“ம்ஹ்ம்… ஏன் இப்படி ?”என்று சிணுங்கியவளை கண்சிமிட்டி அழைத்துச் சென்றான்.
வெள்ளை உடையில் ஆஆ ஊஊ என சத்தமிட்டபடி கராத்தே செய்து கொண்டிருந்தனர் ஒரு கூட்டமாக.
“இப்போ கராத்தே நான் கத்துக்கணுமா, எதுக்கு?” என விழி விரித்தாள்.
“ம்ம்ம் நான் கட்டிப் பிடிச்சிக் கிஸ் பண்ணதும், கட்டில்ல இருந்து எட்டி உதைக்க !”என அவன் சிரிக்காமல் சொல்ல
“ராஜா…!”என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் அவனை.
“ஹாஹாஹா முறைக்காத வா… “கையைப்பிடித்து அழைத்துச் சென்றவன், அங்கே பயிற்சி தந்து கொண்டிருந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
“இனிமேல் நான் பார்த்துக்கிறேன் அண்ணா. அண்ணி வாங்க” என்று அழைத்துக் கொண்டாள் அப்பெண்.
“இன்றைக்கேவா…?” ஆதங்கத்துடன் மகிழனைப் பார்த்திட
“இன்னைக்கே தான் போ… ரெண்டு மணி நேரம் கழிச்சு நானே அழைச்சிட்டுப் போறேன். “என்று விடை பெற்றுக் கொண்டான்.
உடல் பலம் தேவையோ இல்லையோ , இப்போதைக்கு அவளுக்குத் தேவை உடல்பலத்துடன் கூடிய தன்னம்பிக்கை அதை இந்த தற்காப்பு கலை தரும் என்று நம்பினான் மகிழன்.
நாட்கள் நகர்ந்தது. இப்போதெல்லாம் தருணி ப்ரகாவை சந்திக்க வருவதில்லை . எங்கே ப்ரகா வீட்டில் இருந்தால் தானே சந்திக்க…
அதிகாலை எழுபவள், மகிழனோடு இணைந்து யோகா செய்து விட்டு சமையலை கவனிக்கச் செல்ல மகிழ் வயலுக்குச் சென்றிடுவான். காலை மதிய உணவு வயலிலேயே இருவருக்கும் முடிந்து போகும். மாலை வீடு திரும்பியதும் கராத்தே வகுப்பிற்கு அனுப்பி வைப்பவன் ,பிறகு அவளுக்கு கணினி கற்பிக்க ஆரம்பித்திருந்தான். கற்பித்தல் கணினியோடு
நிற்காமல் கட்டிலுக்கும் தொடர்ந்தது.
எல்லோரிடமும் பேசும் போது கீச்சுக்குரலில் பேசுபவள் ,மகிழனோடு பேசும் போது மிரட்டும் குரல் தான்.
அவனோடு சளசளக்கப் பிடித்தது அவளுக்கு.
“நான் போர் அடிக்கிறேனா…. ரம்பம் மாதிரி பிளேடு போடுறேனா?” என்ற கேள்வி வேறு கேட்டுக் கொள்வாள்.
சிரித்து மட்டும் வைப்பான்.
“வாண்டு அண்ணா சொல்லு… அண்ணா சொல்லு… “அவளை வம்பிழுப்பது மகிழனுக்கு பிடித்தமான வேலை…
“என்னை லவ் பண்ணேன்னு சொன்னிங்கள்ள அந்த கதையை சொல்லுங்க “என்று வந்து நின்றால் ,”மாமா சொல்லு சொல்றேன்” என முரண்டு பிடிப்பான்.
“போய்யா யோவ் !”என்று திட்டி விட்டுச் செல்பவள், அவனை பின்னிருந்து அணைத்து கழுத்தோடு கைகளை சுற்றிப் போட்டு தோளில் தாடை பதித்து காதோரம் குறுகுறுப்பை மூட்டி விட்டு முத்தம் வைத்து செல்வாள்.
இருவருக்குமான உலகம் எப்போதும் வானுலக தேவதைகள் அலங்கரித்த சொர்க்கம் தான்.
மரகதநாயகியால் வதனியை நெருங்கக் கூட இயலவில்லை. அந்த அளவிற்கு மகிழன் அவளை தன்னகத்திற்குள் வைத்திருந்தான்.
*********
ஊர்க்காரர்கள் மகிழனை சந்திக்க வந்திருந்தனர்.
“வாங்க எல்லோரும்” என பொதுவாய் அழைத்தவன்,” நாகலெட்சுமி டீ போடுங்க” என்று குரல் கொடுத்தான்.
“அதெல்லாம் வேண்டாம் சின்னய்யா!” என்றவர்கள் ,”திருவிழா பத்தி பேச வந்தோம் சின்னய்யா “என்றார்கள்.
“வழக்கம் போல ஊர்க் கூட்டம் போட்டு பேசிக்கலாமே?” என்றதும் ,”இல்ல சின்னய்யா இதுவரை நீங்க கல்யாணம் ஆகாதவரு , அதனால எந்த முறையும் செய்யாம திருவிழா மட்டும் செஞ்சோம். ஆனா இந்த முறை பட்டம் கட்டி தான் திருவிழா நடத்தணும் . இது தான் பெரிய வீட்டு முறை” என்றார்கள் வந்தவர்கள்.
அது அவனறியாததா… தெரிந்து கொண்டு தானே பேச்சை வளர்த்தான்.
“இல்ல எனக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் ஏற்கனவே ராஜா பட்டத்தில் இருக்கிறவர் உயிரோடு தானே இருக்கிறார், அப்புறம் நான் எப்படி ?”என்று தயங்கிட
“அவர் இதுவரை இங்கே வரலையே தம்பி, அது மட்டுமில்லாமல் சுமித்ரா அம்மா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிறது நீங்க தான் கண்டிப்பா நீங்க தான் பட்டம் கட்டிக்கணும் “என்று கூற
“நீங்க ஒரு மனதா முடிவெடுத்தாலும் ராஜாவோட உடன்பிறந்தவங்க நான் பட்டத்துக்கு வர்றதை ஏத்துக்கலைனா …?”என்று கொக்கி போட்டான்.
“அவங்க கிட்ட யோசனை கேட்கிறது வழக்கம் இல்லீங்களே ?!”என்ற ஊர் நாட்டாமை ,”இந்த வருஷமாவது தம்பதிசமேதரா நின்னு திருவிழாவை நடத்தணும் சின்னையா “என்றார் வேண்டுகோளாக.
அதற்குள் தேநீரை எடுத்துக் கொண்டு வந்தாள் வதனி.
“வணக்கம் சின்னம்மா !”என அனைவரும் மரியாதை செலுத்த புன்னகையுடன் தலையசைத்தவள் ,தேநீரை கொடுத்தாள்.
“வரவு செலவு கணக்கை எல்லாம் எடுத்து வைங்க. கோவில்ல வந்து பார்க்கிறேன் போன தடவை மாதிரியே இந்த முறையும் செலவு எல்லாம் என்னைச் சேர்ந்தது. ஊரில் வரி போடும் போது குறைச்சு போடுங்க “என்றான் முடிவாக.
“செஞ்சுடலாம் சின்னையா, அப்போ நாங்க கிளம்புறோம் .”என்று விடைபெற்றுக் கொள்ள மரகதநாயகி வந்து நின்றார்.
“என் அண்ணன் இடத்தில் இவனை வைக்க நீங்க எப்படி முடிவு எடுக்கலாம் ?”என்று ஆங்காரமாய் கத்த
“நாயகியம்மா… சின்னைய்யா தான் இந்த வீட்டோட வாரிசுனு நிரூபிச்சுட்டாரு. அதனால இந்த முறை அவர் தான் பட்டம் கட்டுவாரு. இது ஊர் கூடி எடுத்த முடிவு, அப்புறம் நீங்க அசலூர்க்காரங்களாகிட்டிங்க இதுல முடிவு சொல்ல முடியாது “என்று ஊர் நாட்டாமை தீர்க்கமாக உரைக்க
“எங்கண்ணன் உயிரோடு இருக்கும் போது எப்படி இன்னொரு ஆளுக்கு பட்டம் கட்ட முடியும்?” என்று மீண்டுமாய் உறும
“உயிரோடிருந்தா பெரியய்யாவை வரச் சொல்லுங்க. பட்டம் கட்டுறோம். திருவிழாவை சிறப்பா எடுத்து நடத்த சொல்லுங்க” என்று கூறி விட்டார் பட்டென்று.
“வருவார்யா, வருவார் எங்கண்ணன் இந்த நாய் அநாதைனு காட்டவே அவர் திரும்ப வருவார்” என்று என சவாலாய் சொல்ல, மகிழன் ஏளனமாய் புன்னகைத்தான்.
“ஏய்… ஏய் சிரிக்காதடா!” என்று எகிற
“உங்களைப் பார்த்து சிரிக்க எனக்கு ஒண்ணுமே இல்லையே மரகதநாயகி……..” என இழுத்து “அத்தை” என்றான் எள்ளலாக .
“டேய் !”என்று பல்லைக் கடித்தவரின் அருகில் சென்றவன், ஊர்க்காரர்களை பார்த்து வணக்கம் வைத்து,” நீங்க கிளம்புங்க இன்னும் கால் மணி நேரத்தில் அங்கே இருப்பேன்” என அனுப்பி வைத்தான்.
மரகதநாயகியிடம்,” நான் ராஜாவாகறதை யாராலும் தடுக்க முடியாது. முடிஞ்சா செய்ங்களேன் பார்க்கலாம் “என்று சவால் விட்டான்.
வதனி காபியோடு மீண்டும் வந்தவள்,” வாங்க சின்னம்மா ! காபி எடுத்துக்கோங்க “என உபசரிக்க, அவரோ கடும் கோபத்தில் ,”உன் காபியை இவன் தலையில ஊத்து” என்று வேக எட்டில் செல்ல , வதனியோ சாவகாசமாக எடுத்து காபியை குடித்தாள்.
“ஹேய் !,அதை என் தலையில் ஊத்த சொன்னாங்க!” என்றவனுக்கு புன்னகை அரும்ப
அவளோ ,”என் மனசுக்குள்ள தானே இருக்கீங்க. தொண்டையில் இறங்கும் போது நேரா தலையில் பட்டிடும் “என்றாள்.
“சேட்டைக்காரப் பொண்ணே…!” கன்னம் வழித்து செல்லம் கொஞ்சியவன்,” கோவில் வரைக்கும் போய்ட்டு வரேன். அதுக்குள்ள நான் சொன்னதை செய்” என்று கீழிறங்கி சென்றான்.
ஊர் பெரியமனிதர்கள் சிலர் கோவிலில் அமர்ந்திருந்தனர். கணக்கு வழக்குகளை பார்த்து பேசிக் கொண்டிருக்க, மகிழன் வண்டியை நிறுத்தி விட்டுச் செல்ல , அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.
அவன் முகத்தில் ஒரு வித கர்வப் புன்னகை.
“உட்காருங்க” என்றவன், கணக்கு வழக்குகளை சரிபார்த்து விட்டு திருவிழா சம்மந்தமாக பேசத் துவங்கினான்.
“நைட் பத்து மணின்னா ஸ்பீக்கர் எல்லாம் ஆஃப் பண்ணிடணும். வரி எல்லோரும் கட்டணும் அதுக்குத் தகுந்த மாதிரி போடுங்க. ரெண்டாவது தண்ணிய போட்டு எவனாவது அலப்பறை பண்ணா போனதடவை மாதிரி செவிள்ல நாலு அப்பு விட்ருவேன்னு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை பண்ணிடுங்க. ஆடல்பாடல் நிகழ்ச்சி ஒரு நாள் மட்டும் தான், கரகாட்டம் ,ஒயிலாட்டம் எல்லாம் பாரம்பரியமா பண்றவங்க தான் வரணும் , இந்த கரகாட்டம் ன்ற பேர்ல நாராசமா ஆடுற எந்த கோஷ்டியாவது உள்ளே வந்தா தொலைச்சிடுவேன். அந்த மாதிரி கருமத்துக்கு இது ஊர் இல்லை. திருவிழா முடியிற வரை அன்னதானம் போடணும் , தண்ணீர் பந்தல் அங்கங்க வச்சிருக்கணும், கடை போடுறவங்க விலையை பார்த்து வைக்கணும் ,அதிக ரேட் வச்சு வித்தா உடனே கடையை காலி பண்ண சொல்லிடுங்க. தேர் வர்றதுக்கு தகுந்தமாதிரி ரோட்டை சுத்தம் பண்ணிடனும், இளைஞர் நற்பணி மன்ற பசங்களை செய்ய சொல்லுங்க, வேற என்ன விஷயம்னாலும் வயல்ல தான் இருப்பேன் பேசிக்கலாம்” என்று முடித்தான்.
“பட்டம் கட்டுறதுக்கு ஒண்ணுமே சொல்லலையே சின்னைய்யா?” என்று கேட்கவும்,” அது நீங்களா பார்த்து ஏற்பாடு செய்றது தான் அதில் நான் கருத்து சொல்ல எதுவுமில்லை. நீங்க பார்த்து எப்படி செஞ்சாலும் சரி” என சொல்லி விட ,அவர்களும் சரி என்று சம்மதித்தனர்.
“அண்ணே இந்த தடவையாச்சும் ஊர்ப் பசங்களுக்கு தகுந்த மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் ரெடி பண்ணுங்கண்ணே !”என்றனர் இளைஞர்கள்.
“திருவிழாவை சிறப்பா நடத்திக் காட்டுங்க, மஞ்சநீர் அன்றைக்கு முழுசும் நீங்க தான் ப்ரோக்ராம் பண்றீங்க. செலவு மொத்தம் என்னோடது சரியா ?!”என்றதும் இளைஞர் கூட்டம் ஆர்ப்பரித்தது.
“பார்த்துக்கோங்க!” என்றவன் அங்கிருந்து செல்ல, ஊர் பெரிய மனிதர்களும், இளைஞர்களும் மகிழனை பாராட்டியபடி கலைந்து சென்றனர்.
மரகதநாயகிக்கு உள்ளமெல்லாம் கொதித்தது. ‘ஏதாவது இவனை செய்திட வேண்டும்’ என்று மனம் பரபரத்தது.
“சித்தி !”என்று அழைத்தாள் தருணிகா. திரும்பி பார்த்து முகம் சுருக்கியவரிடம் ,”உங்க கிட்ட பேசணும்” என்று அழைத்துச் சென்றாள்.
இருவரும் வெகுநேரம் பேசினர். இருவர் முகத்திலுமே ஆங்காரமான சிரிப்பு மலர்ந்தது. அது மகிழனுக்கு ஆபத்து என்று சொல்லாமல் சொல்லியது.
********
“ஹோய் பொண்ணே !கண்ணைக் கட்டி எங்கே கூட்டிட்டுப் போற?” என்று கேட்டபடி அவளோடு நடந்தான் மகிழன்.
“கொஞ்ச நேரம் அமைதியா வாங்களேன்” என அலுத்துக் கொண்டவள் நாற்காலியில் அவனை அமர வைத்தாள்.
கண் கட்டை அவிழ்த்து விட்டவள் ,”ட்டடைன் ட்டடைன்…!” என எதிரில் இருந்த கேக்கை காட்ட ,”என்னதிது ?”என்றான் சிரிப்புடன்.
“உங்க ப்ரூஸ்லியின் கைவண்ணம் எப்படி இருக்கு?” என எதிர்பார்ப்புடன் கேட்க
நாற்காலி போன்ற அமைப்பில் ராஜா ராணி இருவரும் வீற்றிருப்பது போல வடிவமைத்திருந்தாள் கேக்கை. அத்தனை கலைநயமாக இருந்தது அந்த கட்டிகை.
“வாவ் பொண்ணே! கலக்குற போ, ரொம்ப அழகா இருக்கு. ஆமா இது ரெண்டும் யாரு ?”என வேண்டுமென்றே வம்பு செய்ய
“ஹ்ஹான் இது முனிசாமி, அது குப்பம்மா” என்றாள் நொடிப்பாக
அட்டகாசமாய் சிரித்தவன்,” அழகாத் தான் இருக்காங்க. யார் உங்க ரிலேஷனா?” என விடாமல் வம்பு செய்து கொண்டிருந்தான் அவளை.
“ம்ம்ச் மாமா!” என்றதும் அவளை தன் பக்கம் இழுத்தவன்,” எத்தனை தடவை கேட்டேன், வம்பு பண்ணவும் சொல்றியா நீ ?”என்று தன்னோடு இறுக அணைத்திருந்தான் அவளை.
இருவருமாய் கேக் வெட்டி முடிக்க கொஞ்சலும் குலாவலுமாய் சென்றது பொழுது.
வதனி அவன் நெஞ்சில் துயில் கொண்டிருக்க, அவளின் உறக்கம் கலையாமல் படுக்க வைத்தவன், அறையை பூட்டி விட்டு வெளியேறினான்.
தோட்டத்து வீட்டிற்கு சென்றவன் ,கதவைத் திறந்து கொண்டு ஓர் அறைக்குள் நுழைந்தான்.
“வாங்கண்ணா!” மகேன் வரவேற்க தலையசைத்தவன்,” அதை ஓபன் பண்ணு “என்றான்.
மகேன் தரையில் இருந்த டைல்ஸை நகர்த்தி விட்டு, அங்கிருந்த மரக்கதவை திறக்க அது படிக்கட்டு போல வழி காட்டியது.