“ப்ரகிமா!” என்று அவளை அருணா வாங்கப் போக அவளைத் தூக்கியவரோ ,”உங்கப் பொண்ணா?” என்று வினவினார்.
“ஆமாங்க, அம்மு அடிப்பட்டிடுச்சாடா?” என்று மகளைக் கையில் வாங்கிக் கொண்டார் அருணா.
“வலிக்குதும்மா” முழங்கையில் ஏற்பட்ட சிராய்ப்பைக் காட்டி அழுதாள் ப்ரகா.
“வீட்டுல போய் மருந்து போட்டுக்கலாம் சரியா?!” என ப்ரகாவைத் தூக்கிக் கொண்டு செல்ல முற்பட, எதிரே இருந்தவனோ,” வாங்களேன் என் வீடு பக்கம் தான் பாப்பாக்கு மருந்து போட்டுட்டு போகலாம்” என்று அழைக்க
“இல்லைங்க பரவாயில்லை” என மறுத்து விட்டு நகர்ந்தார் அருணா.
“மருந்து போட்டுட்டுப் போகலாம்னா போகலாம்.”என்று அழுத்தமாக உரைத்தபடி அருணாவின் கையைப் பிடித்து இழுக்க ,அருணா அவனை அறைந்து விட்டார்.
‘அரண்மனை வாரிசு அழைக்கையில் எப்படி மறுக்க ?’என்று இருவரும் அவனோடு செல்ல, சொன்னது போலவே மருத்துவச்சி அங்கிருக்க, ப்ரகாவுக்கு பச்சிலையை அரைத்து மருந்து பூசி விட்டார்.
இரணியன் அங்கு கிளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். ப்ரகாவிற்கு மறுபடியும் அவைகளைப் பார்த்து ஆவல் பிறக்க ,அங்கே கைகாட்டினாள்.
சற்று நேரத்தில் இருவரும் மயங்கி விழவே, சண்முகத்தின் வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட விளையாடிக் கொண்டிருந்த ப்ரகா தன் பெற்றோரைக் காணாமல் வேகமாக ஓட, இரணியன் தன்னோடு விளையாடாமல் செல்லும் அவளை கோபத்துடன் பிடித்துக் கொண்டான்.
“எங்கே ஓடுற?, என் கூட விளையாடு!” என மிரட்ட அவளோ,” அம்மா காணும் “என்று உதடுபிதுக்கி அழுதாள்.
“ப்ப்ச் உங்கம்மா தூங்குவாங்க அப்புறமா வருவாங்க நீ வா விளையாடு” என்று விடாமல் பிடித்துக் கொள்ள, அவனை விட்டு விலகித் திமிறிக் கொண்டு ஓடினாள் ப்ரகா.
“ஏய் போகாத…!”என்று இரணியன் கத்தும் போதே உள்ளே ஓடி விட்டாள்.
அருணா அங்கே மயங்கிக் கிடக்க , சண்முகம் அந்த அறையினுள் ஆடைகளை நீக்கி அவரை நெருங்கியிருந்தான்.
முழுதாய் மயங்காத அருணா கண்களைத் திறக்க முடியாமல் திறக்க, வேறொரு ஆடவன் ஆடையின்றி நிற்க விக்கித்துப் போனார். மூளையின் செயல்பாடு அரைகுறையாக இருந்தாலும் நடக்கப் போகும் விபரீதம் தன்னால் புலப்பட்டது அவருக்கு.
‘எப்படியேனும் இங்கிருந்து தப்பிக்க வேண்டும்’ என உடலை அங்குமிங்கும் அசைக்க, பலன் தான் பூஜ்யமாக போனது.
‘அமர்… எப்படியாவது வந்திடுங்களேன் ‘என்று உள்ளூர அரற்றியபடி தன் மொத்த பலத்தையும் கூட்டி எழுந்து விட்டார் அருணா.
“ப்ளீஸ் விட்டுடு… நான் நான்… “என்று நாக்குழற கெஞ்சியவர் அங்கிருந்து ஓட முயற்சிக்க , சண்முகம் வேகமாய் அவரை இழுத்துப் பிடித்து விட்டான்.
பிணந்தின்னி கழுகிடம் மாட்டிய சிறுகுழந்தை போல சிக்கிக் கொண்ட அருணாவின் உடல் முழுதும் கீறப்பட்டு ரத்தம் வடிந்தது. அன்னையின் அலறல் கேட்ட ப்ரகாவோ, சத்தம் வந்த திசையில் ஓடிப் பார்க்க அருணாவின் நிலைகண்டு துடித்துப் போனாள்.
“ம்மா… ம்மா… ஏய் விடு எங்கம்மாவை” என கத்திக் கதறினாள் அந்தச் சிறுமலர். ஜன்னல்கம்பிகள் அந்தப் பிஞ்சின் விரல்களால் தட்டப்பட அவளின் கைமுழுதும் சிவந்து காயம்பட்டது. பின்னால் துரத்தி வந்த இரணியன், ப்ரகா கத்துவது கண்டு ஜன்னலின் வழி எட்டிப் பார்க்க முற்பட , அதற்குள் ஜன்னல் கதவை சாத்தி விட்டான் அந்தக் கயவன்.
சற்று நேரத்தில் சண்முகம் வெளியே வந்து விட்டான்.
“ஐயா முடிஞ்சதுங்களா…!?”சற்று முன் அருணாவிடம் வம்பு செய்த அவன் கேட்க
“செத்துத் தொலைஞ்சுட்டா… பொணத்துக் கூடவா படுக்க முடியும். பத்தினி போல, பரதேசி நாய் தொண்டையில கத்தியை விட்டு இறக்கி போய்ச் சேர்ந்துடுச்சு “என்று ஏளனமாக உரைத்த சண்முகம் ,”எவளையாவது ஒருத்தியை வரச் சொல்லு ஒடம்பு சூடேறிக் கிடக்கு “என்றபடி நடக்க , ப்ரகல்யா சண்முகத்தை ஓடி வந்து அடித்தாள் தன் சிறு கரங்களால்.
“ஏய் த… ச்சே விடு சனியனே!” என்றவனோ,” இது எதுக்காவது ஆவுமாடா ?”என்று அவன் வேலையாளிடம் கேட்டபடி ப்ரகாவை ஒற்றைக் கையால் தூக்க இரணியன் ஓடி வந்து விட்டான்.
விழிகள் செந்நிறக்குருதியாய் இருக்க ,”அப்பா அவ எனக்கு வேணும் விடு “என்று ப்ரகாவை தன் பக்கம் இழுக்க
சண்முகமோ,” பார்றா எனக்கு வாரிசா நீ… என்ஜாய் பண்ணுடா மவனே!” என்று ப்ரகாவை கீழே இறக்கி விட்ட நொடி, அவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டான் இரணியன்.
“எங்கம்மா வேணும்.”என்று மீண்டும் மீண்டும் அழுதாள்.
“உங்கம்மா வரமாட்டாங்க. செத்துப் போயிட்டாங்க, எங்கம்மாவும் இப்படி தான் செத்துப் போனாங்க. இவன் இப்படி தான் எல்லாரையும் கொல்லுவான். நான் இவனை பெரியபையனா ஆனதும் கொல்லுவேன், எங்கம்மா இவனை சாகடிக்க சொல்லி இருக்காங்க அதான் அவன் கூடவே இருக்கேன்” ஏதோ அறிக்கை விடுவது போலவே பேசினான் இரணியன்.
“எங்கம்மா வேணும் “என்று கதறினாள் அவள்.
“என்கூட வா காட்டுறேன். ரத்தமா கெடக்கும் பயந்துக்காத சரியா…! உங்கம்மா பேச மாட்டாங்க ஆனா நீ பேசுறதை கேட்பாங்க” என்னென்னவோ கூறினான்.
அருணா கழுத்தில் ரத்தம் உறைந்த நிலையில் விழிகள் நிலைகுத்தி நிற்க, உயிரற்ற ஜடமாய் கிடந்தார். அவரருகிலேயே அமரவேந்தனும் கழுத்தறுபட்ட நிலையில் உயிரற்று கிடக்க துடித்துப் போனாள் பெண்ணவள்.
இன்று நடந்தது போல உடல் உதறியது அவளுக்கு.
“அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரையும் தோட்டத்து புதர்ல போட்டாங்க. என்னை ஒரு மரத்தடியில் போட்ருந்தாங்க. கண்ணு முழிச்சுப் பார்த்தா அப்பா அம்மாவை சுடுகாட்டுல எரிக்க கொண்டு போனாங்க. கத்தி அழுதேன், தாத்தாவும் பாட்டியும் அரவணைச்சாங்க. சாப்பிடல, தூங்கலை, கண்ணை மூடினா அம்மா ரத்தமா கிடக்கிற மாதிரியே தோணும். பெரியம்மா பக்கத்தில் வரல. ரெண்டு தடவை ஹாஸ்பிடல்ல வச்சிருந்தாங்க பெரியம்மாவை, அது ஞாபகம் இருக்கு. விவரம் தெரிஞ்சதும் தான் தெரிஞ்சது அம்மா இறந்து போனதில் வேதனை தாங்காம தற்கொலை பண்ணிக்க போனாங்கனு, அப்புறம் ரெண்டு வருஷம் அங்கேயே இருந்து படிச்சேன். “
“ம்ம்ம் நான் தான் பார்த்திருக்கேனே… எப்படிடா அந்த துக்கத்தில் இருந்து வெளியே வந்த?”என்று வருத்தமாக கேட்டான் மகிழன்.
“வெளியே வர முடியல… அம்மா வேணும்னு தோணுது, அப்பா வண்டியில கூட்டிட்டு போகணும்னு தோணும், எப்ப சோறு ஊட்டுவாங்கனு கேட்க தோணும் , அவங்க வரமாட்டாங்கனு ரொம்ப நாள் கழிச்சு தான் புரிஞ்சது. இதுநாள் வரை தூக்கியே வச்சிருந்த பெரியம்மா ஆறுதல் சொல்ல கூட பக்கத்தில் வரலை. அழுகையா வந்துச்சு. தருணிக்கா அம்மா சோறு போடுவாங்க , ஆனா எமன் எமன் னு திட்டுவாங்க. பெத்தவங்களை முழுங்கினதுனு நறுக்குனு கொட்டி தான் சோறு போடுவாங்க, சாப்பிடவே பிடிக்காது. நானா தலைசீவிப்பேன், துணி தொவைச்சுப்பேன் “என சொல்லும் போதே அவளை அணைத்துக் கொண்டான் ஆறுதலாக.
“ஒரு நாள் எல்லாரும் படம் பார்க்கும் போது அந்த படத்துல எமதூதுவர்கள் வந்து ஒரு மனுசனோட உயிரை பிடிச்சுட்டு போற மாதிரி காட்டினாங்க. அப்போ தருணிக்கா இது யாருமானு அவங்க அம்மாட்ட கேட்க அவங்க விளக்கம் சொல்லி என்னை காட்டி உங்க சித்தப்பா சித்தியை இப்படி தான் இவ கூட்டிட்டு போய் அவங்க செத்துட்டாங்கனு சொன்னாங்க அதுல இருந்து என் அண்ணன் எல்லாம் கிங்கரா கிங்கரானு கூப்பிட்டு வம்பு பண்ணுவாங்க. ஆனா தருணிக்கா மட்டும் அப்படி கூப்பிட மாட்டா. எனக்கு அதனால அவளை பிடிக்கும். என்னை அப்படி கூப்பிடாதீங்கனு கத்துவேன். பெரியம்மா கிட்ட சொல்லி அழுதேன். அவங்க அவங்க… இல்ல” என்று விசும்பியவள்,” அவங்க அப்படி தான் கூப்பிடுவாங்க நானும் இனிமே அப்படி தான் கூப்பிடுவேன், என் தங்கச்சியை கொன்ன பாவி நீ னு ஆத்திரமா கத்திட்டாங்க. ரெண்டு வருஷம் ஆச்சு இதெல்லாம் இனிமே இப்படி தான்னு ஏத்துக்க… நீங்க வந்து பேசும் போது தெரியாது நீங்க அவரோட பையன்னு ஏன் அரண்மனை ஆள் தான் அந்த அரக்கன்னும் எனக்கு ரொம்ப வருஷமா தெரியாது. “என்றாள்.
“அப்புறம் எப்படி தெரிஞ்சுது?” கேட்க ஆவலுடன் நின்றான்.
“இரணியன் மூலமா..” என்றாள்.
“அவன் மூலமாவா?” என வியப்பாய் கேட்க
“தாத்தா இறந்து போனப்ப ஹாஸ்பிடல்ல இருந்தோமே அப்போ வந்து என்னை மீட் பண்ணான்.”
“நான் அந்த டைம் அங்கே தானடா இருந்தேன். உனக்கு தண்ணி தந்தேனே ஞாபகமிருக்கா…? மிரட்டி குடிக்க வச்சேனே” என மருத்துவமனையில் நடந்ததை நினைவுபடுத்தினான் மகிழன்.
“ம்ஹூம் அப்போ நீங்க யார் னு கூட எனக்குத் தெரியல. ஆறுதலா இருந்த தாத்தாவும் விட்டுப் போனாரேனு எனக்கு தாங்க முடியாத வருத்தம். அதோட படிப்பு போச்சேனு கவலை. படிச்சு முடிச்சு எங்காவது வேலை வாங்கிட்டு ஓடிட நினைச்சேன். ஆனா அது நடக்க முடியாம போயிருமோனு தான் அன்னைக்கு அப்படி அழுதேன்” என்றாள் விளக்கமாக.
“இரணியனை எங்கே மீட் பண்ண…?”
“ஹாஸ்பிடல்ல தான் நீங்க தண்ணி தந்ததும் குடிச்சுட்டு பெரியப்பா கூப்பிடவும் ஓடினேனே , அப்போ அவங்க மேல இடிச்சு கீழ விழுந்துட்டேன். என் பேர் சொல்லி கூப்பிட்டாங்க. என்னை தனியா மீட் பண்ண விசிட்டிங் கார்ட் எல்லாம் தந்தாங்க. கூடவே ஒரு லெட்டரும் இருந்தது. உங்கம்மா அப்பா சாவுக்கு காரணமானவனை பார்க்கணுமானு கேட்டு. யோசிக்கவே இல்லை போய்ட்டேன். இதனால நானும் செத்தாலும் பரவாயில்லை னு நினைச்சு தான் போனேன். ஆனா அவனை மட்டும் உயிரோட விடக் கூடாதுனு போனேன். இரணியன் கூப்பிட்டான்” என்றவள் அன்றைய நாளை மனக்கண்ணில் கொண்டு வந்தாள்.