மதுக்கு நம்பவே முடியவில்லை. கணவனிடம் இப்படி ஒரு செயலை அவள் எதிர்பார்க்கவே இல்லை. தாயின் பேச்சும் சரியில்லை, சண்டை முத்தினால் கோபம் வரும், அந்த கோபம் தன் மேல் கூட திரும்பும் என்று எதிர்பார்த்தாள் தான். ஆனால், வீட்டை விட்டு வெளியேற சொல்வான் என்று யோசனை கூட அவளுக்கு இல்லை.
மற்ற தம்பதிகள் போல் தாம்பத்திய வாழ்வு வாழ வில்லை தான். ஆனால், தாங்கள் இருவரும் கணவன், மனைவி தான் என்ற உறவில் உறுதி இருந்தது. மோகம், ஆசை முத்தம், குட்டி குட்டி சில்மிசம் எதுவுமில்லை. அவள் கூடவே இருப்பான். தொட்டு கூட பேசாமல் தன்னை உணர செய்வான்.
தயக்கமே இல்லாமல் அவளை தாங்கி கொள்வான். நீ மனைவியாக என்ன செய்தாய்?… நான் ஏன் உனக்கு செய்ய வேண்டும் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. என் மனைவி அந்த ஒற்றை வார்த்தையில் சொந்தம் கொண்டாடுபவன். அதனால் தான் அவளால் அவனை தாண்ட முடியவில்லை.
தன்னை போக சொல்லி விட்டான் என்று கோபம் இருந்தாலும், காரில் ஏறும் போது கூட பார்க்கவில்லையே என்ற ஆதங்கமும் நிறைந்து இருந்தது.
மது அவனை தாண்டி தான் வந்தாள். காரில் ஏறி அமர்வது போல் அவன் புறம் திரும்ப, தலைகுனிந்து தான் நின்று இருந்தான். “போடா” என்று தூக்கி போடும் ஆத்திரம் வந்த போதும் ஒதுக்க முடியவில்லை.
சுந்தரமும், மீனாட்சியும் அவரவர் யோசனையில் மூழ்க, மது பார்வை முழுக்க அந்த இடத்தை சுற்றி தான். கார் ரோட்டில் ஏறி திரும்ப, வீட்டின் பின் புறம் சற்று தள்ளி தெரிந்தது. பின் வாசலில் கிடந்த கயிற்று கட்டிலை கண்டதும் மனம் துடித்தது. திரும்ப என்னால் இங்கு வரவே முடியாதா… வெளியில் இருக்கும் கொடியில் அவள் சுடிதார் காய்ந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல வீடு மறைந்து கொண்டிருக்க, மனம் பதைபதைத்தது எட்டி தொட முடியாத ஏக்கத்தில்.
காலை எழும் போது கூட, இன்று என்ன நடக்கும் என்ற பயம் துளி இல்லை. தாய், தந்தை வந்து பேசும் போது கூட பஞ்சாயத்தா?… என்று பதறினாள் தவிர வாழ்வே அஸ்தமனமாகும் என்று எண்ணவில்லை.
இவர்களுடையது காதல் திருமணம் கிடையாது, பெரியவர்கள் பார்த்து பேசி முடித்த திருமணம் தான். அதை உடைய விடமாட்டார்கள் என்று தான் நினைத்தாள். அவர்கள் ஏற்பாடு செய்ததால் தான் அவர்கள் இஷ்டத்துக்கு முறித்து கொண்டார்களோ!…
மதுரை வீட்டை நெருங்கும் போது, எல்லோர் மனமும் கனத்து போனது. அவ்வளவு நேரம் கொதித்து கொண்டிருந்த மீனாட்சி கூட வாயில் கை வைத்து அழ தொடங்கினார். எவ்வளவு சந்தோசமும், நிறைவுமாக திருமணம் அன்று மணக் கோலத்தில் அனுப்பிய பெண். இன்று வாழமல் வீடு வந்து விட்டாள். அதை சொல்லியே மீனாட்சி அழ, மதுக்கு நெஞ்சை அடைத்தது.
மீண்டும் ஒரு முறை உயிர் வலி கண்டாயிற்று. இது இரண்டாவது முறை தோற்று போய் திரும்பி வருவது. இந்த வாழ்க்கையும் கை பற்றி கொள்ள சாமர்த்தியம் இல்லை. கரிகாலன் என்ற ஒருவனை முழுதாக தொலைத்து விட்டாள். நீ எதற்கும் தகுதி இல்லை என்று வாழ்க்கை சொல்வது போல் ஒரு தோற்றம். தன்னை கட்டுப்படுத்த முடியும் என்று தோன்ற வில்லை, உடையாமல் திடமாக காட்டி கொண்டு தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள். மீண்டும் ஒரு எதிர்காலம் இல்லாத இருள்.
மூடிய கதவை கரிகாலன் திறக்கவே இல்லை. யார் முகத்தை பார்க்கவும் இல்லை. மனைவியின் சேலையோடு ஐக்கியமாகி விட்டான். பல வருடமாக மதுவை அவனுக்கு தெரியும். எப்போதும் மரியாதையாக தான் பார்ப்பான். பேச்சு என்பது எப்போதாவது தான். அவனுக்கு வேலை கிடைத்த அன்று ஐந்து நிமிடம் பேசியிருப்பாள். மற்றபடி அறிமுக சிரிப்பு மட்டும் தான்.
இந்த அன்பு, ஈர்ப்பு, பாசம் எல்லாம் மூன்று முடிச்சு போட்டு, மனைவியாக மனதில் வாரிய பின் தான். தன் மனைவி, தனக்கானவள், தன் எதிர்காலம், காலத்துக்கும் தன்னோடு உடன் நிற்பவள் என்ற சொந்தம் வந்த பின் தான் உரிமை, உறவு கொண்டது. அந்த உறவு தான் அவளை தாங்க, ஏற்க செய்தது.
காலத்துக்கும் துணை நிற்பேன் என்று கடவுள் முன் ஆணையிட்டு தாலி அணிவித்தவன். கடவுளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல், மனைவிக்கு கொடுத்த நம்பிக்கையும் உடைத்து, ஒரு இக்கட்டில் அவளுக்கு உடன் இல்லாமல் போன குற்ற உணர்வு மனதை கொன்றது.
தன்னை முழுமையாக நம்பி வந்த பெண்ணின், தன் மனைவியின் கௌரவத்தை, சுயமரியாதை, ஒழுக்கத்தை வீதிக்கு இழுத்து அவமதித்தவர்களை அவன் என்ன செய்தான். சங்கை தான் பிடித்திருக்க வேண்டும்.
நிச்சயம் செய்திருப்பான் யாரோ ஒருவராக இருந்தால். ஆனால், அங்கு நின்றது பெற்ற தாய் எனும் போது தயங்கி நின்று கொண்டான் தானே. அது ஒரு கணவனாக மனைவிக்கு செய்த துரோகம் அல்லவா…
என் மனைவியை எவனோ ஒருவனோடு சேர்த்து வைத்து பேசும் தைரியத்தை யார் இவர்களுக்கு கொடுத்தது. நிச்சயம் நான் தான். இவனால் என்ன செய்ய இயலும் என்று அகந்தை தான் அவர்கள் தைரியம். அது தானே உண்மையும் கூட, தன்னால் என்ன செய்ய முடிந்தது.
கடைசியில் மனைவியை தானே தள்ளி வைத்து விட்டான். தான் ஒரு நல்ல ஆண் மகனே அல்ல. அடித்து, துன்புறுத்தினால் தான் கொடுமையா… கட்டிய கணவனும், பெற்ற தகப்பனும் உடன் நிற்க. நடுத்தெருவில், நாலு பேர் பார்க்க தன் மனைவியின் ஒழுக்கத்தை விமர்சித்தார்கள். இனி எந்த நம்பிக்கையை என் மனைவிக்கு கொடுக்க முடியும்.
காலத்துக்கும் காப்பேன் என்றேன், ரெண்டு மாதம் கூட கட்டி காக்கவில்லை. அவளின் சுயகௌரவத்தை வீதியில் விட்ட நான் எவ்வாறு அவளோடு காதல் கொண்டு கலந்தாட… என் மனசாட்சியே என்னை கொன்று விடும்.
உண்மையில் தகுதி இழந்தது நான் தான். அவளின் கணவன் என்ற தகுதியை இழந்து விட்டேன். இதை மறந்து வெறும் வாய் வார்த்தையில் மன்னிப்பு கேட்டு அவளோடு வாழ எல்லாம் முடியாது. நியாய மனம் சுட்டது. அந்த சூடு தான் அவளை வெளியேற்றி விட்டது. ஆனால், ஆசை கொண்ட மனம் அலை பாய்ந்தது. அவளோடு வாழவில்லை தான். அதற்காக ஆசை இல்லாமல் இல்லையே, காலம் கனிய அல்லவா காத்திருந்தான். அது நிராசையாக போக உயிர் வலித்தது. மனைவியின் சேலையோடு முடங்கி கொண்டான்.
அனைவரும் கூடத்தில் அமர்ந்து தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது தெளிவாக காதில் கேட்ட போதும், எதிர்த்து பதில் சொல்ல துணியவில்லை. இனி அவர்களோடு தர்க்கம் செய்து என்ன பயன், சாயம் வெளுத்து விட்டது.
கரிகாலன் வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி தான். இப்படி ஒரு முடிவு எடுப்பான் என்று அவர்களும் நினைக்கவே இல்லை. தங்களின் கை ஓங்கி இருக்க வேண்டும் என்று தான் நினைத்தார்கள். மது வீட்டில் சீர் தரமாட்டேன் என்றது இவர்களை பேச தூண்டி விட்டது. அதுவும், சம்மந்தி என்று கிஞ்சித்தும் தங்களை மதிக்க வில்லை, எதற்கு என்றாலும் மகனை கேட்டே முடிவு செய்கிறார்கள் என்ற கோபம் கருப்பாயி மனதில் இருந்தது.
தேவி தான், “ ஜோடி புறா மாதிரி தான் ரெண்டும் இருக்கும். செத்த நேரம் கூட பிரியாம இருப்பான். சட்டுன்னு உங்க மகளை கூட்டி போங்கன்னு சொல்லிட்டான். என்னால நம்பவே முடியலை…” முகவாயில் கை வைத்து சொல்ல.
“நம்பாம என்ன?… நம்ம புள்ளை நம்மளை தான் யோசிக்கும்…” என்று கருப்பாயி சொல்ல,
“அதானே!… காலத்துக்கும் அவளுக்கு துணி துவச்சு, தட்டு கழுவி, மெத்தை விரிச்சு தாங்க முடியுமா… வீட்டுல ஒருத்தரை மதிக்கிறது இல்லை. சின்ன பிள்ளைக கிட்ட கூட சிரிச்சு பேச மாட்டா…” என்று தன் பங்குக்கு சகுந்தலா சொல்ல.
“அது மட்டுமா, அவ பொருளை எல்லாம் சும்மா கூட தொட விட மாட்டா… சின்ன பிள்ளைக ஆசையா கிட்ட போன பூட்டி வச்சுக்குவா… நாம எல்லாம் நல்ல சேலையே கட்டாத மாதிரி அவ சேலை எல்லாம் பூட்டு தான் தொங்கும்… அவ காசு அவளோட நமக்கு என்ன நாற போகுதா… மணக்க போகுதா” என்று தன் மன குமுறலை வசந்தி சொன்னாள்.
இது கரிகாகலனுக்கும் தெரியும். ஆரம்பத்தில் மதுவோடு வசந்தி ஒட்டினாள் தான். ஆனால், மதுக்கு சட்டென்று ஒட்ட வரவில்லை. அத்தோடு அவளின் அணுகுமுறையை மதுக்கு அளவிட தெரியவும் இல்லை.
வசந்தி, சகுந்தலா எல்லாம் சொந்தம். அயித்த மக்கள், மாமன் மக்கள். சின்னது தொட்டு பழக்கம், வேறுபாடு இல்லை. உடை, நகை மட்டுமல்ல வளையல், சீப்பு, பவுடர் முதற்கொண்டு மாற்றி கொள்வார்கள். அதே முறையை வசந்தி தன் சின்ன அண்ணியிடமும் எதிர்பார்க்க, அங்கு தான் மறைமுக உரசல் ஏற்பட்டது.
மதுக்கு சீப்பு, துண்டு, தலையில் வைக்கும் கிளிப் முதற்கொண்டு தனி தான். மாற்றி பயன்படுத்தவே மாட்டாள். பத்து வயதிலே தனி அறை, தனித்தனி பொருள் என்று பயன்படுத்தி வந்தவளுக்கு, இவர்கள் வீட்டு கூட்டு குடும்ப முறை அறியாதது.
அத்தோடு அவள் ஒரே பெண், கூட பிறந்த அக்கா, தங்கை என்று யாருமில்லாமல் செல்லமாக வளர்ந்தவள். வசந்தியின் எதிர்பார்ப்பு புரிந்தால் கூட பொருட்களை மாற்றி கொள்ள மாட்டாள். இதில் மறைமுகமாக சொல்லி எதிர்பார்த்தால் அவளிடம் என்ன தேறும்.
“ இந்த சேலை அழகா இருக்கு மது. எங்க வாங்குன, எனக்கும் வாங்க ஆசை தான். ஆனா வீட்டுல வாங்கி தரல…” வசந்தி சொன்னாள்.
“தாங்க்ஸ்… இது அப்பா குஜராத் போன போது வாங்கி வந்தது. இங்க கிடைக்கிறது கஷ்டம்…” என்று முடித்து கொண்டாள் மது.
“உங்களுக்கு பிடிச்சிருக்கா, ஒரு முறை கட்டி பாருங்க” என்ற வார்த்தை மது வாயில் வாரதது பெரிய குறையாக தான் தெரிந்தது.
“விசேஷ வீட்டுக்கு போட்டு போக ஒத்த சங்கிலியை தவிர ஒன்னும் இல்லை. எல்லாம் அடகுக்கு போயாச்சு. பெரிய இடத்து விசேஷம் சங்கிலி வேணும்” என்று அடமாக வசந்தி வந்து நிற்க.
கண்டு கொண்டான் கரிகாலன். பெரிய இடத்துக்கு போட்டு போகுமளவு தாயிடம் ஏது சங்கிலி. விதவிதமாக நகை எல்லாம் மது தான் வைத்திருக்க, அவளிடம் கேட்க முடியுமா… அமைதி காத்து கொண்டான் கரிகாலன்.
பச்சை கலர் மைசூர் காட்டனில் கரைக்கு ஏற்ப சிவப்பு கல் வைத்த குட்டி நெக்லஸ் என்று பொருத்தமாக, பார்ப்போர் கண்ணை பறித்தது. அதை கவனித்த வசந்தி,
“ இந்த நெக்லஸ் அழகா இருக்கு மது. எங்க வாங்குன? எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு…”
“தாங்க்ஸ், தெரிஞ்சவங்க கிட்ட செய்ய சொல்லி வாங்குனது. உங்களுக்கு வேணும்ன்னா செய்ய சொல்லலாம்…” எதார்த்தமாக மது சொல்லி சென்றாள்.
“உங்களுக்குப் பிடிச்சு இருக்கா… போட்டு பாருங்க” இதை எதிர்பார்த்த வசந்தி , வேறொரு பதில் வர, கூட்டு குடும்ப அனுசரிப்பு இல்லா பெண் என்று பேர் எடுத்து விட்டாள் மது.
அவள் கையில் நகைகள் இருப்பதால் எப்போதும் பூட்டியே வைப்பாள். பிள்ளைகள் அவள் வைத்திருக்கும் மேக்கப் திங்ஸ் தொட வந்தால், நகை பொருட் தான் தடுப்பாள். பிரோ இல்லாத வீடு என்று நகையை பாதுகாக்க தான் பிள்ளைகளை எடுக்க விடாது செய்தது. அதற்கும் சடவு கண்டார்கள்.
உள்ளிருந்து கரிகாலன் எல்லாவற்றையும் அவதானித்து கொண்டு தான் இருந்தான். மனித மனங்கள் தான் எத்தனை வேறுபாடு நிறைந்தது. தங்களுக்கு சாதகமாக நடக்கும் வரை தான், தாங்களும் மற்றவர்களுக்கு நல்லவர்கள்.
“ஏன் மதினி!… ஒரே வீட்டுக்குள்ள நீங்க எப்படி அனுசரிச்சு இருந்தீங்க?…” என்று தேவி கேட்க.
“அட ஏண்டி நீ வேற… ஒய்யார இருக்கும் தாழம்பூ, உள்ளாரா இருக்கும் ஈரும், பேனும்” என்று சொல்லி பெருமூச்சு விட்டவர்.
“வசந்தி கல்யாணம் சின்ன பாண்டி தலையில தான். இதுல இடம் வாங்கினது, வீடு கட்டன்னு ஏகப்பட்ட கடன். புள்ளை சமாளிக்க முடியாமல் தள்ளாடி போனான். அந்த நேரத்தில தான் அந்த பெரிய மனுசன் சம்மந்தம் பேச வந்தாங்க. மொத எனக்கு ஒன்னும் ஒப்பலை, ஊர் முழுக்க பேர் வாங்குனவ எனக்கு மருமகளா… யோசனை தான். ஒத்தி போட்டுட்டேன். ஆனா, அண்ணன் தான், வசதியான இடம், ஒரே பொண்ணு, சீரும் சிறப்பா செய்வாங்க, கொள்ள நகை, நாளைக்கு ஏதாவது வந்தா கூட ஒன்னுக்குள்ள ஒன்னு இழுத்து போவாங்கன்னு சொன்னாரு. அப்புறம் தான் சரின்னு சொன்னேன். கடன்ல இருந்து எந்திருச்சு, மகன் நல்ல வாழட்டும்ன்னு நெனச்சு தான் அந்த சீமை சித்திராங்கிக்கு பத்து பவுன் தாலி கொடி போட்டேன்… கடைசில என்ன ஆச்சு…” என்று சொன்னதோடு இரு கைகளையும் விரித்து ஒண்ணுமில்ல என்பது போல் செய்கை காட்டினார்.
“ காலி பெருங்காய டப்பா வாசனைக்கு தான்ற மாறி வெள்ளை தோல் மட்டும் தான் இருக்கு அவகிட்ட. சீர் வரும் மகன் நிம்மதியா இருப்பான்னு பார்த்த, இவ தான் ராஜ்ஜியம் பண்றா… வீடு கட்டி நான போக போறேன். இவ தான வாழ போற. இவ்ளோ பெரிய பிள்ளைக்கு விவரம் இல்லாமைய இருக்கும். எம் புருசன் கஷ்ட படுறான் சீர் செய்ங்கன்னு சொல்ல வேண்டியது தானா… ஒன்னும் தெரியாதவ மாதிரி மூஞ்சிய வச்சு எம் புள்ளைய மயக்கத்தான் தெரியும். இவ தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்…” என்று ஆதங்கமாக சொன்னார்.
“நீங்க ஆரம்பத்திலே தட்டி வச்சிருக்கணும் மதினி… வீட்டு வேலைக்கு புடிச்சு போட்ருக்கணும்…” என்று தேவி மேலும் சொல்ல.
“அதை செய்யாம விட்டது தான் தப்பா போச்சு. எம் மகனுக்கு பார்த்து நின்னேன். மகாராணி மாதிரி தான் திரிவா… எல்லாம் அவ இஷ்டம் தான். திங்க, தூங்க இது தான் அவ வேலை. அப்படி பார்த்து செஞ்சேன், கடைசில நான் கெட்டவன்னு சொல்லிட்டு போய்டா…” நெஞ்சை தட்டி சொன்னார்.
“அவ அப்பனும் தான் மகளுக்கு ஜால்ரா போடுறான். அவ ஆத்தாகாரி வாய் இருக்கே. அப்பப்பா… நமக்கு பிச்சை தான் போடணும். பொம்பளை பிள்ளையை பெத்தவங்க சுதானமா பேச வேணாம். இப்ப யாருக்கு நட்டம்…” என்ற தேவிக்கு,
“அதான் நானும் நெனச்சேன். அவளை வீட்டை விட்டு அனுப்புற ஆசையெல்லாம் இல்லை. சீர் கொண்டு வர தான் பேசினேன். கஞ்சிக்கு செத்தவங்க… வாய் மட்டும் தான்னு காட்டி புட்டாங்க… பொம்பள பிள்ளையை பெத்த உங்களுக்கே இம்புட்டு இருந்தா… நான் ஆம்பிளை பிள்ளை பெத்தவ எனக்கு எம்புட்டு இருக்கும்”
“ வாய் அடக்கி பேச தெரியாம, உம் மகளை வாழ வெட்டியா வச்சுக்கோ. எம் மகன் ஆம்பிளை, பத்து கல்யாணம் கூட பண்ணுவான்… கவர்மென்ட் வேலை இருக்க, யார் பொண்ணு தர மாட்டேன்னு சொல்லுவாங்க… காஞ்சு போய் வருவாங்க பாரு… அன்னைக்கு தெரியும் இந்த வீட்டுக்கு வந்த சிறிக்கிக்கு கருப்பாயி யாருன்னு… அத்தோட எங்கிட்ட வாய் திறக்க கூடாது… அவளுக்கும் வரிசையில் மாப்பிள்ளை நின்னுச்சாக்கும், ஒன்னுக்கும் வழி இல்லாம தான் எம் மகன் தலைல கல்லை கட்டி விட்டானோ. பட்டு அழிஞ்சு வருவா!…” என்றவரை கண்டு மற்றவர்கள் வாய் மூடாமல் பார்த்து நின்றார்கள்.
கரிகாலன் சோர்ந்து கண் மூடியவன் தான், தன்னையறியாமல் அரை தூக்கத்தில் இருந்தான். அதிக அழுத்தம் உடல் ஓய்வுக்கு தள்ளியது.
அங்கு மீனாட்சியும் பேசி கொண்டு தான் இருந்தார். கரிகாலனுக்கு வெறும் சாபங்களாக அள்ளி வீசினார். மதுவை பார்க்கும் நேரமெல்லாம், அவள் கணவனை தான் கறிச்சு கொட்டுவார்.
“ காசுக்கு ஆசை பட்டு எம் புள்ளை வாழ்க்கையை வீணா கெடுத்திட்டான். படுபாவி… நல்லாவே இருக்க மாட்டான்… கொஞ்சமும் நன்றி இருக்கா அவனுக்கு, நன்றி கெட்ட பைய… என்னைக்கும் இப்படியே வா இருப்பான், அவனுக்கும் ஒரு நாள்…” என்று மீனாட்சி புலம்ப
பொறுக்க முடியாத மது தான் கத்தி விட்டாள்.
“அம்மா… வாய மூடுங்க… இதுக்கு மேல ஒரு வார்த்தை ஒரு வார்த்தை உங்க வாய்ல இருந்து அவர பத்தி வர கூடாது. யாரோ ரோட்டுல போற ஒருத்தர பேசுற மாதிரி பேசுறீங்க. அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை. மறந்து இஷ்டத்துக்கு பேசாதீங்க… வார்த்தைய விட்ட அள்ள முடியாது. நான் ஏற்கனவே நொந்து போய் கிடக்கேன். கரிகாலனை பேசி என்னை மேலும் நோகடிக்காத…” என்ற மகளின் வார்த்தையில் அதிர்ந்து போனார் மீனாட்சி.
“அடியே… இவளே… ரம்யா… நான் பெத்தது என்ன சொல்லுது பாரு. அவனை பேசுனா, இவ நொந்து போவாளா!… என்னடி சொல்ல வாறா… என் நெஞ்சுல தீ வைக்குறா. அவனை பேசுனா இவளுக்கு என்ன வந்துச்சு. உம் மகளை கூட்டிட்டு போன்னு சொன்னவன் நல்லவனா?…” தம் மகளின் வார்த்தையில் அதிர்ச்சி குறையாமல் மீனாட்சி பேச,
“ஆமா நல்லவர் தான். இல்லைனா அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்கு என் கழுத்துல தாலி காட்டுவாரா, இல்லை அவ்வளவு கஷ்டத்தில் எனக்கு பத்து சவரன் தாலி கொடி போடுவாரா… இதுல அவர் எங்க காசுக்கு ஆசை பட்டார். கல்யாணம் மாப்பிள்ளை வீட்டு செலவு, சீரும் நீங்க செய்யல, மாப்பிள்ளைக்கும் நகை எதுவும் போடலை, எனக்கு மட்டும் தான் போட்டீங்க… அதையும் நான் கையோட கொண்டு வந்துட்டேன். மறுவீடு நாங்க போகல, அதனால் மறுவீட்டு டிரஸ் கூட நீங்க எடுத்து தரல. இதுல எந்த காசுக்கு ஆசை பாட்டார்…” பட்டென்று மது கேட்க திணறி போனார் மீனாட்சி.
வழக்கம் போல் அழுது, புலம்புவது தான். இதை மகள் கையில் பிடித்து கொண்டு ஆட, என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்த மீனாட்சி.
“பார்த்தியா ரம்யா… நேத்து இன்னியாரம் கல்யாணம் முடிச்சு, இவ என் புருசன்னு சொல்றா… நான் என்னத்த சொல்ல, அந்த பொம்பளை சொன்ன மாதிரி நான் பிள்ளை வளர்த்தது தான் சரியில்லை போல” என்று மூக்கை சிந்த,
“ஏன் மது… அத்தை, உனக்காக தான் அழுது, புலம்புறாங்க… கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மாசத்தில வீட்டோட வந்துட்ட. அது பெத்தவங்களுக்கு எவ்வளவு வேதனை. உம் வீட்டு ஆளுக பேசுனது எல்லாம் விட்டுட்டு, இவங்க ஏதோ ஆதங்கத்தில பேசுனா, புரிஞ்சுக்காம கோபப்படுற…” என்று ரம்யா சொல்ல, அவளின் பேச்சை கேட்டது போல கூட மது காட்டி கொள்ள வில்லை.
இங்கு வந்து கொஞ்ச நாள் அடங்கி இருந்தவள், திரும்ப ஆரம்பித்து விட்டாள். அவளை பற்றி மதுக்கு நன்கு தெரியும். கருப்பாயி கூட தப்பையும் ஆமாம் என்று நேரில் ஒத்து கொள்ளும் நபர், இவள் அப்படியல்ல. எந்த பக்கமும் கெட்ட பேர் வாங்காமல், தன் காரியத்தை சாதிக்கும் ஆள். நாத்துநார் வீட்டோடு வந்து விட, முடங்கி போன மாமனார், எப்போதும் அழும் மாமியார் என்று இருக்க. தற்போது எல்லாம் அவள் கையில் என்பது போல் ஒரு தோற்றம். அவள் தான் தூக்கி நிறுத்துவது போல் காட்டி கொள்வாள்.
கட்டி கொடுத்த பெண் நன்றாக வாழ்ந்தால் வாய் பேசலாம். நம்ம வாழ்க்கையே அந்தரத்தில் ஊசல் ஆட, அவளை ஏன் கிண்ட வேண்டும் என்று தான் மது ஒதுங்கி கொள்வாள். தான் பிறந்து வளர்ந்த வீடு, இன்று இவள் தயவில் இருப்பது போல் காட்டி கொள்வாள். புருசனுடன் இருக்கும் போது தான் மரியாதை போல. தாய் அழுவது தொடர, மயக்கம் தான் வந்தது மதுக்கு.
“அம்மா… நீங்க பேசுனது தப்பும்மா. அன்னைக்கு கரிகாலனுக்கு செஞ்ச உதவி பத்தி பேசுனதும் தப்பு தாம்மா… எனக்கு கடவுள் நிறைவாக கொடுத்து இருக்கார், அதுல ஒரு பகுதியை என்னை போல கஷ்டப்பட ஒருவருக்கு கொடுக்குறேன் அது வரை தான் சரி. என்னைக்கு கையாள செஞ்சதை வாயால் சொல்லி கட்டுறோமோ, அன்னைக்கே நாம செஞ்ச புண்ணியத்துக்கு பலன் எல்லாம் முடிஞ்சு போகும். நல்லது நாலு பேருக்கு தெரிய செய்ய கூடாது. நம்ம மன திருப்திக்கு செய்றது, அதை சொல்லி காட்டி உங்க பெருந்தன்மையை தான் குறைச்சுகிட்டீங்க. நீங்க அவர் படிப்புக்கு கொடுத்த பணம் எவ்வளவு எழுபதாயிரம் ரூபாய். அன்னைக்கு அது பெரிய தொகை, இன்னைக்குமா அவருக்கு பெரிய தொகை. இந்த காச அவரால திருப்பி கொடுக்க முடியாதா… அப்படி திருப்பி கொடுத்த, நீங்க செஞ்ச உதவிக்கு மரியாதையா இருக்குமா… நீங்க பெருந்தன்மையா நடந்துகிட்ட தான் அவர்கிட்ட இருந்து நன்றியை எதிர்பார்க்க முடியும். நீங்க நடந்தது சின்ன புத்தி வச்சு. உண்மையிலேயே ரொம்ப பெருந்தன்மையா இருந்தது கரிகாலன் தான்…” என்று மது சொல்ல,
“பார்த்தியா ரம்யா… இவ மாமியார் பேசுனது மட்டும் சரியா!… அவ சின்ன புத்தி வச்சு தான நடந்தா… அவ மருமக,மகன் பொண்டாட்டின்னு யோசிச்சா பேசுனா…” என்று எகிற.
“அவங்களும் தப்பு தான். அதுக்கான விளைவ அவங்க சந்திப்பாங்க. நீங்க பேசுனதும் தப்பு தான். கருப்பாயிக்கு தப்பாத ஆள் தான் மீனாட்சி. அப்படி தான் இருந்தது உங்க பேச்சு… ஏட்டிக்கு போட்டியா பேசி, உங்க தரத்தை குறைச்சுட்டீங்க…” என்ற மதுவின் பதில் அவரை கோபப்படுத்தியது.
“ம்கூம்… வீட்டை விட்டு போன்னு உம் புருசன் சொல்லும் போதே, உனக்கு இந்த வாய்… கொஞ்சம் நல்லலாம் பார்த்தா என்னைய யாருன்னு கேட்ப போல…” என்ற தாயின் பேச்சுக்கு பதில் சொல்லாமல் பார்த்தவள், தன் அறைக்கு சென்று முடங்கி கொண்டாள்.
உண்மையில், கணவன் நன்றாய் பார்த்து கொண்டதால் தான் இவ்வளவு வாய். அவனின் உண்மை குணம் தெரிந்ததால் தான், அவனால் மனம் புண்ணாகி கிடந்தாலும் அவனுக்கு கொடி தூக்கினாள். பொம்பளை மனசு புருசனை ஒரு சொல் சொல்லும் போது தன்னை மீறி துடிக்க தான் செய்கிறது.
நாட்கள் மெல்ல நகர, கரிகாலன் பக்கம் இருந்து சத்தத்தயே காணாம். இரண்டொரு நாளில் போன் செய்தாவது தன்னிடம் பேசுவான் என்று அவள் எண்ணி கொண்டிருக்க, ஒரு மெசேஜ் கூட இல்லை. மீண்டும் தவித்து போனாள் பெண். கணவனை வேண்டாம் என்று மட்டும் விடவே முடியவில்லை. அவன் ஒரு அடி எடுத்து வைத்தால், பல அடிகள் அவன் பின்னே செல்ல அவள் தயார் தான். அவன் பக்கம் தான் முதல் தடம் கூட இல்லை.
வீட்டை விட்டு போக சொன்னதை கூட அந்த நேர கோபமாக எடுத்து கொண்டாள் பெண். அதற்கு அடுத்து அவன் வந்து அழைத்து செல்வது தானே மரியாதை. அவளுக்கான அந்த மரியாதையை அவன் கொடுத்து தான் ஆக வேண்டும். எவ்வளவு பேருக்கு மத்தியில் வெளியேற சொன்னான், பலர் பார்க்க தலை குனிந்து வீட்டை விட்டு வெளியேறி வந்தேனே… இன்று அவன் வந்தல்லவா அழைக்க வேண்டும். வாய் வார்த்தையாக கூட தன்னை கேட்க தோணவில்லையா…. அந்தளவுக்கு தான் அவன் மனைவியாக வாழ்ந்து இருக்கிறோம். தன்னை குறித்தே இறக்கமாக எண்ணி கொண்டாள்.
பொழுது விடிந்து, பொழுது போனதே தவிர, அவரவர் நிலை விட்டு யாரும் மாற வில்லை. ஒரு மாதம் கடந்த நிலையில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மற்றவர்கள் திரும்பி கொண்டார்கள். இருவரை தவிர, அது கணவன் – மனைவி தான்.
அவர்களால் தங்கள் நிலை கடந்து வர வில்லை. மதுவின் வீட்டில் கூட அடுத்து என்ன என்ற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. சில நேரம் அழுது புலம்புவது என்று நடந்தது தான். அதே நேரம் அன்றாட வாழ்வும் போய் கொண்டிருந்தது.
இங்கு, கரிகாலன் வீடு முழு இயல்புக்கு திரும்பியது. கருப்பாயி தன் கணவர் பாண்டியிடம்,
“போய் விட கோழி ரெண்டு புடிங்க. அந்த வேப்ப மரத்தில தான் அடையும். மாசமாச்சு கறி எடுத்து, சின்ன பாண்டி சுனங்கி தெரியுறான். உடம்பு தேற வேணாம். போய் புடிங்க…” என்று கணவரை விரட்டினார்.
ஒரு மாதம் கழித்து இன்று தான் ஊருக்கு வந்தான் கரிகாலன். முகம் கொடுத்து கூட பேசாத மகன், வீடு வந்திருக்க, அவ்வளவு சந்தோசம் கருப்பாயிக்கு. மிளகு, நல்லெண்ணை மிதக்க, வாழை இலை நிறைத்து கணவருக்கும்,மகனுக்கும் எடுத்து வைத்தவர். தான் உண்ணாமல் ரெண்டு தூக்கை எடுத்து அவசர அவசரமாக குழம்பை தூக்கில் ஊற்றி கொண்டு ஓடினார். மற்ற மக்களை விட்டு நல்லது உண்ண மனம் வராது அவருக்கு, அதை பார்த்த கரிகாலனுக்கு நெஞ்சில் முள் சிக்கிய உணர்வு.
அவன் நிலையும் அது தான். அவர்கள் வீட்டில் செய்யும் நாட்டு கோழி குழம்பு மதுக்கு ரொம்ப இஷ்டம். கரிகாலன் தான் நல்லெண்ண ஊற்றி பிசைந்து கையில் தருவான். குழந்தை சாப்பிடுவது போல, ஆசை ஆசையாக வாங்கி கொள்வாள். மனம் கனக்க, கண்ணில் நீர் நிறைந்தது. பாவம், அவள். இப்போது என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை. தெரிந்தே தொலைத்த சொர்க்கம் மனைவி.
நெஞ்சு துடிக்க ஒரு வாய் வைக்க முடியவில்லை அவனால். எப்படி இருப்பாள், என்ன சாப்பிட்டாள், தான் மேல் கோபமாக?… அவளை காண மனம் பரிதவித்தது. வீட்டை விட்டு போக சொன்ன அன்று, தன்னை பார்த்து மருகி , என்னை போக சொல்லாதே என்று கலங்கிய கண்களோடு நின்றவளை ஆயுள் முழுக்க மறக்க இயலுமா….
போய் பார்த்து வந்தால் என்ன!… என்று மனம் சொன்ன போதும். போய் பார்த்து அடுத்து என்ன செய்வது, கையோடு அழைத்து தான் வர வேண்டும். எங்கு, இங்க தான் அழைத்து வர வேண்டும் … கையாலாகாத ஆண் மகன், கோழை, பிழைக்க தெரியாதவன், ஏமாளி. இவனோடு என்ன வாழ்க்கை வாழ முடியும். கழுத்தை நெறிக்கும் கடன், இழுத்து பிடிக்கும் உறவுகளுக்கு மத்தியில் மூழ்கும் இவனோடு உனக்கு வாழ்க்கை வேண்டாம் மது. நீ தப்பித்து கரையேறி விடு… உன்னை கடவுள் நிறைவாக வாழ வைப்பார். இந்த அமாஞ்சி, தயிர் சாதம் உனக்கு வேண்டாம். மனதில் தெளிவு கண்டவன், ஒரு வாய் உண்ண வில்லை. தந்தை அழைக்க, அழைக்க கையை கழுவி கொண்டு, தன் பையை எடுத்து கொண்டு ஓடி போனான். இங்கு வந்ததிலிருந்து மனைவியின் நினைவு வாட்டி எடுத்தது.
மதுக்கு கொஞ்சம், கொஞ்சமாக வீடு மூச்சு முட்ட தொடங்கியது. தொடர்ந்து உறவுகள் படையெடுத்து அவள் வாழ்வு பதியில் நின்றதை விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். தாயும் அழுது கொண்டே அனைத்தையும் மசால் சேர்த்து காரம் குறையாமல் சொல்லவார், துணைக்கு மருமகள், தலை வேதனையில் வீட்டில் இருக்காமல் ஓடி ஒளிய தொடங்கினாள்.
அன்று மாலை நெருங்கும் நேரம், தன் வீடு செல்லும் பஸ்சை பார்த்து காத்து நின்றாள் பெண். சரியாக பஸ் வர, பின் பக்கம் ஏறி அமர்ந்தவள். சுற்று முற்று பார்க்க, அவ்வளவு சந்தோசம் அவள் முகத்தில், அவளை விட்டு ஐந்து சீட் தள்ளி அவள் கணவன் கரிகால பாண்டியன் தான் அமர்ந்து இருந்தான். அவன் முன் புறம் அமர்ந்து இருக்க, அவனுக்கு எதிர்ப்புறம் தள்ளி இவள் அமர்ந்து இருந்தாள். அவன் பார்க்கவில்லை, இவள் கண்டு கொண்டாள்.
மனதில் ஒரு பரவசம், ஏதோ வைவா நடக்கும் போது வரும் உணர்வு போல், நெஞ்சம் முழுக்க ஒரே படபடப்பு. இத்தனைக்கும், இவன் மனைவியை அறியவே இல்லை. அவள் முழுதாக அவனை தான் ஆராய்ந்தாள்.
கருப்பு கலர் பே ண்ட், வெள்ளை கலர் டிசர்ட் போட்டு இருந்தான். வலது கையில் கட்டு இருந்தது. கொஞ்சம் அதிர்ந்தாள் பெண். அவள் வீட்டை விட்டு வெளியேறும் அன்று நடந்தது, இன்னும் கட்டு போட்டு இருக்கான். அடி பலமா… மனம் கொஞ்சம் கவலை பட்டது. முடி வளர்ந்திருக்க, தாடி கொஞ்சம் அதிகம் தான். உடல் எடை கூட குறைந்தது போல் இருந்தான். அமைதியாக, எங்கும் பார்க்காமல் ஏதோ ஒரு சிந்தனையில் தான் இருந்தான். ஏற்கனவே கருப்பு, இதில் இன்னும் கலர் கூடியதாக தோன்றியது மதுக்கு.
அடுத்த நிறுத்தத்தில் அவள் இறங்க வேண்டும். அவர்கள் வீடு இருக்கும் ஏரியா தாண்டி தான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்ல வேண்டும். அங்கு தான் வெளிமாவட்டத்திற்கு செல்லும் பஸ் நிக்கும். லீவு முடிந்து வேலைக்கு செல்கிறான் போல.
இதோ இறங்க மது எழுந்து நின்றாள். மனதில் ஏக்கமும், வலியும் சரியாக நின்றது. கணவனையே பார்த்து கொண்டே மது இறங்க, அவன் முகத்தில் ஒரு மாறுதல். தபால் தந்தி நகர் இறங்குங்க என்று சொன்னதும் அவன் முகத்தில் ஒரு பரவசம். தலையை வெளியே நீட்டி, அந்த பக்கம் முழுவதும் பார்த்தான்.
மது கண்டு கொண்டாள். கணவன் தன்னை தான் தேடுகிறான். தான் இருக்கும் இடம் என்றதும் எங்கும் தென்படுகிறாளா என்று பார்க்கிறான். இதை கண்டு கொண்ட மனைவிக்கு வேறு என்ன வேண்டும். ஏதோ ஒரு புது வசந்தம் மனதில் பூக்க, மீண்டும் வண்டியில் ஏறி கொண்டாள்.
அங்கு இருந்தோர் அவளை கொஞ்சம் வித்தியாசமாக தான் பார்த்தார்கள். யாரையும் கண்டு கொள்ள வில்லை. கரிகாலன் முகம் சுருங்கியது. அவளை பார்க்கவில்லை என்பதால் தான் வருத்தமா… கொஞ்சம் இதம் கண்டாள் பெண்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வர, முதலில் இறங்கிய மது, பஸ் பின்புறம் சென்று நின்று கொண்டாள். அவனை பார்க்க இருக்கும் உந்துதல், அவனோடு பேச திரும்பவில்லை. அவர்களுக்கான வாழ்வில் அவன் தான் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். எப்படி போக சொன்னானோ, அப்படியே கூட்டி செல்ல வரவும் வேண்டும். பார்வை மட்டும் கணவனை தான் தொடர்ந்தது. பாத்ரூம் சென்றான், தண்ணீர் பாட்டில் ஒன்று வாங்கினான், கைக்குட்டை கொண்டு முகம் துடைத்தான், ஒரு டீ குடித்தான். மெல்ல மெல்ல கணவனை பார்வையால் உள் இழுத்தால் மது. அவன் கண் எந்த பக்கமும் சாய வில்லை. ஒரு போன் செய்து பேசியவன், கையோடு தான் ஏறும் பஸ்ஸில் சென்று அமர்ந்து கொண்டான்.
இப்பொழுது முகம் அவ்வளவாக தெரிய வில்லை. அவன் ஒரு பக்கம் தான், அதையும் விடாமல் தான் பார்த்து நின்றாள் மது. மனது கொஞ்சம் ஆறுதல் கண்டது. கண் முன் நிக்கும் பெரிய பிரச்சனையை கடக்கும் திடம் வந்தது.
பேருந்து மெல்ல நகர, அவளை கொஞ்சமும் உணரவில்லை கரிகாலன். கணவன் மெதுமெதுவாக கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து நின்றவள், கலங்கிய விழிகளோடு தன் வீடு நோக்கி சென்றாள் மது.