வதனி மகிழனை விட்டு விலகினாள். பாதி உண்ட மிட்டாயை பிடுங்கிய குழந்தையைப் போல பார்த்தான் மகிழன்.
“போகலாம் வாங்க .”என்றாள் நிதானமாக.
“மாட்டேன்” என தலையசைத்தான். அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டான் விட்ட செயலைத் தொடர. சருகான இலைகள் மிதிபடும் ஓசை மெல்லியதாக இருந்தாலும், தெளிவாய் அவனுக்குக் கேட்டது.
“வீட்டுக்குள்ள போ, இதோ வரேன்” என்று அவளை உள்ளே அனுப்பிய பிறகு , விழிகள் சுருங்க பார்த்தான்.
இலைச்சருகுகளின் சத்தம் நின்றது.
கையை உயர்த்தி நெட்டி முறித்ததும், இடுப்பை அங்கும் இங்கும் வளைத்து சோம்பலாய் நெட்டி முறித்தான். பின்னால் இருந்த சைலன்சர் துப்பாக்கியை எடுத்து அதன் முனையை உள்ளங்கையில்
துடைத்து விட்டு மிகச் சரியாக ஒருவனைப் பார்த்து குறி வைத்தான். மற்றவர்களுக்கு வியர்த்து வழிய, நால்வரும் சேர்ந்து அவனைத் தாக்க முற்பட மகிழனோ மரகதநாயகிக்கு அழைத்தான்.
எடுத்த எடுப்பிலேயே,” என்னைக் கொல்ல ஆள் அனுப்பி இருப்பீங்க போலருக்கு. ஊஃப் நீங்க அடங்கவே மாட்டிங்களா மரகதநாயகி. நான்” எனும் போதே இருவர் அவனை நெருங்கி விட்டனர்.
மகிழன் இருவர் முட்டிக்காலுக்கு கீழே சுட்டு விட ,அவர்கள் அலறும் சத்தம் மரகதநாயகியை எட்டியது.
“ராஜா ஆகறதுக்கு முதல் தகுதி தன்னைத் தானே பாதுகாப்பு பண்றது தான், ஐ வுட் சேஃப் மைசெல்ஃப்” என்றவன்,” மிஸ்டர் சுசீந்திரன் என் தோட்டத்து வீட்டில் இருக்கார், எப்படி அவர் வீட்டுக்கு வரணுமா இல்லையா?” என்று நக்கலாய் சிரிக்க, மறுநிமிடம் மரகதநாயகி அவர் அனுப்பிய ஆட்களை திருப்பி அழைத்து விட்டார்.
“தட்ஸ் குட் “என முத்துப்பற்கள் பளீரிட சிரித்தவன்,” நெக்ஸ்ட் டைம் நல்ல ப்ளான் போடுங்க ஓகே.” என்று இணைப்பைத் துண்டித்து விட்டான்.
“இவ்வளவு நேரம் வெளியே என்ன செஞ்சீங்க ?,என்ன சத்தம் அது?” என்று புருவங்கள் இடுங்க வினவிய மனைவியிடம்,” ஒரு கருநாகம்டா. வெரட்டி விட்டுட்டு வர டைம் ஆகிடுச்சு. வீட்டிற்கு கிளம்பலாமா?, என் ப்ரூஸ்லி இப்பவே வேணும்னு தோணுது” என்றான் அவள் பேபி பிங்க் வண்ண இதழ்களில் பார்வையை பதித்தபடி.
“அச்சோ ! இவரை…” என்று எண்ணியபடி விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
வீட்டை பூட்டினான். ப்ரகாவின் விழிகள் கலங்கியது தன் பெற்றோரின் நினைவினில்.
“அம்மா அதைவிட முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன். அந்தத் தோட்டத்து வீட்டில் இவங்க போற வாரதைத் தவிர சாப்பாடு போகுது. அப்புறம் அப்புறம் முந்தாநேத்தைக்கு பழைய துணி, துப்புட்டி( போர்வை) எல்லாம் கொண்டு வந்து எரிச்சுட்டு இருந்தாங்க. “என்றான்.
‘இவன் மேல அப்பவே சந்தேகப்பட்டேன் நான். எங்கண்ணனை இவன் தான் ஏதோ செஞ்சிருக்கணும்னு ‘என்று யோசித்த மரகதநாயகி தோட்டத்திற்கு ஆட்களை முடுக்கி விட நினைத்தார்.
*********
அரண்மனையே கோலாகலமாக இருந்தது. வாசலில் தோரணமும் , வாழைமரமும் , அலங்கரிக்க வாசலை அடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலில் மேடை அமைத்து அரியாசனம் போல மென்மெத்தையை போட்டு கம்பீரமாக அலங்கரித்திருந்தனர்.
தங்க நிற ஜிப்பாவில் அத்தனைப் பேரழகாக நின்றிருந்தான் மகிழன். கையில் இருந்த பட்டனைப் போட்டபடி நிற்க, ப்ரகல்யா வந்தாள்.
அவனை விழியகலாதுப் பார்த்து நிற்க, கண்ணாடியின் வழியே அவளைப் பார்த்து புருவமுயர்த்தி என்னவென்று கேட்க
“ம்ம்ம் ,எதுவுமில்லை “என தலையாட்டினாள்.
“இங்க வா” என்று அழைத்ததும் சாவி கொடுத்த பொம்மையாக அவனருகில் சென்றாள்.
“ப்ரூஸ்குட்டி ஏன் ஃப்ரீஸ் ஆகிட்டீங்க.? நல்லா இருக்கா?” என்று புன்சிரிப்பை உதிர்த்தான்.
“ராஜா மாதிரியே இருக்கீங்க. “மீசையை முறுக்கி விட்டு கண்சிமிட்டினாள்.
“ராஜா மாதிரி இல்ல ராஜாவே தான், இன்னும் கொஞ்ச நேரத்தில்” உற்சாகமாய் பேசினான்.
அவன் உயரத்திற்கு எம்பி தானாக அவனிதழ்களை கௌவிக் கொண்டாள். எதிர்பாராத இந்த இதழொற்றலால் சிலிர்த்துப் போனான் மகிழன்.
நொடிகள் கடந்து நிமிடங்கள் உயிர்பெறத் துவங்கிட , நாணமாய் விலகியவள் விழிகளை மலர்த்தினாள்.
“ரெடியாகி நிற்கிறேன் என்ன வேலை பண்ற நீ.? மறுபடியும் குளிக்க வச்சிடுவ போல இருக்கே!?” கீழுதடை பற்களின் நடுவில் கடித்துக் கொண்டான்.
“ஏன் வேண்டான்னு சொல்வீங்களா?” என்று கேட்டு அவனை அசரடித்து இருந்தாள்.
“ஹேய் ப்ரூஸ்லி, தேறிட்டடி நீ. பங்ஷன் முடியட்டும் இருக்கு உனக்கு” என்று செல்லமாய் அவளை மிரட்ட
“ஃபங்ஷன் முடியும் போது உங்களுக்கும் இருக்கு.”என்றாள் சூசகமாக.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே கதவுத் தட்டப்பட்டது.
“டைம் ஆகிடுச்சு போகலாம்” என்று அவளோடு சென்று கதவை திறந்தான்.
“எல்லோரும் வந்துட்டாங்க தம்பி.” என நாகலெட்சுமி அழைத்திட,”இதோ வந்துட்டேன் போங்க” என்றான்.
**********
தருணி தன் குடும்பத்தினரின் வரவிற்காக காத்திருந்தாள். ‘இனிமேல் இங்கிருக்கக் கூடாது’ என்ற எண்ணத்திற்கு வந்து விட்டிருந்தாள் அவள்.
“சொத்தெல்லாம் உங்க பேரில் இருக்கும் போது அவருக்கு ஏன் பட்டம் கட்டணும்?” என்று மகேந்திரனை கேட்டிருந்தாள் மரகதநாயகியின் பேச்சைக் கேட்டு.
“அண்ணன் தான் இங்க எல்லாம், சொத்து பெரிய விஷயம் கிடையாது. எனக்கு எந்த பொறுப்பையும் ஏத்துக்க விருப்பமும் கிடையாது .”என்று கூறி விட்டான்.
“ஆனா எனக்கு நீங்க தான் பட்டம் கட்டிக்கணும்னு விருப்பம்” என பிடிவாதமாக நின்றாள்.
“இது தான் நடைமுறை தருணி, தேவை இல்லாமல் ஆசையை வளர்த்துக்காதே. உன் ஆசைக்கு நான் ஆட முடியாது” என்றான் எரிச்சலாக.
“அதென்னங்க அண்ணன் மேல அப்படி ஒரு பக்தி.? அவர் சொன்னா எல்லாம் செய்வீங்க போல. என்னை விட்டுட்டுப் போகச் சொன்னா அதையும் செய்வீங்களா?” என்று கேட்டு விட மகேந்திரன் ஒரு நொடி அவளை உறுத்து விழித்தவன் ,”அவர் சொன்னா செய்வேன்.” என்று கூறி விட்டு வெளியேறினான்.
தருணி கொதித்துப் போனாள் அவன் பேச்சில்.
‘இனி இந்த வீட்டில் நாம் இருக்கக் கூடாது. அதுவும் அவள் ராஜாவின் மனைவியாக நிற்க நான் சேடிப்பெண் போல இருக்க வேண்டுமா.?,சொத்து வந்து என்ன யூஸ்…? மரியாதை எல்லாம் அவளுக்குத் தான் கிடைக்கிறது.” என்று உள்ளூர கொந்தளித்துக் கொண்டிருந்தாள்.
சுமித்ராதேவி மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாராகிக் கொண்டிருந்தார். விஷ்வநாதன் அவரை ரசனையுடன் பார்த்திருந்தார்.
“என்னவாம் ஐயாவுக்கு வச்சக் கண்ணு வாங்காம பார்க்கறீங்க?”தலைமுடியை சரி செய்து கொண்டிருந்தார்.
“ரொம்ப நாளைக்குப் பிறகு உன் முகம் ஜொலிக்குது சுமி. “என்றவர்,” அம்மாவையும் மகனையும் பிரிச்சு பாவம் பண்ணிட்டேனா நான்?” என்றார் கலங்கியக் குரலில்.
சுமித்ரா பதறி எழுந்தவர் ,”ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. “என்று முகம் வாடி விட்டது அவருக்கு.
“இல்ல இல்ல நான் எதுவும் சொல்லலை. நீ ரெடியாகும்மா எல்லாரும் வந்திடுவாங்க. மகேனைப் பார்க்கிறேன்.” என்று வெளியேறி விட்டார்.
சுமித்ராதேவி எழுந்தவர், தன் பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்.
“நீங்க ஆசைப்பட்டது நடக்கப் போகுது. துணையா வரணும் நீங்க” என பெருமூச்செறிந்தபடி விளக்கேற்றினார்.
‘எந்த பிரச்சினையும் இல்லாம இந்த விழா நடக்கணும் .’என வேண்டிக் கொண்டவர் மனக்கண்ணில் வந்து நின்றார் சண்முகவேல்ராஜா. மனதிலோர் நடுக்கம் பிறந்தது.
‘எந்தக் காலத்திற்கும் நீங்க மட்டும் இந்த ஊருக்கு வந்திடவேக் கூடாது ‘என்று நினைத்தவர் கதவை சாற்றி விட்டு வெளியே வந்தார்.
ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர். வந்தவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தனர் விஷ்வநாதனும், சுமித்ராதேவியும்.
தருணியின் குடும்பத்தார் வரவே மகேந்திரனும் தருணியும் வந்து வரவேற்க தருணியின் அம்மா முகம் கடுகடுவென இருந்தது.
“எங்கே ப்ரகாவை காணல?” என்று கேட்ட பெரியம்மா புதிதாய்த் தெரிந்தார் தருணிக்கு.
“ப்ரகாவா!?” என்று கண்கள் சுருக்கியவளிடம்,” ஆமாம் ப்ரகா தான். ஏன் எப்போதும் கூப்பிடுற பேரை கூப்பிட்டு அவ வீட்டுக்காரர் கிட்ட ஏலியன் பட்டம் வாங்கிக்கவா?” என்று கேட்டதும் தான் தருணியின் மனம் தெளிந்தது.
‘கிங்கரா ப்ரகாவாக மாறிய காரணம் இதுதானா?’ என ஆசுவாசம் அடைந்த அதே நேரத்தில், பெரியம்மாவின் மனதில் நிம்மதியின் இருப்பிடம் தோன்றியது.
தருணியின் அம்மா அவளை தனியேப் பிடித்துக் கொண்டார் கோபமாக.
“உன் புருஷனுக்கு புத்தி எதுவும் கெட்டுப் போச்சாடி. சொத்தை வாங்கின மனுசனுக்கு பதவியை பிடிக்கத் தெரியாதா…?இது ரொம்ப பெரிய விஷயமாமே, இந்த ஊர்ல அவங்களுக்கு கிடைக்கிற மரியாதையே வேறயாம். அதை எல்லாம் அந்த கிங்கரா அனுபவிக்கப் போறாளே!?” என பொருமினார்.
“நீங்க வேற பேசாம இருங்க. நானே கடுப்பில் இருக்கேன். இனிமே என்னால இந்த வீட்டில் இருக்க முடியாது. அதுவும் அவளுக்குக் கீழ என்னால முடியவே முடியாது.” என சிடுசிடுத்தாள்.
“ஏய் என்ன உளர்ற…?,இதுக்காக எல்லாம் வீட்டை விட்டு வரலாமா போடி பைத்தியம். அந்தக் கிங்கராவுக்கு உன் மேல பாசம் ஜாஸ்தி. நீ எப்போதும் போல அதிகாரத்தைக் காட்டாம, சிடுசிடுக்காம அவளுக்கு கொஞ்சம் பாசத்தைக் காமி, உன் காலடியிலேயே விழுந்து கிடப்பா. அதிகாரத்தைப் பயன்படுத்தி அவ கிட்ட காரியத்தை சாதிக்காம, அன்பாலேயே சாதிச்சுக்க. நீ ஆட்டி வைக்கிற கைபொம்மையா அவளை மாத்துடி” என்று மகளுக்கு அறிவுரை சொல்ல
தருணியோ ,”அந்த மகிழன் இருக்கானே அவன் அந்த ப்ரகா பக்கத்திலேயே விட மாட்டான் . ஏற்கனவே என்னை வார்ன் பண்ணி இருக்கான், அவ கிட்ட பேசக் கூடாதுன்னு…” என எரிச்சலாக கூற
“அவன் பார்வைக்கு சரியா இருக்க மாதிரி இரு தருணி, எல்லாம் நான் சொல்லணுமா ?”என்று சலித்துக் கொண்டார்.
சுமித்ரா நடுங்கிப் போய் நிற்க, விஷ்வநாதன் தன்னுடன் நெருக்கமாக பிடித்துக் கொண்டார்.
“ராஜா எங்கேன்னு கேட்டீங்களே? வந்துட்டார் எங்கண்ணன்!” என்று கர்வமாய் உரைத்தார் மரகதநாயகி.
அரியாசனம் நோக்கி வந்த சண்முகத்தை எரிக்கும் பார்வை பார்த்தான் மகிழன்.
“இந்த அரியாசனம் எனக்கு சொந்தமானது. எவனும் அதில் உரிமை கொண்டாட முடியாது. அநாதைப்பயலுக்கு அரியாசனம் கேட்கிறதா… ஹான்…!!”என்று சண்முகவேல்ராஜா திமிராக அமர
ஊர்க்காரர்களோ,” பெரியராஜாவே வந்தாச்சு அவருக்கே பட்டம் சூட்டிடலாம் நல்லநேரம் முடியப்போகுது.” என்றதும் புரோகிதர் கீரிடத்தை தாம்பாளத்தில் வைத்து சண்முகத்திடம் சென்றார்.
“இந்த பதவி என் உண்மையான வாரிசு இரணியனுக்குத் தான் சொந்தமானது , அவனுக்குத் தான் நீங்க கீரிடத்தை சூட்டணும் அவன் தான் இந்த அரண்மனையோட வாரிசு. இனி இந்த ஊரோட பாதுகாவலன் “என்றெல்லாம் பெருமைபீத்திக் கொண்டிருந்தார் சண்முகவேல்ராஜா.
இரணியன் வந்தான். ஆறடிக்கும் மேல் உயரம் ஆஜானுபாகுவானத் தோற்றம். முகத்தில் கம்பீரம் எல்லாம் இருந்தது ஆனால் கண்ணியம் இல்லை. சண்முகவேலின் முகச்சாடை தொண்ணூறு சதவீதம் பொருந்தியது அவனுக்கு.
சற்று நேரத்தில் அவ்விடமே புகைமண்டலம் ஆகியது. ஒவ்வொருவராய் மயங்கி விழ சண்முகவேல்ராஜாவின் கழுத்தில் கத்தி இறங்கி ரத்தம் பீய்ச்சி அடித்தது. மகிழன் அடிபட்டு கிடந்தான். ப்ரகல்யா அவ்விடத்தில் இல்லை.