வீட்டுக்காரர் செம ஸ்மார்ட் போல ப்ரகா” என்று உதடு பிதுக்கியவள்,” ஆனா அவருக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத உன்னை இப்படி அவசரக் கல்யாணம் பண்ண வேண்டியதா போயிடுச்சே?” என்று உச்சுக் கொட்டினாள்.
அதுவரை புன்னகைத்து இருந்த வதனியின் முகம் அதைத் தொலைத்து வாடிப் போனது.
“சாரி ப்ரகா !,நான் இப்படி சொல்லக் கூடாது தான். ஆனா மனசே கேட்கலை போ. உனக்கேத் தெரியும் நீ எப்படி இருக்கன்னு. நீயே யோசிச்சுப் பாரேன், அவருக்கு நீ இணையானவளான்னு. எனக்கு தெரிஞ்சு வேற வழியில்லாம உன் கழுத்தில் தாலி கட்டி இருப்பார். உன் கூட அவர் சந்தோஷமாவா இருக்கார்?” என்றாள் சற்று ஏளனமாக .
“இல்லக்கா என்னை அவர் நல்லா பார்த்துக்கிறார்.”என்றாள் வதனி வெள்ளந்தியாய்.
“அது உன் மேல வந்த பரிதாபமா இருக்கும் ப்ரகா. தாலி கட்டிட்டோம் வேற வழி இல்லை னு நினைச்சு வாழ்ந்திட்டு இருப்பார். மனசைத் தொட்டு சொல்லேன், நீ அவரா இருந்தா உன்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை தருவியான்னு?” என்றதும் வதனியின் முகம் இறுகியது.
அவளை பார்த்தும் பார்க்காதவாறு தருணி மேலும் பேசினாள்.
“உனக்கேத் தெரியும் நீ என்னை விட பெரியவன்னு… ஆனா பொண்ணு கேட்டு வந்தவங்க எல்லாரும் உன்னை விட்டு என்னை செலக்ட் பண்ணதால தான் முதல்ல எனக்கு கல்யாணம் பண்ணாங்க. ஏதோ இவருக்கு பார்த்த பொண்ணூ ஓடிப் போகவும் பெரியம்மா உன்னைக் கொண்டு போய் நிறுத்தி கட்டி வச்சுட்டாங்க. அவங்களுக்கே மனசு இல்லை தான், இவ்வளவு அழகான மாப்ளைக்கு உன்னை மாதிரி பொண்ணை கட்டி வைக்க…! ஆனா என்ன செய்றது அந்த நேரத்துக்கு நீ தான் கிடைச்ச, அது மட்டும் இல்லாம நீ அவங்க தங்கச்சி பொண்ணு அந்த பாசத்தில் கட்டி வச்சுட்டாங்க போலருக்கு. அன்னைக்கு வந்தாளே அந்த பொண்ணு அவளைத் தான் மகிழன் மாமாக்கு கட்ட நினைச்சாங்களாம். ப்ப்ச் அவ அன்னைக்கு வராததால லக் உனக்கு அடிச்சிருக்கு .”என நீளமாக பேசி முடிக்க ப்ரகாவின் விழிகளில் கண்ணீர் குளம் கட்டி இருந்தது.
“அச்சோ சாரி சாரி ப்ரகா…! நான் பாட்டுக்கு உண்மை எல்லாம் தத்து பித்துனு உளறிட்டேன். “என்று பாவலா காட்டியவளுக்கு பதில் கூட பேச இயலவில்லை ப்ரகாவால்.
“ஆனாலும் பாரேன் ப்ரகா பரிதாபப்பட்டு, பாவப்பட்டு யாராவது உனக்கு எல்லாம் தந்திடுறாங்க. என் அப்பா அம்மா பாவம் பார்த்து எங்க கூடவே உன்னை வளர்த்தாங்க, படிக்க வச்சாங்க, இப்ப என் கல்யாணத்திற்கு வந்து மகிழன் மாமா பரிதாபப்பட்டு பாவப்பட்டு தாலி கட்டி நல்ல சொகுசான வாழ்க்கை தந்திருக்கார்” என்று உச்சுக் கொட்டியவள் ப்ரகல்யாவின் கலங்கிய முகம் கண்டு நிறைவாய் புன்னகைத்து
“சரி ப்ரகா நான் வரேன் மகேன் வந்திடுவார். அவர் வர்ற நேரத்தில் நான் இருக்கணும் இல்லாட்டி கோபம் வந்திடும் அவருக்கு. வந்ததும் என் ஃபேஸ் பார்த்தா தான் அவருக்கு ஹாப்பியாவே இருக்கும். அவ்வளவு லவ் என் மேல”என்றபடி கீழே சென்று விட்டாள்.
தருணி அனைத்தையும் நினைத்தபடி அமர்ந்திருந்தாள். எப்படியும் வதனி வீட்டை விட்டு சென்றிடுவாள் என எண்ணியிருக்க, அவளோ இன்னும் வெளிவரவில்லை. மகிழன் மிரட்டுகிறான் என்றால் இவள் எதுவும் சொல்லி இருப்பாள். இல்லை காலையில் நடந்த சண்டை வைத்து மகிழன் பேசுகிறான் எப்படியும் கிளம்பி விடுவாள் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் அதன் பின் நடந்ததோ வேறாகிப் போனது.
சடுதியில் மகிழனின் வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்திட அவன் பக்கவாட்டில் மாடி ஏறுவது தெரிந்தது.
அவன் வேகத்தில் எப்படியும் சண்டை ஏதாவது வரும் என்று எண்ணியிருக்க ,சிறிது நேரத்தில் ப்ரகல்யாவும் அவனும் தயாராகி வெளியே வந்தனர்.
அவனின் முழங்கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாள் ப்ரகா. மகிழன் காதினில் ஏதோ கிசுகிசுக்க அவனை தோளில் அடித்தபடி சிணுங்கிக் கொண்டு நடக்க தருணிக்கு இங்கே மனமெல்லாம் புகைந்தது.
‘இவ்வளவு பேசி இருக்கோம் ரெண்டு பேரும் கை கோர்த்துட்டு கொஞ்சிக்கிட்டு
போகுதுங்க, அப்படி என்னத்த கண்டான் இவகிட்ட?’ என்று பொருமினாள் உள்ளூர.
வண்டியை எடுத்ததும் தருணியை சைட் மிரரில் பார்த்தான் மகிழன். வேண்டுமென்றே ப்ரகாவின் கையை அவன் இடுப்பைச் சுற்றி போட்டான். தருணி ஜன்னல் கதவுகளை அடைத்து விட்டு போய் விட்டாள்.
“இடியட்!” என்று முனகியபடி கிளம்பி விட்டான்.
**********
மரகதநாயகி ஸ்வீட்டியை முறைத்துக் கொண்டு இருக்க, அவளோ சாவகாசமாக கடலையை கொறித்துக் கொண்டிருந்தாள்.
“என்னை விட அவன் உங்களுக்கு முக்கியமா போயிட்டானா ?”காட்டுக் கத்தலாக கத்தினார்.
“நாங்க சொல்ற பதில் உங்களுக்கு வருத்தமா இருக்கும் மா. அதனால நாங்க சொல்லல” என்றான் பிரபு.
“ஏன்டா ஏன் இப்படி பண்றீங்க ?” உயர் ரத்த அழுத்தம் வந்தது போல கத்தினார் அவர்.
“உண்மை பக்கம் நிற்கிறோம் அது உங்களுக்கு பிடிக்கலைன்னா நாங்க என்ன செய்ய?”என்று அலுத்துக் கொண்டாள் ஸ்வீட்டி .
“உண்மை பொல்லாத உண்மை. நம்மளை ஏமாத்துறதுக்காக டிஎன்ஏ ரிப்போர்ட் எல்லாம் அவன் காசு தந்து வாங்கி இருப்பான். அவன் அநாதை தான். செய்வினை வச்ச மாதிரி உங்களை ஆட்டி வைக்கிறான் நீங்களும் அதுக்கு தகுந்த மாதிரி ஆடுறீங்க” என கத்திக் கொண்டிருக்க பிரபுவோ கைபேசியில் வந்த அழைப்பை ஏற்று,” சொல்லுங்க மாமா!” என்றபடி வெளியேறினான்.
“ச்சே அவன் தான் அவனே தான். அவனை ஏதாவது செய்யணும்?” என்று உள்ளூர புகைந்தவருக்கு மனதில் சிரித்த முகத்துடன் வந்து நின்றாள் ப்ரகல்யவதனி.
மரகதநாயகியின் முகம் வெற்றிக் களிப்பில் மின்னியது.
“உன் பலவீனத்தை நான் கண்டுபுடிச்சுட்டேன்டா !”என்று ஆங்காரமாக சிரித்தார் மரகதநாயகி.