அரசன் கண் முன்னால் இருந்த கணினி திரையை வெறித்துக் கொண்டிருந்தான். மனோகரியின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஃபைல் அது.
திறந்து பார்த்திலிருந்து மனம் வெதும்பியது.
அருகில் இருந்த சதீஷ் அரசனின் தோளை தொட்டு, “சார்.. ” என்றான்.
“இவன் மனோகரிக்கு மட்டும் தான் இப்படி பண்ணிருக்கானா? இல்ல வேற யாருக்கும் பண்ணிருக்கானானு பார்க்கனும் சதீஷ். எல்லாத்தையும் ஃபைல் பண்ணி கொடு.”
“பண்ணிடலாம் சார். ஆனா எனக்கு இன்னொரு டவுட்டு?”
அரசன் கேள்வியாக புருவம் உயர்த்த, “இவன் எதுக்காக இப்படி பண்ணான்? யாருக்காக பண்ணான்? மத்த டாக்டர் சப்போர்ட் இல்லாம இத பண்ணிருக்கவே முடியாது” என்று சதீஷ் ஆணித்தரமாக கூறினான்.
அரசனுக்கும் அது தான் தோன்றியது.
“யாரெல்லாம் இருக்கானு தெரிஞ்சுக்கனும். அஃபிஷியலா இந்த கேஸ மூவ் பண்ணுறதுக்கு முன்னாடி, யாரெல்லாம் இருக்கானு தெரிஞ்சே ஆகனும். அந்த ஹாஸ்பிடலோட மொத்த நெட்வொர்க்கயும் பிடிக்க முடியுமா?”
“கழுத்த அறுத்தா கூட மூச்சு விடமாட்டாங்க. நம்ம ஆளுங்க இருக்காங்க. பண்ணிடலாம்” என்று சதீஷ் உறுதி கொடுத்ததும், அரசன் சம்மதித்தான்.
வீட்டிற்கு கிளம்பியவனுக்கு மனம் ஆறவில்லை. மனோகரி சாகவே இல்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறாள். அதுவும் இரண்டு உயிரோடு இருந்தவளை கொன்று இருக்கிறனர்.
மனம் வெதும்பியது. இப்படியே சென்று அந்த பிரகாசத்தை தூக்கிப்போட்டு மிதிக்கும் அளவு ஆத்திரமாக வந்தது.
அறுவை சிகிச்சையில் கோமாவுக்கு சென்ற மனோகரிக்கு, மூளைச்சாவு என்று ரிப்போர்ட்டை மாற்றிக் கொடுத்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் போஸ்ட் மார்டம் செய்திருந்தனர்.
அவளது வயிற்றில் இருந்த வெறும் நான்கு வாரமே ஆன கருவை பற்றி, முழுக்க முழுக்க மறைத்து இருக்கின்றனர்.
இதை எல்லாம் கேட்டால் ஆதி என்ன ஆவான்? ஏற்கனவே மனோகரியின் சாவில் துடித்துக் கொண்டிருக்கிறான். இவ்வளவும் தெரிந்தால்? நினைக்கவே அரசனுக்கு உள்ளம் நடுங்கியது.
சொல்லாமலும் இருக்க முடியாது. சொல்லித்தான் ஆக வேண்டும். மனம் வலிக்க காரை ஓரமாக நிறுத்தி விட்டு தலையை தேய்த்தபடி அமர்ந்து விட்டான்.
இதை எப்படி ஆதிகேசவனிடம் பக்குவமாக விளக்குவது என்றே புரியவில்லை. எப்படிச்சொன்னாலும் அவன் பாதிக்கப்படுவான். அதுவும் குழந்தை பற்றித் தெரிந்தால், அவன் அதை ஜீரணித்து மீண்டும் வாழ நினைப்பானா? கேள்விக்குறி தான்.
ஆதிகேசவனை கவனித்துக் கொள்ளும் மருத்துவரை அழைத்து விசாரித்தான். ஆதிகேசவன் சீக்கிரமாக உடல் நலம் தேறி வருவதாக கூறினார். இப்படியே இருந்தால் அவனது மன நலம் உடல் நலம் இரண்டுமே கூடிய விரைவில் முழுமை அடைந்து, சாதாரணமாகி விடுவான் என்று நம்பிக்கையாகக் கூறினார்.
இதற்கு இடையில் இப்படி ஒரு விசயத்தை எப்படிச் சொல்லுவது? இதை எல்லாம் சொல்லி அவன் புகார் அளித்தால் தான், அரசன் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும். இத்தனை மாதங்கள் தப்பித்தவர்கள் இனிமேலும் தப்பித்துக் கொண்டிருப்பதில், அரசேந்திரனுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.
தான் வேலை செய்யும் இடத்தில் அமர்ந்து கொண்டு, மனோகரியின் உண்மையான மருத்துவ அறிக்கையையும், போலியானதையும் வைத்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
அந்த நேரம் கைபேசி மெல்லிய குரலில் பாட ஆரம்பிக்க, எடுத்துக் காதில் வைத்தான்.
“சொல்லு லாலி” என்றதும், இரண்டு நொடி அந்த பக்கம் மௌனம்.
“கிங் எதாவது வேலையில இருக்கீங்களா?”
“ம்ம்.. என்ன விசயம்?”
“நாளைக்கு அம்மா அப்பா பத்திரிக்கை வைக்க வர்ராங்க. உங்க வீட்டு அட்ரஸ் தான் கொடுத்தீங்க. உங்க அம்மாவுக்கும் பத்திரிக்கை வைக்கனுமாம். அந்த அடர்ஸ் வேணும்”
“நான் அனுப்பி வைக்கிறேன்.”
“ஓகே. நான் அப்புறம் பேசுறேன்” என்று வைத்து விட்டாள்.
மனோகரி சம்பந்தப்பட்ட விவரங்களை மூடி வைத்து விட்டு, பிரகாசத்தை கவனிக்க சொல்லி இருந்தவனை அழைத்தான் அரசன்.
“எதாவது கிடைச்சதா?”
“கிடைச்சது சார். நாளைக்கு நான் நேர்ல வரலாம்னு இருந்தேன். பிரகாசம் அவரோட மகனுக்கு புதுசா கார் வாங்கி ப்ரசென்ட் பண்ணி இருக்கார். அது இம்போர்ட் கார். விலை கோடிகள் போகுது. ஆனா அதுக்கான எந்த பணபரிவர்த்தனையும் பேங்க் அக்கவுண்ட்ல நடக்கல”
“பணத்துக்காகனு ஓரளவு எதிர் பார்த்தது தான். வேற எதாவது?”
“இல்ல சார். இப்போதைக்கு இது மட்டும் தான் சஸ்பீஷியஸா இருக்கு. வேற எதுவும் பணம் ப்ளாக் மணியா உள்ள இருக்கலாம். எவ்வளவுனு தெரியல”
“பரவாயில்ல சார். நான் வைக்கிறேன். நாளைக்கு அங்க வர்ரேன் பேசலாம்.”
பேசி முடித்து விட்டு, நாற்காலியின் பின் பக்கம் கழுத்தை வளைத்து கண்ணை மூடி, தீவிர யோசனைக்குச் சென்றான் அரசன். சில நிமிடங்கள் புருவம் சுருங்கியபடியே இருக்க, யாரோ உள்ளே வந்து அவனது யோசனையை களைத்து, அடுத்த வேலையை பார்க்கச் செய்தனர்.
இரவு வீடு வந்து சேர்ந்தவன், சமைக்கவும் சாப்பிடவும் தோன்றாமல் அமர்ந்து இருக்க, வைசாலியின் நினைவு திடீரென தோன்றியது.
“அட்ரஸ் அனுப்பனும்ல?” என்று வேகமாக முகவரியை அனுப்பி விட்டு, அவளை அழைத்தான்.
உடனே எடுத்தவள், “ஹலோ” என்க, “அட்ரஸ் அனுப்பிட்டேன் செக் பண்ணிக்க. அம்மா கிட்ட மட்டும் இன்விடேஷன் கொடுங்க. எனக்கு டேட் டைம் சொல்லு போதும். நான் வந்துடுறேன்” என்றான்.
“டேட் இன்னும் ரெண்டே வாரத்துல அன்னைக்கு சொன்ன டேட் தான். காலையில முகூர்த்தம். லொகேஷன் அனுப்புறேன். வந்துடுங்க”
“ஓகே மேடம். சாப்பிட்டியா? கல்யாண வேலை எவ்வளவு தூரம் போயிருக்கு?”
“முதல்ல கால் பண்ணும் போது வேற வேலையில இருந்தீங்களா?”
சம்மந்தமில்லாமல் அவள் கேள்வி கேட்க, புருவம் சுருக்கியபடி, “ஆமா. ஏன்?” என்றான்.
“அதான பார்த்தேன். லாலினு சொல்லுறத வேணும்னே அவாய்ட் பண்ணிட்டு இருக்க அரசன் சோப்பு, சட்டுனு லாலினு சொல்லிடாங்களேனு சாக் ஆகிட்டேன். இப்போ, எவ்வளவு கவனமா என் பேரையும் சொல்லாம, லாலியும் சொல்லாம அவாய்ட் பண்ணுறீங்க! சூப்பர்”
ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளது அழுத்தமும் கோபமும் கூடிக் கொண்டே போய், கடைசி வார்த்தையில் பல்லைக்கடித்து நிறுத்தினாள். அரசேந்திரன் தலையில் அடித்துக் கொண்டான்.
“அ..அப்படி இல்ல”
“எனக்குத்தெரியும். சமாளிக்க வேணாம். நான் வாங்க போங்கனு மரியாதையா பேசுறதுக்கு மட்டும் சொன்னீங்க. உங்களால லாலினு கூப்பிட முடியலல? கூப்பிடவும் வேணாம். நான் வைக்கிறேன். பத்திரிக்கைய பார்த்து கல்யாணத்துக்கு வந்து சேருங்க”
அதோடு அவனை பேச விடாமல் துண்டித்து விட, அரசன் நொந்து விட்டான்.
“இப்படியா அவளுக்கே தெரியுற மாதிரி மாட்டுவேன்?” என்று நினைத்தவனுக்கு அவளை சமாதானம் செய்ய வழி தெரியவில்லை.
குறுஞ்செய்தியில், மண்டப முகவரி, பத்திரிக்கையின் படம் எல்லாம் அனுப்பி இருந்தாள். அதற்கு பதில் போடக்கூட பயமாக இருக்க, பார்த்தபடி அமர்ந்து விட்டான். அவளும் பதிலை எதிர்பார்க்காமல் கைபேசியை அணைத்துப் போட்டு விட்டாள்.
ஆனால் கோபம் மட்டும் குறையவே இல்லை.
“இவரு மட்டும் கரெக்ட்டா அவாய்ட் பண்ணிட்டு மேடம் கல்யாண பொண்ணுனு சொல்லுவாராம். நாங்க மட்டும் பழையபடி பேசனுமாம். எதுக்குங்குறேன்? திரும்ப பேசட்டும். சோப்ப கடல்ல தூக்கி போட்டு கரைச்சு விடுறேன்” என்று பொருமிக்கொண்டே இருந்தாள்.
அங்கு அரசனுக்கு மாட்டிக் கொண்டதும் சற்று வருத்தமாகவும் இருந்தது. கூடவே, அதை உடனே கண்டுபிடித்த வைசாலியை நினைத்து புன்னகையும் வந்தது.
“டாக்டர் அம்மாக்கு மூளை நல்லா வேளை செய்யுது போல” என்று சிரித்தவன், சோர்வை எல்லாம் உதறி விட்டு உடனே உடை மாற்றி சமைக்க ஆரம்பித்தான்.
____
இரவு தூக்கமில்லாமல் தங்கமீனாட்சி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள். இன்னும் நான்கு நாட்களில் திருவிழா.
ஊரே விழாக்கோலத்தில் இருந்தது. அவளது வீடு மட்டும் வித்தியாசமாக இருந்தது. பேரமைதியுடன் தான் எல்லோருமே சுற்றிக் கொண்டிருந்தனர்.
அன்று தற்கொலைக்கு முயன்றதிலிருந்து அகிலாண்டேஸ்வரி மீனாட்சியை தனியாக விடுவதே இல்லை. இப்போதும் அவள் அமர்ந்து இருப்பதால் அவரும் விழித்து அசையாமல் படுத்து இருந்தார்.
எல்லாம் தெரிந்தாலும் மீனாட்சி அதை பெரிதாக நினைக்கவில்லை.
அன்று மட்டும் போனவர்கள் திரும்பி வரவில்லை என்றால் நிம்மதியாக செத்திருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
அவள் கோழை அல்ல. கடந்த ஒரு வருடமாகத்தான் இப்படி ஆகி விட்டாள். நினைத்தது நடக்காது கிடைக்காது என்ற போதும் கூட தைரியமாக இருந்தவள் பெற்றவளின் வேலையால் உயிரை விடும் அளவு அவமானப்பட்டு நின்றாள்.
அகிலாண்டேஸ்வரிக்கு தெரிந்தது எல்லாம் கடைசியாக செய்ய நினைத்த தற்கொலை முயற்சி தான். அதற்கு முன்பு பல முறை கிணற்றருகே சென்று விழ முடியாமல் திரும்பிய கதையைப் பற்றித் தெரியாது.
இந்த ஒருவருடமும் அகிலாண்டேஸ்வரியிடம் மீனாட்சி பேசவில்லை. சென்ற வருடம் இதே போல திருவிழா நடப்பதற்கு ஐந்து நாட்கள் இருக்கும் போது தான் அது நடந்தது.
மனமெல்லாம் ஒரு பாரம் எப்போதும் போல் அழுத்த ஆரம்பிக்க கால் விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது.
தன் காலை ஒரு முறை பார்த்துக் கொண்டவளுக்கு கண்ணீர் வந்தது. அதை புறங்கையால் துடைத்தபடி கையருகே இருந்த எண்ணெய்யை எடுத்தாள். பாவாடையை விலக்கி விட்டு காலை பார்த்தாள். சுத்தமாக சதையே இல்லை. லேசாக வளைந்து போயிருந்தது. குச்சி இல்லாமல் அவளால் நேராக நடக்க முடியாது.
இதை அவள் ஊனமாக குறையாக நினைத்ததே இல்லை. ஒருவருடத்திற்கு முன்பு வரை.
கன்னத்தில் ஓடிய நீர் காலில் பட அதை துடைத்து விட்டு எண்ணெயையை தடவ ஆரம்பித்தாள்.
மூலிகை எண்ணெய். இயற்கை வைத்தியம் பார்த்து அவர்கள் கொடுத்தது. வலிக்கும் நேரத்தில் தடவிக் கொண்டு அப்படியே உறங்கி விடுவாள்.
இன்று உறக்கமும் எட்டிப்பார்க்கவில்லை. எண்ணெய்யை தடவி காலில் இருந்த வலியை குறைத்தவளுக்கு வேறு எதாவது மருந்து கிடைத்தால் மனவலியை குறைத்து விடலாமே என்று இருந்தது.
எண்ணெய்யை தடவி முடித்து விட்டு மீண்டும் சுவற்றில் சாய்ந்து கொண்டாள். விடிய விடிய அப்படியே அமர்ந்து இருந்தாள்.
___________
காலையில் அமுதவல்லி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம். உடனே ஓடிச் சென்று கதவை திறந்தார்.
“வாங்க வாங்க. பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படி இருக்கீங்க?” என்று வைசாலியின் பெற்றோரை வரவேற்க, அவர்களும் புன்னகை முகமாக உள்ளே நுழைந்தனர்.
இருவரும் வைசாலி அரசன் பள்ளியில் படிக்கும் போது சந்தித்து இருக்கின்றனர். அடிக்கடி பள்ளியில் நடக்கும் விழாவிலும் பார்த்துக் கொள்வார்கள். அரசன் பள்ளி படிப்பை முடித்தப்பிறகு தொடர்பு மொத்தமாக விட்டுப் போனது.
“எப்படி இருக்கீங்க அமுதா? அப்ப பார்த்துக்கு இப்ப ரொம்ப இளைச்சுட்டீங்களே” என்று சித்ரா நலம் விசாரித்தார்.
சத்தம் கேட்டு அஞ்சனாவும் வெளியே வந்தாள்.
“வாங்க ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க?” என்றவள், “வாங்க அங்கிள்” என்று இருவரையும் வரவேற்றாள்.
உடனே மணிகர்ணிகாவை பார்த்து விட்டு, அஞ்சனாவை மகளிடமே விட்டு விட்டு வெளியே வந்தனர்.
அமுதவல்லி அவர்களை அமர வைத்து உபசரித்து பேசிக் கொண்டிருந்தார். குடும்ப கதையிலிருந்து பிள்ளைகள் வரை எல்லாம் பேசி முடித்து, வைசாலியின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்தனர்.
“அரசனோட கண்டிப்பா வரனும். அரசனுக்கு வேலை இருக்கும்னு சாலி சொல்லிட்டா. ஆனா கல்யாணத்தப்போ வேலை இருக்குனு ஓடாம கண்டிப்பா கூட்டிட்டு வரனும். நீயும் வரனும் அஞ்சனா.” என்று வற்புறுத்தவும் அமுதவல்லி சந்தோசமாகவே தலையாட்டினார்.
அஞ்சனா மட்டும், “முயற்சி பண்ணுறேன் ஆண்ட்டி. அவருக்கு வேலை வந்துட்டா எங்கள கூட்டிட்டுப்போயிடுவாரு” என்று புன்னகையுடனே நிலைமையை விளக்கினாள்.
அரசனின் திருமணம் பற்றியும் அவர்கள் விசாரிக்க, “போலீஸ்காரனுக்கு பொண்ணுக் கொடுக்க க்யூலயா நிப்பாங்க? அவனுக்கு யாரையாவது புடிச்சா கட்டி வைக்கலாம்னு விட்டுட்டேன்” என்றார் அமுதா.
“ஏன் அரசனுக்கு என்ன? போலீஸ்னா தான் வீட்டுக்கும் பாதுகாப்பு. ஆனா அரசனுக்கு இனிமேலா பிறக்கப்போறா பொண்ணு? எங்கயாவது பிறந்து வளர்ந்து அரசனுக்கு ஏத்த ஜோடியா தான் இருப்பா”
“அதே தான் நானும் சொல்லுறேன்” என்றாள் அஞ்சனா.
“அதுவும் சரி தான். வரட்டும். அவன் பொண்டாட்டி கையில பிடிச்சுக் கொடுத்துட்டா தான் அடங்குவான். தனியா இருக்க அம்மாவ பார்க்கனும்னு கூட நினைப்பு இருக்கது இல்ல. வேலை தான் முக்கியம்”
“அரசன் பொறுப்பான பிள்ளையில”
சித்ராவும் அமுதவல்லியும் அஞ்சனாவும் பேசிக் கொண்டே இருந்தனர். அவ்வப்போது ஜோதிலிங்கத்தையும் பேச்சில் இழுத்தனர். மணிகர்ணிகாவும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள, அவளோடு நேரம் கழிந்தது. அவர்களை சாப்பிட வைத்தே அனுப்பி வைத்தார் அமுதவல்லி.
அவர்கள் வந்த நேரம் அரசன் வேறு வேலையில் இருக்க, அமுதவல்லியால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இரவு நேரம் அமுதவல்லியை அழைத்தவன், விவரங்களை மட்டும் கேட்டுக் கொண்டான்.
“அவ கல்யாணத்துக்காச்சும் நேரமிருக்குமா? இல்ல வேலை இருக்குமா?” என்று அஞ்சனா கிண்டலாக கேட்க, “போகலனா தேடி வந்து அடிப்பா போல. வேலைய ஒதுக்கி வைக்கனும்” என்று கூறியதோடு விட்டு விட்டான்.
நாளை இராமநாதபுரம் செல்ல வேண்டும். அதைப்பற்றி எதுவும் அஞ்சனாவிடம் சொல்லவில்லை.
மறுநாள் காலை பத்து மணிக்கு வைசாலியின் வீட்டின் முன்னால் நின்றிருந்தான் அரசன். அழைப்பு மணி சத்தம் கேட்டு, வைசாலி தான் வந்து திறந்தாள்.
“ஹாய்” என்று கையாட்டியவனை அவள் எதிர்பார்க்கவில்லை.
முகத்தில் சந்தோசம் தோன்றி விட, உடனே அதை துரத்தி விட்டு முறைக்க ஆரம்பித்தாள்.
“வாங்க.” என்று வழி விட்டு நிற்க, “ஆண்ட்டி அங்கிள்?” என்று வினவினான்.
“உள்ள தூங்கிட்டு இருக்காங்க. மார்னிங் தான் வந்தாங்க”
“ஓஓ..” என்றபடி உள்ளே வந்தவன் வீட்டை சுற்றிப் பார்த்தான்.
“உட்காருங்க”
“அது இருக்கட்டும். என் மேல இன்னும் கோபமா?”
“காபி வேணுமா? டீ வேணுமா?”
“ரொம்ப கோபமோ?”
“உட்காருங்க. எது வேணும்? டீ போடவா?”
“சரி.. சாரி…” என்று அரசன் இறங்கி வர, “எதுக்கு சாரி?” என்று வீம்புக்கு கேட்டாள்.
“உன்னால மட்டுமில்ல. என்னாலயும் பழைய ஃப்ரண்ட்ஷிப்ப கொண்டு வர முடியல”
வைசாலி உதட்டை சுழித்து திரும்பிக் கொள்ள, “இத பிடி” என்று கவரை நீட்டினான்.
“என்னாது?”
“பிரிச்சுப்பாரேன்”
“முறுக்கு பார்சல் அனுப்புனது பத்தாதுனு கையில அள்ளிட்டு வந்தீங்களா?” என்று நக்கலாக கேட்டபடி உள்ளே பார்த்தவள், விழி ஆச்சரியத்தில் விரிந்தது.
படம் வரைவதற்காக அவள் பயன்படுத்தும் தூரிகைகள்.
“ப்ரஸ்? ஸ்கூல் விட்டுப்போகும் போது வாங்கி கொடுத்த மாதிரி சேம் கம்பெனி!” என்று ஆனந்த அதிர்ச்சியோடு எடுத்துப் பார்த்தாள்.
“இன்னமும் கிறுக்கிறியா நீ?” என்றதும் வைசாலி முறைக்க, “கிறுக்குவனு நம்பிக்கை இருக்கு. இதை வச்சு பெருசா கிறுக்கு” என்றான்.
பள்ளியில் கடைசியாக பார்த்த நாள் இருவருக்குமே நினைவு வர, மனம் லேசாக பறந்தது.
“ஃபைன். நேத்து மார்னிங் வந்து சேர்ந்த முறுக்குக்கே உங்கள பாதி மன்னிச்சுட்டேன். இப்போ.. தப்புச்சீட்டீங்க.”
அரசன் நிம்மதியாய் புன்னகைக்க, “அப்பாவ எழுப்புறேன். வெயிட்” என்று நகர்ந்தாள்.
“வேணாம். டயர்டா தூங்கிட்டு இருப்பாங்க.”
“ஆமா.. இங்க எதுக்கு வந்தீங்க? என்னை பார்க்கவா?”
“ஆமானு ஐஸ் வைக்க ஆசை தான். ஆனா, அது பச்ச பொய்னு உனக்கே தெரியும். வேலை விசயமா தான் வந்தேன்”
அரசன் ஹாலை சுற்றி வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருக்க, வைசாலி ஒரு பெட்டியை எடுத்து வந்து கொடுத்தாள்.
“என்ன இது?”
“உங்களுக்கு என்னோட கிஃப்ட். ஊருக்குப்போயிட்டு திறந்து பார்க்கனும்”
“அப்படி என்ன இருக்கு?” என்று கேட்கும் போதே, அவனது கைபேசி அதிர ஆரம்பித்தது.
எடுத்துப்பார்த்து விட்டு, “கிளம்பனும். அங்கிள் ஆண்ட்டி எழுந்தா சொல்லிடு. பை” என்று வேகமாக வெளியேறி விட்டான்.
வைசாலி அவன் செல்வதை பார்த்து விட்டு கதவைப் பூட்டினாள். இப்போதும் கூட அரசன் அவளை லாலி என்றோ, வைசாலி என்றோ அழைக்கவே இல்லை என்பது, கருத்தில் பதியத்தான் செய்தது. ஆனாலும் சண்டை போடத்தோன்றவில்லை. தானாக வரட்டும் என்று விட்டு விட்டாள்.
வைசாலி அரசன் கொடுத்ததை பத்திரப்படுத்தி விட்டு வேலைகளை பார்க்க, இரண்டு மணி நேரம் கழித்து ஜோதிலிங்கம் எழுந்து வந்தார்.
“நீங்க தூங்கிட்டு இருக்கும் போது அரசேந்திரன் வந்தாருபா. “
“எப்பமா? எழுப்பிருக்கலாம்ல?”
“ரொம்ப டயர்டா அப்போ தான் படுத்தீங்க. அரசனும் வேற வேலையா வந்துருக்கார். சும்மா பார்த்துட்டுப்போகலாம்னு வந்து அஞ்சு நிமிஷம் தான். உட்கார கூட இல்ல. கிளம்பிட்டாரு”