“யே ராசா, வாங்க போறியா?….” என்ற பொன்னியின் கண்கள் வெளிச்சத்தை கூட்டியது.
“ஆமாத்தா, நல்லாருக்கா? ஒம்மவன் விசேசத்துல மோட்டார் சைக்கிள்லதேன் நாம போறம்….” என தேனரசன் புன்னகைக்க,
“நெசமாவா? நாமன்னா, நானுமாய்யா அரசா?….” என்று கேட்ட பொன்னியின் கண்கள் அந்த படங்களில் ஆசையாய் பதிந்தது.
“நானுமான்னா? பொறவு ஒம்புருசன ஏத்தவா? அந்த மனசென் அன்னிக்கு பேசினதுக்கு வாயில ஏத்திருவேன்….” என பல்லை கடித்தவன்,
“எனக்கொன்னுன்னா நீயில்லாமைய்யா சின்னம்மா?…” என்ற கேள்வியில் பொன்னியின் உள்ளத்தை போல கண்களும் கசிந்தது.
“நல்லாருக்கு ராசா. ஆனா இதுல என்னத்த சொல்ல? இத எனக்கு ஒண்ணுத்தையும் சொல்ல ஆவாதே? இது எம்புட்டுன்னு கூட தெரியாதுய்யா….” என்றவர் விரல்கள் எதை சொல்வதென தெரியாமல் தடுமாறியது.
“வெலைய நெனச்சி அஞ்சுதியோ?…” என்றான் பொன்னியின் முகம் கண்டு சிரிப்புடன் தேனரசன்.
பொன்னிக்கும் அதுவே சஞ்சலமாக இருந்தது. தான் எதையாவது சொல்லி அது தேனரசன் சக்திக்கு மீறியதாக இருந்தால்?
அதனாலே தேர்ந்தெடுக்க அஞ்சியவராக பொன்னி தயங்கினார். ஒவ்வொன்றும் அழகாக இருந்தது.
“இதுல காசு கூட கொறைய வந்தா கூட வாங்கத்தான. எங்கிட்ட இல்லன்னா மிச்ச சொச்சத்துக்கு ஒங்கிட்ட கேட்டுட்டு போறன். தரமாட்டியா என்ன?…”
“யே அரசனுக்கு இல்லாததாக்கும்?…” என்றவர் தன் மூக்கில் மாட்டியிருந்த இரு மூக்குத்தியில் ஒன்றை கழற்ற போக,
“இம்பினிக்கானு மூக்குத்தி, பெட்ரோலுக்கு கூட ஆவாதுத்தா…” என்றான் கிண்டலுடன்.
“வளவிய தரவா?….” என்றவர் முகம் வாடியது.
அது வைரத்தின் தாய் அவருக்கு போட்டுவிட்டது. ஆனாலும் அரசன் கேட்க இல்லை என்று சொல்லமுடியாமல் கழற்ற போனார்.
“ஏத்தா கொஞ்சமேனுட்டு சூதானமா இருக்க பாரன். பொசுக்குன்னு கழட்டுத?…” என்றவன்,
“சேரி, நானே கேக்குதேன், இது நல்லாருக்கா?….” என்று காண்பிக்க,
“அம்சமா இருக்குய்யா. இதுல வந்தா ராசாவாட்டம் இருப்ப. நெசத்துக்கே அரசன்தேன்…” என்றார் மனக்கண்ணில் அந்த வண்டியில் அரசனை அமர்த்தி பார்த்து சில்லாகிப்புடன்.
“ஒம்புருசெனுக்கு வாயில என்ன வசம்பா? கேக்கத்தான? மேலுக்கு சொவமில்லாத மனுசென் எம்புட்டத்தேன் பாப்பாராம்? இவேன் சொவுசா மொதனா வந்து தாலிய கெட்டி அந்த சிமித்திர கூட ஒலாத்த போறாகலாக்கும்?…” என எரிந்துவிழுந்தான்.
“ஒஞ்சின்னைய்யா கேக்கத்தேன் செஞ்சாவ. இந்த பெரியமனுசென் கதிரு போட்டவேந்தேன் அவென் சோலி ஒமக்கு, எனக்கு தெரியுமாக்கும்? போட்டு படுத்தாதீரும்ன்னு சொல்லிட்டியான். பொறவு எங்க மனுசென் வாப்பெட்டிய தொறக்க?…”
“ஆமாமா ஒம்புருசென் வாப்பெட்டி தொறவா மவனுக கையிலதேன் இருக்கு. நம்பிட்டேன்த்தா…” என சரிக்கு சரி பேச பொன்னி அயர்ந்து போனார்.
“எம்மவனுங்கட்ட எதுக்கு ஒத்துமையோ இல்லையோ இதுக்கு மட்டும் ஒன்னுதேன். அதட்டுததுல…” என்று சிரித்துக்கொண்டே பத்திரிக்கைகள் வேலையை முடித்தார்.
எல்லாவற்றிற்கும் மஞ்சள் தடவியாகிற்று. ஏற்கனவே அடித்து வாங்கிய பத்திரிக்கைகள் கொடுத்து முடித்தும் பத்தாமல் போக இப்போது இது மீண்டும் அடித்து வரவழைக்கப்பட்டது.
எல்லாம் உலர்ந்ததும் ஒவ்வொன்றாய் எடுத்து அடுக்கிய தேனரசன் பொன்னியிடம் கேட்பதா என யோசித்து பின்,
“யே சின்னம்மா, ஒம்மவனுக்கு இதுல எத்தன பத்திரிக்க அனுப்புன?…” என கேட்டான்.
“எங்க? அவேந்தேன் அவனே அங்க அடிச்சுக்குதேன்னு சொல்லிட்டியானே? இத எல்லா அவென் கூட வேல செய்யுதவியளுக்கு குடுக்க ஆவாதாம். கௌரதையா இருக்காதாம்…”
மெல்லிய வருத்தம் இழையோட பொன்னி சொல்லியதும் தேனரசன் முகத்தில் கனிவு.
“அப்ப அவிய சொந்தத்த கூப்புக்கட்டும். எனக்கு நீயி வந்தா போதுமாட்டிருக்கு சின்னம்மா. வேணுமின்னா ஒனக்கு தொணைக்கு ஒம்புருசென வர சொல்லிக்க. ஒம்புள்ளைய அவரு தொணைக்கு…”
இப்படி கிண்டலுடன் பேசி சிரித்தவன் சிரிப்பில் பொன்னியும் வாய் விட்டு சிரித்தார்.
“சேரி எப்ப பாரு சிப்பானி வேண்டிகெடக்குன்னு வந்துற போறாரு. காலம்பற பாப்பம்…” என அவரை கிளப்பியவன் தரணியை பார்க்க விளையாடிக்கொண்டிருந்த பிள்ளை அங்கேயே உறங்கியிருந்தான்.