“ரொம்ப கெஞ்சுதியேன்னு போறன். இந்த பயம் இருக்கட்டும்…” என முன்னிருந்த கூந்தலை பின்னே எடுத்து போட்டுவிட்டு சிலிர்த்து சென்றவளை பார்க்க மனதிற்குள் என்னவோ நெருடல்.
பொன்னியின் பேச்சிலிருந்து அவன் கண்டுகொண்டது மதியழகன் ஒவ்வொருமுறையும் வைரம் சொல்லி தான் வெண்மணியிடம் பேசுகிறான் என்பது.
என்னவோ சரியில்லை என்று மனதிற்கு பட்டாலும் அது என்ன என பிடிபடவில்லை.
வெண்மணியின் முகத்தில் சந்தோஷத்தின் சாயல். மனதை பிசைந்தது தேனரசனுக்கு.
பொன்னி சற்று நேரத்தில் வந்துவிட்டார் வாசலுக்கு. அவர் வந்ததும் யாரையும் பார்க்காமல் தேனரசன் வண்டியை கிளப்ப அவனுடன் அமர்ந்து சென்றார் பொன்னி.
சீனியம்மாள் முகத்தில் கடுகை அள்ளி போட்டுவிட்டால் உடனே பொரிந்துவிடும். அப்படி இருந்தது.
“வக்கத்தவேன் வண்டிய பாத்தியா? எம்மவேன் வைத்தி வண்டிய விட காசு கூடுதலாமே. நா ஒருத்தி கூறுகெட்டவ, வாக்கொள்ளாம சொல்லி போட்டேன் இம்பிட்டு காசுன்னு. அதுக்கு மேல காசுன்னு பொன்னி சொல்லுதா…” என பொருமி தள்ளிவிட்டார்.
“ஆனாங்காட்டி அம்சமான புல்லட்டுதேன்…” என்று சொல்லி மீண்டும் திரியை தூண்டிவிட்டு தாய் திட்டும் முன் ஓடிவிட்டாள்.
தான் மட்டம் தட்டி மதிக்காத ஒருவன் தன் முன் இப்படி மரியாதையும், பெருமையுமாக வலம் வர அவருக்கு பொறுக்கவில்லை.
அதுவும் அவன் பேசும் பேச்சு, இந்த ஊரில் ஒருவர் கூட அவரிடம் ஒரு சொல்லுக்கு எதிர்த்ததில்லை.
அதற்கே ஊரில் சில நேரம் கேலி பேசி சிரிப்பதுண்டு ‘இந்தம்மா வாயெல்லாம் நம்மக்கிட்டதேன், அரசன்கிட்ட வேவாது’ என்று.
அதில் இன்னுமே அவன் மீது பகைமை தான் வளர்ந்தது சீனியம்மாவுக்கு. ‘வெளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சலமாக்கும்? அரசனாம் அரசென். எந்த நாட்டுக்காம்?’ என பல்லை கடிப்பார்.
அன்று முழுவதும் அவரின் வாய்க்குள் அரசன் அரைபட்டுக்கொண்டே தான் இருந்தான்.
அடுத்தடுத்த நாட்கள் கல்யாண வேலையில் ஓடிவிட்டது. பொன்னியை வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்து ஊர்களுக்கு தனது வண்டியிலேயே அழைத்து சென்றுவந்தான் தேனரசன்.
வீட்டு வாசலில் பந்தல் போட ஆட்கள் வந்துவிட இருவீட்டிற்கும் சேர்த்து போட்டு சீரியல் விளக்குகள், ட்யூப்லைட் என்று மாறிவிட்டு அலங்கரித்தனர்.
அனைவரிடமும் பரபரப்பு ஒட்டிக்கொள்ள வைரம் வீட்டினருக்கோ இன்னும் மதியழகன் வராததில் பயமும் வந்துவிட்டது.
“அப்பவே அவென என்னன்னு கேக்க ஆவாம இப்ப ஒக்காந்து மூக்க சீந்துனா சேரியா? போன போட்டுட்டே இரு….” என்று தேனரசன் பிடித்து கத்திவிட்டான் வைரத்தையும், கதிரையும் பொதுவாக.
ஊருக்குள் அத்தனை பேச்சுக்கள் இன்னுமா மாப்பிள்ளை வரவில்லை என்று கேட்டு.
மதியிடம் கேட்டதற்கு விமானத்தில் வருகிறேன் என சொல்லியிருக்க கதிர் சண்டை பிடித்தான்.
வந்துவிடுவேன், முக்கியமான வேலை என முதல்நாள் இரவு வரை இழுத்தடித்து இரவு பத்து மணி போலத்தான் வந்தான் மதியழகன்.
“பரிசம் போட்டு முடிச்ச பொறவுதேன் தொர வருவாரோ? சவுட்டுல நாலு வெளாசாம கொஞ்சுத நீயி…” என்று தேனரசன் பொன்னியை பேச,
“நீ யாருடா என்னை கேட்க?…” என்று மதியழகன் கோபத்துடன் அவன் மீது பாய்ந்தான்.
“லே அவென் கேட்காம? அப்பிடித்தான் கேப்பான். ஊருல இருக்கவியளுக்கு பதில் சொல்லி மாளல. அவமெடுத்து பேசுன அரசு சொல்லுதத நா செய்யுவேன்…” என்று கதிர் சண்டைக்கு நிற்க மதியழகன் முகம் கறுத்தான்.
“சேரி மொத அவியள செத்த ஒறங்கி எந்திக்க சொல்லுங்க. பொறவு பேசிக்கிடுவோம். காலம்பற சத்திரத்துக்கு போவனுமில்ல…” என குழலி தான் பிரச்சனையை சுமூகமாக்கினாள்.
ஆனால் தேனரசன் முகத்தில் கலவரம். பொன்னியும், வைரமும் கூட மகனிடம் என்னவோ சரியில்லை என பார்த்தனர்.
இரவெல்லாம் மதியழகன் உறங்கவே இல்லை. அவனின் அறையில் பேச்சுக்குரல் முணுமுணுவென கேட்டுக்கொண்டே இருந்தது.
அதிகாலை எழுந்து குளித்து தயாராகி இருக்க மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பமாகிவிட்டது.
அனைவரும் கிளம்பி நிற்க மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பித்ததும் தேனரசன் காருக்கு முன்னால் தனது மோட்டார் சைக்கிளில் பொன்னியை வர சொல்லி அழைத்தான் தேனரசன்.
“அம்மைக்கு வாழ்வுதன்…” கதிர் கூட கேலி பேச,
“போங்கத்தே, அதன் சொல்லி சொல்லி மாஞ்சீயள. கலியாணத்துக்கு என்னிய எம்மவேன் கூட்டு போவியான்னு…” என குழலி கிண்டலாய் சொல்ல பொன்னி அத்தனை கூட்டத்தையும் கண்டு சிரித்துக்கொண்டே ஏறி அமர்ந்தார்.
அதற்குள் மண்டபத்திற்கு வந்து பொன்னியை இறக்கிவிட்டவன் தாம்பூல பைகள் போடுமிடத்தில் வந்து எல்லாவற்றையும் சரி பார்த்தான்.
நிற்க நேரமில்லை அவனுக்கு. வாசலில் மேளச்சத்தம் முழங்க மாப்பிள்ளையின் கார் வந்து நின்றதும் ஆராத்தி சுற்றப்பட்டு உள்ளே நுழைந்தான் மதியழகன்.
அவனின் பார்வை வாசலையே பார்க்கவும் திரும்பவுமாக பதட்டத்துடன் காணப்பட்டது.
ஒருவேளை உடன் வேலை செய்யும் நண்பர்கள் யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறானோ என நினைத்தான் தேனரசன்.
வந்தவன் மணமேடையில் கூட அமரவில்லை. நின்றபடி போனை எடுத்து பேசிவிட்டு வாசலை பார்க்க,
இதோ அவன் எதிர்பார்த்த அந்த நபர் வந்துவிட்டாள். கையில் குழந்தையுடன் ஒரு பெண் உள்ளே வர பாதி வழியில் அவளருகே சென்று நின்ற மதியழகனை காணவும் அனைவருக்கும் புரிந்துபோனது.
அதுவரை இருந்த மொத்த சந்தோஷமும் உடைந்தும் போனது.
——————————————-
வீட்டில் வெண்மணி அமர்ந்திருந்த அறையில் தனது அலங்காரங்கத்தை பார்த்து திருப்தியானவள்,
“இன்னொரு சுத்து பூவ வெச்சாதேன் என்னங்கேன்? இம்பிட்டு நெறைக்க இருக்குல…” என்று ஒரு பந்து பூவை கையில் எடுத்து வாசம் பிடித்தவள் விழிகள் மலர்ந்து சிரித்தது.
“ஒனக்கு நெறையாதுன்னு சொல்லுடி…” என்றாள் கயல்விழி.
“இன்னும் எம்பிட்டு நேரம் மயினி? பசி வேற வவுத்த கிள்ளுது. போயி எந்நேரத்துக்கு உண்க நானு?…” என்று சலித்தாள் வெண்மணி.
சட்டென ஒருக்களித்து சாற்றி இருந்த கதவு திறக்கப்பட கயல்விழியும், வெண்மணியும் திரும்பி பார்த்தனர்.
மாப்பிள்ளை அழைக்க எல்லோரும் சென்றுவிட்டதால் வீட்டில் நான்கைந்துபேர் தான் இருந்தனர்.
அவர்களும் தயாராகிக்கொண்டிருக்க இங்கே அறையில் இவர்கள் இருவர் மட்டுமே.
போட்டிருந்த பட்டு சட்டை வியர்வையில் கசங்கி நனைந்திருக்க நெற்றியில் வைத்திருந்த சந்தனமும், குங்குமமும் அவன் நெற்றியில் கலைந்திருந்தது.
“என்ன மாமோவ், இந்நேரத்துக்கு பொண்ண தூக்க வந்தவிய மாரில நிக்கிதீய?…” என அவனை பார்த்ததும் வெண்மணி கிண்டல் பேச,
“யே மணி…” என அதட்டிய கயல்விழி தேனரசனை பயந்து போய் பார்த்தாள்.
“இங்க என்ன பண்ணுதீய? சத்திரத்துக்கு போவத்தான. எதாச்சும் சேதி சொன்னாவலா?…” என கயல்விழி கேட்டுக்கொண்டிருக்க தேனரசன் பார்வை எல்லாம் வெண்மணி மீது தான்.
“என்ன மாமோய், பேஸ்தடிச்சு நிக்கித? என்னய்யா?…” இப்போதும் கள்ளமில்லா புன்னகை வெண்மணியிடம்.
“இரு புள்ள, ஒன்னு கேக்குதன். நெசத்த சொல்லு…”
“நீயி கேளு…” என்றவள் மண்டபத்தில் யாருக்கும் எதுவுமோ என அப்போது தான் அவனின் தீவிர பாவனையில் யோசித்தாள்.
“என்னிய கெட்டிக்கிதியா?…” என்ற கேள்வியில் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் வழக்கம் போல தன்னை கேலி செய்கிறான் என்று நினைத்து சிரித்துவிட்டாள்.
“என்ன பேசுதீய?…” என்ற கயல்விழி பயத்தில் தன் போனை தேடி சென்றாள் கணவனுக்கு அழைக்க.
“நீ சொல்லு புள்ள, என்னிய கெட்டிக்கிடுதியா?…” மீண்டும் தேனரசன் வெண்மணியிடம் கேட்க,
“செத்த நேரத்துல பொன்னியாத்தாவுக்கு மருமவளாவ போறன். கோட்டியாய்யா ஒமக்கு?…” என்று அவனின் பேச்சை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை வெண்மணி.
“இப்பவுங்கூட என்னிய கெட்டுனாலும் நீயி பொன்னியாத்தா மருமவதேன். சொல்லு…” என்று கேட்டான்.
“பாருடா? அச்சமில்லாம பேச்ச? செரிய்யா, இன்னிக்கு ஒனக்காச்சு எனக்காச்சு? இதே தெகிரியத்தோட நீயி சத்திரத்துக்கு போயி அவிய முன்னால எங்கப்பாருட்ட, ஒஞ்சின்னம்மைட்ட கேட்டுடு. அவிய செரின்னா கெட்டிக்கிதேன். எனக்கென்ன?…” என்று இலகுவாக சொல்லிவிட,
“சேரி எங்கூட வா…” என அவளின் கையை பிடிக்கவும் தான் வெண்மணிக்கு உரைத்தது.
“யோவ் என்னய்யா பண்ணுத?…” என்றவளுக்கு அவனை வெடுக்கென்று பேசி காயப்படுத்தவும் முடியவில்லை.
“கை கலப்பா போவும்ய்யா. யோவ், கைய விடு. இத பாத்தாக்க அங்கின அம்புட்டுபேரும் ஒன்னிய தொளிச்சிருவானுவ…” என்று வெண்மணி சொல்ல சொல்ல அவளை கூட்டிக்கொண்டு வெளியே சென்றான்.
அதற்குள் கயல்விழி நடந்ததை கேள்விப்பட்டு வெளியே வர அரசனின் பைக்கின் முன் வெண்மணி நின்றாள்.
“சத்திரத்துக்குத்தேன். வண்டில ஏறுடி…” என்றவன் உறுமல் வெண்மணியை பின்னடைய செய்தது.
“மணி நீயி போத்தா…” என்றாள் கயல்விழி ஓடி வந்து.
“போங்கேம்ல. ஒங்கப்பாருதேன் கூட்டியார சொல்லிருக்காவ. போ…” என்று கயல்விழி கண்ணீருடன் சொல்ல வெண்மணியின் இதயம் தாளம் தப்பி துடித்தது.
மோட்டார்சைக்கிளின் கண்ணாடியில் தெரிந்த வெண்மணியின் நீர் ததும்பும் விழிகளை கண்டவன் மனது தவிக்க,