“இல்லைய்யா, கவர்மெண்டு பரிச்ச எழுதிருக்கியான்ல. அதுக்குத்தேன் காச ஒத்த பைசா விடாம சேக்குதியான். கூப்புடற எல்லா வேலைக்கும் போறது அதுக்காண்டிதேன்…” என்றவர்,
“ஒங்கிட்ட சொல்ல என்ன? இந்த பரிச்சையில வேல கெடச்சிருமின்னு நெனைக்குதியான். கெடச்சிட்டா காச குடுத்தாச்சும் இந்த ஊருக்கே வேல பாக்குதாப்ல பதவிய வாங்கிப்போடனுமின்னு கங்கனங்கட்டிட்டு இருக்கான். அதேன் ஒத்த ஒத்த காசா சேத்துக்கிட்டு இருக்கான்…”
வைரம் சொல்ல சொல்ல அவரின் முகம் மகனின் அயரா உழைப்பில் கர்வத்துடன் இருந்தது.
“என்னய்யா நீயி? தெரிஞ்சுக்கிட்டே கேக்குதியே? எங்களுக்குள்ள பேச்சுவார்த்த இந்த மூணு வருசமாத்தேன் இல்ல. அதுக்கு முன்னருந்தே எங்க கிட்ட என்னத்துக்கும் அரசன் நின்னதில்ல. குடுத்தாலும் வாங்கமாட்டியான்…”
“என்னவோ சொல்லுதீரு, இம்புட்டு வெடச்சிக்கிட்டு திரிஞ்சு இந்த ஊருக்கே அதிகாரியா வாரானாக்கும். வரட்டும். பாப்பம்…” என்ற வைத்திக்கு தேனரசன் குறித்தான பார்வையில் சிறு மாற்றம்.
ஆனாலும் இந்தளவிற்கு ஒருவன் தன்னை மட்டுமே நம்பி இருப்பது, உறவுகளிடம் கூட வளைந்து செல்லாமல் என்ன மனிதனோ என்று எண்ணிக்கொண்டான் வைத்தி.
ஒருவகையில் அவனின் தன்மானமும், சொந்தமாகேவே இருந்தாலும் அவர்களிடம் நிமிர்வுடன் இருப்பதும் வைத்தியின் மனதை தொடத்தான் செய்தது.
ஆனாலும் அதை உணர்ந்துகொள்ள விரும்பவில்லை வைத்தி. உழைப்பாளி என்பதற்கு மேல் திமிர் பிடித்தவன், அகம்பாவக்காரன், மதிக்க தெரியாதவன் இப்படிதான் தேனரசனை முத்திரை குத்தி வைத்திருந்தான். இப்போதும் வைத்திருக்கிறான்.
வந்த வேலையும் முடிந்து தேனரசனிடம் வாங்கியும் கட்டியாகிற்று. இப்போது யோசித்தான் அவனை திருப்பி நன்றாக பேசியிருக்கலாமோ என்று.
இதில் சிரிப்பு வேறு தோன்றியது வைத்திக்கு. அவன் பேசவும் தான் அமர்ந்திருந்த விதத்தில் தேனரசனும் தன்னை பார்த்த பார்வையில் தன்னை என்ன நினைத்திருப்பான் என்று.
வீட்டிற்கு வந்து கயல்விழியிடம் விஷயத்தை சொல்லியவன் தேனரசனையும் பற்றி பேச்சுவாக்கில் சொல்ல,
“அதெல்லாம் வேல கெடைக்கும் பாருங்க மாமா. வேண்டி பொங்க வச்சது நம்ம மணியாச்சே?….” என்று உளறி வைக்க,