“மொத அம்புட்டு சோலியவும் முடிச்சு போட்டு வீடு வாரும், பேசிக்கிடுதன்…” என அவரும் கிளம்பி செல்ல அதுவே அவர் எத்தனை கோபத்தில் உள்ளார் என்பதை காட்டிக்கொடுத்தது.
கங்காணியின் கோபம் எல்லாம் தேனரசன் மீது திரும்ப அடுத்த முறை வேலைக்கு வந்தால் சேர்க்கக்கூடாது என்ற முடிவுடன் கணக்கு நோட்டுடன் நடையை கட்டினார்.
வேலை இல்லை என்று அவனிடம் தான் சொல்லிவிட முடியுமா? இல்லை அவனும் தான் விட்டுவிடுவானா? சலிப்பாக இருந்தது கங்காணிக்கு.
எத்தனை மட்டம் தட்டியும் வீறுகொண்டு தங்களுக்கு மேல் எழுந்து நிற்பவனை என்ன செய்தும் அடக்க முடியவில்லை.
ஒரு விஷயம் அவனுக்கு எதிராக செய்தால் அதற்கு பத்துமுறை எண்ணி எண்ணி வருந்த வைத்துவிடுவான்.
“இந்த பொறப்புக்கே இந்த பாடு? நல்ல பொறாப்பாச்சுன்னா?…” என யாருக்கும் கேட்டுவிடாமல் முணுமுணுத்துக்கொண்டு தவராசன் வீடு நோக்கி நடந்தார்.
அதற்குள் தேனரசன் சம்பள பணத்துடன் வீடு வரும் வழியில் சமையலுக்கு தேவையானவற்றை கடையில் வாங்கிக்கொண்டான்.
மனது தன்னைப்போல அவனிடம் இருக்கும் சேமிப்பின் கணக்குகளை சரிபார்த்துக்கொண்டது.
இன்னும் முன்னூறு ரூபாய் சேர்ந்துவிட்டால் பணத்தை தனது வங்கி சேமிப்பில் கட்டிவிடலாம் என முடிவுடன் வீட்டை திறந்தான்.
காலை வேலைக்கு கிளம்புகையில் பூட்டிவிட்டு சென்ற இல்லம். அதற்குள் திறந்திருந்த முன்பக்க ஜன்னல் வழியாக ரோட்டின் தூசுகள் எல்லாம் காற்றினால் வீட்டிற்குள் அடித்து வீசப்பட்டிருந்தது.
“காலேலதேம் மொழுவிட்டு போனன். இப்ப இம்பிட்டு செத்த(குப்பை)…” என பேசிக்கொண்டே வெளிக்கதவை சாற்றி வைத்துவிட்டு வாங்கிவந்ததை அடுக்களையில் வைத்துவிட்டு உடை மாற்றி வீட்டை பெருக்க சென்றான்.
“லே அரசா….” வெளியில் இருந்து சத்தம் கேட்டதும் அப்படியே வெளியே சென்றான்.
ஏற்றி கட்டிய லுங்கியும், தலையில் தலைப்பாக்கட்டும், கையில் பெருக்குமாரும் என சென்று நின்றவனை பார்த்ததும் வாஞ்சையாக புன்னகைத்தார் பொன்னியம்மாள்.
தேனரசன் தகப்பனின் உடன் பிறந்தவரான வைரமுத்துவின் மனைவி பொன்னியம்மாள்.
பெயருக்கு ஏற்றார் போல அவரின் மனதும் பொன்னால் ஆனது என பலமுறை நினைத்து சில்லாகித்திருக்கிறான்.
ஆனால் எந்த சூழ்நிலையிலும் பொன்னியை தனக்கு ஏன் இப்படி ஒரு தாய் அமையவில்லை என்று அந்த மனித ஜென்மத்துடன் ஒப்பிட்டு மட்டும் பார்த்ததில்லை.
இத்தனை வருடத்தில் அவன் சோர்ந்த நேரங்களில் தோள் கொடுத்து தாங்கிப்பிடிக்கும் மனிதி.
அவரை தாய் என்னும் எல்லைக்குள் அவன் என்றுமே அடக்கியதில்லை.
அதற்கும் மேலான ஒரு ஸ்தானம் உண்டு என்றால் அதற்கு ஒப்பானவர் இந்த பொன்னி என்பது அவனின் எண்ணம்.
இப்போதும் அவன் வந்துவிட்ட அரவத்தில் தன்னை தேடி வந்தவரின் அன்பில் நெக்குருகி நின்றான் தேனரசன்.
இந்த ஊரில் அவன் கட்டுப்படும் ஒரே ஆள் பொன்னி மட்டுமே. அவரின் அன்பு மட்டுமே.
“சேரி கெடக்கட்டும், ஒலைய வெக்காதய்யா. அத சொல்லத்தான் வந்தன்….” என பொன்னி சொல்ல அவரை பார்த்து சிரிப்புடன் தலையசைத்தவன்,
“வாரப்பவே காயெல்லாம் வாங்கிட்டனே? வேணா சின்னம்மா….” என மறுத்தான் தேனரசன்.
“அங்க அவன்கிட்ட என்ன நாயமடிக்கித? கொண்டுபோவன்னா போவேன். கேட்டுக்கிட்டு நிக்கிதா கோட்டிக்கழுத…” பக்கத்துக்கு வீடான அவர்கள் வீட்டு திண்ணையில் நின்று குரலை செருமிய வைரமுத்து பொன்னியை அதட்டினார்.
அவரின் அதட்டலை பார்த்ததும் பொன்னி அரசனிடம் இறைஞ்சும் பார்வை பார்க்க மறுப்பாய் தலையசைத்தான் தேனரசன்.
எத்தனை வருடங்கலாகிற்று. இன்று அவன் உண்ணமாட்டான் என தெரிந்தும் ஒவ்வொரு முறையும் அவரால் கேட்காமல் இருக்க முடிந்ததில்லை.
அன்றைய தினம் தேனரசனின் தகப்பனான தங்கப்பனின் நினைவு நாள். அவர் மறைந்து எத்தனை வருடங்கள்.
அரசனின் பிடிவாதம் அசைக்க முடியாததாக இருந்தது. அதிலும் முகத்தில், கோபத்தையோ, வெறுப்பையோ கட்டாத ஒரு வெறுமையான புன்னகையுடனான மறுப்பு.
நெஞ்சே விட்டுப்போகும் பொன்னிக்கு. இப்படி மகனுக்காகவும் கூட இல்லாமல் தன் முடிவை தேடிக்கொன்டாரே என்று.
“கொள்ள சோலி கெடக்கு சின்னம்மா. போயி அவர என்னன்னு கவனி….” என்று தன் வீட்டிற்குள் சென்றுவிட்டான் தேனரசன்.
அரசன் சென்றதும் மனது கேளாமல் அவனின் பின்னே வீட்டிற்குள் வேகமாய் வந்தார் பொன்னி.
“என்ன சின்னம்மா? என்ன சேதி?…” என அவரின் நாடி பிடித்து சொல்வதை போல மனதை அறிந்து கேட்டுவிட,
“யே ராசா….” என்று அவனின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.
“சின்னம்மா….” என அவரின் செயலில் அடக்கமாட்டாமல் சிரித்தான் அரசன்.
“எம்புட்டு கண்ணடி பாரேன்…” என மகனின் முகத்தை ஆசையாய் பார்க்க,