“இந்த நேரத்தில் இங்க என்ன செய்ற?”என்று கேட்கவும் அதிர்ந்து விழித்தவள் இருவரும் கிளம்பியிருப்பதை கண்டு யோசனையாக பார்த்தாள்.
“இயலை ஏர்போர்டில் விடப் போறேன் அதுக்கு ஏன் இப்படி பார்க்கிற?”என அதற்கும் கேட்டு வைக்க
“ஏன் அவங்களை தனியா… நீங்க கூடப் போகலையா?” என்ற ஸ்வீகாவின் வார்த்தைகள் அடுத்து இரணியன் பார்த்த பார்வையில் சிக்குண்டு போனது.
“அவங்க மட்டும் தான் போறாங்க எனி ப்ராப்ளம்?” என்றதில் பதறியவள், “அச்சச்சோ!” என அலறியே விட்டாள்.
“ஸ்ஸ்ஸ், ஏன் கத்துற?” என முறைத்தவனை,” ஏன் நீங்களும் கூடப் போகலாமில்ல?” என்றாள் பதற்றத்துடன்.
“ஏன் உனக்கு இவ்வளவு அக்கறை?” என்று இரணியனும்
‘ஏன்மா உனக்கு இந்த வேண்டாத வேலை?’ என்று இயலும் பார்க்க
அசடு வழிந்த ஸ்வீகாவோ,” இல்ல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கிளம்பிட்டா இங்க பல நன்மைகள் நடக்கும்”என்று உளறியவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்,”வண்டியில் ஏறு !”என்றான் அதட்டலாக.
“நானா.. நான் எதுக்கு…?” என தடுமாறிப் போனாள் அவள்.
“ம்ம்ம், வரும்போது சிங்கிளா வருவேன். அதான் கம்பெனி குடுக்க கூப்பிடுறேன்” என்றான் நக்கலாக.
“அதுக்கு வேற ஆளைப் பாருங்க. ஏன் உங்களுக்கு, எங்கம்மாக்குலாம் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்று அவசரப்பட்டு கேட்டு வைத்தவள் பின் தான் உளறியதை நினைத்து மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.
“உங்கம்மா என்ன செய்ய இருக்காங்க?” என்றான் நேரடியாக.
“போச்சு, நானே உளறிட்டேன்” என்று முனகியவள்,” எங்கம்மாவா ஏன் எங்கம்மாக்கு என்ன…?அதெல்லாம் ஒண்ணும் செய்ய நினைக்கலையே” என்றாள் படபடப்பாக.
“உங்கம்மாக்கு ஒண்ணுமில்லை . சரி சொல்லு உங்கம்மா என்ன செய்ய நினைக்கிறாங்க..” எனும்போதே இயல் தோளை சுரண்ட,”ப்ப்ச் அமைதியா இருக்கணும்” என்றான் முறைப்புடன்.
“ஃப்ளைட்டுக்கு லேட் ஆகுது. என்னை ட்ராப் பண்ணிட்டு வந்து பேசுங்களேன் இல்ல ஒரு ஆட்டோ புடிச்சுத் தாங்க நான் கிளம்புறேன்” என்றாள் கடகடவென.
“நீ வண்டியில் உட்கார்.”என்றவன்,” ம்ம்ம் ம்ஹூம் ஸ்வீட்டி நீயும் ஏறு, பேசிட்டே போகலாம்” என்றான் அமர்த்தலாக.
“நானா… நான் எதுக்கு?” என்று மீண்டும் அவள் மறுக்க
“அட வாம்மா. உன்னை எதுவும் செஞ்சிட மாட்டேன்.” என்று கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக வண்டியில் அமர வைத்தான்.
வண்டியில் இருந்து துள்ளி குதித்து இறங்கியவள்,”அச்சோ விடுங்க, ஏற்கனவே எங்கம்மா இவங்களை விரட்டிட்டு என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் பார்க்கிறாங்க இதுல நான் உங்க கூட வரணுமா?” என்று பதற்றத்துடன் உளறியவளை இதழ்வளைத்து சிரித்து விட்டு ஏற இறங்கப் பார்த்தான்.
இயலுக்கு மிகவும் சந்தோஷமாகிப் போனது ஸ்வீகா கூறிய விஷயத்தில்.
“ஓஓஓ, அப்போ இதுதான் உங்கம்மா செய்ய நினைச்சது ?”என்றதும் தலையில் கைவைத்து,” எல்லாம் சொல்லிட்டேனா ?”என்றபடி அவனைப் பார்க்க
“வேறென்ன நடந்தது?” என்று கேட்டதும் வேறுவழியின்றி எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.
இயலுக்கு அப்பாடா என்றிருந்தது.
ஆனால் இரணியனோ இயலை வம்பு செய்யும் பொருட்டு,”இதென்ன சீரியல் வில்லி மாதிரி உங்கம்மா செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை. நான் என் வொய்ஃபை பிரியவே மாட்டேன்.”என்றான் இயலின் கைகளை வேகமாக பிடித்தபடி.
“ஏதோ இப்பவே தூக்கிட்டுப் போற மாதிரி பயப்படுறீங்க, ஓவர் லவ்வுதான்.” என்று ஸ்வீகா கிண்டல் செய்ய
இயலோ,” எதுக்கு இந்த நடிப்பு?அந்தப் பொண்ணும் நம்பித் தொலைக்குது.” என்றாள் கையை உருவ முயன்றபடி.
“என்ன அருவி இப்படி சொல்லிட்ட…?நான் நடிக்கிறேனா.. பார் உனக்கு வேலை இருக்குன்னு தெரிஞ்சும் உன்னைப் பிரிய முடியாம அதிகாலை மூணு மணிக்கு எழுந்து உன்னோட வர்றேன், என்னைப் போய்…” என்று முகபாவனைகளை மாற்றி மாற்றிக் காட்ட,” அடேய்! என்னா நடிப்புடா சாமி”என்றிருந்தாள் இயல்.
“போதும் போதும் இங்க உங்களை கட்டிக்க யாரும் காத்துட்டு இருக்கலை. நீங்க உங்க வொய்ஃபை இறக்கி விட்டுட்டு வாங்க. நான் வீட்டுக்கு போகணும் “என்றாள் ஸ்வீகா.
“அதுக்குத்தானேமா போறேன்.” என்றவன் வண்டியை வேகமாக ஓட்ட விமான நிலையம் வந்திருந்தது.
மூவரும் இறங்கிவிட, ஸ்வீகா யோசனையுடன் இயலின் கையைப் பிடித்தவள்,” ஒரு நிமிஷம்!”என்றாள்.
“இப்ப என்னம்மா?” என்று இயல் அலுப்பாய் கேட்க
“நீங்க ஊருக்குப் போய்ட்டா அம்மா இதுதான் சாக்குனு சொல்லி உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு என்னை இவருக்கு கட்டி வச்சுட்டா…?” என்று பீதியோடு கேட்க
“கடவுளே! அப்படி எல்லாம் நடக்காது. ” என்றான் இரணியன்.
“ஒரு வேளை நடந்துட்டா…” என்றாள் கண்களில் பயம் தெரிய
“அதெல்லாம் எதுவும் நடக்காது. நீ ஏன் தேவையில்லாம குழப்பிக்கிற உங்கம்மா சொன்னா நான் உடனே ஒத்துப்பேனா?” என்றான் இரணியன்.
“எங்கம்மாவுக்குத் தெரியாதா நீங்க இதுக்கு சம்மதிக்க மாட்டீங்கனு. கொஞ்சநேரம் முன்ன சொன்னீங்களே சீரியல் வில்லினு கண்டிப்பா வில்லத்தனம் பண்ணுவாங்க. என்ன பார்க்கறீங்க… என் அம்மா பழைய மரகதநாயகி பத்தி உங்களுக்கு நல்லாவேத் தெரியும். பார்த்துக்கோங்க” என்றாள் அவனை எச்சரிக்கும் விதமாக.
“இதோ பாரு உனக்கே என்னைப் பிடிக்கலை. எனக்கும் இனி நோ மேரேஜ். சம்மந்தப்பட்ட ரெண்டு பேரும் இதுல உடன்படலை அப்படின்னா அவங்களால என்ன செய்ய முடியும். எதுவும் முடியாது. வீணாப் போட்டு மனசை குழப்பிக்காம இரு. இல்ல பேசாம உன் அண்ணன் கிட்ட போயிடு உனக்கு அதுதான் ஷேஃப்டி” என்றான்.
“நீங்க சொல்றதும் நல்ல ஐடியா தான். ஆனா.. ப்ப்ச் இல்ல நீங்க இப்போ ஹைதராபாத் போக வேண்டாமே… அட்லீஸ்ட் என் மேரேஜ் வேற யார் கூடவும் முடியிற வரை இருங்களேன் “என்று இயலிடம் கெஞ்சும் தொனியில் பேச ,இரணியனும் யோசனையானான்.
‘மீண்டும் ஒரு திருமணமா?’என்று யோசித்தவன், மரகதநாயகி ஏதேனும் திருகுதாளம் செய்யக் கூடியவர் தான் என்று உணர்ந்து
இயலை,’ இப்போது என்ன செய்யலாம்?’ என்ற ரீதியில் பார்க்க
அவளோ,’ அச்சோ! இவனோடு இருக்க வேண்டுமா?’ என்ற பீதியில் பார்த்தாள்.
‘இவ மேல அப்படியே நான் பாஞ்சிடுற மாதிரியே ரியாக்ஷன் தர்றா பாரேன். சரியான மக்கு மருத்துவர்’ என்று முறைத்தான் அவளை.
ஸ்வீகாவோ,” இரணி மாமா ப்ளீஸ் கன்சிடர் பண்ணுங்களேன் “என்றதும் அவனுக்கு ஒரே சிரிப்பு தான் .
“என்னைக் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்றதுக்காக என் கிட்டவே ஹெல்ப் கேட்கிற பாரு. நீயெல்லாம் நல்லா வருவ. என்னம்மா அருமை பொண்டாட்டி நீங்க என்ன சொல்றீங்க?” என்று இயலை வேறு வம்பிழுக்க
“வேற வழியே இல்லையா?” என்று அவள் பரிதாபமாக கேட்க
“அவதான் இல்லைன்னு சொல்றாளே… இன்னும் ரெண்டு மாசத்தில் எப்படியாவது மேடத்துக்கு ஒரு பையனைப் பார்த்து கட்டி வைக்கிறேன் அதுவரை கூட இரு.”என்றான்.
“அப்போ ஹைதராபாத்…?” என்றவளை
“அது ஆந்திராவில் தான் இருக்கும், வேற எங்கேயும் போகாது. நீ கிளம்பு உன்னால ஃப்ளைட் டிக்கெட் வேற தெண்டச்செலவு !”என்றான் முன்னால் நடந்தபடி.
“நான் வேணும்னா பே பண்ணிடவா?”என்று ஸ்வீகா கேட்க
“நீ பேயும் பண்ண வேணாம் பிசாசும் பண்ண வேணாம். வாங்க போகலாம்”என்றபடி நடந்தவனுக்கு பேசிப் பேசி பசியே வந்துவிட்டது.
“பசிக்குது!” என்றபடி கடையைப் பார்க்க ஸ்வீகாவும் ,இயலும் ,”அதோ கடை அங்க இருக்கு”என்று நகர்ந்தனர் வேகமாக.
“அடிப்பாவிகளா…!”என்று முனகியபடி மூவருக்கும் தேநீரை எடுத்து வரும்படி சொல்ல
“இந்த இட்லி பூரி எல்லாம் கிடைக்காதா…?ரொம்ப பசிக்குது.” என்றாள் இயல் வயிற்றைத் தடவியபடி.
“உங்கப்பன் அந்தக் கிறுக்கன் மேலோகத்தில் இருந்து பூரியும், வடையும் சுட்டு கீழப் போடுவான் தின்னு. நாலு மணிக்கு இட்லி பூரி … ஏன் மசால் தோசை கேட்கல ?”என்று திட்ட
“ப்ப்ச்… சரியான மான்ஸ்டர்…ஆளைப்பாரு அரக்கன்”என்று மூக்கை சுரித்தபடி மனதுக்குள் கரித்துக் கொட்ட ,ஸ்வீகா எப்படியோ போங்க என்ற ரீதியில் ப்ரெட் பாக்கெட்டை வாங்கி உண்ண ஆரம்பித்துவிட்டாள்.
“உன் மைன்ட்வாய்ஸை நான் கேட்ச் பண்ணிட்டேன்.” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும்படி தலைசாய்த்து.
“கேட்டுச்சா சந்தோஷம்!” என்றவள் தேநீர் வரவும் வேகமாய் வாங்கிக் கொண்டாள்.
இரணியனோ தேநீரோடு எழுந்து சென்றவன் கால்மணிநேரம் கழித்து வந்தான்.
டேபிளில் ப்ரெட் ஆம்லெட் சாண்ட்விச்சும் வைக்கப்பட,நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் இயல்.
“ம்ம்ம், சாப்பிடு.சூடு ஆறிட்டா சாப்பிட முடியாது” என்க
இயல் சிறு புன்னகையுடன் எடுத்துக் கொண்டாள். அவளை பார்த்தபடியே அவன் நிற்க
“இங்க ஒருத்தி வரட்டு பன்னை தின்னுட்டு இருக்கேன். எனக்கெல்லாம் வாங்கத் தோணுச்சா?”என்று சத்தமாய் முணுமுணுக்க
“உன்னை யார் அவசரப்பட்டு ஒரு பாக்கெட்டை காலி பண்ண சொன்னா?”என்றவன் அவளுக்கும் எடுத்து தர ,”ஓவரா மைதா சாப்பிட்டா வெய்ட் போட்டுடாது”என்றபடி ப்ரெட் ஆம்லெட்டை உண்ண
அவன் சிரிப்புடன்,” உங்கம்மா கிட்ட ரெண்டு மணிநேரம் பேசு, வெய்ட்டே போடாது”என்றான் கிண்டலாக.
எதுவும் கூறாமல் எடுத்து உண்ண ,மூவரும் சற்றுநேரத்தில் கிளம்பினர்.
வயிறு நிரம்பியதிலும் இனி அம்மாவை இரணியன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஸ்வீகா உறங்கிப் போக, இயல் அமைதியாய் தலைசாய்த்தபடி கண்களை மூடித் திறந்து உறக்கத்திற்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள்.
சீட் பெல்ட்டையும் போட்டுவிட்டு ,”இப்போ தூங்கு!” என்று நெற்றியில் முட்டப் போனவன், தலையை சிலுப்பியபடி கதவைச் சாத்திவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான். அதையெல்லாம் உணரும் நிலையிலேயே அவள் இல்லை. நடு இரவில் விழித்தது கண்களை சொக்கிக் கொண்டு வர உறங்கியிருந்தாள்.
மனம் முழுதும் யோசனை அவனுக்கு.
வதனியுடன் மட்டும் தான் தன் சிநேகம் எல்லாம் என அவன் நினைத்திருக்க ஸ்வீகாவுடனும் இப்போது இயல்பாய் பேச வந்தது அவனுக்கு. அவளைப் பற்றி எந்த உணர்வுகளும் தோன்றவில்லை அவனுக்கு.
இயலிடம் வம்பு செய்யும் பொழுது இயல்பும் அதில் ஒரு உரிமையுணர்வும் இருப்பது அவனுக்கேத் தெரிந்தது.
உறங்கும் விழிகளும் அபிநயம் பிடிப்பது போன்றதொருத் தோற்றம் அவனுள்.
‘ராஜி உன் சிஸ்டரை எனக்குப் பிடிச்சிருக்கோ. ஐ திங்க் சம்திங் ஆன் மை மைன்ட்’ என்றான் முணுமுணுப்பாக.