“அஞ்சு வயசு ப்ருஹா. பிருந்தாவனத்தில் ஒவ்வொரு குழந்தையா வரும், ஒவ்வொரு குழந்தையா தத்தெடுத்தும் போவாங்க. அப்படி போகும் போது அந்த பசங்க புது டிரெஸ் போடுவாங்க. அது மட்டும் நினைவிருக்கு. அது போல ஒரு நாள் எனக்கும் போட்டு விட்டாங்க என்னோட அம்மா, அப்பா வரப் போறதா சகுந்தலா அம்மா சொன்னாங்க ஒரே கொண்டாட்டம் எனக்கு. புதுடிரெஸ் போட்டு எல்லார்கிட்டயும் காட்டினேன். வீட்டுக்கு வந்தபிறகும் தாத்தா பாட்டி அம்மா அப்பானு எல்லாரும் பாசமழையா பொழிஞ்சாங்க. அம்மா ஊட்டி விட்டாங்க, அப்பா விளையாட்டு காட்டினார் தாத்தா கதை சொன்னார். பாட்டி மடியில் தூங்க வச்சாங்க எல்லாம் ஒரு ஆறு மாசம் மட்டும் தான் ப்ருஹா. அப்புறம் அம்மா இன்னொரு பையனை தூக்கி வச்சுக்கிட்டாங்க, அது தான் மகேன். என்னைத் தூக்க சொல்லி கேட்டேன் விட்டுட்டுப் போனவங்க திரும்ப வரலை. அப்பா வெறுப்பா பார்க்கிறாரு கோபத்தில் அன்னைக்கு அடிச்ச அடி அப்பப்பா “என்று அப்போது வலிப்பது போல முகத்தை சுருக்கிக் காட்டினான்.
“மகிழா!” என அரவணைத்து கொண்டாள் வதனி.
“அந்த ஆறு மாசம் நல்லா இருந்தேன் ப்ருஹா.. அம்மா விட்டுப் போன அடுத்த நாளில் இருந்து தனியா ஒரு ரூம்’ல படுக்கை, அப்பா தன்னோடு வச்சுக்கிறதா கூட்டிட்டுப் போய் சித்திரவதை பண்ணாரு, தூங்கிட்டு இருப்பேன், திடீர்னு யாரோ கிள்ளுவாங்க, அடிப்பாங்க இதோ இந்தத் தழும்பை பாரு அந்தாள் சிகரெட்டில் சுட்டுட்டான். அம்மானு கத்த முன்ன வாயைப் பொத்திடுவான் அந்தாளு. அழுதழுது ஓஞ்சுப் போய் தூங்கிடுவேனாம், பாட்டி சொன்னாங்க. சில விஷயம் ஞாபகம் இருக்கு ப்ருஹா அந்தாள் இருட்டுல பயமுறுத்தினது, சிகரெட்டில் சுட்டது னு நிறைய, நானா இங்கிருந்து போயிடணும்னு நிறைய செஞ்சான். ஆசிரமத்தில் அநாதையா வளர்ந்தப்ப கூட நான் தனிமையை அனுபவிச்சது இல்லை. எல்லார் கூடவும் தூங்குவேன், சாப்பிடுவேன், விளையாடுவேன்,ஆனா இங்க இவ்வளவு பெரிய வீட்டுல தனியா இருந்தேன். பாட்டிக் கூட தான் தூங்கிட்டு இருப்பேனாம், திடீர்’னு பார்த்தா யாருமில்லாத ஸ்டோர் ரூமில் கிடப்பேனாம், பயம் பயம் மனசு முழுக்க பயம் தான் இருந்தது.
என் வாழ்க்கையை நரகமாக்கினவங்களை நான் ஏன் மன்னிக்கனும்?,நான் ஏன் சும்மா விடணும்?, இவ்வளவு நடந்தும் சுமித்ரா என்னன்னு கூட கேட்கலை, நானா இவங்களைப் பெத்துக்க சொன்னேன். அவங்களை எல்லாம் பார்க்கக் கூடப் பிடிக்கலை எனக்கு. ஆனாலும் அவங்க என் அம்மா, அது மட்டும் தான் நான் அவங்களை பாதுகாக்கிற ஒரே காரணம்”
குரலில் அத்தனை வெறுமை அப்பிக் கிடந்தது மகிழனுக்கு
“சண்முகவேல், தாத்தா பாட்டிக்குத் தெரியாம அத்தனை கொடுமை செஞ்சான். அடிப்பான்,உதைப்பான், என் கண்ணு முன்னாடியே இன்னொரு பொண்ணு கூட இருக்க ட்ரை பண்ணி இருக்கான். எல்லாம் தாங்கின நான் சாக மட்டும் நினைக்கவே இல்லை ப்ருஹா. ஏன் சாகணும், இதை எல்லாம் தெரிஞ்சுகிட்ட தாத்தா கூடவே இருந்தார். இத்தனை கொடுமையை அனுபவிச்ச என்னை முரடனாக்க விடாம அறிவை கத்து தந்தார். படிப்புல என் கவனத்தை திசை திருப்புனார். நல்லா படிச்சேன் . தற்காப்பு கலை அதுஇதுனு எனக்குத் தெரியாத எதுவுமே இருக்கக் கூடாது’னு எல்லாம் கத்துக்கிட்டேன். என்னை நெருங்கவே பயப்படுற அளவுக்கு வளர்ந்து நின்னேன். தாத்தா மும்பையில் கொண்டு போய் படிக்க வச்சார். இடையில் சண்முகவேல் தொல்லை இல்லாம இருந்தது. எங்கேயோ போய் செத்துட்டான்னு நினைச்சேன். ஆனா அது இல்ல”
“இருந்தான் உயிரை மட்டும் வச்சுக்கிட்டு, தாத்தாவுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்குன்றது அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. சண்முகவேலை கடத்தி தோப்பு வீட்டு சுரங்கத்தில் அடைச்சு வச்சிருந்தார். ஏன்னு கேட்டேன், ‘உண்மை தெரியாத வரைக்கும் தான் நான் அவனுடைய அப்பா. இப்ப நான் இந்த அரண்மனையோட ராஜா. அப்போ இவனுக்கு தண்டனையும் நான்தான் தருவேன்னு’ சொல்லி அடைச்சு வச்சிருந்தார். கொன்னுடலாம்னு சொன்னேன். தாத்தா மறுத்துட்டார்.
‘இவ்வளவு கொடுமை செஞ்சவன் சாகறதாடா…? உயிர் போயிட்டா இவன் செஞ்சதுக்கு தண்டனைனு?’ கேட்டவர், எனக்கு கொள்ளி போடுற உரிமை கூட இவனுக்கு கிடையாதுனு சொன்னவர், சுமித்ராதேவியை இங்கே குடி வச்சார். அவங்க வாழற வாழ்க்கையை இவன் பார்த்து பார்த்து நொந்து சாக வச்சார். ஒரு வேளை சோறு தான் போடுவேன் பனிரெண்டு வயசு இருக்கும்’னு நினைக்கிறேன். , பாட்டி இறந்துட்டாங்க. அப்போ கூட சுமித்ரா கிட்ட தாத்தா கேட்டார் என்னை அழைச்சுட்டுப் போகச் சொல்லி, நான் கெஞ்சினேன் என்னைக் கூட்டிட்டுப் போங்கம்மானு அழுதேன். முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க. விஷ்வா ஏத்துக்க மாட்டார் மாமான்னு சொல்லிட்டு போனவங்களை மகேன் பிடிச்சுக்கிட்டான். அண்ணனை கூட்டிட்டுப் போகலாம்மான்னு அவன் சொன்னது இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு . அதுக்கப்புறம் தான் மும்பைல கொண்டு போய் விட்டார் தாத்தா. அங்க தான் நாகலெட்சுமி அறிமுகம் எனக்கு, நேர்மையான எஸ்ஐ அவங்க. நேர்மையில் வருமானம் என்ன கிடைச்சுடும் , என்னைப் பார்த்துக்க தாத்தா நிறைய பணம் தந்தாங்க அவங்க பசங்களையும் வளர்த்து என்னை கண்ணுக்குள்ளே வச்சுப் பார்த்துக்கிட்டாங்க, பிரபு ஸ்வீகாவும் சரி என்னை ஒதுக்கலை. பெரியவங்க தான் என்னை வேண்டாம்னு நின்னாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நாளில் தாத்தா இறந்துட்டார். அந்த நிலைமையில் நான் மறுபடியும் சுமித்ரா கிட்ட வரேன்னு சொல்லிடுவேனோன்னு பயந்தாங்க,நான் போகலை. மறுபடியும் மும்பைக்கே போனேன். நாகலெட்சுமி தான் என் துணை. என்னை பெத்தப் பையனை விட மேலா பார்த்துக்கிட்டாங்க, சுமித்ரா விட சின்ன வயசு அவங்களுக்கு. வா தம்பி நானிருக்கேன்னு தைரியம் சொன்னாங்க. அப்படி ஒரு மனுஷி எல்லாம் தேடினாலும் கிடைக்க மாட்டாங்க. அதுக்கப்புறம் என் ஆளுமையை வளர்த்துக்கிட்டு வந்து நின்னேன். இந்த ஊரை எப்படி எல்லாம் உருவாக்கணுமோ அப்படி ஆக்கினேன். இரணியன் னு ஒருத்தன் இருக்கிறதே எனக்கு தெரியல ப்ருஹா. தாத்தா இறக்கும் போது தான் சொன்னார். அவன் அம்மாவை இந்தாள் துடிக்க துடிக்க கொன்னுட்டானாம் அதில் தான் நொந்து போய் தாத்தா அவனை அடைச்சு வச்சிருக்கார் .என்னைப் போலவே இரணியனையும் தாத்தா படிக்க வச்சிருந்தார். என்னை ஏத்துக்க முடியாத மரகதநாயகி அவனை ஏத்துக்கிட்டாங்க” என்றான் விரக்தியாக.
“ஏன் மகிழா…?”
“ஏன்னா இரணியனோட அம்மா சுசீந்திரன் தங்கச்சி. அதனால ஏத்துக்கிட்டாங்க. இப்போ புரியுதா அவனை ஏன் ராஜாவாக்க இவ்வளவு முயற்சி எடுத்தாங்க’ன்னு” என்றான்.
“ம்ம்ம் புரியுது.”என்றவளுக்கு மனம் ஆறவே இல்லை எத்தனை சுயநல மனிதர்கள் இவர்கள் என்று .
“இதுக்கு மேலயும் நாம இங்கிருக்க வேண்டாம் ப்ருஹா அவங்க ஆசைப்படியே இரணியனே பட்டம் கட்டிக்கட்டும் என்ன இப்போ?” என்றவனை மெலிதான புன்னகையுடன் பார்த்தாள்.
“இனிமேல் தான் நாம இங்க இருக்கணும். உங்களை ஒதுக்கின உறவுகள் முன்னாடி நாம நல்லா வாழணும் மகிழா.
சுமித்ராதேவி ஒரு அம்மாவா உங்களை அவங்க ஒதுக்கி வச்சிருக்க கூடாது. சண்முகவேல் செய்த தவறுக்கு அவனை கொன்னுருக்கலாம் அவங்க, அதை விட்டுட்டு எந்த பாவமும் அறியாத உங்களை எப்படி ஒதுக்கி வைக்கலாம் அவங்க. ஒரு மகனா நீங்க என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டீங்க. அதை அனுபவிக்கக் கூட தகுதி இல்லாதவங்க அவங்க. இனி நாம இங்க தான் இருக்கோம். தாத்தா உங்களை அரண்மனை விட்டுப் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கார் தானே…?!, போகக் கூடாது. பழையபடி வாடகைத் தந்தே இருப்போம்” என்றாள் உறுதியான குரலில்.
“எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லைடா. ஓகே இருக்கலாம்.” என்று கூறி விட்டான் மனைவியின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து.
மீண்டும் அரண்மனை மாடியில் குடியேறினர் மகிழன் ப்ரகா தம்பதி.
இரணியன் கீழே இருந்தான் சண்முகவேலிற்கு விதவிதமான தண்டனைகள் தந்து கொண்டு. ஒவ்வொரு நிமிடமும் சாவுபயத்தை அவருக்கு காட்டிக் கொண்டிருந்தான்.
‘மகிழனே பரவாயில்லை’ என்று இருந்தது சண்முகவேலிற்கு.
“இந்த வருஷமும் பட்டம் கட்டாமலேயே திருவிழா நடத்திடலாம் தம்பி. பெரியவர் முடியாம இருக்கார். இரணியன் தம்பியும் பட்டம் கட்ட கேட்கிறார். மரகதநாயகியம்மா உங்களுக்கு பட்டம் கட்ட விட மாட்டேங்கிறாங்க அதனால இந்த முடிவு. “ஊர்க்காரர்கள் அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்திருந்தனர்.
“உங்க இஷ்டம். வழக்கம் போல நான் சொன்னது தான் திருவிழா செலவு என்னோடது” என முடித்து விட்டான் மகிழன்.
திருவிழா எந்தவித ஆர்பாட்டமும் இன்றி நடந்தேறியது. மகிழன் மனைவியோடு பொதுமக்கள் போல கலந்து கொண்டான். முதல் மரியாதை எல்லாம் இரணியனுக்கு சூட்டப்பட்டது. பெரியகுடும்பத்து வாரிசுகள் என்று மற்றவர்கள் எல்லாம் அங்கீகரிக்கப்பட்டனர். மகிழன் அத்தனையையும் வேடிக்கைப் பார்த்தான். முகத்தில் எள்ளளவும் உணர்வுகளை காட்டவில்லை அவன்.
மகேந்திரன், பிரபு ,ஸ்வீகா என எல்லோரும் வற்புறுத்தி அழைத்தும் தனியாக நின்றான் மனைவியோடு.
தருணிகாவிற்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது மகிழன் ஒதுங்கி நின்றது. தன் குடும்பத்தை வரவழைத்து கொண்டாடிக் கொண்டிருந்தாள். உணவருந்திய மிச்சங்களை கொண்டு வந்து ப்ரகாவிற்கு கொடுத்தாள், அவள் இன்னும் வேலைக்காரி என்பதை உணர்த்த.
“அச்சச்சோ !இவ்வளவு தூரம் நீங்க அலைஞ்சிருக்க வேண்டாம் தருணிக்கா. நாங்க சாப்பிட்டுட்டோம். நீங்க எடுத்துட்டுப் போங்க” என நாசூக்காக அவளை திருப்பி அனுப்பி வைத்து விட்டாள் வதனி.
மகேந்திரனுக்கு கடும் அதிருப்தி தருணி மீது.
“உன்னைப் பிடிச்சு கல்யாணம் பண்ணேன் தருணி. ஆனா இப்போ ஏன் பண்ணேன்னு யோசிக்க வைக்கிற ?”எனக் கூறி விட்டான் ஆற்றாமையுடன்.
“நான் என்ன செஞ்சேன்.?,சும்மா எல்லாத்துக்கும் குறை சொல்லாதீங்க என்றாள் கோபத்துடன்.
‘இவளிடம் பேசுவதே வீணெ’ன்று நினைத்தவன் அமைதியாக கடந்து சென்று விட்டான்.
***********
“வா ஸ்வீட்டி என்ன தனியா பேசணும்னு கேட்ட?”மகிழன் வியர்வைத் துடைத்தபடி வந்தமர ப்ரகா மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“உனக்குப் பிடிச்சிருந்தா பண்ணிக்க வேண்டியது தானே…?” அவளை ஆழம் பார்த்தான் மகிழன்.
“அவனை சுத்தமா பிடிக்கலை. வேணுன்னா நீயே என்னை ரெண்டாவதா கட்டிக்கோயேன்.” என கேட்டவளின் தலையில் நறுக்கென்று கொட்டினாள் ப்ருஹா.
“ஒழுங்கா ஓடிடு. இந்த ரெண்டாவது மூணாவதுக்கு எல்லாம் இடமே கிடையாது. மகிழா சிரிக்கிறீங்க அவளை அதட்டுங்க!” என்று கணவனை வேறு முறைத்தாள்.
ஸ்வீகா நமட்டுச் சிரிப்புடன்,” ஏன் தந்தா என்னவாம். நான் நல்லாப் பார்த்துப்பேன் மாமாவை !”என்றாள்.
“ஹோய் வேணாம் அடி வாங்காத..” என பேசிக் கொண்டிருக்கும் போதே இரணியன் அங்கு வந்து விட்டான்.
இரணியனைக் கண்டு இருவரும் அமைதியாகிவிட
“ப்ரகி… எனக்கு இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணவெல்லாம் இஷ்டமில்லைனு சொல்லிடு. என்னால மகிழன் மாதிரி கட்டுப்பாடோடு இருக்க முடியாது. இவங்கம்மாட்ட நான் பேசிக்கிறேன். “என்றவன் செல்ல
“ரணி நில்லு !”என்று தடுத்தது சாட்சாத் மகிழனே தான். சட்டென நின்றான் இரணியன்.
“ஏன் முடியாது. ஸ்வீகா நல்லப் பொண்ணு” என்றவனைத் தடுத்து
“நான் சண்முகவேலோட ஜீன். புரியுதா. ஐ டோன்ட் வான்ட் த டேஸ்ட் ஆஃப் *** . ஒரு தடவை அந்த விஷயத்திற்குள் போயிட்டேன் அவனை மாதிரி ஆகிடுவேன். இன்னொரு அரக்கனை உருவாக்க விரும்புறீங்களா என்ன?” என இரணியன் கேட்டதில் பதறிப் போயினர் பெண்கள் இருவரும்.