இரணியன் எறும்புகளை விட்டுக் கொண்டிருக்க ,சண்முகவேல் வலியும் எரிச்சலும் தாங்காமல் துடித்தார். அலறவும் இயலவில்லை. மூச்சு வாங்கியது. அரை மணி நேரம் கழித்தே எறும்புகளை அகற்றினான் அதுவும் மரகதநாயகி வருகையை கேட்டதும்.
“என்ன மருமகனே அண்ணே எப்படி இருக்காங்க…?” பாசமழை பொழிந்தார் மரகதநாயகி.
“அதே மாதிரி தான்த்தை. !”இரணியன் குரலில் அத்தனை சோகம் அப்பிக் கிடந்தது.
“கவலைப்படாதீங்க மருமகனே. எல்லாம் சரி ஆகிடுவாரு. அந்த சண்டாளச்சிறுக்கி இப்படி பண்ணிட்டாளே?” என்றதும் இரணியன் முகம் கோபக்கனலை வீசியது.
“அத்தை!” என்று அதட்டியவன் ,”அவ எதுவும் பண்ணலை. அவன் தான் மேனிபுலேட் பண்ணி இருப்பான். ப்ரகி ரொம்ப ஷாப்ட் நேச்சர்.” என்றான் அழுத்தமாக
மரகதநாயகிக்கு முகம் விழுந்து போனது. ‘இவன் ஏன் அடுத்தவன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறான் ?’என்ற எரிச்சல் மூள, சற்று தணிந்த குரலில்,” அண்ணன் இப்படி இருக்காங்க. அதான் மருமகனே கவலையா பேசிட்டேன். சரி விடுங்க அடுத்தவன் பொண்டாட்டி பத்தின பேச்சு நமக்கெதுக்கு.?உங்களுக்கு சாப்பாடு வரவழைச்சிருக்கேன். சாப்பிடுங்க. அப்படியே நான் சொன்னதையும் கொஞ்சம் யோசிங்க” என்றார் வாயெல்லாம் பல்லாக.
“ம்ம்ம் ம்ம்ம்!” என்றவன்,” நான் ஸ்வீட்டி கிட்ட பேசணும்”என்றான்.
“அதெல்லாம் எதுக்கு மருமகனே?” என்று அதை தவிர்க்கப் பார்க்க
“பேசணும் அவ்வளவு தான் வரச் சொல்லுங்க”என்று எழுந்து கொண்டான்.
எழுந்தவன்,” அவருக்கு எறும்பு கடிச்சிருச்சு இந்த மருந்தை போடுங்க” என ஒரு க்ரீமை நீட்ட மரகதநாயகி பதறியபடி வாங்கிக் கொண்டு எறும்பு கடித்த இடத்தைப் பார்த்தார்.
“க்ரீம் போட்டதும் எரியும் கத்துறாரேன்னு போடாம விட்ராதீங்க “என்று சொல்லி விட்டுச் செல்ல பிறகென்ன சண்முகவேலின் பாசமிகு தங்கை கையாலேயே அடுத்த தண்டனையை தந்து விட்டான் இரணியன்.
***********
மகிழன் மனையாளின் மீது கைபோட்டு சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தான். அத்தனை நல்லுறக்கம் அவனுக்கு.
மாளிகை இல்லை. குளிரூட்டியின் பனிக்காற்று இல்லை. நறுமணம் இல்லை. பஞ்சு மெத்தை இல்லை. ஆனாலும் சுகமாய் உறங்கும் கணவனைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வதனி.
‘எப்படி இவனால் முடிகிறது.?’ என யோசித்தவள் இன்னும் நெருங்கிப் படுத்துக் கொண்டாள்.
ஆம் அரண்மனையை விட்டு மனைவியோடு ஒரு குடிசையில் தங்கி இருக்கிறான். அவன் இருக்குமிடம் நாகலெட்சுமி தவிர எவரும் அறிந்திலர்.
சுமித்ராவின் பாதுகாப்பிற்கென நாகலெட்சுமியை அங்கேயே இருக்கும்படி பணித்து விட்டான்.
‘சண்முகவேலே படுக்கையில் கிடக்கும் போது யார் என்ன செய்து விட முடியும் சுமித்ராவை?’ என்று விஷ்வநாதன் கேட்டதற்கு ,”பாதுகாப்பு தேவை அவ்வளவு தான் !”என்று முடித்து விட்டான்.
தருணிக்கு ஏககடுப்பு மீண்டும் பழைய வீட்டிற்கே வந்ததில்.
“ஏன் அங்கே இருந்தா என்ன போச்சு ?எதுக்கு இப்படி அலைகழிக்கிறீங்க ?”என்று கேட்டவளுக்கு,’ அரண்மனையில் இனி ப்ரகாவும் மகிழனும் கூட கிடையாது’ என எண்ணுகையில் சற்று நிம்மதி பிறந்தது.
“தருணி… அண்ணன் தான் வேணாம்ன்னார். அவர் சொன்னா நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். எதுக்கு இப்படி பேசிட்டே இருக்க?” என மகேன் சலித்துக் கொண்டே அலுவலகம் கிளம்பினான்.
சுமித்ராவோ, நாகலெட்சுமியிடம்,’ இரணியனிடம் பேச வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
“தம்பி எதுவும் சொல்லுவார் மா. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க பேசுவோம்” என வேண்டாம் என்று மறுத்தார் நாகலெட்சுமி.
“எனக்கென்னவோ இரணி நல்ல பையன்னு தான் தோணுது நாகு. அவன் பேசினா புரிஞ்சுப்பான். மகிழுக்கு அவனோட உரிமை கிடைக்கணும். “என வருத்தமாய் கூற நாகலெட்சுமிக்கு அப்பட்டமான கோபம் வந்தது.
“அவர் உரிமையை அழிச்சதே நீங்க தானே ?”என சூடாக கேட்க வேண்டும் போலத் தோன்றியது.
‘அன்று மட்டும் ஒரு வார்த்தை கூறி இருந்தால் இன்று இப்படி எல்லாம் நடந்திருக்காதே?’ என்று அத்தனை ஆதங்கம் அவருக்கு. அதை சுமித்ராவும் ஒப்புக் கொள்ளும் மனநிலையில் தான் இருந்தார்.
************
“ப்ரூஸ்லி சைட் அடிக்கிறா !”கண்களை மூடிக் கொண்டு கூறியவனை கன்னம் கிள்ளி கொஞ்சியவள்,” ஆமாம் அடிக்கிறேன் “என்றாள் மெல்லிய குரலில்.
“குட்டிப் பொண்ணுக்கு அவ்வளவு தைரியம் வந்திடுச்சா ?”இடையில் கிச்சுகிச்சு மூட்டிட துள்ளி எழுந்தவள்,” உங்களை..!” என அவனிடம் பாய
“என்னை என்ன பண்ணுவியாம்…?” வம்பு வளர்த்து அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.
“இப்படி கடிச்சு வைப்பேன்.” என்று சொன்னதோடு நில்லாமல் கடித்தும் வைக்க
“பூனைக்குட்டி கடிச்ச மாதிரி இருக்கு” என கிண்டலடித்தவன்,” ரௌடித்தனம் பண்றியா பொண்ணே… நானே பெரிய ரௌடியாக்கும்” என்றான் அவளை தன் மீது சரித்து.
“ரௌடிக்கு ஏத்த பொம்பளை ரௌடியாக்கும்” என்று அவன் நெஞ்சில் முட்டியவளை இதழோரப் புன்னகையுடன் அணைத்துக் கொண்டவன்,” நாம இன்னைக்கு மும்பை கிளம்புறோம். வேலைக்கு ரெடி பண்ணிட்டேன்.” என்றான்.
“போகலாமே. என் வேலை இங்க முடிஞ்சது, நாம போகலாம்” என்று கூறி விட்டாள் உடனேயே.
“சண்முகம் சாக வேண்டாமா…?”என்றவனிடம்,” இரணியன் கொஞ்ச நாளைக்கு வச்சு விளையாடிட்டு கொன்னுடுவேன்னு சொல்லி இருக்கார் “என்றாள்.
“என்ன செய்வானாம் அந்த முரட்டு முட்டாள். ஒரு நாளைக்கு அவனுக்கு இருக்கு” என்று கோபத்துடன் சொல்ல
“ஏன் இவ்வளவு கோபம்… அவரும் நல்லப்பையன் தான் !”என்றதும் மகிழுக்கு அத்தனை எரிச்சல்.
“நல்லப்பையன் தான் ,அடுத்தவன் பொண்டாட்டி வேணுன்னு கேட்டானா…?”
“அடக் கடவுளே…! மகிழனுக்கு பொறாமையா என்ன…? அவர் என்னை நீங்க நல்லா வச்சுக்கலையோனு நினைச்சு கேட்ருப்பார்” என்றாள் இயல்பாய்.
“அவன் கேட்டா நீங்க தூக்கி குடுத்துடுவீங்களா இல்ல நான் தான் போயிடுவேனா என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க…?”அவனிடம் சரிக்கு சரி வாயாடினாள் ப்ரகா.
“உன்னைப் பத்தி என்னென்னவோ நினைச்சுட்டு இருக்கேன் எல்லாம் சொல்லவா…?”அவனின் பார்வை ரசனையாக படிந்து மீண்டது அவளில்.
“ஹப்பப்பா இப்படியே பேசினா நேரம் போயிடும்ப்பா!” என்று எழுந்து கொண்டாள்.
“என்னோட எல்லா நேரமும் உனக்காகத் தானே ப்ருஹா…?”
“ம்ம்ம் ம்ம்ம் “என்றவளுக்கு இதழ்களோடு இணைந்து விழிகளும் சிரித்தது.
விறகடுப்பில் துரிதமாய் சமைத்து முடித்தவள், அங்கேயே உணவினை எடுத்து வைத்தாள்.
எந்நேரமும் வேலை வேலை என ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தவனுக்கு இந்த நேரம் அத்தனை அற்புதமாக இருந்தது. நேரம் போவதே தெரியாமல் அவனின் நேரங்களை களவாடிக் கொண்டிருந்தாள் மகிழனின் ப்ரூஸ்லி.
“சாப்பாடு தட்டில் இருக்கு “என கண்காட்டியவளிடம்,” உன் முகம் பார்த்தே வயிறு நிரம்பியது” என்றான் காதலாய் ஒரு கவிதையில்.
“அப்படியா அப்போ தட்டை எடுத்திட்டா போச்சு…”நகைச்சுவையில் அவன் நகைமுகம் கண்டாள் பெண்ணவள்.
“எடுத்திடேன். ஊட்டுறதுக்கு உன் கை இருக்கையில நான் என் கை எதுக்கு யூஸ் பண்ணனும்…?”புருவங்கள் உயர்த்தி ரசனையுடன் பேசுகையில் சத்தமாய் சிரித்தாள்.
“எப்படி போனாலும் அதுல ஒரு சாக்கு கண்டுபிடிக்கணும் உங்களுக்கு.”
சிரிப்பினூடே சில கவளங்கள் உணவும் உள்ளே சென்றது.
*********
சுமித்ராதேவி இரணியனை சந்திக்க வந்திருந்தார்.
நாகலெட்சுமி உடனேயே மகிழனுக்கு தகவல் தெரிவித்து விட, அவன் கிளம்பி வருவதாக கூறினான்.
இரணியன் சுமித்ராவைக் கண்டதும் புருவம் உயர்த்த,” உன் கிட்ட பேசணும் இரணியன்” என்றவரின் குரல் மகிழனிடம் பேசுவதைப் போல இலகுவாக இல்லை. தோரணையும் அதிகாரமும் ஒட்டிக் கொண்டு நின்றது.
“என் கிட்ட என்ன பேசணும் ?”அதே மிடுக்கும் அதிகாரத் தோரணையும் கொஞ்சமும் குறையாமல் கேள்வி கேட்டான் இரணியன்.
“இந்த அரண்மனையோட வாரிசா இருக்கிறது மகிழன் தான். அவருக்குத் தான் இதை ஆளற தகுதி இருக்கு உரிமையும் இருக்கு “என்றார்.
“நான் சண்முகவேல்ராஜாவோட வாரிசு. அவன் அநாதை இல்லத்தில் இருந்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டவன்” என்றான் ஸ்திரமான குரலில்.
“அநாதை இல்லத்தில் விட்டதால அவரை அங்கிருந்து தத்தெடுக்கிற நிலை ஆகிடுச்சு “என்றார் பட்டென்று.
“நீங்க இந்த உரிமையை மகேந்திரனுக்கு கேட்டிருந்தா கூட நான் தர வாய்ப்பு இருக்கு ஏன்னா நீங்க இந்த வீட்டைச் சேர்ந்தவங்க. ரெண்டாவது சண்முகவேல்ராஜாவோட முன்னாள் மனைவி . இந்த அரண்மனையை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டதில் உங்கப்பாவுக்கும் பங்கிருக்கு அந்த உரிமையில் கூட மகேந்திரனுக்கு பட்டம் கட்ட சொல்லி கேட்கலாம் ஆனா எவனோ ஒருத்தனுக்காக நீங்க வந்து நிற்கிறது சரியில்லை” என்றான் சற்று கடுமையாக
.
“எவனோ ஒருத்தனாம்…?” மகிழனின் எள்ளல் குரல் சுமித்ராவை வந்தடைய கண்ணீருடன் நின்றார் அவர்.
இரணியன் கோபமாய் அவனை நெருங்கிட சுமித்ரா பதறி அவனைத் தடுக்கப் போக மகிழனோ இடத்தை விட்டு அசையாமல் சுமித்ராவை கூறுபோடும் பார்வை பார்த்து நின்றான்.
அவன் பார்வையில் திணறி மூச்சு வாங்க, இரணியனின் கைகளைப் பற்றியவர்,” இரணியா சொல்றதைக் கேளு “என்றார் சங்கடமாக.
“எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இப்போ கூட அவனை நான் கொல்ல முடியும் ஆனாலும் அவன் உயிர் இருக்கிறதுக்கு காரணம் ப்ரகி மட்டும் தான். இல்லாட்டி இவனை கொன்னு புதைச்சிருப்பேன் அநாதைக்கு அரசபதவி கேட்குதோ. எவனுக்கோ எந்த ***** பிறந்தவன் இங்க நாட்டாமை செய்வானா?” என மகிழனின் சட்டையைக் கோர்த்துப் பிடித்துத் தூக்க சிறிதும் மகிழனின் பார்வை மாறவில்லை.
சுமித்ரா காதுகளைப் பொத்திக் கொண்டார்.
மரகதநாயகி சத்தம் கேட்டு ஓடி வந்தவர்,” அப்படி சொல்லுங்க மருமகனே அப்பவாச்சும் இந்த சுமித்ராவுக்கு அறிவு வரட்டும்” என்றார் நக்கலாக.
“போதும் நிறுத்துங்க !”என கத்தி விட்டார் சுமித்ரா.
ஆத்திரம் மேலோங்க ,”மகிழன் என் மகன் தான். எனக்கும் சண்முகவேலுக்கும் பிறந்த மகன். இந்த அரண்மனையோட முழு உரிமை உள்ள வாரிசு” என்றார் கர்ஜனைக்குரலில்.
“இதை எங்களை நம்பச் சொல்றியா. என்ன இவன் மிரட்டுறானா உன்னை?” என்று மரகதநாயகி கோபம் குறையாமல் கேட்க
“யாரும் என்னை மிரட்டலை மிரட்டவும் முடியாது. இவன் எங்களுக்குப் பிறந்த பையன் தான். போதுமா. இவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் கொண்டு போய் தூக்கி எறிய சொன்னது நான் தான். எங்கேயோ கொண்டு போய் விட்ருங்கனு சொன்னேன். இவனுக்கு தாய்ப்பால் கூட குடுக்க மறுத்தேன்” என இத்தனை நாட்களும் மறைத்து வைத்திருந்த உண்மையை போட்டுடைத்தார்.
மகிழன் இறுகிப் போய் நிற்க இரணியனின் கைகள் மகிழனின் சட்டையில் இருந்து அனிச்சையாக விடுபட்டுக் கொண்டிருந்தது.
“ஆனா ஏன்?” மரகதநாயகியின் உள்வாங்கியக் குரலில் இன்னும் சுமித்ராவிற்கு ஆத்திரம் பொங்கியது.
“ஏன்னா என்ன சொல்ல நீ உயர்வா நினைச்சுட்டு இருக்கியே அவன் ஒரு அரக்கன். சேடிஸ்ட் என்னைக் கல்யாணம் பண்ணியே ஆகணும்ங்கிற வெறியில் என்னை என்னை…” எனும் போதே, மகிழன்,” எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான் சுமித்ராவின் தத்தளிப்பு பொறுக்காமல்.
“இல்லை நீ சொல்லித் தான் ஆகணும்” என்றார் மரகதநாயகி கோபம் குறையாமல்.
“சண்முகவேல் என்னைக் கெடுத்து என் காதலை பிரிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார்” என்றவர் தனது இளமைக்காலம் சண்முகவேலின் கையில் சிக்கி சின்னாபின்னமானதை விவரித்தார்.