மதியழகன் அருகில் நின்ற பெண்ணின் முகத்தில் அங்கிருந்தவர்களை புதிதாய் பார்க்கும் பயந்த பாவனை தான்.
கையில் குழந்தையை வைத்திருந்தவளிடமிருந்து தன்னிடம் வாங்கிக்கொண்ட மதியழகன்,
“என்னோட வொய்ப் மிருணாளினி. என் பிள்ளை சாரகேஷ். நாங்க ரெண்டுபேரும் ஹைதராபாத்ல ஒண்ணா வேலை பார்க்கறோம்…” என்று முடிக்க அவனின் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தான் கதிர்.
அவனை அடுத்து வைத்தியும், மதியின் மேல் பாய்ந்திருக்க மதியழகனை அடித்து நொடியில் துவம்சம் செய்துவிட்டனர் இருவரும்.
வைரத்தோடு, பொன்னியும் நிலைகுத்திய பார்வையுடன் அப்படியே தரையில் பொத்தென அமர்ந்தவர்கள் சமைந்துவிட்டனர் அவ்விடத்திலேய.
சீனியம்மாள், செண்பா அவளின் கணவன் வீட்டினர் என்று அத்தனைபேரும் மதியழகனை கொன்றுவிடும் ஆவேசத்துடன் அடிக்க அதிலிருந்து மதியழகனை காப்பாற்றும் முன் போதும் போதும் என்றானது தேனரசனுக்கு.
மதியழகன் செய்துவிட்ட அனர்த்தம் போதாதா? இப்படி அடித்து ஏதேனும் என்றால் தேவையின்றி பிரச்சனை தான் என விடுவித்தவன்,
“செத்த கம்மிருக்கீயலா?…” என இரைந்தவன் சத்தம் மண்டபம் முழுவதும் அலையாய் பரவியது.
அவன் கேட்கும் கேள்வியின் நியாயத்தில் மற்றவர்கள் மௌனம் காக்க மதியழகன் அவமானமாக நின்றான் வலிமையான அரசனின் கைப்பிடிக்குள்.
“சொல்லுத்தா, ஒன்கிட்ட வாரப்பவாச்சும் நீயி சொல்லனுமில்ல? பிள்ள உண்டான அப்பவாச்சும் சொல்லிருக்கனும். எல்லாத்துக்கும் கம்மின்னி இருந்து ஒன்னிய நீயே அசிங்கப்படுத்தியிருக்க. இங்கின வந்து சொல்லி அவிய ஒத்துக்கலன்னாலும், பெத்தவகட்ட சொல்லிட்டதோட ஒங்க பொழப்ப பாத்துட்டு போயிருக்கலாம்…” என்ற தேனரசன்,
“இங்க இன்னொரு புள்ளைய ஊரே பாக்க பரிசத்த போட்டு ரெண்டு வீட்டாளுவளும் காலியாண சோலிய பாத்து இப்ப முவூர்த்தத்துக்கு ஊரே கூடி நிக்கிது. ஒன்னியமாரி ஒரு புள்ள கலியாணத்துக்கு நிக்குது. பரிசத்தப்ப சொல்ல வேண்டிதானத்தா?…” என கேட்டான்.
“இல்லைங்க, நான் சொன்னேன். ஆனா இவர் தான் இப்ப சொல்லவேண்டாம். தனியா சொன்னா பிரச்சனையாகும். ஊரோட நின்னு சொன்னா தான் ஒத்துப்பாங்கன்னு…” என அந்த பெண் அழுகையுடன் சொல்ல கையில் வைத்திருந்த இரண்டுவயது குழந்தை அழுதது பயத்தில்.
“தொடநடுங்கி பயலே, வெக்கமாயில்லையா ஒனக்கு?….” என தேனரசன் மதியழகனை முன்னே திருப்பி கேட்க,
“என்னமோ ஒந்தலையில அவள கெட்டி வெக்க போறமாட்டுக்கு இம்பிட்டு அவதியாவற?…” என்று நக்கலாக கேட்ட மதியழகன்,
“இங்க பாரு அரசா, நான் சொல்லனும்னு நினைச்சேன். ஆனா ஒவ்வொருதடவையும் என்னால சொல்ல முடியலை. பரிசம் போடும் போது தான் யோசிச்சேன். ஊருக்கு தெரியாம செஞ்ச கல்யாணம், எங்க வேண்டாம்ன்னு சத்தங்காட்டாம அத்துவிட்டுட்டு வர சொல்லிருவாங்களோன்னு தான் சொல்லாம மறைச்சேன்…”
இரக்கமே இன்றி சுயநலமாக அவன் பேசுவதை கேட்ட வைத்தி மீண்டும் மதியழகனை பிடித்து அடிக்க தேனரசன் விலகி நின்றுவிட்டான்.
இப்படி தன் நலம் மட்டுமே என்று பேசியவனுக்கு தேவை தான் என்று ஒதுங்கி நின்றான்.
கதிர் கூட தம்பியின் பேச்சில் அதிர்ந்து போக குழலி பொன்னியை தேற்ற முடியாமல் அவரருகே கீழே அமர்ந்திருந்தாள்.
“என்னத்துக்குய்யா அடிக்கிற? யே என்னிய விட்டா ஒந்தங்கச்சிக்கு வேற மாப்பிள கிடைக்காதுன்னா?…” என்று வைத்தியை கீழே தள்ளிவிட்டு மதியழகன் பேசவும் அவ்விடமே கலவரமானது.
மதியழகனும் திருப்பி தாக்க தேனரசன் பொன்னியையும், வைரத்தையும் கவனிக்க சென்றான்.
“யோவ், சின்னய்யா என்னத்துக்கு இடிஞ்சு போயி இருக்கீய? எந்தி சாமி…” என அவரை எழுப்ப பார்த்தான்.
“அரசா…” என இரு கைகளை விரித்த வைரத்தின் கண்ணிலிருந்து கண்ணீர் முத்துக்கள் கொட்ட ஆரம்பிக்க தேனரசன் கலங்கி போனான்.
“லே கதிரு, அந்த நாய விட்டு இங்கின வாலே…” என்ற சத்தத்தில் கதிர் வந்துவிட ஒருபக்கம் வைரத்தின் உறவுகள், இன்னொருபக்கம் தவராசனின் உறவுகள்.
சீனியம்மாளும், செண்பாவும் வாய்க்கு வந்தபடி சாபங்களை வாரி இரைத்தனர் வைரம் குடும்பத்தின் மீது.
மதியழகனும் அதற்கு மேல் அங்கிருந்தால் எங்கே இன்னும் பிரச்சனையாகுமோ என வந்த வேலை முடிந்தது என்பதை போல கழன்றுக்கொண்டான்.
“லே நில்லுடா….” என காரில் ஏற போனவனை வைரம் அழைக்கவும் பொண்டாட்டி, பிள்ளையை உள்ளே அமர வைத்துவிட்டு தானும் ஏறுவதற்கு தயாராக அங்கேயே நின்றான் மதியழகன்.
“நீயெல்லாம்…” என்று ஆரம்பிக்கும் பொழுதே மதியழகனின் பின்னிருந்து அந்த குழந்தை எட்டி பார்த்தது.
பெற்ற மனதும் அப்படியே விம்மி வெடித்து போனது வைரத்திற்கு. இப்படி ஒரு நிலையில் நிறுத்திவிட்டு அதன் குற்ற உணர்வின்றி பார்ப்பவனை மனதார சபிக்கவும் முடியாமல் கண்ணீர் விட்டவர்,
“எஞ்சாவுக்குங்கூட மூஞ்சில முழியாத நீயி…” என்று கண்ணீருடன் நெஞ்சை அழுத்திக்கொண்டு சொல்ல கொஞ்சமும் மனம் கலங்காமல் காரில் ஏறிக்கொண்டான் மதியழகன்.
“ஐயா…” என கதிர் வந்து அவரை பிடிக்க,
“நா என்ன செய்யிவேன்டா கதிரு? மனசுல பசயில்லாம போயிட்டியானே? இப்ப அந்த மவராசிக்கு என்ன பதிலா சொல்லுவேன்? ஒரு புள்ளைய கண்ணீரு விட வச்சு பாவத்த வாங்கிக்க போறேன்டா. கதிரு கதிரு…” என்றவன் தேனரசனை பார்க்கவும்,
“அரசா பாத்தியா? பாத்தியாடா?…” என்று அவன் மீது சாய்ந்து அழ,
“என்னய்யா செய்யுத? கூறு கெட்டு போச்சா?…” என அதட்டியவன்,
“எங்கைய்யாவுக்காவ நா மன்னிப்பு கேட்டுக்குதேன். நீய என்ன சொன்னாலும் கேக்குதோம். ஆனா செலவ திருப்பி தாறோம். வேற என்ன செய்யுததுன்னு எம்புத்திக்கி அம்புடலங்க…” என்றான் தேனரசன்.
“அரசன் சொல்லுததுதான். மதி இப்பிடி செய்யுவியான்னு நாங்க நெனைக்கவே இல்ல மாமோவ். மன்னிச்சுகிடுங்க…” என மாற்றி மாற்றி மன்னிப்பு கேட்க அழவும் திராணி இன்றி பொன்னி மனமொடிந்து இதனை பார்த்துக்கொண்டிருந்தார்.
நெஞ்செல்லாம் வலிப்பதை போலிருந்தது. ஒரே நாளில் குடும்பத்தின் சந்தோஷத்தை, மரியாதையை, ஒரு பெண்ணின் வாழ்க்கையை என எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கி சென்றுவிட்டானே என்று குமைந்துகொண்டிருந்தார்.