மாலை வீடு திரும்பும் போதும் பேருந்திலும் மீண்டும் ரயில் நிலையத்திலும் தேட அவனைக் காண வில்லை.
“அவன் Id கார்டு மேல அவனுக்கே அக்கறை இல்லை. நம்ம என்ன செய்ய? கொஞ்ச நாள் என் பையில இருக்கட்டும். கண்ணுல அவன் மாட்டல அப்பறம் குப்பைக்குத்தான்.”
அந்த அடையாள அட்டையின் கணம் அவளது மனதில் இன்று பாரமாய்.
“சும்மா இரு செம்பா. உனக்கு வர வர பொறுமையே இல்லாம போகுது ஏன்?”
“தெரியல மலர், எவனக் கண்டாலும் எரிச்சல் வருது.”
“இன்னைக்கும் அந்த விக்னேஷ் எதுவும் சொன்னானா? தெளிவா பேசிடு செம்பா, இல்ல வேற யாரையும் பேச சொல்லு.”
“வந்தான் வந்தான். வந்து நேத்து பேசினது தப்பு. மன்னிச்சிருன்னு சொன்னான். குழந்தை நம்ம கூட இருந்தா அம்மா அப்பாக்கு பிடிக்காது, அதுனால ஒரு வருஷம் மட்டும் ஹாஸ்டல்-ல விடலாம். அப்புறம் நம்ம குழந்தை வந்தா மறுபடி நம் கூடவே கூப்டுக்கலாம்… அப்படி இப்படின்னு இன்னும் என்னென்னவோ உளறினான்.
எல்லாத்தையும் கேட்டுட்டு, ‘நீங்க சொன்ன எல்லாம் நான் உங்களைக் கல்யாணம் செய்யிறதா இருந்தா பேசலாம். இன்னும் கூட நிறைய பிளான் எல்லாம் பண்ணலாம்.
ஆனா எனக்கு அப்டி எந்த விருப்பமும் இல்ல. அப்படி இருந்தாலும் நான் என் மனச மாத்திப்பேன். கண்டிப்பா எனக்கு நீங்க வேணாம்’ன்னு தெளிவா சொல்லிட்டேன். இனி ஒரு ரெண்டு மாசம் தாடியோட பாவமா சுத்திட்டு மூணாவது மாசம் வருவான்.
எப்படியும் நமக்கு ஒரு ரெண்டு மாசம் தொல்லை இல்லை. சோ குமுதா ஹாப்பி அண்ணாச்சி.” கண் சிட்டி அவள் சொன்ன பாவனை பக்கம் நின்ற மலரைத் தீண்டாமல் இவர்களுக்கு மறைவாய் நின்றிருந்தவன் கண்களில் விழுந்தது.
அவன் கண்கள் கண்ட காட்சியில், அவனின் நீலக் கண்கள் வைரமாய் மின்ன, தூரத்தே இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையில் ரசனையைக் கூட்டி மனதினுள் காதல் ரசம் கூடியது.
வாரம் இரண்டு கடந்தும் ஏனோ அவன் அவர்கள் கண்களில் சிக்கவும் இல்லை. அவளை நேரில் காணும் எண்ணமும் அவனுக்கு இல்லை.
அந்த அடையாள அட்டையில் அவனின் குறிப்புகள் ஏதும் அவள் கண்டிருக்கா விட்டாலும் அவனைப் பற்றிய நினைவுகளை அவளுக்கு அவ்வப்போது குறிப்புக் கொடுக்க கைப்பையில் அதன் இருப்பே போதுமானதாக இருந்தது.
தினமும் வேலைக்குச் செல்லும் போதும் திரும்பி வரும் போதும் அழையாமல் அவன் நினைவு வர சில நேரங்களில் அவளுக்கு மனதில் எரிச்சல் மூளும்.
அத்தகைய எரிச்சலோடு அவள் அன்றும் வீடு வந்து சேர்ந்திருக்க ‘அம்மா’ என ஓடி வந்து தினமும் அவளை ஆசையாய் கட்டிக் கொள்ளும் மகள் அன்று மௌனமாய் இருக்க செந்தில் ஏதோ அமைதியாய் படித்துக் கொண்டிருந்தான்.
வீட்டின் அசாத்திய அமைதியில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள் அறைக்குள் சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு உடை மாற்றி வரும் வரையிலும் இருவரிடமும் மாற்றங்கள் இல்லை.
அமைதியின் அர்த்தங்கள் எல்லாமே இனிப்பதில்லையே. ஆழிப் பேரலையாய் சில நேரம் நம்மைச் சூழும் அமைதி நம்மை அமிழ்த்திவிடுவதும் உண்டே.
அப்படி அவர்களின் அமைதி அவளையும் சேர்த்து மூழ்கடிக்கப் போவது அறியாமல்,
“செவ்வந்தி, யூனிபாம் கூட மாத்தலயா? டேய், நீயாவது மாத்தி விட்டிருக்கலாம் இல்ல.” என இருவரையும் கேள்வியாய் நோக்கினாள்.
“அக்கா, இனி நீயே அவளுக்கு துணி மாத்து. இல்ல அவளா அவளுக்கு மாத்திக்க சொல்லு. உன் பொண்ணு வளந்துட்டாளாம். இவளை நான் தொடக் கூடாதாம். நான் தொட்டா பேட் டச்-னு சொல்லுது உன் பொண்ணு. இவ நிக்கர் கூட போடாத வயசுல இருந்து இவளுக்கு நான் பார்த்துப் பார்த்து செஞ்சா… இவளுக்கு அப்பா வேணுமாம்.”
“செந்தில் என்ன டா இது?” என தம்பியை அடக்கியவள் மகளின் புறம் திரும்ப, அன்னையின் மடி தேடும் கன்றாய் ஓடி வந்து தாயை இறுக கட்டிக் கொண்ட செவ்வந்தியின் கண்ணீரை அவள் தன் அடி வயிற்றில் உணர செம்பாவின் இதயத்தில் ரத்தம் கசியும் உணர்வு.
மெல்ல மகளின் தலை கோத கண்ணீரோடு நிமிர்ந்தவள் “அம்மா அப்பா தவிர மத்தவங்க யாரையும் நமக்கு டிரஸ் மாத்த சொல்லக் கூடாதுன்னு டீச்சர் சொன்னாங்கம்மா. அதுக்கு தான் நானும் சொன்னேன். எனக்கும் சீக்கிரம் அப்பா வருவாங்க தானே. ஆனா நிவேதா, பிரின்சிக்கு எல்லாம் ஏற்கனவே அப்பா இருக்கும்மா. எனக்கும் சீக்கிரம் அப்பா வேணும்மா.” என்றவள் மேலும் அழுகையில் தேம்ப,
“பாப்பு, அப்பா சீக்கிரம் வருவாங்கடா. வரும் போது ரெயின்போ யுனிகார்ன் கிப்ட் கிடைக்கும் பாப்பாவுக்கு. நீங்க,” செம்பா மேலும் சமாதானம் செய்ய நினைக்க, செந்தில் தன் சுயம் இழந்திருந்தான்.
மகளாய் வளர்த்த பெண் குழந்தை தன்னை அந்நிய ஆடவனாய் எண்ணி ஒதுக்கிய வலி, அவனுள் ஆறு வருடங்களாய் அவன் அடக்கிய துன்பங்கள் என மொத்தமும் அவனின் மூளையில் முட்டி மோத, இதயம் கொண்டு இதம் சேர்த்த உறவுக்குள் விஷம் தோய்ந்த அம்பாய் விழுந்தன வார்த்தைகள்.
“ஆமா நீ இவளையே கொஞ்சிக் கொஞ்சி உன் வாழ்க்கையும் சேர்த்து கெடுத்துக்க. உன்னைத் தேடி வர்றவனை எல்லாம் நீ இவளுக்காக வேணாம்ன்னு சொல்லு அப்பறம் எப்படி வரும் இவளுக்கு அப்பா?
இல்ல பச்சப் பிள்ளைன்னும் பார்க்காம இவ கைல கால்ல இருந்ததையும் கழட்டிகிட்டு ஓடிப் போன, ச்ச ஓடிப்போன அந்த நாயை நான் ஏன் சொல்லணும்? அது விட்டுட்டுப் போன அன்னைக்கே இவளை நீ வேண்டாம்ன்னு சொல்லிருந்தா, இன்னைக்கு இவ என்னை” அவன் பேசிக்கொண்டே போக,
அவன் பேசத் தொடங்கும் போதே மகளை தள்ளி நிறுத்தியவளின் கைகள் இடியென அவன் கன்னம் தொட, அதிர்ந்து நின்றான் அவளின் தம்பி.
“இனி ஒரு வார்த்தை நீ பேசாத. அமைதியா தோட்டத்துல போய் கண்ண மூடி உட்காந்து 108 ஸ்ரீ ராம ஜெயம் சொல்லு.”
மீண்டும் மகளை மெல்ல சமாதானம் செய்து, தந்தைக்கு நிகரானவன் அவளின் மாமா என அந்த சின்னஞ்சிறு மொட்டிற்கும் விலக்கினாள். இன்றைய சச்சரவுகளின் விலையாய் நாளை சனிக் கிழமை அவளை அவளின் ஆதர்ஷ நாயகனின் படத்திற்கு அழைத்துச் செல்வதாய் வாக்களித்தாள்.
பின்பு தம்பியைத் தேடி சென்றவள் அவனையும் சமாதானம் செய்தாள்.
கட்டுக்கடங்காத கோவம் மட்டுமல்ல கட்டுப்படாத எந்த உணர்வும் உறவுகளுக்குள் காயங்களை மட்டுமே தரும் என செந்திலுக்கு விளக்கியவள் அறியவில்லை அப்படி ஒரு காயம் தன்னாலும் ஒருவன் கூடிய விரைவில் பெறுவான் என.
இரவில் சூழ்ந்த இருளெல்லாம் விடியலில் ஓடி ஒளிர்வதைப் போல் இவர்களின் பிணக்கும் விடியலில் எங்கோ சென்று மறைந்திருந்தது.
அன்று காலையிலேயே புன்னகை பூசிய அந்த அழகிய முகத்தில் மேலும் ஒப்பனைகள் பூசி ஒரே பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.
“என்ன செவ்வந்தி, உங்க ஹீரோ படம் பாக்கப் போற ஜோருல ஜரூரா கிளம்புற போல. கார்த்தி ஹீரோ இல்ல மா, ஜெயம் ரவி தான் ஹீரோ.”
“அம்மா பாரும்மா மாமாவை, இதையே சொல்றாங்க காலைல இருந்து. எனக்கு படம் பிடிக்கும் தானேம்மா.” பாவமாய் கேட்ட மகளை வாஞ்சையாய் பார்த்தாள் செம்பா.
“என் செல்ல குட்டிக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் மாமாவும் ராக்கி சினிமாஸ்ல படம் பார்த்துட்டு வருவீங்களாம். அதுக்குள்ள அம்மாவும் கோவிலுக்கு போயிட்டு வருவேனாம். சரியா?” என கொஞ்சியபடி மூவரும் திருவள்ளூர் நோக்கி பயணப் பட்டனர்.
அந்தப் பயணம் அவளின் வாழ்வில் இன்னும் பல வண்ணம் சேர வழி வகுக்கும் என அவள் அப்போது அறியவில்லை.
மகளும் தம்பியும் திரைப்படம் பார்க்க சென்றுவிட செம்பா தன் மனதின் நிறை குறைகளை எல்லாம் வழக்கம் போல் வீர ராகவரிடம் முறையிட்டாள்.
நேற்றைய நினைவில் மனதின் சஞ்சலங்கள் சூழ முதலில் அவள் தன் தம்பியை தான் கை நீட்டி விட்டதை எண்ணி மனம் நொந்தவள் அவன் சிதறிய வார்த்தைகளையும், அதில் வெளிச்சமிடப் பட்ட அவளது சிதறிய வாழ்க்கையும் நினைக்கையில் அவளை சற்றே தளரச் செய்தாலும், மீண்டும் மனமுறுக வீர ராகவப் பெருமாளை வேண்டி சன்னதியில் இருந்து வெளியில் வந்தாள்.
வெளியில் வந்தவள் கண்டது அங்கே தன் அன்னையுடன் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தவனை மட்டுமே.
வேகமாக அவர்களின் அருகில் செல்ல எண்ணியவள் அவனை எப்படி அழைக்க என சற்றே தயங்கியவள் கைப் பையிலிருந்து அவனின் அடையாள அட்டையை எடுத்து பெயரைக் காண அவளின் கண்களில் சட்டென ஒரு மின்னல்.
‘அவனை பார்த்ததும் பேரு வச்சாங்க போல’ எண்ணியபடி அவனை மெல்லிய குரலில் அழைத்தாள்.
அவளின் குரலில் திரும்பியவன் முகத்தில் அவளைக் கண்டதும் விரிந்த புன்னகை.
அவனின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்தாலும் அவனின் மனதினுள் மத்தாப்பு தான்.
“அம்மா, இவங்க என் பிரண்ட். அம்பத்தூர்ல தான் வேலை செய்றாங்க. பேரு, ” என அவளின் முகம் பார்க்க,
“செம்பாம்மா, செம்பவளம்.” என்றால் அவனின் அன்னையைக் கண்டு புன்னகையாய்.
“நல்ல பேரும்மா. எந்த ஊரு?” என விசாரித்தவரிடம் அவளின் குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமலே அவர்களை பற்றி மட்டும் அறிந்து கொண்டாள்.
நிகழும் பொழுதே சில நிகழ்வுகளை நம் உணர்வுகள் உணர்ந்தால் பின்னாளில் பேரதிர்ச்சி என்பதை தவிர்க்கலாம் என ஏனோ அவன் அன்று அறிந்திருக்கவில்லை.
“எல்லாம் சரிம்மா, பிரண்ட்ன்னு சொல்லிட்டு ஏன் இன்னும் முழுப் பேர் சொல்றம்மா? ஏன்டா உன்னோட வரலாறு சொல்லலையா?” என்றவர் சொன்ன வரலாறை இதழ் நீண்ட புன்னகையுடன் கேட்டிருந்தாள்.
“அம்மா போதும் ப்ளீஸ். வாங்க” என்றவனின் நீல நயனங்களில் தன் கரு கரு விழிகளைக் கலக்க விட்டவளின் மனதினுள் வைரமுத்துவின் வரிகள் வண்ணச் சிதறலாய்.