“ஹாஸ்பிட்டல்லய்யா…!?” என திகைத்தவன்,”நான் காலையில் வயலுக்குத் தான் போயிருந்தேன். யார் பேசினாலும் நம்பிடுவியா பைத்தியம்?, ஒரு நிமிஷத்துல பதற வச்சிட்டு” என்றவன் சுற்றமெல்லாம் கவனிக்காமல் அணைத்திருந்தான்.
“தம்பி வெயில்ல நிற்காம உள்ள வாங்க, அதுவே பதறிட்டு வந்திருக்கு” என நாகு அழைக்கவும் மனதை சமன்படுத்தி விட்டு அழைத்துச் சென்றான்.
சிறிது நேரத்தில் அனைவரும் மாடியில் இருக்க , தருணி மட்டும் மேலே செல்லவில்லை.
நேற்று அடிவாங்கியதன் விளைவாக ஆத்திரத்தில் இருந்தாள் ப்ரகா மீது.
அவள்தான் ப்ரைவேட் நம்பரில் இருந்து அழைத்து மகிழனுக்கு அடிபட்டதாக கூறியிருந்தாள்.
‘அதிர்ச்சியான விஷயங்கள் கர்ப்பிணி பெண்ணிற்கு கூறினால் கரு கலைந்து விடும் ‘என எப்போதோ அறிந்த விஷயத்தை இப்போது ப்ரகாவின் விஷயத்தில் செயல்படுத்தி இருந்தாள்.
‘அப்படி ஒன்றும் ஆகவில்லை’ என்றதும் இன்னுமின்னும் கோபம் தான் தலைக்கேறியது அவளுக்கு.
மகேந்திரன் உள்ளே வந்து கதவை சாத்தினான்.
பளாரென விழுந்தது ஓர் அறை. துடிதுடித்துப் போய் பார்த்தாள் தருணி.
“இந்த அறையை நான் முன்னவே தந்திருக்கணும். இதுக்கு மேல ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணின டிவோர்ஸ் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன் இடியட். அவ்வளவு என்னடி ஈகோ உனக்கு. உன்னைப் பிடிச்சிருக்குன்னு நான் பார்த்த பார்வைக்காக உன் ஸ்டேட்டஸ் , உன் படிப்பு, எதுவுமே பார்க்காம கட்டி வச்சார் அவர். அவர் கிட்ட ஈகோ க்ளாஸ் பார்க்கிற…? ச்சீ நீயும் ஒரு பொண்ணா?!” என்று அருவறுத்து விட்டான் மகேந்திரன்.
“தேவை இல்லாம பேசாதீங்க மகேன். நேத்து என்னை அவ அடிச்சாளே அப்போ உங்கம்மா வாயை மூடிகிட்டு தானே இருந்தாங்க” ஆத்திரமாக கேட்டாள்.
“அவ ஏன் அடிச்சான்னு அவளையேக் கேளுங்க. பிள்ளை பெத்துக்க போற திமிரு அவளுக்கு. அதான் எனக்கு பிறக்காதுனு குத்திக் காட்டுறா அதை கேட்க துப்பில்லை உங்களுக்கெல்லாம்” என்று ஆங்காரமாய் கத்த
“நமக்கு குழந்தை இல்லைன்றது நம்ம பிரச்சினை தருணி. அதை அவங்க யோசிக்க கூட கிடையாது. நீ தான் இதை எல்லாம் போட்டு குழப்பி உன்னை நீயே கெட்டவளா மாத்தி ப்ரொஜெக்ட் பண்ணிட்டு இருக்க. அந்த மனுசன் நினைச்சிருந்தா இந்த சொத்துக்களை எனக்குத் தராம இருந்திருக்கலாம். உண்மையா உரிமை உள்ளவர் அவர் தான். ஆனா அதை என்னைக்காவது வெளிக்காட்டி இருக்காரா, இல்ல அண்ணி தான் உங்க குடும்பத்துக்கு தந்த இல்லையில்லை நீங்க பிடுங்கின சொத்தைப் பத்தி பேசி இருப்பாங்களா…? கடைசியா சொல்றேன் இந்த ஈகோ எல்லாம் விட்டுடு பழைய தருணியா இரு. லைஃப் நீ நினைச்சதை விட நல்லா போகும். உனக்கு என்ன வேணுமோ கேளு தரேன். ஆனா அடுத்தவங்க சுயமரியாதையை கேட்காதே. “என்றவன்,” இனி உன் முடிவு உன் விருப்பம். ஆனா இன்னொரு முறை அவங்க கஷ்டப்படுற மாதிரி உன் நடவடிக்கை இருந்தா என் முடிவு வேறாக இருக்கும்” என எச்சரித்து விட்டேச் சென்றான்.
************
“மகி…!”
“ஸ்ஸ்ஸ், பேசாதே ப்ளீஸ். “என்றவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“என் நம்பருக்கு கூப்பிட மாட்டியா ப்ருஹா. ரெண்டு நிமிடத்தில் பைத்தியம் ஆகிட்டேன். என்னை என்னப் பண்ணி வச்சிருக்கன்னு உனக்குத் தெரியுதா ப்ரூஸ்லி. ஊஃப்…. கஷ்டம் டி உன்னோட” அலுத்துக் கொண்டாலும் சிகையை கோதியது அவன் விரல்கள்.
“எதையும் யோசிக்க முடியல அந்த நேரத்தில். உங்களைப் பார்க்கத் தோணுச்சே தவிர வேறெதுவும் தோணலையே…!”மற்றொரு கையைப் பிடித்து அவன் விரல்களோடு விரல்கள் கோர்த்து விடுவித்தாள்.
“யாரா இருக்கும் கூப்பிட்டது…?”
“தருணிகா!” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
அவளை சட்டென்று நிமிர்த்தினான்.
“அப்போதைக்கு யோசிக்க முடியல. ஆனா அதுக்கப்புறம் நம்பர் செக் பண்ணப்ப தெரிஞ்சுது. அது அவளோட செகண்ட் நம்பர், யாருக்கும் அவ்வளவா தெரியாது ஆனா எனக்குத் தெரியும்ன்றதை அவ மறந்தது தான் துரதிர்ஷ்டம். சரி விடுங்க இனி கவனமா இருக்கேன்” என்றவள் அவன் நெஞ்சிலேயே மீண்டும் சாய்ந்து விட்டாள்.
“நான் இதைப் பார்த்துக்கிறேன் ப்ருஹா.” என்றவனிடம் ,”அதெல்லாம் வேண்டாம். அவங்களை மைன்ட் பண்ணா தானே நமக்கு கஷ்டம். கண்டுக்காம போயிடுவோம், ஒரு கட்டத்தில் அவங்களுக்கே அந்த விஷயம் அலுத்துப் போயிடும் இல்லையா அதில் மூழ்கி அவங்க தன் வாழ்க்கையையே இழந்திடுவாங்க. ரெண்டில் எது வேணும்னு தருணியே முடிவு செய்யட்டும் யார் தப்பையும் திருத்த நாம இல்ல. நம்ப வாழ்க்கையை வாழத் தான் நாம” என்று கண்களை மூடிக் கொண்டாள்.
“தெளிவுடா பொண்ணே நீ!” என அணைத்திருந்தவன், ஆசுவாசமாய் கண்களை மூடினான்.
**********
“நாகு வளைகாப்பு பத்தி தம்பிட்ட பேசலாமா? ஒன்பது தொடங்கப் போகுதே… !”சுமித்ரா கேட்டுக் கொண்டிருக்க
“அம்மா தம்பியே சொல்லுவார். அவர் கவனத்தில் இல்லாமலா போகும். நீங்க அவர் விஷயத்தைப் பத்தி கவலைப்படாமல் இருப்பது நல்லது” என்று கூறி விட்டார் நாகலெட்சுமி.
“அதெப்படி நாகு அவன் ஒதுக்கினா நான் ஒதுங்கணுமா…? வீட்டுக்கு மூத்தவளா நான் யோசிக்கக் கூடாதா…?” என சுமித்ராவின் பேச்சில் கர்வம் தொனிக்க நாகலெட்சுமி அமைதி காத்தார்.
‘இந்தம்மா மறுபடியும் வாங்கிக் கட்டினா தான் அடங்கும்’ என்றெண்ணியபடி வேலையை கவனித்தார்.
சுமித்ரா தேவி மகிழன் வரும் தருணத்திற்காக காத்திருந்தார். ப்ரகல்யாவிடம் கூட ‘மகிழனை வந்து தன்னை சந்திக்கும்படி சொல் ‘என சொல்லி இருக்க அவளும் சரியென்று கூறிவிட்டாள்.
மகிழனிடம் விஷயம் போய்விட்டாலும், அதை அவன் கண்டுகொள்ளவில்லை. சுமித்ராவே முன்னெடுத்து பேசச் சென்றார்.
“ஏன்மா தம்பிட்ட பேசணும்னு சொல்லி இருந்தேனே நீ சொல்லலையா??” என அதிகாரமாய் கேட்டபடி வந்தமர
மகிழனோ,” என் கிட்ட உங்களுக்கு பேச வேண்டி இருந்ததுனா, நேரா நீங்க தான் வரணும். அதை விட்டுட்டு நான் வரணும்னு எதிர்பார்க்கக் கூடாது” என்றான் அமர்த்தலாக
சுமித்ராவின் முகம் விழுந்து போனது .
சிலநிமிட அமைதிக்குப் பின்னர் ,”விஷயம் என்னன்னு சொன்னா நல்லா இருக்கும் .”என்றான் அமைதியாக.
“இல்லப்பா ப்ரகாவுக்கு வளைகாப்பு போடணும் பெருசா செய்யலாம், சொந்தபந்தம் எல்லாரையும் வரவழைக்கணும் , ஊருக்கே விருந்து போடணும். முறைப்படி எல்லாரையும் அழை …”எனும் போதே இடைவெட்டியவன்,” என் மனைவிக்கு வளைகாப்பு போடறதைப் பத்தி நீங்க ஏன் பேசறீங்க?” என்றான் நறுக்கென்று.
சுமித்ரா அதிர்ந்து பார்க்க ,அவன் பார்வையில் சிறிதும் மாற்றமில்லை.
“சொல்லுங்க நீங்க யாரு…?”என்று கேட்க
“மகிழா.. நான் நான் உன் அம்மா நீ இல்லைன்னு சொல்ல….” என்றவரை கைதூக்கி பேச வேண்டாம் என்றவன்,” எனக்கு அப்படி யாரும் கிடையாது. உங்களுக்கு இதை ஏற்கனவே நான் சொன்னதா ஞாபகம்.” என்றான்.
“நான் செஞ்சது தப்புதான் மகிழ், அதுக்காக நீ இப்படி பேசலாமா? எனக்கு மன்னிப்பே கிடையாதா? என் சூழ்நிலை என்னன்னு தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட “என்றார் கண்ணீரோடு.
“இனஃப்…!!” என்று கத்தியவன்,
” என்ன சூழ்நிலை இல்ல என்ன சூழ்நிலைனு கேட்கிறேன். உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா எனக்கு அந்த நிமிஷம் தான் காரணம். யா மன அழுத்தம் எல்லாம் வரும் உங்க சூழல் புரியாம இல்லை. நான் பிறந்தப்ப உங்களுக்கு அவர் மேல கோபம் ஸோ தூக்கி எறிஞ்சீங்க. திரும்ப யார் உங்களை வரச் சொன்னது…? திரும்ப வந்து பாசத்தைக் காட்டி நான் தான் உன் அம்மானு அடையாளம் ஏன் காட்டுனீங்க…? கேட்டேனா நான். ஆசிரமத்தில் இருந்தப்ப சகுந்தலா அம்மா மட்டும் என்னைப் பார்க்கலை, அங்கே வேலை செஞ்ச அத்தனை பேரும் ஆள் மாத்தி ஆள் பார்த்துக்கிட்டாங்க அவங்களை எல்லாம் நான் உணர்வா அம்மாவா நினைக்கலையே , உங்களை கூட நினைக்கலையே. நீங்களா அடையாளப்படுத்துனீங்க அம்மான்னு, நீங்களா விட்டுட்டு போனீங்க. உங்க காதலும், காதலனும் அவ்வளவு உயர்ந்ததுனா என்னை ஏத்துக்கிறதில் என்ன கஷ்டம் அவங்களுக்கு. இல்லை ஒரு ஓரத்தில் அவனும் இருந்துட்டுப் போகட்டும்’னு சொல்றதில் என்ன கஷ்டம் உங்களுக்கு.?, அட அவ்வளவு வேணாங்க. தாத்தா பாட்டி கூட இருடா. நான் அப்பப்போ வந்து பார்த்துக்கிறேன்னு ஒரு பொய்யான நம்பிக்கையாவது தந்திருக்கலாமே. பிரபு , ஸ்வீகா உங்க வீட்டில் சொந்தக்கார பசங்களா தங்கி இருக்கும் போது அவங்கள்ள ஒண்ணா நினைச்சு என்னை கூட வச்சிருந்திருக்கலாமே…? அந்த அளவில் நான் சந்தோஷப்பட்டு இருப்பேனே… எதுவும் வேண்டாம் இங்கே என் கண்ணுக்கு எட்டின தூரத்தில் தானே நீங்க வாழ்ந்தீங்க…ஹான் அந்த தூரத்தில் ஒரு அன்பா பார்த்திருக்கலாமே, ஒரு நேரம் வந்து சாப்டியாடானு கேட்டு இருக்கலாமே…? இந்த வீட்டுப் பெண்ணா அரண்மனை மரியாதை சீர்வரிசை வாங்க வரும்போது கூட உங்கக் கண்ணுக்கு நான் தெரியலையே…! உங்களை இத்தனை வருஷமா சண்முகவேல் கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கேன்னு தெரியவும் வருதுல்ல உங்களுக்கு பாசம். காரணத்தோட வர்ற பாசம் எனக்கெதுக்கு…??”என்றான் ஆத்திரமாக
“மகிழ் நான்… உன் மேல பாசமா தான்” என்ற சுமித்ராவை பேசவிடவில்லை அவன்.
“எனக்குன்னு எல்லாம் தர என் மனைவி இருக்கா… அரக்கனோ எவனோ யார் பிள்ளையா இருந்தா நமக்கென்ன…? நாம அந்தப் பிள்ளையை சரியா பார்த்துக்கிறோமா அது தான் முக்கியம், நாம வளர்க்கிறதில் அவன் சரியா வளரணும்னு வளர்த்தாங்களே நாகலெட்சுமி அவங்க தான் என் அம்மா . போதுமா உங்க கேள்விக்கான பதில்?!” என்றதும் சுமித்ராவிற்கு மனம் தாளவில்லை.
“அப்புறம் எதுக்குடா என்னைப் பாதுகாத்த…?விட வேண்டியது தானே…?” ஆற்றமாட்டாமல் கேட்டு வைக்க
“எல்லாரும் சுமித்ராதேவி போல இருக்க முடியாதே…? ஒரு மகனா என்ன செய்யணுமோ அதை நான் செய்துட்டேன் . மறுபடியும் பாசம் பந்தம்’னு வந்து என் வாழ்க்கையில் நுழையாதீங்க. “என்றான் அழுத்தமாக.
சுமித்ரா தளர்ந்த நடையுடன் வெளியேறினார்.
“தம்பி !”என எப்போதும் போல நாகலெட்சுமி தண்ணீரை நீட்ட ,ப்ரகா அவரை அணைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.
சொன்னது போலவே அதிரடியான ஏற்பாடு தான். மொத்த ஊருக்கும் சொல்லி ஏற்பாடு செய்திருந்தான்.
பிரபு, ஸ்வீகா மரகதநாயகி கூட அழைக்கப்பட்டார். ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுத்தாலும் சகுந்தலா அம்மா அங்கே வந்து எல்லாம் செய் எனக் கூறிவிட்டார். அனைத்து பிள்ளைகள் பெரியோர் என ஊருக்குள் அழைத்துச் சென்றால் அவர்களை பரிதாபமாக பார்ப்பார்கள் அது வேண்டாம் என நினைத்தார் சகுந்தலா.
“உங்க மனசு போலவே மா, செஞ்சுடலாம்” என்று கூறி விட்டான்.