நீல வானில் மேகங்களுக்கு நடுவில் சூரியன் உதிக்கும் முன்னரே விழித்தெழுந்தவனுக்குள் மேகம் மறைக்காத நிலவென அவளின் மதி முகம் விடியலிலேயே நட்சத்திரமாய் மின்னி மறைந்தது.
நேற்றைய நினைவுகளின் நிறம் மாறி இன்று அவை நெஞ்சின் ஓரம் இனித்திருக்க நிலைக் கண்ணாடியின் முன் நின்று தன் முகம் கண்டவனுக்குள் அவளை முதல் முறை கண்ட நினைவுகள்.
ஆழிப் பேரலையென கடல் நீல சுடிதாரின் துப்பட்டா காற்றில் பறக்க மின்சார ரயில் நோக்கி ஓடி வந்தவள் ஓய்விருக்கையில் அமர்ந்திருந்த அவனைக் கடக்க, அலையென அவன் முகம் தீண்டிச் சென்ற துப்பட்டாவில் அவளின் வாசம்.
அந்த வாசம் மௌனமாய் அவன் மூச்சுக் காற்றில் கலந்து அவனது சுவாசமானது.
அவளைக் கண்டதும் அவனுள் காதலா? என்றால் இல்லை தான். ஆனால் அவனை அவள் நேற்று கண்டதும் பின் கடிந்ததும் இன்று அவனுள் காதலாய்? ஹும்… ஆமாம் காதல் என சொல்லத் துடிக்கும் மனம். ஆனால் இன்னும் தன் நிலை உணராமல் அவன் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறான்.
அதன் பிறகும் ஒரு சில முறை அவளின் தோழியுடன் அவளைக் கண்டிருக்கிறான். செவ்வாப்பேட்டையிலிருந்து அம்பத்தூர் வரையிலும் நீளும் அவள் பயணம் எனும் விவரமும் அறிந்திருந்தான்.
இவை எல்லாம் யாரோ எவரோ என அவன் கண்டு மூளையின் மூலை முடுக்குகளில் முடங்கிய நினைவுகள்.
அந்த முடக்கிய நினைவுகளெல்லாம் முடுக்கிய நிலையில் முட்டி மோத அவற்றை அசை போட்டபடி மென்னகையோடு நின்றிருந்தான்.
“கண்ணா, என்ன டா?” அவனின் அம்மா அவன் தோள் தொட்டு அழைக்க,
“ஹ்ம்ம், என்னம்மா? எதுவும் சொன்னிங்களா?” கனவில் மிதந்தவன் அன்னையின் குரலில் புரியாமல் விழித்தான்.
“ஏன்டா, எதுவும் பிரச்சனையா? உன் சித்தப்பா எதுவும் பேசினானா? நேத்து உங்க சித்தி கூட போன் அடிக்கல. நாள் நுனப்பு இல்ல போல. குடுத்த காச திருப்பிக் கேட்டா நம்ம கெட்டவங்களா ஆயிடுறோம்?”
இவர்களின் ஒற்றை உறவாக இருக்கும் இவனின் சித்தப்பா சொந்த வீடு கட்டவும், மகளின் திருமணம் மற்றும் மகனின் படிப்பு என சிறிது சிறிதாக இவன் அன்னையிடம் வாங்கிய கடனில், இவனது பல வருட உழைப்பின் ஊதியமும் இவன் அம்மாவின் நகைகளும் அவர்களிடம் கடன் எனும் பெயரில் மாட்டியிருக்க இன்று இவனின் முக்கிய தேவைக்கு அவர்களிடமே கையேந்தும் நிலை.
கடனாகக் கொடுத்ததைத் திருப்பிக் கேட்பது என்பது ஆரம்பத்தில் தயக்கத்தைக் கொடுத்தது அவனுக்கு.
அதில் பெரிதும் தயங்கியவன் அவர்களின் மெத்தனத்தில் விழித்துக் கொண்டான்.
கடன் அன்பை மட்டுமல்ல பல ஆயிரம் குடும்ப உறவுகளையும் அவற்றின் மேல் நாம் கொண்ட நம்பிக்கையையும் முறிக்கும்.
உன்னால் இயன்றதைக் கொடுத்து உதவலாம். ஆனால் இலவசமாக உன்னால் கொடுக்க இயலாததை உறவுகளுக்குள் கடனாய் கொடுக்கும் முட்டாள் தனத்தால் பல குடும்ப உறவுகள் பிரிந்து நிற்பது உலகத்தில் புதிதல்லவே.
ஆனாலும் அவன் அம்மாவின் கண்ணீரும், உறவுகளை விலக்கி வைக்க அவர் விரும்பாததும் இவனைத் தடுக்க, இன்று முள்ளில் விழுந்த சேலையாய் இதை மெல்ல பிரித்தெடுக்க நினைக்கிறான்.
அவன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்? பின் அவனைப் படைத்த பிரம்மனின் கணக்கு என்ன ஆவது?
“ம்மா, அதெல்லாம் எதுவும் இல்ல. நீங்க யோசிக்காதிங்க. அவராண்ட நானே பேசிக்கிறேன். நீங்க கேக்க வேணாம்.
இருக்க ஒரு உறவும் இந்தப் பணத்தால போச்சுன்னு பொலம்புவீங்க.
இவராண்ட எதுவும் ஆவலென்ன அண்ணனாண்ட போன் அடிச்சு பேசுறேன்.”
“கடை எடுக்க எப்படா காசு குடுக்கணும்? ஒரு வருஷம் சொல்லி, இப்ப ஆறு மாசம் ஆச்சு. இன்னும் அவங்க காசு குடுக்குறேன்னு கூட சொல்லல.”
“ஹ்ம்ம், இன்னும் ரெண்டு மூணு மாசம் பார்க்கலாம் மா.”
“சரி டா கண்ணா பாரு.” என்றவர் மீண்டும் அவர் அறைக்குத் திரும்பி இருக்க, கடனும் காசும் கண்களிலிருந்து கலைந்து மீண்டும் அவனின் செஞ்சோலை நினைவு.
‘அம்மா நான் காசுக்கு கவலைப் படறேன்னு நெனச்சு பேசிட்டுப் போறாங்க. நான் என்னடான்னா, …’, தன்னிலையில் நாணம் எழ தலையில் தட்டிக் கொண்டவன் குளியலறை நோக்கித் திரும்பினான்.
குளித்து அலுவலகம் செல்லத் தயாராகி வந்தவனுக்குள் மெல்லிய படபடப்பு. ஏன்? அவனே அவனுள் கேள்வி கேட்டுக் கொண்டாலும் விடை என்னவோ பூஜ்யம் தான்.
ஆனால் ஒற்றை நாளில் மாறிய வானிலையாய் மாறிய அவன் மனது இன்னும் தன் மாற்றத்தைப் பற்றி மட்டும் ஏனோ எண்ணமிடவில்லை.
மாற்றங்களை சிந்திக்காத அவன் மனது மங்கையை இன்று சந்திக்க மட்டும் மறுத்து விட்டது. மறுத்தது ஏன்? விடை தெரியாத விநோதங்கள் விதையாய் அவனுள்.
இருள் விலகி நீலம் பூக்க ஆரம்பித்த அதிகாலை வேளையில் அவளின் நேற்றைய கோபங்களும் மனக் குழப்பங்களும் விலகி நீல வண்ண வானம் தந்த இதமான மனநிலை அவளை சற்றே சரியாக யோசிக்க வைத்தது.
தெளிந்த அந்த வானம் போலே தெளிந்த மனநிலையில் தோட்டத்து மலர்களைப் பார்த்து நின்றவளுக்குள் நேற்றைய எட்டிக்காய் உணர்வுகள் எல்லாம் மறந்து மடிந்து போயிருக்க, புத்தம் புது காலையில் அவளின் தோட்டத்து மலர்களைப் போல் அவளுக்குள்ளும் சிந்தனை விரிந்து மலர்ந்தது.
செடிகளுக்கெல்லாம் முதலில் தண்ணீர் விட்டவள் இன்று மலர்ந்த அந்த அழகிய ஆரஞ்சு வண்ண ரோஜா மலரை மகளுக்காகப் பறித்துக் கொண்டாள்.
பின்னர் அவளின் சங்குப் பூ பந்தலிலிருந்து கொஞ்சம் மலர்களைப் பறித்தவள் பின் வாசல் கதவருகே அமர்ந்து அந்த மலர்களைக் தொடுக்கத் தொடங்கினாள்.
“செம்பாக்கா” அழைத்தபடி வந்து அருகில் அமர்ந்தான் செந்தில்.
“என்னக்கா சத்தமில்லாத வந்து உக்காந்துட்ட? சமையல் ஆச்சா?”
“ஹ்ம்ம் இட்லி மட்டும் தான் டா ஊத்தணும். அதுவே லஞ்சுக்கும் எடுத்துக்கலாம். நேரம் இருந்துச்சு. அதான் இந்த பூவைக் கட்டி சாமிக்கு வைக்கலாம்ன்னு.”
“ஹ்ம்ம், சரிக்கா.” என்றவன் தொடர்ந்து “இப்ப நீ ஓகேவா க்கா?” கேட்டபடி அவளின் முகம் பார்த்தான்.
“ஏன் டா? எனக்கு என்ன? நல்லா தானே இருக்கேன்.”
“இப்ப நல்லா இருக்கக்கா. நான் கேட்டது நேத்து என்ன நடந்துச்சுன்னு? என்ன உனக்கு கோவம்? இல்ல கவலையா இருந்தியா? யோசிச்சுட்டே இருந்த. அதனால கேட்டேன்”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லடா. நா நல்லா தான் இருந்தேன்.” என்றவள் முகமே அது பொய் எனக் காட்டிவிட, அவள் தம்பியின் பார்வையில் அவளே மேலும் தொடர்ந்தாள்.
“நேத்து கொஞ்சம் வேலை ஜாஸ்தி டா. வேற ஒன்னும் இல்ல.”
“சரி நம்பிட்டேன் செம்பா.” என்றவன் சட்டென எழுந்து கொள்ள,
“என்ன டா இப்ப உனக்கு. நேத்து நான் நல்லா தான் இருந்தேன்னு சொன்னா நம்ப மாட்டேங்குற?” என்றவள் அவனை மீண்டும் தன் அருகில் அமர்த்திக் கொண்டாள்.
“அப்ப நேத்து செவ்வந்தி எத்தனை தோசை சாப்டான்னு சரியா சொல்லு நான் நம்புறேன்” அவன் கேட்டதும் அவள் யோசிக்க, செம்பாவின் மூளையோ நேற்று மாலை நிகழ்வுகள் அனைத்தையும் சிறு தடயங்கள் கூட இல்லமால் அழித்திருந்தது.
“அ.. அ..து… ஹ்ம்ம்.. ரெண்டு தானே டா சாப்ட்டா. நீயும் அவளும் ஒன்னா சாப்டிங்க. ” எதையோ உளறிக் கொட்டினாள்.
“இதுக்கு மேல உளறாத க்கா. அவ நேத்து சாதம் வேணும்ன்னு கேட்டு சாப்ட்டா. நேத்து ராத்திரி மலரக்கா போன் பண்ணிச்சு. நீ தூங்கிட்டேன்னதும் என்னமோ கோவமா இருந்தியான்னு கேட்டுச்சு. இப்ப சொல்லுக்கா.” பேசியவன் குரலின் அழுத்தத்தில் அவளின் தம்பி அந்த நொடி அவளுக்குத் தமயனாகி தந்தையுமாகி, அவள் உள்ளத்தைப் படிக்கும் ஆழ்ந்த பார்வையுடன் எதிரில் நின்றான்.
மலர் தனக்கு அழைத்திருக்கிறாள் என்பதில் மகிழ்ந்த செம்பா, தனது கோவத்தை தம்பியிடம் போட்டுக் கொடுத்ததற்காக அவளை மானசீகமாக திட்டித் தீர்த்தாள்.
பல நாளாக அவனிடம் பகிரப்படாமல் இருந்த விஷயங்களை இன்று அவனிடம் சொல்லிவிடும் முடிவுடன் நேற்றைய நிகழ்வுகளை சொல்லத் தொடங்கினாள்.
“சொல்றேன் செந்தில், ஆனா நீயும் கோவப்படக் கூடாது.”
“முதல்ல நீ விஷயத்தை சொல்லுக்கா.” என்றவனின் குரலில் அவனின் அடக்கப் பட்ட உணர்வுகள்.
“என் கூட ஆபீஸ்ல இருக்க விக்னேஷ் கொஞ்ச நாள் முன்னாடி கல்யாணம் காதலன்னு என் முன்னாடி வந்து நின்னா. நான் எனக்கு பொண்ணு இருக்குன்னு சொல்லியும் அவே அந்தப் பேச்சை நிறுத்தல டா. அவங்க வீட்லயும் சம்மதம் சொல்லியாச்சு போல. ஆனாலும்…. ஹும் என் மனசு… ஏனோ… அத ஏத்துக்கல டா. அவன் கொஞ்சம் வசதியானவன் வேற. நேத்து பேசும் போதே என்ன காசில்லாதவங்கிற அர்த்தத்துல பேசவும் இன்னும் கோவம் வந்துருச்சு டா. அவ்ளோதான்.” ஒரே மூச்சில் மொத்தத்தையும் தம்பியிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
செந்திலோ அவளை ஊடுருவும் பார்வை பார்த்தவன், ” வேற எதுவும் தொந்தரவு பன்றானா க்கா?” என்றான்.
“ச்ச, அதெல்லாம் இல்லடா. அந்த வீணாப் போன விக்கிக்கெல்லாம் பயந்தா என்ன ஆகுறது?”
“பயப்படாதவன்னா மிஸஸ். விக்கி ஆகலாமேக்கா”