அந்த உணவகத்தில் இரணியன் தவிர வேறு யாருமில்லை.
தயங்கித் தயங்கி வந்தவளை பார்த்து புன்னகைத்தான் அவன்.
“ஓய் பாப்பா ! இங்க இருக்கேன் வா” என்று அழைத்திட,’ யார்டா இவன்?’ என்று தான் தோன்றியது அவளுக்கு.
“என்னை அடையாளம் தெரியலையா ?” என்று கேட்டு வைத்தான் .
இல்லையென்று தலையாட்டியவள், அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.
” இரணியன், இப்போ உன் நினைவுக்கு வருதா?” என்று அவளிடம் கேட்க ,”நினைவில்லை” என்றே தலையாட்டினாள்.
” உங்க அம்மா அப்பா இறந்தபோது உன் கூட இருந்தேன்” என்று பட்டென அவன் உரைத்திட
சட்டென விழிகள் கலங்கி போனது அவளுக்கு.
நடுங்கிப் போய் நிற்க முடியாமல் அந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
“இவ்வளவு எமோஷனலாகாதே” என்றவன் தண்ணீர் நிரம்பிய கண்ணாடி குவளையை அவள் பக்கம் நகர்த்தி வைத்தான்.
எதையும் யோசிக்காமல் தண்ணீரை மடமடவென்று தொண்டைக்குள் சரித்தவள் ,”நீங்க?!” என்று மறுபடியும் படபடப்புடன் கேட்க ,”அதான் சொன்னேனே இரணியன் என்று “என்றான் நிதானமாக,
” எதுக்காக வரச்சொன்னீங்க?” என கேட்க
“உன் அம்மா அப்பாவை கொன்றவன பழிவாங்க வேண்டாம் ?”என்று ஒவ்வொரு வார்த்தைகள் அழுத்தம் கொடுத்து கேட்க ,
ப்ரகாவின் விழிகள் கோபத்தில் சிவந்தது ஆனாலும்,’ அவன் ஏன் தனக்கு உதவ வேண்டும்?’ என்று யோசித்தாள்.
“நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு யோசிக்கிறியா?” என மிகச் சரியாக அவளின் மனதைப் படித்தவனாக கேட்டான்.
“உண்மைதான், என்னைக்காவது இருந்தாலும் அந்த ராட்சசனை நான் கொல்லுவேன். ஆனால் அதுல உன் பங்கு இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அவன் உன் அப்பா அம்மாவை கொன்றுக்க கூடாதே ” என்றான் அமர்த்தலாக.
“கொல்லணும் அவனைக் கொல்லணும்” என உணர்ச்சி வசப்பட்டிருந்தாள் ப்ரகா.
“அவனைக் கொல்லுறது அவ்வளவு சுலபமில்லை ப்ரகி. சுத்தி வர பாடிகாட்ஸ் இருக்காங்க. கூட இருந்த என்னையவே நம்பாம சாப்பிடும் சாப்பாடு முதற்கொண்டு டெஸ்ட் பண்ணிட்டு சாப்பிடுறான்” என்றான் அலுப்பாக.
“அப்போ எப்படி அவனை கொல்லுறது?” எரிச்சலானாள் ப்ரகா.
“இப்போ அவன் இங்க இல்லை. கொஞ்ச நாளா எங்கே போனான்னுத் தெரியாம தேடிட்டு இருக்கேன். செத்திருக்க வாய்ப்பு இல்லை கண்டிப்பா எங்கேயாவது இருப்பான்” என்றவன்,” அதுக்குத்தான் உன்னை வரச் சொன்னேன்.” என்றான்.
“அதான் எதுக்கு?”என்று ப்ரகா குழப்பத்துடன் கேட்க
“அவனைக் கொல்லும் போது நீ இருக்கணும். இனி உனக்கு அவனைப் பத்தின தகவல் எல்லாமே நான் சொல்றேன். அவனைக் கொல்ல ஒரு சான்ஸ் கிடைச்சாலும் உன்னை கூப்பிடுவேன் நீ தயங்காம வரணும் ஓகே !”என்றான்.
அன்றைய நினைவில் இருந்து வெளியே வந்தவள்,” அதுக்கப்புறம் சண்முகம் பத்தின விஷயங்கள் ஏதாவதுனா என் கிட்ட சொல்வாரு. எப்பவாவது கால் பண்ணுவார்”என்றவள்,” லாஸ்டா சுமித்ரா அத்தை தருணி அக்காவை பொண்ணு பார்க்க வந்த பிறகு கூப்டாரு “என்றாள்.
“ஓஓஓ என்ன சொன்னான். எங்கே மீட் பண்ணீங்க?” என்று மகிழனும் கேட்க
“ஏன் இந்த கேள்வி…?ஓஓஓ ராஜாவுக்கு பொறாமையா?” என்று சிரித்தாள்.
“ப்ப்ச் இல்லடா. உன்னை நான் கண்காணிச்சேன். அவனை நீ மீட் பண்ணது எனக்குத் தெரியலையேனு கேட்டேன்” என்று விளக்கம் கொடுத்தான் மகிழன்.
“அது வந்து தருணிக்கா பொண்ணு பார்க்க வந்த பிறகு ஒரு வாரத்துக்கு அப்புறம் மீட் பண்ணணும்னு சொன்னாரு. அன்னைக்குத் தான் தருணிக்கா டிரெஸ் எடுக்க வெளியே கூட்டிட்டு போனாங்க. அவங்க பார்லர் போன சமயம் நான் இரணியை ரெஸ்டாரென்ட்ல மீட் பண்ணேன்.” என்றவள் அந்த சந்திப்பை மீண்டும் நினைவில் கொண்டு வந்தாள்.
ரெஸ்டாரென்ட்டிற்குள் நுழையவுமே அவளது கைபேசிக்கு இரணியன் அழைத்து விட்டான்.
“கார்னர் டேபிளுக்கு வா!” என்று இணைப்பைத் துண்டிக்க, ப்ரகாவும் அங்கே செல்ல,”உட்கார்!” என்றான்.
“எதுக்கு கூப்டீங்க?” என்று அவசரமாய் கேட்க
“என்ன மேடம் பெரிய வீட்டு சம்பந்தம் வரப் போகுது போல?” என்று இரணி கிண்டலாய் கேட்க
அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் விழித்தவளிடம்,” உங்க வீட்டுல பொண்ணு பார்க்க வந்தாங்களா?” என்று கேட்க
“ஆமா தருணிக்காவை போன வாரம் பொண்ணு கேட்டு வந்தாங்க, நிச்சயமும் செஞ்சுட்டாங்க ,இன்னும் பத்து நாளில் கல்யாணம்’னு பேசினாங்க” என்றாள் அறிவிப்பாக
“ம்ம்ம் மாப்பிள்ளை யார் தெரியுமா?”என்றவனிடம் ,” தெரியாது நான் அன்னைக்கு வீட்டில் இல்லை…” எனும் போதே அவள் குரல் கரகரத்தது.
“ம்ம்ம்… தெரியும்” என்றவன்,” மாப்பிள்ளை அரண்மனை வீட்டு மருமகள் சுமித்ராதேவியோட பையன் மகேந்திரன்” என்றான்.
“அந்தாளோட மகனா…?” என்று கொந்தளிக்க
“அதான் இல்லை. அப்படினா நேரடியா சொல்ல மாட்டேனா?” என்று சிரித்தவன் சுமித்ரா பற்றிய விபரங்களை கூறினான்.
“அந்தம்மா மட்டும் எங்கப்பன் கிட்ட இருந்து எப்படியோ தப்பிச்சிடுச்சு. ஆனா அது அரண்மனை வீட்டு ஆளு தானே?” என்று கூறி விட்டு ,”எப்படியும் இந்தக் கல்யாணத்திற்கு அந்தாள் வருவான். அவன் வந்தான்னா நிச்சயம் பெரிய வீட்டு விருந்துனு சொல்லி ஊருக்காக வச்சே ஆகணும், அதெல்லாம் கரெக்டா செய்வான் அந்தாள். நீ அந்த விருந்துல கலந்துகிட்டு அவன் கண்ணில்படுற மாதிரி இரு மத்ததை நான் பார்த்துக்கிறேன்”என்றான்.
“இதெல்லாம் சரி வருமா…? இவ்வளவு சொல்ற நீங்களே அவனை எப்பவோ கொன்றுக்கலாமே ?”என தன் சந்தேகத்தை கேட்க
“உனக்காக தான் வெயிட்டிங். நீ பெரிய பொண்ணா ஆகணும், ரெண்டாவது கொஞ்சமாவது தைரியமா இருக்கணும் அதுக்காக தான் காத்திருந்தேன். அன்றைக்கு உன் அப்பா அம்மா இறந்தப்ப நீ கதறிய அழுகை என்னை இதுவரைக்கும் தூங்க விடலை ப்ரகி. அவன் சாகணும் உன் கையால்.”என்று ஆக்ரோஷத்துடன் பேசியவன் ,”இதனால நீ ஜெயிலுக்குப் போகணுமோனு நினைக்காதே… நிச்சயம் இந்தக் கொலையில் உன் பேர் எதுவும் வராது. அதே போல உனக்கு நானிருக்கேன் .”என்று அவளின் கையைப்பிடித்து கொள்ள நாசூக்காக விலக்கிக் கொண்டாள்.
மகிழனின் முகம் இறுகியது இரணியன் அவளின் கையைப் பிடித்ததாக ப்ரகா கூறும் போது
“வேற என்ன சொன்னான்?” குரலில் கண்ட பேதத்தை நினைத்து சிரித்தவள்,” எதுவுமில்லை” என்றாள். அவனின் பொறாமை அவளுக்கு நிரம்பப் பிடித்தது.
“ப்ரூஸ்லி!” அழைத்தவனுக்கு மனதில் ஆழிப்பேரலை,’ ஒரு வேளை இரணியன் ப்ரகாவை விரும்பி இருப்பானோ !,எனத் தோன்றியது. அதுவுமில்லாமல் ப்ரகா தனக்கு வேண்டும் என்று பிதற்றினானே வேறு ‘என யோசித்தும் விட்டான்.
மகிழன் இரணியனுக்கு சளைத்தவன் இல்லையென்றாலும் இரணியன் காட்டுத்தனமாக வளர்ந்தவன். சண்முகவேலின் நேரடிப் பார்வையில் வளர்ந்தவன் அவரின் எந்த குணம் இவனிடம் வியாபித்திருக்கிறது என எவருக்கும் தெரியாதே… ஒரு வேளை வதனியை ஏதாவது செய்து விட்டால் நிச்சயம் இரண்டு கொலையாவது செய்வேன் என மனதில் சூளுரைத்தான் மகிழ்.
“அவர் சொல்லவும் தான் தருணிக்கா கல்யாணத்திற்கு வந்தே ஆகணும்னு பிடிவாதமா வந்தேன் மகிழா. எனக்கு அந்த கல்யாணத்திற்கு வர சுத்தமா விருப்பமே இல்லை தான் “
“ஏன்டா?” என்றான் பரிவாக.
“என்னை அவங்களோட கொழுந்தனார் பொண்ணா கூட்டிட்டு வர மாட்டாங்களே.. வேலைக்காரியா தான் கூட்டிட்டு வருவாங்க. அதுக்கு எதுக்கு வரணும்’னு தோணுச்சு . ஆனா இந்த வாய்ப்பை தட்டிக் கழிக்க முடியாதே ?”என்றவளின் கண்ணில் தெரிந்த கோபம் அப்பப்பா என்றிருந்தது அவனுக்கு.
“உங்களை கல்யாணம் பண்ணது ஏதேச்சையாக நடந்ததுன்னாலும்,நீங்க அவர் மகன்னு சுத்தமா தெரியாது. நீங்களும் அநாதைனு சொல்லி…” எனும் போதே மகிழன் விரக்தியாக சிரித்தான்.
“ஒரு காமக்கொடூரனோட மகனா என்னை அடையாளப்படுத்திக்க நான் விரும்பலை தான், ஆனா இந்த பட்டம் எனக்குத் தேவையா இருந்தது. அதனால அவனோட மகனா சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு.” என்றான்.
“அப்போ நீங்க…?”என்றவளை வாஞ்சையாக வருடியவன்,” நான் சொன்னது பொய் இல்லை. அந்த ஆளுக்கும் சுமித்ராதேவிக்கும் பிறந்தவன் தான் நான். ஆனா என்னோட மனசுக்குப் பிடிச்சவங்க கிட்ட அவங்களை அப்பா அம்மாவா அடையாளப்படுத்திக்க எனக்கு விருப்பம் இல்லை. அவங்க பிள்ளைனு சொல்றதை விட அநாதைன்ற பட்டம் பரவாயில்லை’னு தோணுச்சு அதனால தான் உன் கிட்ட அப்படி சொன்னேன். “என்றான்.
“வேணாம் அவன் மகனா நீங்க இருக்கவே வேண்டாம்” என்றாள் பட்டென்று.
“உன் வாய்ப்பை நான் தட்டி விட்டுட்டேனோன்னு வருத்தமா இருக்கு ப்ருஹா “என்றவன் மெலிதான குரலில் ,”அவனை நான் தான் அடைச்சி வச்சிருந்தேன்” என்ற உண்மையை போட்டுடைத்தான்.
“நீங்களா ?”என்று அவனிடம் இருந்து விலகி நின்றாள் அதிர்வான மனோபாவத்தில்.
“விலகிப் போகாதடா !”உருக்கமான குரலில் உரைத்தவனோ ,மீண்டும் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
“அவனை ஏன் கொல்லலை. எல்லாம் தெரிஞ்சும் ஏன் அவனுக்கு பாதுகாப்பு தந்தீங்க…? இது போல எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்தானோ?” என்று அரற்றியவளை அமைதிபடுத்திட முயன்றான்.
“ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் அமைதியா இரு அமைதி அமைதி… அவனைக் கொல்ல ஒரு நொடி எனக்கு போதும் கொன்னுடுவேன், பீஸ் பீஸா அவனை அறுத்துப் போடற அளவுக்கு ஆத்திரம் உள்ளூர இருக்கு. ஆனா அது என் மன அமைதிக்கு பத்தாதே… வெறும் அவனுடைய சாவை எம்மனசு ஏற்காதே… துடிக்கணுமே ஒவ்வொரு நிமிஷமும் அவன் வேதனைப்பட்டு வேதனைப்பட்டு சாகணுமே அதுக்குத்தான் அவனைக் கொல்லல. சுமித்ராதேவி பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் வடிகால் வேணுமே அதுக்குத்தான் இது” என உரைத்தவனின் குரலில் அத்தனை வன்மம் குடியிருந்தது.
“மகிழா?!”என்று அதிர அதிர அவளை இறுக்கியவன்,” ஒரு ரேப்பிஸ்டை கல்யாணம் பண்ணி வாழறது எவ்வளவு கொடுமை தெரியுமா ப்ருஹா…?அவனால கஷ்டப்பட்டது நீ ,நான், இரணியன், சுமித்ராதேவி’னு பெரிய லிஸ்டே இருக்கு ஆனாலும் ஏன் அவனை நான் கொல்லலை தெரியுமா…?அவனைக் கொல்லணும் ஆனாலும் அவன் சாகக் கூடாது. இரணியன் அவனைக் கொல்ல காத்திருந்தான், காத்திருக்கான் ஆனா நான் அவனை சாவு வேணும்னு எதிர்பார்க்க வச்சிருந்தேன்.” என்று சொல்ல சொல்ல மகிழனின் மனம் எத்தனை காயத்தை உள்ளடக்கி இருக்கிறதோ என்று பயந்தாள்.
“ஆனா இரணியன் உங்களை தப்பா நினைக்கிறாரே?” என்று அவள் சொல்ல
“அவனுக்கு என்னைப் பத்தின எதுவும் தெரியாது. அவனைப் பொறுத்தவரை நான் அநாதை ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்து வளர்க்கப்படுறவன், மரகதநாயகிக்கும் தெரிஞ்சது அவ்வளவு தான் அதனால தான் என்னை அவங்க வெறுக்கறாங்க. அவங்களைப் பொறுத்தவரை சண்முகவேல்ராஜா தான் இந்த உலகத்திலேயே சிறந்த மகன், அண்ணன் ,கணவன், அப்பா எல்லாம். அந்த அளவுக்கு இருக்கும் இந்த அரக்கனோட நடிப்பு” என்று எள்ளலாக கூறியவன்,” நீ சொல்லு அதுக்கப்புறம் ஏன் அவனை தேடல, இரணியன் என்ன ப்ளான் போட்டான்?” என்று கேட்க
” அதான் அவர் மேரேஜுக்கு வரலையா எங்க ப்ளானும் ஒர்க் ஆகல. அதுக்கப்புறம் என்ன இரணியன் சண்முகத்தை தேடி அலைஞ்சார். அப்பப்போ எனக்கு தகவல் சொல்லுவார் கிடைச்சாரா கிடைக்கலையானு….நானும் அவனோட வருகைக்காக தான் காத்திருந்தேன். “என்றாள்.
“ப்ப்ச், என் கூட கல்யாணம்’னு சொல்லவும் உடனே சம்மதம் சொல்லி இருக்க, அது ஏன்னு சொல்லு ?”என்றான்.
“அது உண்மையாகவே தருணிக்காக்காக தான் சொன்னேன் மகிழா. என்னை நல்லா பார்த்துக்கிட்டவங்களாச்சே அவங்க வாழ்க்கை கெட்டுப் போறதை நான் விரும்பலை. எனக்கும் இதுமாதிரி கல்யாணம் எல்லாம் அவங்க பண்ணி வைப்பாங்கனு பெரிசா நம்பிக்கை இல்லை. பண்ணவும் தோணலை. என் குறிக்கோள் எல்லாம் அவனை அழிக்கணும் என் குழந்தைப்பருவத்தை கேள்விக்குறி ஆக்கின அவனை என் அம்மா எப்படி துடிச்சாங்களோ அது போலவே துடிக்க துடிக்க கொல்லணும், அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் ஓகேன்ற முடிவுக்கு வந்துட்டேன்.” என்றாள்.
“ஆனா ஒரு விஷயம். உன் தருணிக்கா கல்யாணம் நடந்ததுனால உனக்கு திடீர் கல்யாணம் ஆனதா நினைக்காதே !”என்றவன்,” நான் உன்னைக் கல்யாணம் பண்ணனும்ன்றதுக்காக தான் தருணியை மகேந்திரனுக்கு செலக்ட் பண்ணேன்.” என்று சொல்லி அவளை அதிர வைத்தான்.
“இது என்ன காதை சுத்தி மூக்கைத் தொடுறீங்க ,இதுக்கு நேரடியா நீங்க என்னை பொண்ணு கேட்டு வந்தே மேரேஜ் பண்ணி இருக்கலாமே…?எனக்கும் கிராண்டா மண்டபத்தில் கல்யாணம் நடந்திருக்குமே” என்று தனது ஆதங்கத்தை அவள் கொட்ட அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“ப்ப்ச், பதில் சொல்லுங்க” என்று கடுப்பாய் கேட்க
“உன்னை பெண் கேட்டிருந்தா இவ்வளவு பெரிய வீட்டில் இருந்து இவளுக்கு மாப்பிள்ளை வர்றதானு பொறாமையில இந்தக் கல்யாணத்தை நடத்த விட மாட்டாங்கனு உங்க பெரியம்மா தந்த ஐடியா தான் அது” என்றான் விளக்கமாக.