வண்ணம் 1.1 சிவப்பு
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்
ஈரேழுலகமும் எனக்குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காய்
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக
செம்பவளம் காலையில் குளித்து வந்ததும் கடவுளை வணங்கி என்றும் கேட்கும் கந்த சஷ்டி கவசம் என்றாலும் இன்று இந்த வரிகள் கடக்கையில் ‘நல் உறவுகள் வேண்டும் எங்களது வாழ்விலும்’ என்று மனமுறுக ஆழமாய் இறைவனைப் பிராத்தித்துக் கொண்டாள்.
பிறந்ததிலிருந்து திருவூரில் தான் இவர்களின் குடும்பம் வசிக்கிறது. சொந்தம் என பெரிதும் இல்லாவிட்டாலும் திருவள்ளூரில் தந்தை வழி உறவாக அத்தை குடும்பம் வசிக்கிறது. மற்றபடி அக்கம் பக்கம் இருக்கும் குடும்பங்கள் தான் இவளின் உறவுகள்.
அதன் தாக்கம் அவளுக்குள் என்றுமே உண்டு. துவண்டு விழும் பொழுதுகளில் தாங்கிப் பிடிக்கவென உறவுகள் இல்லாமல் தாங்கள் சுயம்புவாக வாழ்ந்தாலும் சிறு ஏக்கம் என்பது என்றுமே அவளுள் உண்டு.
மனம் பாடலில், கடவுளில், உறவுகளில் என எங்கும் வியாபித்து இருந்தாலும் கைகள் என்னவோ துளி பிசகில்லாமல் சமையலறையில் வண்ணங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தது.
“என்னக்கா இன்னைக்கு சீக்கிரமே சமையல் செய்ய ஆரம்பிச்சுட்ட?” கேள்வியோடு எழுந்து வந்தான் செந்தில்.
“செவ்வந்தி பாப்பாவுக்கு இன்னைக்கு பொறந்த நாளாச்சே, காலைல வேலைக்கு போக முன்னாலே கோவிலுக்கு போயிட்டு போகலாம் டா. அதான் அவசரமா சமையல் முடிக்கிறேன்.”
கடந்த ஐந்து வருடங்களாக இந்த நாள் இவர்களின் துக்கங்கள் தொலைந்து உயிர்த்தெழ செய்ய உரமிடும் நாள். இதை இன்று மகிழ்வுடனே கடக்கின்றனர்.
“ஹ்ம்ம் சரிக்கா. காப்பி போட்டு தாக்கா. குடிச்சுட்டு, கொஞ்சம் படிக்க வேண்டியது இருக்கு. நா ஒரு அரை அவர்ல குளிக்க போறேன்”
“ஏன்டா படிக்க இருந்தா நேத்து ஏன் வேலைக்குப் போன? இனி உனக்கு நான் சொல்ல மாட்டேன். காசுக்காக உன் படிப்பை விட்றாத.”
“க்கா, அதெல்லாம் சப்ப மேட்டர் சால்ட் வாட்டர், நா பாத்துக்குறேன் நீ பேஜாராவாத.”
“சரி டா, பாப்பா முழுச்சுட்டா என்னை கூப்புடு.” என்றவள் கவசம் முடிந்து அடுத்து தொடங்கிய கிருஷ்ண கானத்தை தானும் பாடியபடி மகளுக்கு பிடித்தவைகளை சமைக்கத் தொடங்கினாள்.
அதிலும் நேற்று அவள் ஆசையாய் கேசரி கேட்டிருக்க, அதையும் தயாரித்திருந்தாள்.
தன் செவிக்கு உணவளித்து அவள் அனைவரின் வயிற்றுக்கு உணவு தயாரிக்க மகள் ‘அம்மா’ என அழைக்கும் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டதும் இரண்டு அடுப்பிலும் தீயைக் குறைத்தவள் வேக நடையிட்டு உள்ளறைக்குள் நுழைந்தாள்.
“பாப்பு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா.” கூறியபடி செவ்வந்தியின் அருகில் சென்றவள் பாயில் அவளருகில் மண்டியிட்டு நெற்றியில் முத்தமிட்டாள்.
“ம்மா,” என அவளும் கட்டிக் கொண்டவள், “நானும் இனிமே பெரிய பொண்ணும்மா, இன்னைக்கு எனக்கும் ஆறு வயசாச்சு” என்றவள் குரலில் இப்பொழுது பெருமிதம் மட்டுமே.
“ஆமா, இந்த செவ்வந்திப்பூ இனி பெரிய பாப்பா, அதனால இனி இந்த பொம்மை எல்லாம் கேக்க மாட்டா செம்பாக்கா, ரைட்டா?” என்றபடி வந்த செந்திலை முறைத்தவள்,
“போ மாமா. அதெல்லாம் எனக்கு வேணும். அம்மா சொல்லும்மா” எனச் சிணுங்கினாள்.
“சீனப் போடாத டி. மாமாக்கு பொறந்தநாளுக்கு என்ன ட்ரீட்? அதை சொல்லு” மீண்டும் வம்பிழுத்தான் அவளின் மாமன்.
“அம்மா கேசரி செய்வோமா? இனி நானு உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன். ஆமா சொல்லும்மா.” என்று அன்னையையும் துணைக்கு அழைத்தாள்.
“என்ன காண்டு டி ஏன் மேல? நீ செஞ்ச கேசரியா?அவ்வ்” கை கொண்டு வாயை பொத்திக் கொண்டவன் அறையை விட்டு வெளிநடப்பு செய்திருந்தான்.
“ம்மா, பாரும்மா மாமாவ.” முறையிட்டாள் செம்பாவின் செவ்வந்தி.
“செவ்வந்தி பாப்பா, நீங்களா பல்லு தேச்சுட்டு வந்தா பிக் கேல்ன்னு மாமா சொல்லுவான். போங்க பாக்கலாம்.” என்று மகளைக் கழிவறைக்கு அனுப்பியவள் அவளின் படுக்கையை மடித்து வைத்து விட்டு மீண்டும் சமையலறைக்குள் புகுந்தாள்.
நேரம் கடக்கத் தம்பியும் மகளும் பள்ளி கல்லூரி செல்ல நேரம் நெருங்க அவளும் பணிக்குச் செல்லத் தயாரானாள்.
கோவிலுக்குச் செல்ல எண்ணியதால் இன்று பாலி சில்க் வகை சிவப்பு வண்ண தங்க ஜரிகையிட்ட சேலை மாற்றி வந்தாள்.
அறையை விட்டு வந்தவள் வம்பு செய்தபடி படித்துக் கொண்டிருந்த தம்பியையும் மகளையும் கண்டவள் மனதில் ‘இவர்கள் மட்டுமே என் சொந்தம்’ என மீண்டும் ஒரு முறை பதிய வைத்துக் கொண்டது.
ஒரு பெரு மூச்சுடன் மக்களிடம் வந்தவள், “செவ்வந்தி, அம்மா உன் ப்ரெண்ட்ஸுக்கு மட்டும் ஸ்வீட் தரேன். கிளாஸ்ல வேற யாருக்கும் சொல்ல வேணாம் என்ன?” மனம் கணக்க மகளிடம் முறையிட்டாள்.
“ம்மா, இன்னைக்கும் சாக்லட் குடுக்காட்டி எல்லாரும் கேப்பாங்கம்மா” உதடு பிதுக்கினாள் மகள்.
கண்ணீர் சிந்தும் மகளுக்கு அம்மாவின் கைப்பை கணம் தெரியாதே.
“உன் ப்ரெண்ட்ஸ் மட்டும் தானே கேப்பாங்க. அவங்களுக்கு எல்லாம் குடுக்க அம்மா ஒரு டிபன் பாக்ஸ்ல கேசரி தரேன். ஷேர் பண்ணி சாப்டுவியாம். அப்பத்தான் அம்மா உனக்கு சாயந்தரம் கேக் வாங்கி தருவேன்” என மெல்ல பேரம் பேசினாள்.
கேசரி எனும் மந்திரச் சொல்லில் கட்டுப் பட்ட குழந்தை மெல்லச் சரி என்றிட அடுத்த அணுகுண்டை வீசினாள்.
“பாப்பா இந்த புது டிரஸ் கோவில்ல சாமி கும்புடற வரை போட்டுக்குங்க. அப்புறம் அம்மாவ டேஷன்ல விட்டுட்டு வந்து யூனிஃபார்ம் மாத்திட்டு போகணும் என்ன?”
“யூனிஃபார்மா??? அம்மா புது டிரஸ் போட்டுட்டு வருவேன்னு நிவேதாக்கு சொல்லிடேன்ம்மா. ப்ரின்சியும் கேப்பம்மா” என செவ்வந்தி முறையிட இவ்வளவு நேரம் பார்வையாளனாக இருந்த செந்தில் காப்பாற்ற வந்தான்.
“செவ்வந்தி, உனக்கு புரியலயா. நீ யூனிபார்ம்ல போனாதான் உன் கிளாஸ் பசங்கள ட்ரிக் பண்ணலாம். இல்லாட்டி எல்லாரும் சாக்லட் கேப்பாங்க. நீ உன் ப்ரெண்ட்ஸ்க்கு செம்பாக்கா செஞ்ச கேசரி குடுக்க முடியாது.” எனக் குழந்தையை தங்கள் பக்கம் திருப்பினான்.
அரை மனதாய் செவ்வந்தி சம்மதிக்க மூவரும் தயாராகி ஸ்ரீ சிங்காண்டீஸ்வரரை தரிசிக்கச் சென்றனர்.
சிங்காண்டீஸ்வரரின் முன்பு கை கூப்பி நின்றவள் கண்களுக்குள்ளும் மனதிலும் வாழ்வின் முக்கிய பக்கங்கள் எல்லாம் வந்து வந்து போக ‘எப்பொழுதும் போல் இன்றும் எங்களுக்கென நல்ல உறவுகள் கொடு’ என மனதார வேண்டிக் கொண்டாள்.
அக்காவும் தம்பியும் பிரகாரத்தில் அமர்ந்து கொள்ளச் செவ்வந்தி வழக்கம் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அக்காவின் முகத்தையே செந்தில் தயங்கித் தயங்கிப் பார்க்க, “என்ன டா செந்தில்? என்கிட்டே எதுவும் சொல்லனுமா?”
“இல்ல க்கா, அது … ” என நீட்டி முழக்கியவன் “பாப்பா கேக் கேட்டாக்கா. நேத்து சம்பளம் கிடைக்குமான்னு பார்த்தேன். ரமேஷண்ணா கேட்டும் அட்வான்ஸ் கூட குடுக்கலாக்கா.” என்றவன் தலையைத் தொங்கப் போட
“அம்மா படத்துக்கு கீழ 500 ரூபா வச்சுட்டு வந்தேன் டா. சொல்ல மறந்துட்டேன். போனதும் எடுத்துக்க. சாயந்தரம் அவளை கூட்டிட்டு போயி கேக் வாங்கிட்டு வந்துரு.”
“எதுக்குக்கா 500 ரூபா? இந்த மாசம் வட்டி வேற இன்னும் குடுக்கலயே?” என்றவன் குரல் கசங்கியது.
“இல்ல டா, அதுக்கு தனியா எடுத்து வச்சுட்டேன். இது இன்னைக்கு செலவுக்குன்னு நான் சேர்த்து வச்சது. அன்னைக்கு நின்னோமே அவ அழுது கத்தும் போதும் சாப்பாடு குடுக்கக் கூட வழி இல்லாம, கைல காசும் இல்லாம அந்த நிலைமை இனி ஒரு தரம் நமக்கு வரக் கூடாது.”
“ஹ்ம்ம், இன்னும் ஒரு வருஷம் செம்பாக்கா. எப்படியும் எனக்கும் ஒரு வேலை எடுத்தா போதும்.”
“அதுக்கு நீ நல்லா படிக்கணும் டா. அன்னாடம் ரமேஷ் அண்ணா கடையாண்ட இருக்க. எப்படி இந்த டிகிரி முடிப்ப?”
“சரிக்கா எக்கா, வா போகலாம். உன்ன டேசனாண்ட இறக்கி விடறேன். ” என்றவன் செவ்வந்தி செம்பாவுடன் தனது டிவிஎஸ் எக்ஸெல் பைக்கை செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் நோக்கி செலுத்தினான்.
ரயில் நிலையத்தில் இறங்கியவள் மகளின் உச்சியில் முத்தமிட்டு “சந்தோஷமா இருக்கணும். அம்மா சாயந்தரம் வந்ததும் கேக் வச்சு கொண்டாடலாம்.” என சொல்லி ரயில் நிலையம் வந்தவள் தம்பியையும் மகளையும் வீட்டிற்கு அனுப்பி இருந்தாள்.
செம்பவளம், இருபத்து மூன்றே வயதில் மகள் தம்பி என குடும்ப பாரம் எல்லாம் இழுத்து சுமந்தாலும் அந்த சுமை என்றுமே அவளுக்கு சுகம் தான்.
அவளால் சுமக்க முடியாதது, இலை மறை காயாய் இவர்கள் வாழ்வில் இணைந்து இருக்கும் வறுமை.
நிறைவான மகிழ்வுக்குப் பணம் அவசியம் இல்லை என்றாலும், பல நேரங்களில் பணம் இல்லாமல் வாழ்வில் மகிழ்ச்சி நிறையாமல் சென்ற நிமிடங்களும் உண்டு.
அந்த வறுமை பணத்தில் மட்டுமல்லாது குடும்ப உறவுகளிளுமாகிப் போக இதோ இன்று வரை தொடர்கிறது இவளின் போடாட்டங்கள்.
இவள் வாழ்க்கை இவளுக்கு கற்றுக் கொடுத்ததெல்லாம் நின்று போராடும் குணம். இவள் செம்பவளம் மட்டுமல்ல, ‘போராடும் தேவதை’யும் கூட.