“சண்முகவேல்ராஜா… ம்ம்ம் எப்படி இருக்கீங்க?”என்றபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“நா… நான்…” என்று நடுங்கியவரை பார்த்து ஏளனமாக சிரித்தான்.
“நீ நல்லாவே இருக்கக் கூடாதுன்றது தான் என் ஆசை. உன்னை ஒரு நிமிஷத்தில் கொன்னுடலாம்னு மனசு துடிச்சாலும் அதை செய்ய விருப்பம் இல்லை எனக்கு. ஒரு விஷயம் தெரியுமா…?” என்று கண்களை சுருக்கியபடி அவன் கேட்க அவரோ பயந்து போய் இருந்தார்.
“மகிழன் ராஜாவாகப் போறான். ராஜா கேட்கவே நல்லா இருக்குல்ல… நீ முடியவே முடியாது’ன்னு சொன்ன விஷயத்தை நடத்திக் காட்டப் போறேன். அநாதை அரசனாகப் போறேன். உன் ராஜாங்கத்தை ஆளப் போறேன்.”என்றான் கர்ஜனையாக.
“உன்.. உன்னால முடியாது.” என்று அவர் சொல்லவே ஆங்காரமாய் ஒலித்தது அவன் சிரிப்பு.
“ஒரு நாளாவது நான் அங்க ராஜாவா இருப்பேன். எல்லாம் உன் கண்ணு முன்னாடியே நடக்கும்” என்றவன்,” உன்னை நடுங்க வச்சு பார்க்கிறதில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா எனக்கு? என்னை நினைச்சு நினைச்சு பயந்து பயந்து சாவு.” என்று எள்ளலாக பேசி விட்டுச் சென்றான்.
“வேண்டாம் மகிழா இது உனக்கு நல்லது இல்லை. என் மகனோட இடத்தில் நீயா…? என் வம்சம் சுத்தமானது நீ.. நீ.. நீ “எனும் போதே அவரின் கழுத்தைப் பிடித்து நெரித்திருந்தான்.
“இவ்வளவு தூரம் உன்னை வச்சிருக்கும் போதே உன் திமிர் அடங்கலை இல்ல. உன் வம்சம் சுத்தமானதா…?” என நக்கலாய் சிரித்து விட்டு,”உன் வம்சத்தோட முதல் களங்கமே நீதான்டா… அவன் உன் மகன்னா, அப்போ நான் யாரு…?” என்றவன்,” வெல் உன் கிட்ட ஒரு சூப்பர் விஷயத்தை சொல்ல வந்தேன். அடுத்த வாரம் மகிழவேல்ராஜாவுக்கு ராஜாவா பட்டம் கட்டப் போறாங்க, அதை நீயும் லைவா பார்க்கப் போற.” என்றான் அழுத்தமான பார்வை பார்த்தபடி.
“வேண்டாம் மகிழா நீ ரொம்ப தப்பு பண்ற” என எச்சரித்தவரை கிஞ்சித்தும் சட்டை செய்யவில்லை அவன்.
“நியாயங்கள் இடம் மாறும் சண்முகவேல். உனக்கு தப்பா தெரியற எதுவும் எனக்கு தப்பாத் தெரியல அன்ட் நீ செஞ்ச எதுவும் நியாயமா எனக்குத் தெரியல” என்றான்.
“இதை எல்லாம் என்னை வெளியே விட்டுட்டுப் பேசுடா பார்க்கலாம்.” என்று அவர் ஆக்ரோஷத்துடன் சொல்ல
“சில விஷயங்கள்ல மகிழன் அவசரப்பட மாட்டான், அதுல இதுவும் ஒண்ணு.” என்றவன் அவர் முகத்தைப் பிடித்து தன் எதிரேக் காட்டியவன்,” உன் குணத்தில் எல்லாத்தையும் கொண்டு படைக்காம ஓரளவு எனக்கும் படைச்சிருக்கான் கடவுள். அதை வெளிக்காட்ட வேண்டாம். அதான் உன் கிட்டயே காட்டுறேன்.” என்றவன் கிளம்பி விட்டான்.
***********
வதனி உறக்கம் கலைந்து எழுந்து விட்டிருந்தாள். மகிழன் படுத்திருந்த இடம் வெறுமையாக இருக்கவே சுற்றி முற்றித் தேடியபடி படுக்கையை விட்டு கீழிறங்க,” சீக்கிரம் குளிச்சுட்டு வா ப்ரூஸ்லி, டைம் ஆகுது” மகிழனின் குரல் மட்டும் கேட்டது.
மெல்லிய புன்னகையோடு தயார் ஆகி வந்து விட்டாள். ஆனால் அவன்தான் வந்தபாடில்லை.
‘எங்கேப் போனாரு?’ விழிகளை சுழற்றியபடி நடக்க சிறிது நேரத்தில் அந்தரத்தில் பறப்பது போன்றதொரு உணர்வு அவளுக்கு .
“சீக்கிரமே சொல்றேன்.” என்றவள்,” நான் பர்த்டே கொண்டாட மாட்டேன் மகிழா. எப்பவுமே கொண்டாடினது இல்லை” என்றவள்,” உங்களுக்கு சமைக்கப் போறேன் என்ன வேணும்?” என்று வினவினாள்.
“ஹோய் பொண்ணே! என்னைப் பாரு “என்று அவளை விடாமல் பிடித்தவன்,” பிறந்தநாளைக் கொண்டாடலாம் ஆனா இப்போ இல்லை. நான் சொல்லும் போது, இந்த பிறந்த நாள் எப்போதும் உனக்கு மறக்காது.”என்றான் ஸ்திரமான குரலில்.
“உங்களுக்கும் இது மறக்காது மகிழா. பேர் நல்லா இருக்கா. நேத்து தூங்கப் போகும்போது யோசிச்சேன் “என்றாள் அதுவரை குரலில் இருந்த கடினத்தன்மை மாற்றி.
“ரொம்ப நல்லா இருக்கு ப்ருஹா. யோசிக்கிறது ரொம்ப நல்லதாச்சே!” என்றவன்,” நான் சமையல் முடிச்சுட்டேன் வா சாப்பிடலாம்” என அழைத்துச் சென்றான்.
இட்லி ,சாம்பார் ,சட்னி ,பொங்கல் ,வடை ,கேசரி என்று பிரமாதப்படுத்தி இருந்தான் .
“உங்களுக்கு இதெல்லாம் சமைக்கத் தெரியுமா?” என ஆச்சரியத்துடன் விழி விரித்தாள்.
“எனக்கு இன்னும் என்னென்னத் தெரியும்னு கூடிய சீக்கிரம் நீயே தெரிஞ்சுப்ப”என பீடிகை போட்டவன்,” முதல்ல இனிப்பு !”என்று கேசரியை ஊட்டி விட்டான்.
“ஓகே ஓகே சீக்கிரம் சாப்பிடு கோவிலுக்குப் போகணும்!”என்று புன்னகையுடன் சொல்ல, இருவருமாய் காலை உணவை முடித்தனர்.
பின் இருவரும் கோவிலுக்கு கிளம்பி விட, தருணி பொங்கி வந்த கோபத்தை அடக்கியபடி பார்த்திருந்தாள்.
சற்று நேரத்தில் மரகதநாயகிக்கு அழைத்தவள்,” அவங்க வெளியே கிளம்பிப் போறாங்க சித்தி”என்று கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தாள்.
“ஐம் சாரி ப்ரகா! உன்னை எப்போதும் எனக்கு கீழேயே பார்த்து பழகிடுச்சு. நீ மேலே வர்றதையோ , உனக்கு நான் அடிபணிஞ்சு நடக்கிறதையோ விரும்பவே இல்லை” என்று முணுமுணுத்தாள்.
அங்கே மரகதநாயகியோ,” அவன் கிளம்பிட்டானாம் இந்த முறை அவனை எதுவும் செய்ய வேண்டாம், அவளை ஏதாவது பண்ணுங்க அப்போ தான் ஒரு உறவை இழந்த வலி என்னன்னு அவனுக்குப் புரியும்” என்று உரைத்திட, அவருக்கு அடிபணிந்து கிளம்பினர் அவர்கள்.
வழக்கம் போல ஆசிரமத்திற்கு சென்று விட்டு திரும்பியிருந்தனர் இருவரும்.
“எங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என கேட்டவளுக்கு அமைதியையே பதிலாய் தந்தான்.
“எங்கேன்னு சொல்லுங்களேன். ப்ளீஸ்!”என கெஞ்சியபடி அவன் பின்னால் வந்தவள் ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டாள்.
“ஞாபகம் இருக்கா…? இந்த வீடு !”என்று எதிர்பார்ப்புடன் கேட்டிட அவனைக் கட்டியணைத்து முத்தமழை பொழிந்து விட்டாள் அசுரவேகத்தில் .
“இந்த வீடு எப்படி தெரியும்? எப்படி மகிழா சொல்லுங்க?என்னங்க சொல்லுங்க” என்று அவனை பேச விடாமல் அவளே குதித்தாள் ஆவலுடன்.
“சொல்றேன் உள்ள வா பொண்ணே…! எத்தனை ஆவல் உனக்கு” என சிரித்தவன்,” பட் இது எதிர்பார்க்கலை” என சற்று முன் அவள் முத்தமிட்டதை நினைத்து ரசித்துக் கூறினான்.
அதுவெல்லாம் அவளின் மூளையில் ஏறவே இல்லை. இந்த வீடு எப்படித் தெரியும் என்ற ஆச்சரியம் தான் அவளுள்.
உள்ளே அவளின் பெற்றோர் புகைப்படம் அதன் கீழே அணையாவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.
“ஆசிர்வாதம் வாங்கிக்கோ!” என மகிழன் சொல்ல
“என் அப்பா…என் ம்மா!” என புகைப்படத்தை வருடியவள், அச்சூழலின் கனம் தாளாமல் அழுதாள்.
“ஸ்ஸ்ஸ், அழக் கூடாது. இதுக்கா இங்கே அழைச்சுட்டு வந்தேன். இங்க சிரிப்பு சத்தம் மட்டும் தான் கேட்கணும்’னு உன் அம்மா சொல்லி இருக்காங்களாமே?” என்று அவன் கூற வியப்பாய் பார்த்தாள் அவனை.
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவளிடம்,” அதுக்கெல்லாம் ஸ்பை வச்சிருக்கேன்.” என்றான் கண்சிமிட்டி.
“ஹேய்! ஏன்மா இரு போகலாம். இப்போ தானே வந்தோம்.” என்றவனிடம்,” இந்த வீடு எவ்வளவு சிரிப்பு சத்தத்தை உள்வாங்குச்சோ, அதுக்கு மேல அழுகையை தாங்கினது” என்றாள் உக்கிரமாக.
வதனியின் மற்றொரு பரிமாணத்தில் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான் மகிழன்.
“ப்ருஹா!”என்று அவளின் தோள் தட்ட
“போகலாம் மகிழா.” என்றாள் ஸ்திரமாக.
“வெய்ட் போகலாம்” என்றவன் அவளை பின்பக்கம் அழைத்துச் சென்றான்.
மல்லியும் முல்லையும் வாசனையை அள்ளித் தெளித்திருந்தது அங்கே. அவள் விரும்பும் மனோரஞ்சிதமும் பாரிஜாதமும் பூத்திருந்தது அன்று.
“பேசு ப்ருஹா… உன் அப்பா அம்மா பத்தி சொல்லு” என்று அவளை ஊக்கினான்.
“ம்ஹ்ம்… அவங்களை மாதிரி இணைபிரியாத தம்பதியை பார்க்கவே முடியாதாம். அதான் சாவுல கூட ஒண்ணா போயிட்டாங்க. ப்ரகல்யான்ற தைரியசாலி குட்டிப் பொண்ணை இந்த அகோரமான உலகத்தில் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாங்க” என்றாள் விரக்தியாக.
“அகோரமான உலகம் இப்போ மாறிடுச்சா பொண்ணே?” அவளை தன் பக்கம் திருப்பி அவள் விழியில் தன் பார்வையை கலக்க விட்டான்.
“மாறிப் போய் இரண்டு மாதம் பதினேழு நாள் ஆகிடுச்சு.” என்றாள் புன்னகை மாறாமல்.
ஆனால் அவளின் மனமோ வேறொன்றை பேசியது.
அவளை சிரிப்புடனையே பார்த்திருந்தான்.
அவனது பார்வையில் நாணம் கொண்டவள், அவன் விழிகளை தன் கைகளால் மூடினாள்.
” பார்க்க விடு பொண்ணே!” என்றான் அவள் கைகளை விலக்கி விட்டு.
” ரெண்டு கண்ணு , ஒரு மூக்கு, ஒரு வாய் தான் இருக்கு, இதுல என்னத்த திரும்பத் திரும்ப பாக்குறீங்க ?”என்று சிரிப்புடன் கேட்க,
” அதுமட்டுமா இருக்கு ?”என்றவன், அவள் நெற்றியை சுட்டிக்காட்டி ,”இங்கே நான் வச்ச குங்குமம் இருக்கு, இந்த கண்ணுக்குள்ள நான் இருக்கேன், இந்த மூக்கு நுனியில் யாருமே பார்க்காத உன் வெட்கச் சிவப்பு இருக்கு, அது இந்த ரெண்டு கன்னத்திலும் படர்ந்து இருக்கு என் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும், அப்புறம் இந்த…” என்றவனை பேச விடாமல் தடுத்துவிட்டாள்.
“ஹப்பா எவ்வளவு சொல்றீங்க நீங்க?, இதெல்லாம் எங்க தான் கத்துக்குறீங்க” சிரித்தபடி எழுந்து ஓடிப் போனாள்.
“ஹேய் சொல்றேன் வா!” என்று அவள் பின்னால் ஓடியவன் மனோரஞ்சித மரத்தின் கீழ் நின்று பிடித்துக் கொண்டான்.
மனோரஞ்சிதம் பழத் தோட்டத்திற்குள் விட்டது போல வாசனையை பரப்பி விடும்.
அதன் வாசத்திலும் அவன் அருகாமையிலும் மயங்கி நின்றவள் சட்டென தெளிந்து விலகப் போக விட்டால்தானே அவன்.
“ப்ருஹா!” என கிறங்கியக் குரலில் அழைத்தவன் அதற்குமேல் தாளாமல் அவளிதழ்களை கொய்திருந்தான்.
இரு யாக்கையின் கூடலின் அச்சாரம் இதழ்கூடலல்லவா…
இதழ்சங்கமத்தில் லயித்திருக்கும் இரு ஜீவன்களையும் சுற்றி வளைத்திருந்தனர் மரகதநாயகியின் ஆட்கள்.