“இனிமேல் என் கிட்ட பேச ட்ரை பண்ணாத. பண்ணினா வேற மாதிரி ஆகிடும்” என்று விரல் நீட்டி எச்சரிக்க
“ஒண்ணுமில்லாதவளுக்கு பேச்சுக்கு குறைவில்லை” என்று வலியோடு அவள் திட்டிக் கொண்டே கை ஓங்க ,ப்ரகா அவளது கையைப் பிடித்துக் கொண்டாள்.
“மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ற தருணிகா!” என்றவள்,” ஒண்ணுமில்லாதவளா? நானா?!” என்று எள்ளலாக வினவினாள்.
“ஆமாடி வாடகைக்கு குடித்தனம் இருந்துகிட்டு இருக்கிறவ தானே நீ?” என்று சொல்லி விட
“சில பிச்சைக்காரங்க சாரி சாரி அவங்க கூட கேட்டு வாங்குவாங்க, ஆனா ஒரு சில ஜென்மங்கள் கேட்காமலேயே எடுத்துக்கும். அந்த கேடுகெட்டவங்க வாழட்டும்’னு கேட்காமல் எடுத்துக்கிட்டதை திரும்ப கேட்கலை நான். பிச்சையா நினைச்சு விட்டுட்டேன். அதுபோக நான் ஒண்ணுமில்லாதவ கிடையாது. ஏன்னா கொள்ளை கொள்ளையா புருஷனோட அன்பையும், காதலையும் சுமக்கிற நான் தான் இந்த ஊரிலேயே ம்ஹூம் உலகத்திலேயே பெரிய பணக்காரி. எங்க காதலுக்கு கிடைச்ச அன்பு பரிசு” என்று தன் வயிற்றை பார்வையால் வருடினாள்.
“வாங்க மாமா போகலாம்!” என அவன் கைப்பிடித்து நடந்திட தருணி ஸ்தம்பித்து நின்றாள்.
குழந்தையின்மையால் மன அழுத்தத்தில் இருந்தவளை பரிசோதனைக்காக அழைத்து வந்திருந்தார் சுமித்ரா. பிறக்கும் போது பிறக்கட்டும் என சுமித்ரா அமைதிகாக்க ப்ரகாவின் கர்ப்பிணி தோற்றத்தில் வெகுவாய் குமைந்தவள் மாமியாரை அழைத்துக் கொண்டு வர இங்கே ப்ரகாவுடன் சந்திப்பு அவளின் ஆற்றாமையையும் இழப்பையும் தூண்டியிருக்க அவளிடம் பேசி அடி வாங்கிக் கொண்டாள் தருணி.
“சிலருக்கு அடி உதவறதை போல அண்ணன் தம்பி கூட உதவாதுன்ற பழமொழி தான் சரி “என்றாள் சத்தமாக.
தன் நிறைமாத நிலவை விழிகளில் நிரப்பிக் கொண்டு அவளோடு நடந்தான் நிறைவாக.
ராஜாவுக்கு ஏற்ற ராணி தான்.
சுமித்ரா இதைப் பார்த்து விட்டு வேகமாக அவளிடம் வந்தார்.
மகிழனோ நாசூக்காக,” நான் டேப்லெட் வாங்கிட்டு வரேன்டா .”என்று நகர்ந்து சென்றான்.
“உடம்பு பரவாயில்லையாம்மா…?டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று வினவிட
“நல்லா இருக்கேங்க. பாப்பா நல்லா இருக்கு “என்றாள்.
இப்போதெல்லாம் அத்தை என்று மறந்தும் அழைப்பதில்லை அவள்.
“ம்ஹ்ம் மா.!”என்றவரோ சற்றுத் தயங்கி,” தருணியை நீ அப்படி பேசியிருக்க கூடாதும்மா” என்றார்.
“ஓஓஓ!” என்றவள் வேறெதுவும் கூறிடவில்லை.
“அவளே குழந்தை இல்லைன்ற வருத்தத்தில் இருக்கா, இந்த நிலைமையில் போய் நீயே இப்படி பேசலாமாம்மா.?” என்று ஆற்றமாட்டாமல் கேட்டுவிட
“நானா போய் யார் கிட்டயும் வம்பு வச்சுக்கிறதில்லை. அது என் சுபாவமும் கிடையாது. உங்க மருமகள் தேவை இல்லாம வந்து பேசினாங்க. அதுக்குத் தகுந்த பதிலடி நான் தந்துட்டேன். இங்க எந்த இடத்திலும் அவங்க குறையை, இயலாமையை நான் பத்தி பேசவே இல்லையே. அவங்க தான் பேசினாங்க. இப்ப மட்டுமில்ல எப்போதும் பேசினாங்க, பேசுறாங்க. அதுக்கு பதிலடியே நான் இன்னைக்கு தான் தந்திருக்கேன். இனி பேசினாலும் தருவேன். வசதிவாய்ப்புங்கிறது அவங்க அவங்களோட அடுத்தவங்களை இதில் இழிவா பேச யாருக்கும் உரிமை கிடையாது. சொல்லிப் புரிய வைங்க உங்க மருமகளுக்கு.” என்றாள்.
“நீயும் என்னோட மருமகள் தான் மா. “என்றவரை புன்னகையுடன் பார்த்தவள் ,”என் வீட்டுக்காரருக்கு அப்பா அம்மா கிடையாதுங்க, அவர் ஆசிரமத்தில் வளர்ந்தவர். தத்தெடுத்தவங்க இறந்துட்டாங்க. “என்றாள் முகம் மாறாமல்.
சண்முகவேல் இறந்து ஆறுமாதங்கள் ஆகியிருந்தது. ‘இன்னும் கொஞ்சம் கொடுமைபடுத்தலாம் ‘என நினைத்திருந்த இரணியனுக்கு அதிர்ச்சி தான் அவரது இறப்பு. படுக்கையில் கிடந்தவர் திடீரென்று காணாமல் போக ,’யார் தூக்கிச் சென்று இருப்பார்கள்?’ என குழம்பியிருந்தனர் இரணியன் ,மகிழன் இருவரும்.
மரகதநாயகி காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்.
“எதுக்கு மரகதம். அவங்களால எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. இதை விட்டுடு” என்றார் சுசீந்திரன்.
“ஏன் ஏன் கண்டுபிடிக்க முடியாது. இவன் தான் எங்கண்ணனை ஏதோ பண்ணி இருக்கனும்… ?”மகிழனின் பக்கம் கைகாட்ட
“அவர் அதெல்லாம் செய்ய மாட்டார் மரகதம். நல்ல மனுசன்.” என மூக்குக் கண்ணாடியை கழற்றித் துடைத்தவர் ,”ரொம்ப நாளா வேட்டைநாய்களுக்கு சரியா கறி கிடைக்கிறதில்லை மரகதம் ,அதான் பாவம் அதுங்களுக்கு உணவா இருக்கட்டும்னு நான்தான் பீஸ் போட்டு சாப்பிட போட்டேன்.” என்றார் அலட்டிக் கொள்ளாமல்.
அனைவரும் அதிர்ந்து பார்த்திட, அவரின் சட்டையைப் பிடித்து உலுக்கினார் மரகதநாயகி.
“அடப்பாவி மனுசா. பைத்தியமா உனக்கு?” என்று அலற
“ஆமா மரகதம். ரொம்ப வருஷமா…! இவனைக் கொல்லணும்னு ரொம்ப வருஷப் பைத்தியம். “அவர் இன்னும் அலட்டிக் கொள்ளாமல் பதில் பேச,” மாமா !”என்றான் இரணியன் பதற்றத்துடன்.
“என்ன மருமகனே… உங்கப்பாவை கொன்னுட்டேன்னு நீங்க கத்தலையா…? மகிழா நீ… ?ம்ஹூம் நீ கத்த மாட்ட, ஏன்னா அவனை கொடுமைப்படுத்தினது தான் எனக்குத் தெரியுமே….!இரணியா அவனோட தலையை காட்டுல ஒரு ஆலமரம் இருக்கே அங்க தான் புதைச்சிருக்கேன். போய் எடுக்காத. இந்நேரம் எலும்பு மட்டும் தான் இருக்கும். இங்க சமாதி எல்லாம் கட்டிடாத. அவனுக்கு அதுக்கு எல்லாம் தகுதி கிடையாது.”என்றார் மிகவும் பொறுமையாக
“என் அண்ணன் உன்னை என்னைய்யா செஞ்சார்? ஏன் இப்படி பண்ண?” மரகதநாயகி அழுது மாய்ந்தார்.
அவரால் நம்பவே இயலவில்லை அமைதியின் உருவமாக இருக்கும் தன் கணவனா பாசமிகு அண்ணனைக் கொன்றது என்று.
“என்னை எதுவும் செய்யாமலேயே என் உயிரை உருவிட்டான் மரகதம். என் தங்கச்சி எவ்வளவு ஆசை ஆசையா வளர்த்தேன் அவளை… ரொம்ப பாசம் அவ மேல எனக்கு. பொண்ணு மாதிரி வளரலை அவ. அதாவது அடக்க ஒடுக்கமான பொண்ணா அவ வளரவே இல்லை. தைரியம் ,திமிர் ஜான்சிராணி மாதிரி ஒரு குணம். அவளை கட்டிக்கவே பயந்தாங்க எங்க ஊர் பசங்க. அந்த அளவுக்கு ராணி மங்கம்மாவா வலம் வந்தவளை உங்க அண்ணன் அவன் பக்கம் இழுத்துட்டான். ரெண்டு பேருக்கும் காதல். சந்தோஷமா கல்யாணம் பண்ணி வச்சேன். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது அவனோட உண்மையான குணம். என் தங்கச்சியை விலகி வந்திட சொன்னேன். பாவிப் பொண்ணு கேட்கவே இல்லை. அவனைப் பத்தி தெரியும் அண்ணா. நான் தான் அவனுக்கு சரியான ஆள் நீ கவலைப்படாத நான் பார்த்துக்கிறேன்னு சொன்னா. சொன்ன மாதிரியே சண்முகவேலோட அதீத காம எண்ணத்தை அடக்கி ஆண்டா அவ. பத்து வருஷம் சண்முகவேலை இன்னொரு பொண்ணோட நிழலைக் கூடத் தீண்ட விடாம பார்த்துக்கிட்டா. அவன் அப்படி இருந்தது அவனோட விசுவாசிகளுக்கு பிடிக்கலை, ஏன்னா அது மூலமா அவங்க சம்பாதிச்சாங்க. என் தங்கச்சியை பத்தி தப்பு தப்பா சொல்லி அவளை கொலை செய்ய வச்சாங்க.”என்றவருக்கு கண்ணீர் நிற்காமல் வழிய
இரணியனோ தன் அன்னை உயிரிழந்த தினத்தை நினைத்தான்.
ரத்தமும் சதையுமாய் தன் முன் சடலமாய்க் கிடந்த அந்த நாளை மறக்க முடியாது அவனால்.
“மாமா விடுங்க!” அவரைத் தேற்ற முயன்றான் இரணியன்.
“சொல்லணும் மருமகனே. தன் அண்ணன் தான் உலகத்திலேயே உத்தமன்னு நினைக்கிற இந்தப் பைத்தியக்காரிக்கு சொல்லணும். என் தங்கச்சியை கண்டம் கண்டமா வெட்டிப் போட்ருந்ததை சொல்லணும் மருமகனே… சொல்லணும். அன்னையில் இருந்து இதுநாள் வரை தவம் போல வாழ்ந்த எனக்கு இன்னைக்குத் தான் மோட்சம் கிடைச்சிருக்குன்னு சொல்லணும். ஒரு கோழையா பயந்து நின்ன நான் கொலைகாரனா மாறக் காரணமா இருந்த அவனைப் பத்தி சொல்லணும் மருமகனே. உன் அண்ணன் ஒரு காமக் கொடூரன். அவன் ஒரு அரக்கன்னு சொல்லணும். அவனால எத்தனை பேர் நிம்மதி இழந்தாங்க’னு சொல்லணும் மருமகனே” என்றார் படபடவென்று.
மரகதநாயகிக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது. தன் கண் முன்னால் தன் அண்ணனின் குணங்கள் எல்லாம் எடுத்துக்காட்டப்படுவதை ஜீரணிக்க முடியவில்லை அவரால். தன் கணவர் ஒரு போதும் பொய் சொல்லக் கூடியவர் இல்லை என்று அவர் அறிந்ததே.
“போலீஸை வரச் சொல்லி இருக்கேன் மருமகனே. ஒரு ஆறேழு வருஷம் தண்டனை கிடைக்குமா…? இல்ல ஆயுள் தூக்கு இதுமாதிரி தருவாங்களா ?”என கேட்க பிரபுவும் ஸ்வீகாவும் உடைந்து அழுதனர்.
“ஏற்கனவே செத்துப் போனவனைக் கொன்னா தண்டனை கிடையாது மாமா. “என்ற இரணியன் மகிழனைப் பார்த்து,” நீ வளர்ந்த ஆசிரமத்துப் பேரென்ன?” என வினவினான்.
“பிருந்தாவனம்!” என்றான் மெலிதான புன்னகையுடன்.
“உங்களைக் குடும்பத்தில் இருந்து பிரிக்கிறேன்னு நினைக்க வேண்டாம். பிருந்தாவனம் போங்க. மனநிம்மதிக் கிடைக்கும். கொஞ்ச மாசம் கழிச்சு வரலாம்” என்றதும் சம்மதித்து விட்டார் சுசீந்திரன்.
பிரபுவும், ஸ்வீகாவும் மரகதநாயகியை அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்று விட்டனர்.
அதன்பிறகு இரணியனும் அங்கில்லை. சுமித்ராதேவி தன் குடும்பத்தினருடன் அரண்மனையில் வசிக்க, மகிழன் வழக்கம் போல மாடியில் தங்கிக் கொண்டான்.
விஷ்வநாதன் மகிழனிடம் தங்களோடு இருக்கும்படி கேட்க
“கேட்டபோது கிடைக்காத எதுவும் இப்போத் தேவையில்லை. அது அம்மா அன்பு பாசம் எதுவா இருந்தாலும் சரி. என் கடமையை நான் செஞ்சுட்டேன் மகனா… ஒரு தாயா அவங்க தவறிட்டாங்க. அதைத் திரும்ப வாங்க எனக்கு மனமில்லை.”என்று கூறி விட்டான்.
விஷ்வநாதனோ, “தப்பு என்னோடது தான் மகிழா. அந்த நேரத்தில் சண்முகவேல் எங்கக் காதலைப் பிரிச்சு அளவுக்கு அதிகமான தண்டனையை தந்துட்டான். சுமித்ராவிற்கு உன்னை விட்டு வர எண்ணமில்லை. சூழ்நிலை அப்படி அமைஞ்சிடுச்சு.” என்றார் வருத்தமாக.
“இதை இப்போ பேசணும்னு எந்த அவசியமும் இல்லைங்க. மகிழன் கர்ணனைப் போல ஆத்துல விட்டக் குழந்தைனு நினைச்சுக்கிறேன். உங்க வாழ்க்கைக்கு இடைஞ்சலா மகிழன் எப்போதும் நிக்க மாட்டான். “என்றபடி போய் விட்டான்.
இரணியன் தனக்கு தன் தந்தையின் குணம் வந்து விடும் என்று கூறிவிட்டு சென்றதோடு சரி. அதன்பிறகு எங்கே இருக்கிறான் என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எட்டு மாதங்கள் உருண்டோடி விட்டன.
ப்ரகாவை நாகலெட்சுமி தான் கவனித்துக் கொண்டார். அவ்வபோது அவள் பெரியம்மாவும் வந்து செல்ல… கிங்கரா என்ற அழைப்பு இப்போது முற்றிலுமாய் தொலைந்து போயிருந்தது.
தன் அடையாளத்தை மாற்றிய மகிழனை இன்னுமின்னும் பிடித்தது வதனிக்கு.
“ப்ருஹா எங்கே இருக்க… பொண்ணே எவ்வளவு நேரம் தேடுவேன்?” மேல்மாடியில் இருந்து மகிழனின் சத்தம் கேட்கவே சுமித்ரா வெளியே வந்து பார்த்தார்.
“ப்ரூஸ்லி அடிச்சுடுவேன்டி கையில் சிக்கினா… எங்கப் போன நீ ?”என்றபடி தேட மகேந்திரன் மாடிக்கு ஏறிவிட்டான்.
“என்னண்ணா ஆச்சு அண்ணி எங்கே?” என கேட்க
“வீட்டில் தான் இருந்தா…!”குழப்பம் மேலோங்க அவளைத் தேடினான்.