மரகதநாயகி வதனியிடம் பேசிக் கொண்டிருக்கவும், மகிழன் இரணியன் இருவரும் வெளியே வந்து விட்டனர். சும்மாவே காந்தக்குரல் கட்டைக்குரலில் தான் பேசுவார். வீடு முழுவதும் அதிரும் அவர் பேசினால். இப்போது கேட்கவே வேண்டாம்.
“எதுக்கு இப்படி சத்தம் போடுறீங்க?” கோபமான குரலில் இரணியன் கேட்கவும், மரகதநாயகியின் குரல் அப்படியே உள்ளடங்கியது.
” வாங்க மருமகனே!, நீங்க செஞ்சது உங்களுக்கு நியாயமா இருக்கா?” என்று கேட்க
” நான் என்ன செய்தேன்?” என்றான் குழப்பமாக
“எல்லாம் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறீங்களே?”என்று மரகதநாயகி ஆதங்கத்துடன் கேட்க
இரணியன் தன் நெற்றியை கீறியபடி,” நடந்துடுச்சு இப்போ என்ன செய்ய சொல்றீங்க? மறுபடியும் வேணும்னா உங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கவா?” என்று கிண்டலாக கேட்க அருவி அவனைத் தீயென முறைத்தாள்.
‘என்ன?’ என்று புருவமுயர்த்தியவன் மரகதநாயகியிடம் திரும்பி,”சிச்சுவேஷன் அப்படி. வேற ஏதாவது கேட்கணுமா?”என்றான் அதட்டல் குரலில்.
அவன் என்று பணிந்து பேசினான். அதுதான் சுட்டுப் போட்டாலும் வராதே…
“மரகதம்,அதான் சொல்றாரே சூழ்நிலைனு… பெரியமனுசியா ஆசீர்வாதம் பண்ணாம” என்று அலுத்துக் கொண்ட சுசீந்திரன்,
” அம்மாடி ப்ரகா நீ போய் விபூதியை எடுத்துட்டு வா. புள்ளைகளை கையோட ஆசீர்வாதம் பண்ணணும்” என்றார்.
மரகதநாயகியின் பார்வையோ இயலருவியிடம் யோசனையாக படிந்திருந்தது. மனதில் ஜோதிடரின் வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘இரணியனுக்கு இரண்டாம் திருமணம் தான் சரிவரும். ஸ்வீகாவும் இரண்டாம் தாரமாக போனால் நன்றாக இருப்பாள்’ என்று சொல்லி இருக்க, இப்போது இரணியன் அவசரத்திருமணம் முடித்ததும் ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்தார்.
ஆனால் இயலருவியை இங்கிருந்து எப்படி வெளியேற்றுவது என்ற யோசனை வந்து குடிகொண்டது.
அவரறியாதது இரணியனுக்கு இயலருவியோடு நடந்தத் திருமணம் இரண்டாவது என்று. அவன் தான் ராஜியின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாய் ஏற்று இறுதிச்சடங்கு செய்து விட்டானே. அப்போது இது இரண்டாவது திருமணம் தானே…
“என்ன அத்தை பார்த்துட்டே இருக்கீங்க. டாக்டர் அவ்வளவு அழகா இருக்காங்களா என்ன?” என்ற இரணியன் குரலில் சுயம்வந்தவர்
“அதென்ன மருமகனே, டாக்டர் அவங்க இவங்க’னு வெளியாளை சொல்ற மாதிரி சொல்றீங்க. உங்க பொண்டாட்டி தானே?!” என்று சொல்ல இயலருவிக்கு மனம் திடுக்கிட்டது.
‘என்ன உடனே மனசு மாறிட்டாங்க இவங்க இப்படி இல்லையே? என்று குழப்பம் மேலிட பார்த்தவன்,” ஏன் பொண்டாட்டியை மரியாதையா பேசக் கூடாதா என்ன…?அதுவும் டாக்டர் பொண்டாட்டி வேற” என்றான் கிண்டலாக.
‘இப்படி பொண்டாட்டி போண்டா டீனு சொல்லி சொல்லியே பீதியை கிளப்புறாரே…! அடைக்கலம் கேட்டு வந்தது தப்போ?’ என்று எண்ணிக் கொண்டாள் இயலருவி.
“அதில்லைங்க மருமகனே…” எனும் போதே இடையிட்ட மகிழன் ,”ப்ப்ச் அவன் பொண்டாட்டி அவன் எப்படியோ கூப்பிடட்டும் நமக்கென்ன…?இப்ப அதுவா முக்கியம்?”என்றான் அமர்த்தலாக.
“சரிய்யா, நீ சொன்னா சரிதான்!” என்றிட வதனி சும்மாயிராமல்,” பொண்டாட்டினு சொல்லவும் தான் ஞாபகம் வருது. பெரியம்மா அவங்களுக்கு சடங்கிற்கு ஏற்பாடு செய்யணும்” என்றாள் வேகமாக
‘நாசமா போச்சு !’என்று முணுமுணுத்த இரணியன் அப்படியே திரும்பி மகிழனை முறைக்க
‘இதுவும் நல்ல ஐடியா தான் !’என நினைத்தவன் பாவமாக பார்த்து வைத்தான் இரணியனை.
“உன் ட்ராமா எனக்குத் தெரியாதுனு நினைச்சியா… ஒழுங்கா இதைச் செய்ய விடாம ப்ரகியை தடுத்து நிறுத்துற !”என்றான் மகிழனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
‘அதை செய்ய எனக்கென்ன மண்டைக்கோளாறா பிடிச்சிருக்கு.?’என மனதினுள் கவுண்ட்டர் கொடுத்த மகிழன்,” முடிஞ்சா அவளை நீயே சமாளிடா. உன் விஷயம்னு வந்துட்டா எனக்கு அங்க அதிகாரமே இல்லை” என்றான் பரிதாபமாக.
“நடிக்காதடா. உன் நடிப்பை உலகம் வேணும்னா நம்பும், நான் நம்ப மாட்டேன்” என்றான் பதிலுக்கு.
“நல்லதுக்கு காலமே இல்லப்பா !”என்று அசட்டையாக திரும்ப இயலருவி இரணியனை விழிகள் தெறித்துவிடும் அளவிற்கு பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவ வேற பார்த்தே காட்டிக் குடுத்திடுவா போல. இது மருத்துவர் இல்ல மடசாம்பிராணி’ என்று நினைத்தபடி அவளை முறைக்க
அவளோ விழிகளை அங்குமிங்கும் உருட்டிக் காட்டினாள்.
‘என்ன சொல்ல வர்றா ஒரு கருமமும் வெளங்கலை!’ என்று எண்ணியபடி ,”என்ன இயல்?” என்று கேட்டுவிட்டான் சத்தமாக.
“அடப்பாவி இப்ப நான் என்னத்த சொல்ல ?”என முனக
“எதையாவது சொல்லுமா எல்லாரும் உன்னைத்தான் பார்க்கிறாங்க “அவளருகில் நின்ற மகிழன் எடுத்துக் கொடுக்க
“ஹ்ஹான்… ஹான் அது… வந்து… உங்களுக்கு மண்டைவலி… ச்சே தலசுத்தல் ஹையோ…” என கடுப்பானவள்,” ஹெட்ஏக்னு சொன்னீங்களே வாங்க டேப்லெட் தர்றேன். முடிஞ்சா ஒரு டிடி போட்டுக்கங்க “என்றாள் வலிய சிரித்தபடி
“தலைவலியா… எனக்கா…?”
“ப்ப்ச்,ஆமாமாமா!” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு
“ஓஓஓ தலைவலி…!” என்று இழுத்த வதனி ,”இரணிக்கு தலைவலியே தான் நீங்க போங்க இரணி அதான் டாக்டர் ஊசி போடுவாங்களே ?”என இழுத்து கிண்டலாய் சொல்ல மகிழனோ,” இவ ஒருத்தி நிலைமை புரியாம !”என்று முனக
“ஏம்மா மாத்திரையை இங்கேயே தர வேண்டியது தானே? அதுக்கு ரூமுக்கு போகணுமா?” என மரகதநாயகி கேட்க
“நீயெல்லாம் ரெண்டு புள்ள பெத்து என்னத்த…?” என அலுத்துக் கொண்ட சுசீந்திரன் ,”நீங்க போங்க தம்பி” என அனுப்பி வைத்தார்.
“ஏன் எனக்கென்ன…?”என்றவர் ,” ஸ்வீட்டி வா மருமகனுக்கு தலைவலிக்குதாம், நீ மரமாட்டம் நிக்கிற ?”என இழுக்க
அவளோ கடுப்பாக,” அவருக்கு தலைவலினா நான் என்ன செய்ய ஆரத்தியா எடுக்கணும் ?”என்றாள்.
“ப்ப்ச் இவ ஒருத்தி, வா ஆவி புடிச்சா தலைவலி விட்ரும் அப்புறம் சூடா காபி தருவோம் நீயே போட்டு நீயே உன் கையால குடு” என்றார் சமையலறைக்கு அவளை இழுத்துச் சென்றபடி
“நான் என்னத்துக்கு போடணும். லூசு மாதிரி உளறாதம்மா. !”என்றாள் எரிச்சலாக
“நீதான்டி போடணும், உனக்கு சொன்னா புரியாது.” என்று பால்பாத்திரத்தை அடுப்பில் வைக்க
“அது தான் கேட்கிறேன் நான் ஏன் போடணும்?” என்றாள் அழுத்தமாக.
“ஏன்னா… நாளைக்கு அவர் பொண்டாட்டி ஆகிட்டா நீதானே செய்யணும்.” என்றதும் ஒற்றை புருவமுயர்த்தி அவரைப் பார்த்தவள்,” உன் ப்ளான் என்ன?” என்றாள்.
“என் ப்ளானா அதெல்லாம் ஒண்ணுமில்லையே!” என்று சமாளிக்க
“ம்மா… நீ யாரு என்னன்னு எனக்கு நல்லாத் தெரியும். உன் கேடித்தனத்தை கூட இருந்து பார்த்திருக்கேன், இந்த சீரியல் அத்தைங்க மாதிரி ஏதாவது தில்லாலங்கடி வேலை பண்ணுன அப்புறம் அம்மானு பார்க்க மாட்டேன். நேரா அண்டார்டிகாவுக்கு பார்சல் பண்ணிடுவேன் புரிஞ்சுதா?” என எச்சரித்தாள்.
“ஹேய்! நான் ஏன் அப்படி செய்யப் போறேன். அதுலாம் இல்லையே “என சமாளிக்க
“சமாளிக்காத நீ…!” என்றவள் ,”நானே அந்தப் பொண்ணு பாவம் எப்படி மாட்டுச்சோனு நினைச்சுட்டு இருக்கேன். இதுல நீ என்னை மாட்டிவிடப் பார்க்கிற, இப்படியே யோசிச்ச அப்புறம் பழையபடி சிங்கப்பூர் மலேசியா தான் எவனாவது நல்ல சீனாக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணி பாம்புக்கறி சமைக்க வச்சிடுவேன் ஜாக்கிரதை” என்றபடி போய்விட்டாள் ஸ்வீகா.
********
இயலருவி பதற்றத்துடன் நின்றவள்,” சார் இதெல்லாம் …?”என்று இழுத்தாள்.
“ப்ப்ச், இப்போ என்ன பேசத்தானே செஞ்சாங்க அதுக்குள்ள நீ ஏன் இவ்வளவு பயப்படுற?” என்றான்.
“இல்ல அதெல்லாம் சரிவராது. எனக்கு பயமா இருக்கு நீங்க எனக்கு டிக்கெட் போடுங்க நான் இன்னைக்கே ஹைதராபாத் போறேன் ப்ளீஸ் !”என்றாள் கெஞ்சுதலாக .
“இன்னைக்கேன்னா செத்துப் போன எங்கப்பனும் உங்கப்பனும் ப்ளைட்டா விட்ருக்கானுக. சும்மா தொணதொணத்துக்கிட்டு. மூச் விடக் கூடாது. நானே இந்த மரகதநாயகி என்ன ப்ளான் போட்ருக்கோனு யோசிச்சுட்டு இருக்கேன் நீ வேற “என்றான் கோபமாக.
“அவங்க என்னவோ ப்ளான் போடட்டும் . அதுவா முக்கியம்?” என்றவள்,” ப்ளீஸ் சார், என்னை விட்டுடுங்க நான் எங்கேயாவது போயிடுறேன்”என்று இருகைகளையும் கூப்பி கெஞ்ச அவனோ கோபமாய் அவளை நெருங்க முற்பட ,அதற்குள் கதவு தட்டப்பட்டது.
“யாரா இருந்தாலும் வெளியே இருங்க நான் வரேன் “என்று இரணியன் குரல் மட்டும் கொடுக்க மரகதநாயகி அதற்குள் கதவு திறந்திருக்கவும் ஒரே தள்ளாக தள்ளிவிட கதவின் பக்கம் நின்ற அருவி எதிரே நெருங்கியிருந்த இரணியன் மீது விழுந்து வைத்தாள்.
வேறு யாருமாக இருந்திருந்தால் தள்ளிய வேகத்தில் மல்லார்ந்து விழுந்திருப்பார்கள். இரணியன் ஆகிற்றே விழுவானா என்ன. இரும்புத்தூண் போலவே நின்றவன், இயலருவியைத் தாங்கிப் பிடித்து அவளை ஓரமாக நிறுத்தினான்.
“அத்தை வரேன்னு சொன்னேனில்ல எதுக்கு கதவைத் தள்றீங்க?” என்று காந்தியவன் கையிலிருந்த காபியை பார்த்து விட்டு,” இதைத் தரதான் வந்தீங்களா? கொண்டாங்க” என்று வாங்கிக் கொண்டான்.
“ஹான்…!இப்ப வந்துச்சே ஒரு டைனோசர் அம்மா அதுகிட்ட நீங்க என்னை சும்மாக்காச்சும் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கனு உண்மையை சொல்லிடுவேன்” என்றதும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவன்
“முதல்ல அதைச் செய் நான் நிம்மதியா கிளம்பிடுவேன்” என்றான்.