“அதேன் நிக்கிதேங்கேன். போத்தா…” என சொல்லிவிட்டு வண்டியை அங்கிருந்த வேப்பமர நிழலில் நிறுத்திவிட்டு தானும் அதில் சாய்ந்து நின்றான்.
வெயில் வேறு சுள்ளென உடலே எரியும் அளவிற்கு அடித்துக்கொண்டிருக்க நிழலின் இதமும், மிதமான காற்றும் என அவனுக்கு நிம்மதியை தந்தது.
“லே எடுபட்டபயலே? இங்கின ஒனக்கு என்னாலே சோலி?…” என்ற சீனியம்மாளின் வெண்கல குரலில் அலட்டிக்கொள்ளாமல் திரும்பி பார்த்தான் தேனரசன்.
“ஒன்னியத்தாம்லே கேக்குதேன். இங்கின என்ன சோலிக்கு நிக்குதேங்கேன்? விசேச வீட்டு மின்னுக்க வந்து சீவி சிங்காரிச்சிக்கிட்டு நிக்கித…”
“யே இங்கின நின்னா ஒங்கோரு என்ன கொறையுதாம்த்தே?…” என்றான் நக்கலாக.
“இந்தா என்னிய அத்தேங்காத. எங்கோருக்கு என்னவே? இருக்கப்பட்டவ நானு. யே வீட்டு வாசமின்னுக்க வந்து நிக்கித ஒனக்கு இங்கின என்ன சோலின்னு கேட்டேமில்ல? வந்து நிக்கிதியான் பாரு மாப்புள கணக்கா. ஆளும், மொகரையும்…” என தேனரசனை கண்டு எரிந்து விழுந்தபடி சீனியம்மாள் பேச,
“நானும் மாப்பிள்ளதன். எனக்கு கெட்டி வெக்க இன்னொரு பொண்ணக்கிண்ண பெத்து வெச்சிரிக்கியாத்தே? சொல்லு இருந்து பாத்து கெட்டிட்டு போறன். ஒ ஆசய யே கெடுப்பானே?…” என அவருடன் மல்லுக்கு நின்றான்.
“கூறுகெட்ட கோட்டிப்பயலே? ஆர பாத்து என்ன பேச்சுலே பேசுத? ஒம்பேச்சுலயே ஒம்பொறப்பு அம்புடுது பாரு. வக்கத்தவேன், மொத இந்தூருல ஒன்னுமில்லாதவேன் கூட ஒனக்கு பொண்ணு தர ரோசிப்பியான். ஒனக்கு எவ்வீட்டு பொண்ணாலே?…” என அவர் வார்த்தையை விட தேனரசன் முகத்தின் வந்துசென்ற மாற்றம் நொடி மட்டுமே.
தேனரசனின் பார்வையும் நிமிர்ந்து நின்றவனின் தோரணையும் என்னவோ சொல்ல போகிறான் என்றது சீனியம்மாவிற்கு.
“ஒன்னிய பெத்து வெச்சிருக்கியானு தான கேட்டன். பெத்து தான்னா கேட்டன். எம்பேச்ச சொல்லுத நீயி, ஒம்பேச்சு என்ன பொறப்பு?…” என்று இடுங்கிய கண்களுடன் தேனரசனும் பேசிவிட,
“யாத்தே, இவேன் இவேன்….” என்றவருக்கு அடுத்து என்ன வார்த்தையை கொண்டு அவனை காயப்படுத்துவது என்று தெரியவில்லை.
கூப்பாடு போட்டவர் சத்தத்தில் பொன்னியும், வெண்மணியும் வெளியே எட்டி பார்த்தனர்.
“என்ன மயினி?….” என பொன்னி வர தன் கோபத்தை குறைக்க முயன்ற சீனியம்மாளுக்கு அதனை பொன்னியிடம் சொல்ல முடியவில்லை.
“ஒண்ணுமில்ல….” என்றார் சீனியம்மாள்.
வெண்மணியும் கயல்விழியும் அதனை பார்த்துவிட்டு தள்ளி மரத்தினடியில் நின்ற தேனரசனையும் பார்த்தனர்.
சீனியம்மாளுக்கு தேனரசன் தன்னை இப்படி பேசிவிட்டான் என்று சொல்ல ஒருபக்கம் அவமானமாக இருந்தது.
இன்னொருபக்கம் பொன்னிக்கு தேனரசன் எத்தனை முக்கியம் என்று தெரியும். அதன்பொருட்டு வார்த்தைகளை மென்றார்.
அவனின் தாய் அப்படி சென்றதில் இருந்து காரணமே இன்றிய ஒரு வெறுப்பு அவன் மேல் எப்போதுமே?
ஒழுக்கம் கெட்ட குடும்பத்தில் வந்தவன். அவன் மட்டும் எப்படி இருப்பான் என்ற கருத்து ஆழமாய் அவரிடம் இறங்கி இருந்தது.
இப்போது வரை அது பெரிதாக, அதுவும் மகளிடம் எப்போதும் ‘கட்டிக்கிறியா?’ என வம்பிழுத்து பேசுவதில் உயிர் போய் உயிர் வரும்.
எங்கே மகளும் அவனின் பேச்சில், அழகில் தடுமாறிவிடுவாளோ என்று பதைபதைக்கும்.
போதாததிற்கு தன் வீட்டில் மகள், கணவர், மருமகள் மூவரும் அவனுக்கு ஆதரவாகவே பேச இன்னும் வெறுப்பு தான் கூடியது.
அவனுக்கு தனியாக வீடு தேடி போய் பத்திரிகை வைத்ததற்கே வீட்டில் அன்றைக்கு அத்தனை பேச்சு, சண்டை.
இப்போது இன்னும் எதிர்த்து கேட்டு திமிராய் நின்றவனின் அலட்டலில்லாத இந்த பாவனையும் அவருக்கு எரியும் நெருப்பில் என்னை ஊற்றியதை போலிருந்தது.
தான் பேசியதன் எதிர்வினை என்று அவருக்கு புரிபடவில்லை. அவன் நிழலை கண்டால் கூட அதையும் கரித்துக்கொட்டும் சீனியம்மாள் தன் வீட்டின் முன் அவன் நிற்க கண்டு பொங்கிவிட்டார்.
இப்போது உள்ளிருந்து அனைவரும் வரவும் எதுவும் சொல்ல முடியாமல் முறைப்பை அடக்கிவிட்டு நின்றிருந்தார்.
“எப்ப வந்தத்தா பொன்னி?…” என பொன்னியிடம் பேச்சை மாற்ற,