“செந்தில், எனக்கு அந்த மாதிரி ஐடியா எல்லாம் இல்லடா. என் பொண்ணு போதும் எனக்கு.” என்றவள் குரலில் இருந்த தீட்சண்யத்தில் அதிர்ந்தவன், அவளை அப்படியே விட இயலாது என,
“அப்ப, நான் என்ன சாமியாராப் போகிறதா?” என்றான் நக்கலாய்.
அவனின் கேலியான பதிலில் அவள் விழிக்க,
“சொல்லுக்கா நீ இப்படி கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா உன் தம்பி வாழ்க்கை?”
“டேய், நீ இன்னும் காலேஜே முடிக்கல. அத முதல்ல முடி. அதுக்குள்ள பையனுக்கு பேச்சப் பாரு.”
“ஏன் க்கா, உனக்கு அந்த விக்னேஷ பிடிக்கலையா?”
“செந்தில், தேவை இல்லாத பேச்சு உனக்கெதுக்கு. போ போய் படி கொஞ்ச நேரம்.”
“இது தேவை இல்லாத பேச்சு இல்லக்கா. உன் வாழ்க்கைக்குத் தேவையான பேச்சு. நா அண்ணனா இருந்தா கண்டிப்பா இத கேட்டிருப்பேன் தானே. நம்ம வீட்ல தம்பியும் கேக்கலாம். சொல்லுக்கா. நீ ஏன் விக்னேஷ கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. அதுவும் அவங்க குடும்பமே விருப்பம் சொல்லும் போது?”
“ஹ்ம்ம், எல்லாருக்கும் விருப்பம் இருக்கலாம், ஆனா நம்ம மனசு சொல்லணுமே செந்தில், இவன் உனக்கானவன்னு. அப்படி ஒரு விருப்பம் வாராதப்ப நான் என்ன செய்யட்டும். அதிலும் அவங்க என்ன ஏத்துக்க மட்டும் தான் விருப்பப் படறாங்க. ஆனா நானும் என் பொண்ணும் வேற இல்லடா.” என்றவள் முடிக்கும் முன்னே,
“நீ என்ன சொல்ற செம்பாக்கா, செவந்திக்காக நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாம்ன்னு சொல்லப் போறியா?” சீற்றம் அவன் குரலில். தம்பி என்றாலும் இவன் அக்காவின் வாழ்க்கைக்கு இவன் மட்டும் தானே பொறுப்பு இன்று. இருபது வயதுக்கு இது அவன் தோளுக்கு மீறிய சுமைதான்.
அக்கா சுமக்கும் சிலுவைக்கு இவனால் ஆனது அவன் அக்காவின் நல்வாழ்வுக்கான பொறுப்பை சுமப்பது மட்டுமே.
அவனை விட இவள் மூத்தவள் என்பதற்காக அவளை சிலுவைகள் சுமக்கவிட அவன் மனம் என்றுமே உடன்படவில்லை.
ஆனால் அவளோ தம்பி மற்றும் மகளுக்காக தன்னை தன் உணர்வுகளைத் தன்னுள் சுருக்கி, விரும்பியே காலம் முழுவதும் குடும்ப பாரம் சுமக்க நினைக்கிறாள்.
“அப்படி நான் சொல்றதுல தப்பில்லையேடா. நீயும் அவளும் தான் என் குடும்பம். இதுல என்னை மட்டும் ஏத்துட்டு வாழ்க்கை குடுக்குறவன் என்ன நல்லவன் சொல்லு? ஒன்னு தெரிஞ்சுக்க செந்தில், எனக்கானவன்னு ஒருத்தன் இந்த பரந்த நீல வானத்துக்குக் கீழ எந்த இடத்துல இருந்தாலும் இந்த உலகமே எங்களைத் தடுத்தாலும் அவன் கூட நான் வாழப் போற வாழ்க்கையை யாராலும் மாத்த முடியாது. நீ பீலிங்ஸ் உடாத ப்ரோ. ஆல் ஐஸ் வெல். பீ ஹாப்பி ப்ரோ.” சற்று உற்சாகமாய் வந்தது அவள் குரல்.
அவள் அந்த நொடி அறியவில்லை அவளவன் தன் நீல நயனங்களில் காதல் மயக்கம் கொண்டு இந்த செம்பவளத்தைக் கொள்ளையிடக் காத்திருக்கிறான் என.
“எல்லாம் சரிங்க சிஸ்டர்… இன்னும் நீங்க எல்லாத்தையும் சொல்லி முடிக்கலையே? மிச்சத்தையும் சொல்லுங்க”
செந்திலின் இந்தக் கேள்வியில் திகைத்தவளைப் பார்த்தவன், “மலரக்கா நீ சண்டை போட்டதையும் சொன்னாங்க.” என அவன் சொல்ல ‘ஐயோ இவ என்னத்தை எல்லாம் உளறினாலோ தெரியலையே’ என மனதுக்குள் தன்னையே நொந்து கொண்டாள்.
“டேய் அதெல்லாம் அந்த பூனைக் கண்ணன் மேல தாண்டா தப்பு. பஸ்ல மேல வந்து விழுந்தா பின்ன கொஞ்சுவாங்களா டா?”
“பூனை கண்ணனா? ஹ்ம்ம் எவனா இருந்தா என்ன அக்கா, தேவை இல்லாத வம்பு வளக்காத. சும்மா வாய உடாத.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீ போய் படிடா. டயத்த வேஸ்ட் பண்ணாத போ.” அருகே அமர்ந்திருந்தவனை விரட்டி விட்டதும் தான் அவளால் நிதானமாக மூச்சே விட முடிந்தது.
மலரின் மேல் கோபம் வந்தாலும் அவை எல்லாம் தன் மேலுள்ள அன்பால் என உணர்ந்தவள் மீண்டும் தன் கவனத்தை தொடுத்துக் கொண்டிருக்கும் மலர்களின் மேல் திருப்பினாள்.
மலர்களை மாலையாக்கி இறைவனை வழிபட்டவள், தன் காலை வேலைகளை வழக்கமான வேகத்துடன் முடித்து மகளையும் தம்பியையும் தயார் செய்துவிட்டு தன் இன்றைய பயணத்தைக் தொடங்கத் தயாரானாள்.
வழக்கம் போல செந்தில் அவளை ரயில் நிலையம் வரை கொண்டு வந்து இறக்கி விட்டுச் செல்ல அங்கே இறங்கியவுடன் ஏதோ ஒரு இனம் தெரியாத பாரம் வந்து ஏறிக் கொண்டது.
தன்னிச்சையாக கண்கள் மலரைத் தேட இன்றும் அவள் வந்திருக்க வில்லை.
மனதில் மீண்டும் அதே உணர்வு. பயத்தின் அலை மெல்ல அவள் மனதை அழுத்த சிந்தித்தவளுக்கு அந்த நீல விழிகள் நினைவில் வந்தது.
நேற்று அவன் மேல் கை நீட்டி விட்ட தன் மடமையில் இன்று தன் மேலேயே எரிச்சல் கொண்டாள்.
அவனை நினைத்ததும் அவளின் கண்கள் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் முழுவதும் மெல்ல சுழலத் தொடங்கியது.
மங்கையின் மனதில் வந்த அந்த நீல விழிகள் நிஜத்தில் அவளின் கண்களுக்கு எட்டா தூரத்தில் நின்று தன்னை மறைந்துக் கொண்டது.
‘இன்னைக்கு இவன் இந்த id கார்டு எப்ப வந்து வாங்குவான்? கோவத்துல இந்த கொரங்கு கழட்டி குடுத்துட்டு போனதை இப்ப நான் தூக்கி சுமக்கிறேன். ச்ச.’ எண்ணம் தன் போல் அவனுக்கு கோவ வண்ணம் தீட்டியது.
“என்ன யோசனை செம்பா, எதிரயே வரேன் பேசாம நிக்கிற?” என மலர் அவள் முன் நின்று கேள்வி எழுப்பவும் தான் செம்பா நிகழ் காலத்திற்கு வந்தாள்.
“ஹ்ம்ம் பொடலங்கா யோசனை. என்னை நேத்து செந்திலாண்ட போட்டுக் குடுத்துட்டு கேள்வி வேற.”
“போட்டெல்லாம் கொடுக்கல செம்பா. நீ டென்ஷன்ல இருப்பன்னு கால் பண்ணேன். நேத்து நீ சீக்கிரம் வேற தூங்கப் போயிட்டேன்னு செந்தில் சொன்னான். அந்த கவலேல அப்படியே கொஞ்சம் உளறிட்டேன். விடு. இன்னும் என்ன யோசனை?”
“எல்லாம் அந்த நீல/நீள நித்யானந்தாவோட id கார்டு கொடுக்கணும்ன்னு தான். இன்னும் அவனை ஆளை வேற காணும்.”
“என்னது நீள நித்தியா?”
“ ஆமாம். நீல கண்ணு, ஆறடி நீளம்… ம்ம்”
“போதும் விடு, கை நீட்டுன கேப்லயும் இவ்வளவு நோட் பண்ணியா?” என்றதும் சற்றே நிதானித்தவள்,
“அட போ மலரு. அவன் id கார்ட குடுத்து முதல்ல இத முடிக்கணும்.”
“ஓ, நீ அப்ப அவங்களை இன்னும் பார்க்கல. வாசல்ல நான் பார்த்தேனே. ஒரு வேளை உள்ள வரலையா?” இருவரும் பார்வையை சுழற்ற அவன்தான் மாயக்கண்ணன் ஆகிப் போனானே.
“அவன் இந்த டேஷன்ல தான் இருக்கான்னா வந்து அவனே கேட்டு வாங்கட்டும். நேத்து நானும் கொஞ்சம் யோசிக்காம பண்ணிட்டேன். இல்லேன்னா இந்த id கார்ட தூக்கி குப்பைல கூட போட்டுருக்காலாம்.” சிந்தனை செய்தவாறே சொன்னாள் செம்பா.
“என்னது? நீ கொஞ்சமும் யோசிக்காமா அடிச்சுட்டு? ஏதோ அந்த அண்ணா நல்லவரா இருக்கப் போயி உன்னை விட்டாரு. பஸ்காரே அடிச்ச பிரேக்குக்கு நம்ம வடிவேலு மாதிரி பஸ்ஸுக்கு முன்னால போயி தான் லேண்ட் ஆயிருக்கணும். உனக்கு எங்கயோ கோவம்ன்னா அதுக்கு யாரையோ திட்டுனது தப்பு தானே.”
“எனக்கும் விளங்குச்சு மலரு. ஆனா நா நேத்து வந்த நிலைமை அப்படி. தப்பு தான். அவன் கிட்ட சாரி சொல்லிடுவோம் விடு.”
“என்னதூ சொல்லிடுவோமா… நீ தாம்மா அந்த அண்ணா மேல கைய வச்ச. நீ சொல்லணும் சாரி. என்னைய ஏன் கோர்த்து விட்ற?”
‘நான் மட்டுமா அவன் மேல கைய வச்சேன். அவனும் தான் என மேல கைய வச்சான். வச்ச கைய எடுத்திருந்தா நான் ஏன் பொங்கீருக்கப் போறேன். ஆனா அவன் சொன்ன ஒன்னு மட்டும் கரெக்ட். மனசுக்குள்ள இருக்கது எல்லாம் வெளிய காட்டமுடியாது தானே. ஹ்ம்ம்.’ எண்ணியபடி பெருமூச்சொன்றை வெளியேற்றியவள்,
“சரி விடு நானே மன்னப்பு கேட்குறேன். போதுமா? ஆனாலும் அண்ணா அண்ணான்னு நீ ரொம்ப பண்ற.” என்றாள்.
“நீ செஞ்சத விடவா? கையெல்லாம் யாரு மேலயும் நீட்டிப் பழகாத செம்பா. எல்லா நேரமும் அவங்க மேல தான் தப்பு இருக்கும்ன்னு சொல்ல முடியாது. சில நேரம் நம்மளும் தப்பா புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு. என் வாழ்க்கையை நான் தப்பா புரிஞ்சுக்கிட்டதுக்கு நா குடுத்த விலை உனக்கு தெரிஞ்சும் தப்பு பண்ணாத செம்பா.”
“பழசை எல்லாம் விடு மலரு, எனக்கே காலைல பொறுமையா யோசிக்கும் போது ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுது. அவன் என மேல கை வச்சாலும் கையெல்லாம் ஏனோ நடுங்கிட்டு தான் இருந்துச்சு. அப்ப அது அவன் தப்பு பண்ணதால வந்த நடுக்கம்ன்னு நினைச்சாலும் இப்ப யோசிக்கும் போது அந்த நடுக்கத்துக்கு காரணம் வேற இருக்கலாம்ன்னு தோணுது. “
“செம்பாவுக்கு எந்த மரத்தடியில உக்காந்து இந்த ஞானோதயம்?”
“மரத்தடி எல்லா இல்ல மலரு. விடியக்காலையில வானத்துல இருந்து வந்த தெளிவு”
“ஹும், வானம் உனக்கொரு போதி மரம்… ஏதோ தெளிஞ்சா சரி”
பேசியபடி இருவரும் நிற்க மின்சார ரயிலும் அவர்களை நெருங்கி இருந்தது.
ரயில் வந்து நின்ற போதும் அவனை அவர்கள் விழிகளால் தேட கண்களுக்குத் தெரியாத காட்சிப் பொருளாய் மாறினான் அந்த மாயவன்.