“அதெதுக்கு எனக்குங்கேன்? வாங்க போறியான். அதுக்குத்தேன் வர சொல்லுதியான். மனசிருந்தா நீயளும் வரத்தான? இல்லாங்காட்டி ஒண்ணுமில்ல. நா போறன்…” என்ற பொன்னி கண்டுகொள்ளாததை போல உள்ளே சென்றுவிட்டார்.
“என்ன போயிட்ட? ஏத்தா நில்லு. இந்தாடி….” என பொன்னியின் பின்னால் வைரம் செல்ல பொன்னிக்கு அத்தனை சிரிப்பு.
“நாளைக்கி இங்கின சாமிய கும்பிட்டு போட்டு கெளம்புதேன்…” என்று சொல்லியவர் படுக்கையை விரித்து படுத்தேவிட்டார்.
“அவென் மதியாம சொல்லுவியான். நா போவனுமோ? எனக்கு வேற சோலி இல்லையாக்கும்?….” என பாதி இரவு வரை பொன்னியை எழுப்பி நினைத்து நினைத்து கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தார் வைரம்.
அவருக்கு அத்தனை சந்தோசம். மனமெல்லாம் நிறைந்துவிட்டது. அத்தனை சுலபமாக காசை இரைத்துவிடமாட்டான் தேனரசன்.
அவனுக்கு அரசாங்க வேலை கண்டிப்பாக கிடைத்துவிடும். அதே நேரம் வேலை எங்கே என்றும் தெரியவில்லை.
மனது கிடந்து தவித்தது வைரத்திற்கு. அன்று தான் பேசிய வார்த்தையில் தேனரசன் மருகி நின்ற பார்வை இப்போதும் நெஞ்சை அறுக்கும்.
பேசவில்லை என்றாலும் கண் முன் இருக்கிறான், போக வர பொன்னி இருக்கிறார் என நிம்மதியாக இருந்தவர் வேலை கிடைத்து அதுவும் வேறு ஏதேனும் ஊரில் கிடைத்தது என்றால் என்ன செய்வது என பதறிவிட்டார்.
“ஏத்தா யே பொன்னி, எந்தி புள்ள….” என எழுப்பிவிட்டார் வைரம்.
“அட ஆக்கங்கெட்ட மனுசா? ஒம்மக்கிட்ட செத்த குறுக்க சாய ஆவுதாய்யா?….” என சத்தமிட்டுவிட இப்போது எதற்கு எழுப்பினோம் என்பதே மறந்து பயந்து போனார்.
“யாத்தே என்னத்தடி சொல்லுத? ஆராச்சும் கேட்டா என்னிய என்ன நெனப்பாவ? எவ்வயசுக்கு…” என கலங்கி போய் பார்க்க பின்பு தான் தான் சொல்லியதே பொன்னிக்கு புரிந்தது.
“ஒம்ம வாப்பெட்டிய சாத்தல பொறவு இருக்கு ஒமக்கு சேதி. கோட்டித்தனமா பேச்ச பாரு கெழவனுக்கு…” என தலையில் அடித்துக்கொண்டு எழுந்து முன்பக்கம் திண்ணையில் வந்து படுத்துவிட்டார் பொன்னி.
“பொன்னி…” என அவரின் பின்னே வந்தவர் மெதுவாக அழைக்க,
“என்னன்னு சொல்லுங்க சாமி….” என எழுந்து அமர்ந்துவிட்டார்.
“நெசத்துக்குன்னே என்னமின்னு மறந்துருச்சுத்தா. சேரி ஒறங்கு…” என்று உள்ளே சென்றவரை பார்த்து தலையில் அடித்துக்கொண்டார் பொன்னி.
காலை வெளியே வாசல் தெளிக்கும் சத்தத்தில் எழுந்துகொண்டார். எழுந்ததில் இருந்து வேலைகள் பரபரவென துவங்கிவிட்டது.
முகூர்த்தக்கால் ஊன்றுவதற்கான தானியங்கள், அதன் பூஜை பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து தயாராக இருந்தனர்.
சரியாக ஊன்றும் நேரம் தேனரசனும் வந்துவிட்டான். அவன் வந்ததுமே தரணி ஓடிவந்து சித்தப்பனின் கையை பிடித்துக்கொள்ள நிம்மதி பெருமூச்சுடன் குழலியோடு சேர்ந்து பூஜையை ஆரம்பித்தார் பொன்னி.
வெண்மணியின் வீட்டிலிருந்து வைத்தியும், கயல்விழியும் வந்திருந்தார்கள். அவர்கள் வீட்டிலும் அன்று அதிகாலையே முகூர்த்தக்கால் ஊன்றியாகிவிட்டது.
இப்போது இங்கே வந்திருக்க தானியங்களை ஒவ்வொருவராக வந்து தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் நிறைத்தனர்.
தேனரசனும் வந்து தானியத்தை தரணியுடன் சேர்ந்து அதில் போட்டு முடிக்க ஒவ்வொருவரும் அந்த முகூர்த்தக்காலை தொட்டு வணங்கி ஊன்றினார்கள்.
தேனரசன் தொட்டுவிட்டு லேசாய் தூக்கவுமே நகர்ந்துவிட்டான். தன்னை மறிப்பது போல கதிர் நிற்கவும் அவன் விலகிவிட்டான்.
கதிரும் வேண்டுமென்று செய்யவில்லை. ஆனால் இது ஒரு விஷயமே இல்லை என்பதை போல தேனரசன் விலகவும் கதிருக்கு என்னவோ போலாகிற்று.
கும்பிட்டு முடித்து தேனரசன் தன் வீட்டிற்குள் சென்றுவிட கதிரின் மனது ஒரு நிலையில் இல்லை.
“எம்மோவ், வேணுமின்னு செய்யலத்தா. செத்த நவந்தேன், அம்புட்டுத்தேன். அவென ஆரு ஒடனே விலுக்குன்னு போவ சொன்னா?…” என கேட்டு முறைப்புடன் இருந்தவன் முகத்திலும் சஞ்சலம்.
எப்போதாவது ஒருநாள் தான் இப்படி அவன் கூடி சேர்ந்து நிற்பது. வைரத்துடனான பிரச்சனைக்கு பின் இன்று தான் வந்து நின்றான்.
அதற்குள் தானே அவனை தள்ளி நிறுத்தியதை போல செய்துவிட்டோமோ என தவித்து போனான்.
பொன்னி வந்தவர்களுக்கு இலையில் சர்க்கரை பொங்கலும், வாழைப்பழம், தேங்காய் சில் சகிதம் வைத்து கொண்டுவந்து தர கதிருக்கு உறுத்திக்கொண்டே இருந்தது.
இன்னும் பொன்னி தேனரசனை காண செல்லவில்லை. இவ்வளவு நேரம் பொங்கலை கொடுக்க செல்லாமல் இருக்கமாட்டாரே என்று பார்த்துக்கொண்டே இருந்தான்.
பொன்னிக்கு வந்தவர்களை அனுப்பிவிட்டால் தேனரசனுடன் பைக்கை வாங்க செல்லலாம் என்றொரு வேகம்.
அதனால் வேலைகளை முடிக்க ஆரம்பித்திருக்க, வைரம் வந்தவர்களோடு பேசிக்கொண்டிருக்க அடுக்களைக்குள் பொன்னியை தேடி சென்றான் கதிர்வேலன்.
“யாத்தாடியாத்தா? அதிசயந்தேன்…” கதிர் அடுக்களைக்குள் வருவதை கண்ட குழலி கிண்டலாக பொன்னியிடம் காண்பிக்க,
“கொண்டாத்தா, வாய பொளப்ப…” என தூக்குவாளியை பிடுங்க,
“அட இருங்கேன்ல…” என்றவர் அவனை துரத்த பார்க்க,
“இல்ல நீயி வாம்மோவ்….” என்று பிடிவாதமாக நின்றான்.
“கெரகம்டா….” என்றவர் ஒரு தாளிக்கும் சின்ன கிண்ணத்தை வைத்து நெய் ஊற்றினார்.
அதில் சிறிதாய் நறுக்கப்பட்டிருந்த தேங்காய் சில்களும், முந்திரி திராட்சையும் சேர்த்து கிளறி அதை அப்படியே தூக்குவாளியில் கொட்டியவர் அதில் குழைந்த சூடான பொங்கலை எடுத்து போட்டு ஒன்றாய் கிளறி மூடினார்.
“யாத்தே இம்பிட்டு நாளும் இதேன் செய்யுதியா நீயி?….” என்று கதிர் கேட்க பொன்னி பாவமாய் பார்த்தார்.
“நீயி வா பொறவு பேசிக்குதேன் ஒன்னிய. அவேனுக்கு தனி பொங்கச்சோறு…” என்றவன் முன்னே செல்ல,
“என்னிய வெச்சி ஒம்மவன ஒழுங்கா ஓட்ட சொல்லு மொத…” என்று வைரமும் சொல்ல,
“ரெண்டுக்கும் வாயிதன்…” என சந்தோஷமாய் தலையில் அடித்துக்கொண்டார் பொன்னி.
வைரத்துடன் இரண்டு முறை சுற்றி வந்தவர் அவரை இறக்கிவிட்டு பொன்னியுடன் கிளம்பினான்.
ஊருக்கு திரும்பி வரும்வழியில் வீட்டில் பேரனுக்கும், மருமகளுக்கும், வெண்மணிக்கும் தேவையானவற்றை வாங்கியவர் தேனரசன் கூடவே புது பைக்கில் வெண்மணியின் வீட்டின் முன் சென்று இறங்கினார் பொன்னி.