சிறு வயது முதலே மதுவும், ரம்யாவும் நல்ல தோழிகள் தான். எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கம் தான், அவ்வளவு நட்பு. மதுவின் அண்ணன் மாதவனை ரம்யா காதலிக்க, அதற்கு உதவி செய்ததும் இந்த நட்பு தான். தனக்கு முன்னே மாதவனுக்கு திருமணம் செய்வதை வவேற்றதும் அவள் தான்.
எல்லாம் நன்றாக தான் இருந்தது. ரம்யா, மதுவின் அண்ணியாக வந்த பின் தான் அதில் மாற்றம். காதல் கணவனோடு மன நிறைவான வாழ்வு தான் என்ற போதும், வீட்டில் அவளுக்கான முக்கியத்துவம் இல்லை என்பது போல் ஒரு எண்ணம். இனி இது தன் வீடு, தனக்கான வீடு என்ற நினைப்போடு வரும் பெண்ணிற்கு, அப்படியல்ல இது எனக்கானது என்பதை காட்ட அங்கு ஒரு பெண் இருந்தால், வரும் உரசல் தான் ஆரம்பத்தில் மதுக்கும், ரம்யாக்கும்.
வீட்டில் பூக்கும் பூ தொடங்கி உணவு முதல் முக்கியத்துவம் மகளுக்கு தான் என்ற போது நட்பு கொஞ்சம், கொஞ்சமாக மறைய தொடங்கியது. எது வாங்கினாலும் அது முதலில் அந்த வீட்டு இளவரசிக்கு தான்.
சின்ன குட்டி, கடைக்குட்டி என்று மாதவனும், அடுத்த வீட்டுக்கு போகும் பெண், செல்லம் எல்லாம் பிறந்த வீட்டில் தான் என்று தாங்கும் தகப்பனும், மதுவை உச்சியில் தான் தூக்கி வைத்தனர். அதற்கு மேல் மீனாட்சி, எந்த வீட்டு விசேசதிற்கு சென்றாலும் அங்கு பார்க்கும் அழகான நகை, உடையை பார்த்து வந்து , அதே போல் வாங்கி மகளுக்கு போட்டு பார்த்து தான் ஓய்வார். எதிலும் தன் மகளே சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.
இதை பார்க்கும் போது ரம்யாக்கு தான் தாங்காது. அவளுக்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், மதுவோடு ஒப்பிட்டு வெறுப்பை வளர்த்து கொண்டாள். இத்தனைக்கும் மாசமாக இருக்கும் பெண் என்று அவளுக்கு பிடித்த ஒன்றை வாங்காமல் வர மாட்டார் சுந்தரம், மீனாட்சி கூட மகன் சம்பாத்தியத்தை கேட்பது இல்லை. அவனுக்கு என்று குடும்பம் இருக்க, தான் ஏன் கேட்க வேண்டும். மகனை எதிர்பார்க்கும் நிலையில் தாங்கள் இல்லையே. ஆக, எல்லாம் ரம்யா வசம் தான்.
ஆனாலும், அவளுக்கு திருப்தி இல்லை. மகளுக்கு நகை செய்யும் மாமியார், தனக்கு வெறும் உணவு பண்டத்தோடு நிறுத்தி கொள்கிறார் என்று கோபம் வரும், வீட்டை எடுத்து பெரிதாக கட்டும் போது மதுமிதா இல்லம் என்று பெயர் வைக்க… ஒரு வாரம் கணவனுடன் சண்டை.
இருவரும் ஒரே வயது என்றாலும் ரம்யா படிப்பை முடிக்காமல் காதல் திருமணம், அத்தோடு கையில் ஒரு குழந்தை என்று இருக்க, அவளுக்கு அறிவுரை வழங்கியே தான் உன் மாமியார் என்று நிரூபிப்பார் மீனாட்சி.
“ பொறுப்பாக இரு, செலவை குறை, ஊர் சுத்தாதா, பணத்தை மிச்சம் பண்ணு, பிள்ளையை கவனி, குழந்தை பிறந்த பின் எதுக்கு ஆடம்பரம், பார்லர் போகாதே….” இப்படி ஆயிரம் வரும். அதே மகளுக்கு எனும் போது, “ செல்லம், தங்கம், மகாலட்சுமி, அவள் குழந்தை, விவரம் தெரியாது, படிக்கும் பிள்ளை எதுக்கு சமையல் கத்துக்கணும், பார்லர் போகட்டும் அழகா தெரிந்த தான் மாப்பிள்ளை வீடு தேடி வரும், எந்த கலர் டிரஸ் போட்டாலும் மதுக்கு அவ்வளவு அழகு, டிவில முத்து மாலை ஒன்னு பார்த்தேன் அதே மாதிரி பாப்பாக்கு வாங்கணும்” என்று ஆயிரம் கவனிப்பு இருக்கும்.
எட்டாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்தாதற்கு நடு வீட்டில் பஞ்சாயத்து வைத்த மாமியார் தான், மகளுக்கு பதினைந்தாயிரம் ரூபாய்க்கு காக்ரா சோளி போட்டு அழகு பார்த்தது. அத்தோடு தான் மது என்ற பெயரே, ரம்யாக்கு வேப்பங்காயாய் கசக்க தொடங்கியது.
அதன் பின் மதுவின் காதல் தெரிந்து, தொடர் வண்டியாக பிரச்சினை வந்து, வீடும் இருளில் மூழ்கியது. மதுவின் திருமணம் தள்ளி போக, சொந்த அண்ணன் பையன் என்று ரம்யாவின் அண்ணன் சுரேந்தர் உடன் திருமண பேச்சை மீனாட்சி தொடங்கினார். மது தனக்கு அண்ணியா?… கொதித்து போனவள், இவ்வளவு நாள் சேர்த்து வைத்த வன்மத்தை வார்த்தையாக கக்கி விட்டாள்.
விளைவு, அவள் தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். அன்றும், தங்களுக்கு தங்கள் மகள் தான் என்று நிரூபித்தார்கள் சுந்தரம் தம்பதிகள். அன்று பறிபோன உரிமை, இன்று தான் அகப்பட்டது. மதுவை, அவள் நிலையை, அவள் இடத்தை புரிய வைக்கும் ஆசையும் வந்தது. ஆனால், ரம்யா ஒன்றை மறந்து விட்டாள். அது என்றும், மகள் – மகள் தான்…. மருமகள் – மருமகள் தான். எத்தகைய நல்லவித மாமியாராக இருந்தாலும், மகள் ஒரு படி மேல் தான்.
நாம் நம் வீட்டில் தான் ராஜ்ஜியம் பண்ண முடியும், கணவன் வீட்டில் மருமகளாக மட்டும் தான் நம் ராஜ்ஜியம் இருக்கும், என்றும் மகளாக கோலோச்ச முடியாது. பெரும்பாலான வீடுகளில் இது தான் நடக்கிறது. அது புரியாது ரம்யாவும், தற்போது இருக்கும் சூழலை தனக்கு சாதகமாக்கி கொள்ள நினைத்தாள். இது என் வீடு, இங்கு நீ விருந்தாளி மட்டும் தான் என்று மதுக்கு உணர வைக்க எண்ணினாள்.
தன் வாழ்வில் நிலை தடுமாறி நிக்கும் மதுவை நாலா பக்கமும் நெருக்க ஆரம்பித்தாள். அதன் முதல் படி, மீனாட்சியை நெருங்கியது.
“அத்தை… மாமா, அறைய விட்டு வெளியவே வாராது இல்லை. நீங்க எந்நேரமும் புலம்புறீங்க, பிள்ளைக இருந்தும் வீடு அமைதியா என்னவோ போல இருக்கு… எல்லாரும் கோவிலுக்கு போய்டு வரலாமா…”
“எம் மகள நினைச்சு நானே நொந்து போய் கிடக்கேன். எந்த கோவில்ல போய் என்ன பரிகாரம் பண்ண… எங்க தலையெழுத்து சரியில்லை… கோவில்குளம்ன்னு சந்தோசமா போற பாக்கியம் எங்களுக்கு இல்லை போல…” மீனாட்சி குரலில் விரக்தி குமிந்தது.
“ நீங்க நொந்து போய் கிடக்கீங்க… மாமா வீட்டை விட்டு வெளிய வாரதே இல்லை, யார் கூடவும் முகம் கொடுத்து கூட பேசலை. எப்பவும் மக நினைப்பு தான். ஒத்த புள்ளை பெத்து, இப்படியா விதி விடனும். வீடு இருளடிச்ச மாதிரி இருக்கு. ஆனா, நம்ம மதுக்கு எந்த கவலையும் இல்லை. எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸ், மால், சினிமான்னு ஜாலியா தான் இருக்கா… பெத்த அப்பனா பத்தி கூட யோசனை இல்லாம போச்சு…” என்று ரம்யா வருத்தப்பட.
மகளின் நடவடிக்கை மீனாட்சிக்கும் திருப்தி இல்லை தான். தினமும் வெளியே செல்வது ஊர் சுற்ற தானோ என்பது போல் ஒரு எண்ணம். அவளுக்காக தானே இவ்வளவு பாடும், குறைந்தபட்ச கவலை கூட முகத்தில் இல்லாமல் ஒரு பெண்ணால் எப்படி இருக்க முடியும்.
“நான் பிள்ளை வளத்தது தான் சரியில்லை போல ரம்யா. இவளுக்கு என்ன குறை வச்சேன், நான் பாக்காத எல்லாம் எம் மக பக்கணும்னு, கேட்டது எல்லாம் வாங்கி குடுத்தேன். அப்படி என்ன லவ்வு?… பெத்த தகப்பனை மறந்து கூட, எவனோ ஒருத்தனை நினைக்க… இவ ஒழுங்கா இருந்திருந்தா… அந்த பொம்பளை நாக்கு மேல பல்ல போட்டு ஒரு சொல் சொல்லுமா… அந்த மனுசனுக்கு எம்புட்டு தலைகுனிவு… மாகாலட்சுமி, இளவரசின்னு தூக்கி வச்சு ஆடுனதுக்கு, நல்ல பேரு வாங்கி குடுத்துட்டா… “ என்று ஆற்றாமையில் பேச, துடித்து போவது மது தான்.
அவளே மறந்து, கடந்து வந்த நினைவுகளை தோண்டி துருவி குற்றம் சுமத்துவதை என்ன சொல்ல… அவளுக்கும் அது வலி தானே… நிற்கதியாக நிற்போம் என்றா காதல் செய்தால். தன்னை போல், தனக்கானவன் என்று தோன்றி உணர்வை எவ்வாறு கட்டுப்படுத்த… இயல்பாக வந்த காதல், விகாரமாக முடியும் என்று கனவா கண்டாள். நாட்டில் இருக்கும் ஆயிரம் பெண்களை போல தானே அவளும்… மூடி மறைத்து அடுத்த கட்ட வாழ்வை பார்க்காமல், தனக்காக எதிர்த்து நின்றாள். அது தான் பிழை போல…
கணவன் கரிகாலன்… அவன் வீட்டோடு பிரச்சனை. அடுத்த நிகழ்வு அதை நோக்கி நகர்த்தாமல், அது என்ன என் கடந்த காலத்தை தோண்டி விவாதிப்பது. சரி… என் காதல் தவறு, ஒப்பு கொண்டு இவர்கள் காட்டிய ஒருவனுக்கு தானே கழுத்தை நீட்டினேன்… அதில் தன் பிழை என்ன?… எல்லோரும் ஏன் என்னை நோக்கியே தீ பந்தத்தை எரிகிறார்கள். பற்றி எரியும் என் மனதின் சுவடாவது அவர்களுக்கு தெரியுமா… இவர்கள் எல்லாம் சாதரணமாக சொல்லி செல்லும் விசயத்தை, நான் கடக்காமல் நிற்கிற வலி அறிவார்களா!…
வேற ஒருத்தியின் கணவன் அவன், யாரோ ஒருவனின் மனைவி இவள்… எதற்கு இந்த பேச்சு. ரொம்ப எளிதாக அவனோடு இணை கூட்டி பேசி விடுகிறார்கள். அது எவ்வளவு வலியை தரும். சொல் தான்… வெறும் வாய் வார்த்தை. ஆனால், அது தரும் காயம்… கத்தி இல்லாமல் இதயத்தை அறுக்க முடியுமா…
கரிகாலன், அவள் கணவன். அவன் கட்டிய தாலிக்கு கட்டுப்பாட்டு, அந்த உறவை மதித்து, அவனோடு சேர தானே நிற்கிறாள். என் கழுத்தில் தாலி கட்டிய கணவனுக்கு நான் துரோகம் செய்ய வில்லை என்று கூப்பாடு போட முடியும்… நீ காதலித்ததே தவறு என்று பேசும் அறிவிலிகளுக்கு விளக்கம் கொடுக்க முடியாது.
இதோ வேடிக்கை பார்க்கும் ரம்யாவும் காதல் திருமணம் தான். அவள் காதலில் ஜெயித்து விட்டாள், மரியாதையான வாழ்வு வாழ்கிறாள். அவளும் காதலில் தோற்றால்… தனி மரமாகவா நிற்பாள். தன்னை போல் ஒரு துணையோடு வாழ மாட்டாளா… யாரும் நியாயம் சொல்ல வேண்டாம். முடிந்தளவு காயப்படுத்தாமல் இருக்கலாம் அல்லவா. யாரை சொல்லி நோவா?… கட்டிய கணவனே வாய் மூடி நிற்கையில் மற்றவர்களுக்கு இளப்பமாக தான் தெரியும்.
மொத்தமாக மெளனமாகி விட்டாள் மது. எல்லோரையும் விட்டு தள்ளி நின்று தனக்கென ஒரு வட்டத்தில் நுழைந்து கொண்டாள். அவளை முடக்கியதில் முக்கிய பங்கு மீனாட்சி, ரம்யாவை தான் சாரும்.
இது தன் வீடு, மது இங்கு விருந்தாளி மட்டுமே என்பதில் மிக தெளிவாக இருந்தால் ரம்யா. அதை உணர்த்தவும் செய்தால். மனதிடம் இல்லாமல் இருக்கும் நபர்களை எளிதாக சாய்த்து விடலாம். மது விசயத்தில் அது தான் நடந்து. நிலையில்லாமல் தடுமாறி நின்ற மதுவை… இயல்பாக, சீரியல் வில்லி என்று இல்லாமல் சாதாரணமாகவே முடக்கி விட்டாள். உண்மையில் சீரியல் வில்லி அளவுக்கு எதார்த்த வாழ்வில் யாரும் இருப்பததில்லை. திட்டம் போட்டு காய் நகர்த்துவது இல்லை. சில வாய் வார்த்தைகளே, அவர்களின் பலம். முழு கெட்டவர்கள் என்று யாரும் இல்லை அல்லவா…
“கரிகாலன் அண்ணன் அமைதின்னு நினைச்சேன். நல்ல மனுசன் தான் நம்ம மதுக்கு கிடைச்சது. அவ கஷ்ட த்துக்கு கடவுள் வழி விட்டார், நல்ல வாழணும்ன்னு நினைச்சேன். ஆனா, அவங்க குடும்பம் அவ்வளவு மோசமா இருந்துருக்கு. கல்லு மாதிரி அமைதியாவே நின்னாரு… ஒரு வார்த்தை, அவங்க அம்மாக்கு எதிரிரா பேசுனா என்னவாம். தப்பாவே இருந்தாலும், எம் பொண்டாட்டின்னு ஒரு சொல் சொல்லவே இல்லையே…” என்று மது இருக்கும் நேரம் ரம்யா தொடங்க.
இது போதாதா மீனாட்சிக்கு. நன்றி இல்லாதவன், வசதி இல்லாதவன், அழகு இல்லாதவன், குடும்பம் சரியில்ல என்று அடுத்தடுத்து தொடங்கி விடுவார்.
கரிகாலனை சொல்லும் போது மதுக்கு தான் சுருக் என்று தைக்கும். என் கணவனை எவ்வாறு பேசலாம், அதுவும் பாடிசேமிங் பண்ணினால், கொதித்து போவாள். ஒதுங்கி போகலாம் என்று நினைத்தாலும், கணவனை பற்றிய ஒற்றை சொல் பற்றி விடும் மதுக்கு.
“ரம்யா… அது என்ன தப்பாவே இருந்தாலும்… என்ன பேச்சு இதெல்லாம், நான் என்ன தப்பாகி போனேன். என்னை பத்தின பேச்சு உங்களுக்கு தேவையில்லாதது. அத்தோட எம் புருசனை பத்தின பேச்சும் தான். என் வீட்டு பிரச்சனையை நாங்க பேசி சரி செஞ்சுகிறோம். நீங்க, உங்க வேலையை மட்டும் பாருங்க…” என்று காட்டமாக மது சொல்ல,
பதறி கொண்டு வந்தார் மீனாட்சி, “ அடியே என்ன பேசுற… உன்னை வீட்டை வீட்டு போன்னு சொன்ன உம் புருசன், உனக்கு நல்லவனா… அவனுக்கு ஆதரவா எங்களையே நீ பேசுவியா… அறிவுகெட்டவளே! உம் புருசன் பெரிய உத்தமனாக்கும். ரம்யா சொன்ன மாதிரி ஒரு வார்த்தை உனக்கு ஆதரவா பேசி இருப்பானா, நன்றி கெட்டவன்…” என்று வசைபாட
“அம்மா… வார்த்தைய விடாதீங்க. நான் அவங்கள தான சொன்னேன். உனக்கு என்ன?… போய் வேற வேலை எதுவும் இருந்த பாருங்க… சண்டை போட்டாலும் எம் புருசன் தான், என்னால விட்டு கொடுக்க முடியாது” என்று திடமாக பதில் சொன்னாள் மது.
“ பார்த்தியா ரம்யா பேச்சை. இவ வீடுலாம் ஒரு வீடு, இவ வீட்டு ஆட்கள் எல்லாம் எனக்கு ஒரு ஆளா… கொஞ்சமும் தகுதி இல்லாதவங்க… எம் முன்னாடி கை கட்டி நின்னானவன எங்களுக்கு சமமா எம் வீட்டு படியேற விட்ட கொடுமைக்கு பேச்சு வாங்குறேன். காதுல, கழுத்துல குண்டுமணி தங்கம் இல்லை. ஆனா அந்த பொம்பளை வாய பாக்கணும்… கூலி வேலைக்கு ஊர் சுத்துறவங்க எனக்கு தகுதியா!… எல்லாம் இவளால், இவ மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா, ஒரு வார்த்தை வருமா… கண்டவனோட ஓடி போய், எங்க மானத்தை வாங்கி சந்தி சிரிக்க போய் தானே, ஒன்னுக்கும் ஆகாத அந்த வீட்டுல சம்மந்தம் பண்ணோம். மாதவன் போட்ட பழைய துணிய வாங்கி போறவன் எனக்கு மருமகனா…” என்று ஆங்காரமாக கத்தினார். அவருக்கு தாளவே முடியலை. தங்கள் கைக்குள் அடங்கி இருப்பான் என்று தான் அவனுக்கு மணம் முடித்தது. அவ்வாறு இல்லாமல் அவன் தாய் பேசிய பேச்சுகளை கடந்து வர, அவரால் இயலவில்லை.
மதுவுக்கும் தாங்க வில்லை. அதுவும் ரம்யாவின் முன், தன் கணவனின் வறுமையை சொல்லி காட்டியதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. மாதவனின் கொஞ்சம் புதிதான போடாமல் வைத்த உடைகளை கரிகாலனனுக்கு கொடுத்ததை சொல்லி காட்டியதில் கோபம் வந்தது. தன் தாயகவே இருந்தாலும் தரம் கெட்டு போய் விட்டாரே…
“போதும்… போதும்… இதுக்கு மேல ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை உங்க வாய்ல இருந்து வர கூடாது. அம்மான்னு கூட பார்க்க மாட்டேன். உங்க மரியாதையை காப்பாத்திகிங்க…” உதடு துடிக்க, கண்கள் கலங்க, அடக்கப்பட்ட கோபத்தோடு சொன்னவள். இருவரையும் தீயாக முறைத்து பார்த்து விட்டு, அறைக்கு சென்று கதவடைத்து கொண்டாள்.
என்னவோ அப்படி ஒரு அழுகை வந்தது மதுக்கு. யாருக்காக அழுகை, எதற்காக அழுகை என்றே தெரியாமல் அப்படி ஒரு அழுகை. கண் எரிந்து, முகம் வீங்கி போகும் அளவுக்கு அழுகை தாங்க வில்லை. தான் ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
அடுத்தடுத்த நாட்களில் அது உறுதி கண்டது. அன்றைய வாக்கு வாதத்தின் பின் தாயும், மகளும் வேறு பக்கம் என்று ஒதுங்கி கொண்டார்கள். பெத்த மகள் தங்கள் பேச்சை கேட்க வில்லை என்ற ஆதங்கம் அவருக்கு, தாயிக்கு தான்னை புரியவில்லையே என்ற கோபம் அவளுக்கு.
அன்றைய நாள் மது எங்கும் செல்ல வில்லை. ஏதோ யோசித்த படியே மேல் வராண்டாவில் இருக்க, வந்து இறங்கியது ரம்யாவின் பிறந்த வீட்டு உறவு. கிட்டத்தட்ட நாலு வருடத்தின் பின் ஒட்டிய சொந்தம்.
“அய்யோ மதினி… உங்களுக்கா இந்த கதி. உங்க பிறப்பென்ன… நீங்க வளர்ந்த வளர்பென்ன…நீங்க இருந்த இருப்பு என்ன!… ஒத்த பிள்ளையா பெத்து தலை குனிவா போச்சே… பஞ்சாயத்தார் குடும்பம்ன்னு பேர் போன உங்களையே ஆட்டி பிட்டாளே ஒரு பொம்பளை… சும்மாவா விட்டீங்க, சிண்ட முடிய வேணாம். வாங்க மதினி போவோம். ஆளு இல்லான்னு நினைச்சா எங்க அண்ணனை ஒரு சொல்லு சொன்னா அவ… விட கூடாது மதினி. பங்காளி மக்களை கூப்பிடுங்க, நீங்களும் ஆம்பிளை பிள்ளை பெத்தவங்க தான்… வாங்க ஒரு கை பார்ப்போம். முழுசா முப்பது சேராத தலைகட்டு, நாம ஆயிரம் தலைகட்டு கொண்ட குடும்பம். எதையும் பாப்போம்…” என்று சாமி வந்தது போல ரம்யாவின் தாய் பேச.
“விடு சாந்தா, சரியில்லாத பிள்ளைய பெத்தா அனுபவிக்க தான் வேண்டும்” என்று கண்ணீர் விட்டார் மீனாட்சி.
“ என்ன சரியில்லை, எல்லாம் தெரிஞ்சு தான சம்மந்தம் பண்ணாங்க… அதை கூட விடுங்க, மது அவங்க மருமகள். சண்டை வராத மாமியார், மருமகள் யாரு இருக்கா… அது அவங்க வீட்டுக்குள்ள எண்ணவும் இருக்கட்டும் நமக்கு என்ன வந்தது. ஆனா அண்ணனா பேசலாமா?… அவர் மரியாதைக்கு தரம் இறங்கி வந்து சம்மந்தம் பண்ணியதே பெரிசு. நம்ம மது கலருக்கும், அழகுக்கும், படிப்புக்கும், சாதிசனதுக்கும் தகுந்த இடமா அது?… அவளுக்கு என்ன குறை, தங்க சிலை மாதிரி புள்ளைய வச்சு வாழ தெரியலை… எதுக்கும் குடுப்பணை வேண்டும் தான…” என்ற அவரின் கூற்றை சரி என்பது போல தான் அமைதி காத்தனர்.
மதுக்கு சர்ரென்று ஏறியது. அடக்கி கொண்டாள். சமீபத்தில் தான் எல்லாரோடையும் சண்டை கட்டி பகைத்து கொண்டாயிற்று, மேலும் விவாதம் பண்ண முடியவில்லை. இவர்கள் எல்லாம் திருத்த முடியாத ஆட்கள், இவர்களின் பேச்சுக்கு பதில் கொடுப்பதை விட ஒதுங்கி செல்வது தான் சிறந்தது. நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை என்ற மெளனம் தான் தக்க பதிலடி.
மனிதர்கள் தான் எவ்வளவு சூட்சமமானவர்கள். இதே சாந்தா தான், தன் மகனுக்கு கட்டி வைக்க மறுத்தது. தன் மாமியார் கருப்பாயியே பரவாயில்ல என்று என்னும் அளவுக்கு பேசியது. இன்று இவர் பேசும் பேச்சு தான் என்ன!… அடாடட!… மது அழகானவள், படித்தவள், தங்க சிலையாம்… அந்த தங்க சிலையை தங்கள் வீட்டு மருமகளாக ஏன் எடுக்க வில்லை. அன்று ஒதுங்கி கொண்டவர்கள், இன்று கொடி பிடிக்க காரணம் என்ன?…
இவர்களுக்கு எல்லாம் என்ன தான் வேண்டும், எரிச்சல் மண்டியது மது முகத்தில். தினமும் யாரேனும் சொந்தம் என்று சொல்லி விசாரிக்க வந்து விடுகிறார்கள். இந்த சொந்தமெல்லாம் நான் கல்யாணம் ஆகாமல் வீட்டோடு இருக்கும் போது எங்கு சென்றது. அவர்கள் வீட்டு மருமகளாக்கி கொள்ள தயங்கிய சொந்தமெல்லாம், யாரோ ஒருவனின் மனைவி ஆன பின் ஒட்டுவது ஏன்?… தன் கணவனை குறைத்து காட்டி, தன்னை உயர்த்திக் பேசினால் மகிழ்ந்தா போவேன். மனம் முரண்ட முதல் முறையாக கரிகாலன் நம்பரை போனில் ஆராய்ந்தாள். ஏதோ ஒரு ஸ்டேடஸ் போட்டு இருந்தான். முகப்பில் பாரதியின் மீசை மட்டும் படமாக வைத்து, வீல்வெனேன்று நினைத்தாயோ!… என்று எழுதி இருக்க, இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை என்று முணங்கி கொண்டவள். அவன் ஸ்டேடஸ் தேடி சென்றாள். ஒரு பாடல் தான் வைத்து இருந்தான்.
“என் கை என் உடம்பை
காயம் செய்தால் எங்கே கூறிடுவேன் என் உயிரே!…
நீ எந்தன் பாதி இது தானே நீதி, உன்னை விட்டு போக முடியாதம்மா!…
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே… என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மணி!…”
எப்போதும் அவனின் பாடலை குதுகளத்தோடு கேட்பவள், இன்று சுணங்கி தான் போனாள்.
“ம்கூம், இவன் இப்படி பாட்டு போட தான் லாயக்கி… நாம நினைக்கிற மாதிரி ஹீரோ வேசம் போட மாட்டான். காலத்துக்கும் சோக பாட்டோட வாழ ரெடி ஆகிட்டான். உன் வாழ்க்கைக்காக நீயே போராடாம ஒதுங்கி கொண்டா, உனக்காக யாரும் பேச மாட்டாங்க மது. ஒரு முறை அவனோடு பேசி பாரேன். தோல்வி உனக்கு புதிது இல்லை. ஆனால், கடைசி வரை போராடிய திருப்தி கிடைக்கும். உனக்காக நீ நில்லு மது. கரிகாலன் கிட்ட ஒரு முறை நேரடியாக பேசி தெளிவு படுத்தி கொள். அதன் பிறகு அடுத்த கட்ட முடிவை காண்போம்…” என்று தெளிவாக சிந்தித்தவள், மற்றவர்கள் பேச்சை கவனித்தாள்.
சாந்தா மற்றும் சில உறவினர்கள் இன்னும் பேசி கொண்டு தான் இருந்தார்கள். மனதில் ஒரு தெளிவு கண்டதால், சாதரணமாக தள்ளி வைத்து பார்க்க தொடங்கினாள்.
“ எம் பிள்ளையை வீட்டை விட்டு போன்னு சொல்லிட்டான் அந்த கோட்டி பைய… எம்புட்டு ஏத்தம் நெஞ்சுல பயம் கொஞ்சமும் இல்லை…” கரிகாலன் பற்றிய கணிப்பு தவறாகி போன கோபம் மீனாட்சிக்கு.
“அதை கேட்டு சும்மாவா வந்தீங்க. அப்படியே புள்ளை கையை புடிச்சு போயி போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நிக்க வேண்டிய தானா… அவ மாமியார் ஊர் அறிய தான சீர் கேட்டா, வரதட்சணை கொடுமைன்னு கேஸ் போட்டு மது புருசனையும் உள்ள தள்ளனும்…” இது அவளின் சின்ன மாமா.
“ ஆமா… அந்த வேலையை வச்சு தான ஆட்டம் காட்டுறான். வேலையைவே காலி பண்ணி விடனும். உம் மூஞ்சிய பாரு, எம் மூஞ்சிய பாருன்னு குத்த வச்சு உக்காராட்டும்…” இது அவளின் சின்ன அத்தை.
“மது படிப்புக்கு வெளிநாட்டு வேலையே கிடைக்கும். வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து, அந்த கரிகாலன் கண் முன்னுக்கு ஜம்முன்னு கல்யாணம் பண்ணுவோம்…” இது அவளின் சித்தப்பா.
“இவனுக்கு குடுக்குற சீர, யாருக்கு குடுத்தாலும் வச்சு தாங்குவான். அதெல்லாம் எங்க சொந்தத்தில் கூட ஒரு மாப்பிள்ளை இருக்கு. முத சம்சாரம் பிரசவத்தில் இறந்து போச்சு, மறு கல்யாணம் பண்ண வரன் பாக்குறாங்க. மது ஜாதகம் குடுத்து பார்ப்போம். சிங்கப்பூர் என்ஜினீயர் மாப்பிள்ளை…” இது அவளின் பெரியம்மா.
“அது ரெண்டாம் தாரம் வேணாம். எங்க பக்கம் ஒருத்தர் இருக்காங்க. ஒத்த பையன் தான், பிக்கல் புடுங்கள் இல்லை, வயசான பெத்தவங்க, எம்புட்டு காலத்துக்கு அவங்களும் இருப்பாங்க. பையன் நம்ம வீட்டோட வந்துருவான். என்ன… வயசு தான் நம்ம மதுவா விட கொஞ்சம் மூப்பு. அது ஒன்னு தான் குறையே தவிர, சொத்துபத்து குமிஞ்சு போய் கிடக்கு. யோசனை பண்ணு மீனாட்சி. இந்த குடும்பத்தை தலை முழுகிட்டு, நம்ம புள்ளைக்கு நல்ல பிழைப்ப பார்ப்போம். என்ன சொல்ற?…” என்றார் பெரிய அத்தை. மீனாட்சி முகம் யோசனைக்கு தாவியது.
முன் ஒரு காலத்தில் தங்களை இழிவாக பேசி ஒதுக்கிய சொந்தம் என்பதெல்லாம் மறந்து போய், தற்போது கஷ்டத்தில் உடன் நிற்கும் சொந்தமாக மாறி போனது. அந்த உறவுகளை கொண்டு மீனாட்சி திடம் பெற்றார். தனி ஆளாக புலம்பியவருக்கு பக்கபலமாக சொந்தம் நிற்க, துணிந்து விட்டார். அவர்கள் சொல்லும் போதே மகளின் நல் வாழ்க்கை கன் முன் விரிய, முடிவு கண்டார். மதுவின் நல் வாழ்வோடு, தகுதியற்ற கரிகாலன் குடும்பத்துக்கு நல்ல பாடத்தையும் தான்,
“ சரிங்க பெரிய மதினி, மது ஜாதகம் தாரேன், பொருத்தம் பாருங்க. தம்பி சொன்ன பையனுக்கும் பார்ப்போம், வெளியவும் சொல்லி வைப்போம். ஏதாவது நூத்துல ஒன்னு அமையும்…” என்று யாரையும் கலக்காமல் மீனாட்சி முடிவு கூற, மது இன்னமும் திடம் பெற்றாள், தன் முடிவில்.
ரம்யாவின் முகத்தில் ஒரு நக்கல் புன்னகை தோன்றி மறைய, கண்டு கொண்டாள் மது. அவள் எண்ணமும் அறிந்து கொண்டாள்.
ஒருவனை உயிராக காதலித்தவள், வேற ஒருவனின் மனைவி ஆனவள், மற்ற ஒருவனுக்கு மீண்டும் மனைவி ஆக்க படுகிறாள். இதில், ஆண்கள் தான் வேறே தவிர, பெண் ஒருவள் தான். அப்படிப்பட்ட பெண்ணிற்கு, இந்த சமூகத்தின் மத்தியில் இருக்கும் மரியாதை என்ன?… வழங்கும் பெயர் தான் என்ன?… அதை கொண்டு வந்த சிரிப்பு தான் இது… கொலை குற்றவாளிக்கும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை உலகம் மறந்து தான் போகிறது.
மதுக்கும், அவர்கள் பேச்சு விநோதமாக தான் தோன்றியது. வேற ஒருவனை திருமணம் செய்து வைக்க நினைக்கும் இவர்கள், கட்டிய கணவனுடன் சேர்ந்து வாழ சொல்லி யாரும் ஆலோசனை சொல்ல வில்லை. மது மனம் மேலும், மேலும் திடம் பெற்றது. பெற்றவர்களும் சில நேரம் தவறு செய்யலாம் என்று பக்குவம் கண்டாள்.
மத்தபடி இவர்கள் பேச்சில், அவள் பயந்து ஒன்றும் போக வில்லை. அவ்வளவு ஏன் ஒரு பொருட்டாக கூட எண்ண வில்லை. இவர்கள் பற்றிய அவள் தீர்மானம் ஒன்று தான்.
“என் வலியை, என்னிடத்தில் நின்று உணராத நீங்கள் எப்படி என் வாழ்க்கைக்கு தீர்வு சொல்வீர்கள்….”