“சம்மதிக்கலைன்னா விட்டுப் போயிடுவீங்களா?” என்று அவனை மிரட்ட
“அதெப்படி விடமுடியும், நீ நீ என் கூட தான் இருக்கணும் “என்று கையைப் பிடித்துக் கொண்டான் விஷ்வா.
“அதெல்லாம் இருப்பேன். சீக்கிரம் உங்க வேலையை மாத்திட்டு வாங்க” என்றவள் விடைபெற்றுக் கொண்டு வீடு வர ,இங்கோ அவளின் திருமண ஏற்பாடு வெகுதீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
சுமித்ரா யோசிக்கவெல்லாம் நேரம் தரவில்லை ஒருவரும். விஷ்வநாதனை வந்து அழைத்துச் செல்லும்படி தகவல் தந்திருக்க, அவன் திருமணம் முடிந்தும் வரவில்லை.
கட்டாயத்திருமணம் மறுக்க வழியில்லாமல் ஊரார் கூடி நின்ற சபையில் சண்முகவேலின் தாரமானாள் சுமித்ராதேவி.
‘இரவுச்சடங்கு’ என்றதொரு கற்பு களவாடல் நடந்தது வன்மையிலும் வன்மையாய். கந்தல் காகிதமாய் கிடந்தாள் சுமித்ரா. பொன்னென மேனி இருக்க, நெருப்பில் இட்டு கருக்கி இருந்தான் அவளை. உருக முடியாமல் உருக்குலைந்து போயிருந்தாள் நடந்த விபரீதத்தில்.
சம்மதம் கேட்காமலேயே சம்பிரதாயச்சடங்கு என்ற பெயரில் சல்லாபித்து அவளை சல்லடையாக துளைத்திருந்தான் அந்தக் கயவன்.
சண்முகவேலின் கோரமுகம் ஒருவரும் அறியாமல் போய்விட, சுமித்ராவோ வாயிருந்தும் ஊமையாகிப் போனாள். ஏதேனும் மறுப்புத் தெரிவித்தால் குத்திக் கிழித்தான் வார்த்தைகளால். அவனுக்கு அவள் காதல் பற்றியும் தெரிந்திருந்தது, காதலனையும் தெரிந்திருந்தது. மிரட்டினான் பெரியவர்கள் யாரும் உயிரோடு இருக்க முடியாதென… இப்போது போல ஸ்மார்ட் ஃபோன் இருந்திருந்தால் இதை எல்லாம் படம் பிடித்து ஆதாரமாக காட்டி இருப்பாள். வீட்டுத் தொலைபேசி மட்டுமே உபயோகத்தில் இருக்கும் நிலையில் என்ன செய்வாள்.
இரு வாரங்கள் கடந்து பெற்றவள் மகளுக்கு எண்ணெய் வைத்து குளியாட்டுகையில் கண்டு விட்டாள் கயவன் ஏற்படுத்திய காயங்களை.
“என்னடி இது ?”பதறிப் போனாள் அன்னையவள்.
“உங்க மருமகனின் அன்பு பரிசு மா. ராஜாவின் பொற்காசு “என்றாள் விரக்தியாக
“எதுவும் சண்டையில் இப்படி முரட்டுத்தனமா நடந்துகிட்டாரா ?”அப்போதும் நம்பவியலாமல் மகளிடம் விசாரிக்க, மருமகனின் கொடூர குணமெல்லாம் வெளியே வந்தது சுமித்ராவின் வாயால்.
‘எப்படி இதை தடுப்பது?’ என்று இருவருக்கும் தெரியவில்லை.
மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பது போல அடங்கி விடுவான் என்று எதிர்பார்த்தனர். ஆனால் மூர்க்கங்களின் முழு உருவமாக இருந்தான் கட்டிலில். மற்ற நேரத்தில் அவனைப் போன்ற அன்பாளன் எவரும் இல்லை என்பது போல இருந்தான்.
“இதுக்கு மேல இங்கிருந்தா செத்துப் போயிடுவேன்!” என்று மிரட்டி தன் பெற்றோருடன் கிளம்பி விட்டாள் சுமித்ரா.
சண்முகவேல் அந்த நேரம் பார்த்து ஊரில் இல்லை வெளியே சென்றிருந்தான். அவனின் பெற்றோரோ அவனது மறுபக்கத்தைக் கண்டு விக்கித்து நின்றனர். சுமித்ரா போய் விட்டாள். ஆனால் மீண்டும் சண்முகவேலிடம் சேர்ப்பது போல மகிழன் வந்து சுமித்ராவின் கருவறையில் தங்கி விட்டான் அவள் உணரும் முன்பே . மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு கரு வளர்ந்தது கூடத் தெரியவில்லை. மாதவிடாய் பற்றிய எண்ணமும் இல்லை. பெற்ற தாயோ மாதா மாதம் ஒதுங்கி இருப்பாள் என நினைத்துக் கொண்டார்.
“இப்படி ரூம்க்குள்ளவே கிடந்தா என்ன தான் ஆகறது சுமி வெளியே வாம்மா!” என அன்பாய் கடிந்து வெளியே வரவழைக்க, வளர்பிறையாக வளர்ந்து நின்ற வயிறு சங்கதி பேசியது.
“சுமி மாசமா இருக்கியா ?”பதறிப் போய் வயிற்றில் கை வைக்க, அப்போது தான் அவளின் உடலமைப்பை கவனித்தாள் சுமித்ரா.
வழக்கமாய் கர்ப்பிணி பெண்ணுக்கு வரும் மசக்கை , மயக்கம் ,வாந்தி என்ற எந்த உபாதையும் இல்லை அவளுக்கு. அதனால் அவளுக்கேத் தெரியவில்லை தன்னுள் நிகழ்ந்த மாற்றம். அந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருந்திருந்தாள் சுமித்ரா.
மருத்துவரிடம் காட்ட அவரை ஐந்து மாதம் என்று உறுதி செய்திருந்தார்.
சண்முக வேலின் பெற்றோருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ,’வாழ முடியாது என்று கூறும் மருமகளை மீண்டும் எப்படி வீட்டிற்கழைப்பது?’ என்ற தயக்கத்தில் இருந்தனர்.
சுமித்ராவின் அம்மாவும் கருவை கலைப்பதில் உறுதியாக இருக்க, மருத்துவரோ 5 மாதத்திற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி விட ,திகைத்துப் போயிருந்தனர் சுமித்ராவின் வீட்டில்,
குழந்தையைப் பெற்று தன்னிடம் தந்து விடுமாறு சண்முகவேலின் தந்தை கூற, வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தனர். குழந்தையின் வரவில் சண்முகவேலின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்று கேட்க ,
ஜோதிடரோ மிகப்பெரிய அதிர்ச்சியை அவர்களுக்கு அளித்தார்.
“குழந்தை பிறக்கிறது எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆண் வாரிசு தான். ஆனா குழந்தைக்கும், அப்பாவுக்கும் ஆகாது. அவன் பிறந்து வளர்ற நேரம் ராஜாவுக்கு கெரகம் சரியில்லை. பார்த்துக்கோங்க” என்றார்.
“எதுவும் பரிகாரம் இல்லையா ஜோசியரே?” என்று கேட்க
“ஒரு அஞ்சு வருஷம் தகப்பன் கிட்ட பிள்ளை இல்லாம இருந்தா, அப்புறம் அவங்க குடும்பமா வாழ வாய்ப்பு இருக்கு. அடுத்தடுத்து பிள்ளைகள் பிறக்கும்போது கிரகநிலை மாறலாம் அப்போ எல்லாம் சரி ஆகிடும்” என்றார்.
“அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து இருக்கலாம் தானே?” என கேட்க
“அதெல்லாம் இருக்கலாம். தகப்பன் கூட தான் இருக்க கூடாது ,அதுவும் அஞ்சு வருஷம் தான் அப்புறம் சேர்ந்து இருக்கலாம். “என்று சொல்ல சரி என அவரை அனுப்பி வைத்தனர்
நாட்கள் அதன் போக்கில் நகர, சுமித்ராவோ எட்டே மாதத்தில் குழந்தை பெற்று எண்ணி இரண்டு நாட்கள் தாய்ப்பால் தந்தவள், குழந்தையை தூக்கி சண்முகவேலின் தாயிடம் கொடுத்து விட்டுச் செல்ல
“இந்த பிஞ்சு முகத்தைப் பார்த்தாவது இங்க இருக்கக் கூடாதாம்மா…?! என் மகன் கூட வாழுன்னு சொல்லலை, இவனுக்கு அம்மாவா இருன்னு சொல்றேன்மா” என்றார் கெஞ்சுதலாக.
“பெத்து தரச் சொன்னீங்க தந்துட்டேன். இதுக்கு மேல என்னை வற்புறுத்தாதீங்க. இந்த புள்ளையைப் பார்த்தா கூட உங்கள் மகன் பண்ண கொடுமை தான் நினைவுக்கு வருது. அந்த கோபத்தில் இதை ஏதாவது செஞ்சிடப் போறேன். என் மனசு இப்போ ஒரு நிலையில் இல்லை “என்று குழந்தையின் முகம் கூட பாராமல் கிளம்பி விட்டாள்.
சண்முகவேலுக்கு,’ குழந்தை பிறந்ததை தெரிவிக்கலாம் ‘என்று எண்ணி தெரிவித்திருக்க
அவனோ ,”அது என் பிள்ளையா இருக்க வாய்ப்பே இல்லை. கல்யாணம் ஆகி எட்டு மாசத்துல புள்ளையா?, எவன் வாரிசை என் தலையில் கட்ட பார்க்கிறா… கல்யாணம் ஆகி வந்தே அவ வீட்டுக்கு விலக்காகல அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும். நான் அங்க வரும் போது புள்ள இருந்தது கொன்னு தூக்கி எறிஞ்சிருவேன்” என நெருப்பு கங்குகளாய் வார்த்தைகளை வீசினான் .
பெரியவர்கள் நொந்து நூலாகிப் போயினர். விதியை நொந்தவர்கள் ஜோதிடத்தை நம்பினர். மகனும், மருமகளும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் அதுவரையில் குழந்தை எங்காவது வளரட்டும் என்று எண்ணி அவர்கள் தேர்வு செய்தது தான் பிருந்தாவனம் ஆசிரமம். அந்த ஆசிரமத்தின் நிர்வாகி சகுந்தலா அம்மா அன்பாய் அரவணைத்தார். மகிழனை வளர்க்கும் ஆசிரமம் என்பதால் தாராளமாக நன்கொடையும் சலுகைகளும் கிடைத்தது அவர்களுக்கு.
ஐந்து வருடம் காற்றாய் கரைந்தது. அரச குடும்பத்து வாரிசாய் வளர வேண்டிய பிள்ளை, ஆசிரமத்தில் அநாதரவாய் வளர்ந்தது. இந்த ஐந்து வருடத்தில் சண்முகவேலையும், சுமித்ராவையும் இணைத்திட எவ்வளவோ முயற்சி செய்தும் அத்தனையும் வீணாகியது.
இறுதியாக ராஜா பட்டம் கட்ட வேண்டும் அதிகாரம் உனக்கு வேண்டுமென்றால் சுமித்ராவோடு இணைந்து வாழ் என்று அவனின் தந்தை கூறி விட வேறு வழியின்றி ஒப்புக் கொண்டான் சண்முகவேல்.
இதனிடையே பெற்றோரை இழந்த சுமித்ராவிற்கும், வேறு வழியின்றி போனது. மீண்டும் மகிழன் ஆசிரமத்தில் இருந்து திரும்பி அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டான் சுமித்ராவோடு. இது தான் தன்னைப் பெற்றவள் என்று அறியாமல் அவர்களோடு வந்தான் பிள்ளை. சுமித்ரா மகனோடாவது இயைந்து போவோம் என்றெண்ணி மகிழனை அரவணைத்துக் கொள்ள , மீண்டும் சண்முகவேலோடு ஒரு வாழ்க்கை. பெற்றவர்களுக்காக மனைவி மகனை ஏற்றவனின் சாயம் வெகுநாட்களுக்கு நிற்கவில்லை.
சண்முகவேலுக்கு தோப்பு வீட்டில் மற்றொரு குடும்பம் இருந்தது தெரிய வந்தபோது, மகன் திருந்தவில்லை என கண்டு கொண்டனர் அவர்கள்.
“தோப்பு வீட்டில் இருக்கிறது யாரு?” என்று கேட்க
“இவ போன பிறகு அவகூட தான் இருக்கேன். எங்களுக்கு ஒரு ஆம்பளைப்பிள்ளை இருக்கான் பேரு இரணியன். அவளைத்தான் இங்க கூட்டிட்டு வரலாம்னு நினைச்சேன். நீங்க இவ கூட வாழச் சொல்றீங்க “என கடுகடுத்தான்.
“மூத்தமனைவி இருக்கும் போது எத்தனை வந்தாலும் அது வைப்பாட்டிக்குச் சமம் தான். அதை எல்லாம் எங்களால ஏத்துக்க முடியாது. சுமித்ராதேவியோட சேர்ந்து பட்டம் கட்டிக்கிறதுனா கட்டு, இல்லாட்டி நீ போகலாம் அரண்மனை ராஜாவா நான் சுசீந்திரனையும் மரகதத்தையும் அறிவிச்சுக்கிறேன்” என்றார் ஒரே போடாக.
“அவங்க எப்படி அதிகாரத்துக்கு வரமுடியும்?” என்றவனிடம்,” அப்போ என் பேரன் மகிழன் இருப்பான் வளர்ந்து அவன் ராஜபதவிக்கு வரட்டும்” என்றார்.
“அது எவன் குடுத்ததோ?” என்று எள்ளலாக பேச, அவனின் தந்தையோ கோபத்துடன்,” இப்படியே பேசினா ஜமீனை விட்டு நீ வெளியே போக வேண்டி இருக்கும்” என்று எச்சரித்தார்.
வேறுவழியின்றி சுமித்ராவோடு அங்கே இருக்க,” உங்கள் நடவடிக்கை பொறுத்து தான் இந்த பரம்பரையோட அதிகாரம் உங்க கைக்கு வரும் “என பெரியவர் சொல்லி விட , சண்முகவேல் அவரின் முன் குழந்தையிடமும் சுமித்ராவிடமும் அன்பு செலுத்தினான்.
சுமித்ரா நேரம் பார்த்துக் காத்திருந்தார். சண்முகவேல் ராஜாபட்டம் கட்டிய மறுநிமிடமே சுமித்ரா அந்த உண்மையை உடைத்திருந்தார்.
“மன்னிச்சிடுங்க மாமா இவர் என் வீட்டுக்காரர், இவரையும் என் மகனையும் கடத்தி வச்சிருந்ததால தான் நான் இங்க இப்படி நடிக்க வேண்டியதா போயிடுச்சு. என் புருஷனை போலீஸ் உதவியோடு மீட்டுட்டேன். இப்பவும் உங்க முகத்துக்காக தான் இவனை விடுறேன் இனிமே என் வாழ்க்கையில் இவன் வந்தா கொலை பண்ண கூட தயங்க மாட்டேன் “என்று கூறிய சுமித்ரா தனது இரண்டு வயது மகன் மகேந்திரனையும், தன் கணவன் விஷ்வநாதனையும் சுட்டிக் காட்டினார்.
“இனி என் பையன் உன் வழிக்கு வர மாட்டான்மா நீ போ” என்று கூற, சுமித்ரா விஷ்வநாதனோடு செல்லும் தருணம் மகிழன் சுமித்ராவின் முந்தியைப் பற்றி இழுத்தான்.
அண்ணார்ந்து பார்த்தவன்,” அம்மா தூக்கு” என்று கைநீட்ட சுமித்ரா கலங்கிய விழிகளோடு இளைய மகனோடு வெளியேறினார்.