“இருய்யா தவராசா, என்ன இருந்தாலும் அவசரத்துல ஒரு முடிவ எடுத்து போட்டு பொறவு காலத்துக்கு கண்ண கசக்க வேணா பாரு. அதேன் சொல்லுதன். செத்த ரோசிப்போம். இல்ல நம்ம வளசல்ல வேற புள்ளைய….” என்னும் பொழுதே,
“வாய மூடுய்யா…” என்று உச்சஸ்தானியில் கத்தியவர்,
“இங்க எவேன்லே ரோக்கியத்துல(யோக்கியன்) கூடுனவிங்க? எங்க எங்கிட்ட நெஞ்ச நிமித்தி வந்து சொல்லுங்களே பாத்துக்கிடுதன்…” என்று குரலை உயர்த்தினார் தவராசன்.
“என்னிய விட ஒரு ரோக்கியன, ஒழுக்கத்துல கூடுனவென காட்டுன்னா நா ரோசிக்காம கண்ணா மூடிட்டு அரசனத்தன் காமிப்பேன். நெஞ்ச தொட்டு சொல்லுங்கடே நாஞ்சொல்லுதது இல்லன்னு…” என்றவர் பேச்சு மட்டுமே அந்த மண்டபத்தில்.
பொன்னிக்கும், வைரத்திற்கும் நெஞ்சே நிறைந்து போனது. இதைவிட என்ன வேண்டும்?
காயம்பட்ட மனதிற்கு மயிலிறகில் மருந்திடும் அந்த மனிதரை கண்கள் பனிக்க பார்த்தனர்.
சீனியம்மாள் நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமல் தடுக்கவும் முடியாமல் இயலாமையுடன் அவர் போக்கில் அரற்ற,
“சொல்லும்ய்யா, ஒம்ம மவன்தான அரசன்? எம்மவள கெட்டிக்கிறாரா? கேட்டு சொல்லும். செரின்னா இந்த பாக்க மாத்திக்க…” என்றார் வைரத்திடம்.
“செரியா, கூட்டியா….” என்று சொல்லவும் பொன்னியை பார்த்தவன் தலையசைத்துவிட்டு கிளம்பினான்.
அவன் சென்ற நொடியில் இறந்து சீனியம்மாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
“எப்போவ் ஒனக்கென்ன கிறுக்கா?…” என்ற செண்பாவின் கன்னத்தில் வைத்தியின் கரம் இடியாய் இறங்கியது.
“ஆருக்கிட்ட? இம்பிட்டுபேருமின்னுக்க ஒரு மட்டு மருவாதி வேணா? இருக்கன்னா இரு. இல்லாங்காட்டி கெளம்பு. ஐயாவையே எதுத்தா பேசுத?….” என வைத்தி எச்சரிக்கவும்,
“வாயில இன்னுமேட்டு நாலு சாத்துய்யா. மருவாதின்னா எம்பிட்டு கேக்குதா. இவள கெட்டிக்கிட்டு நா நெதத்துக்கும் சாவறேன்…” என தலையில் அடித்தான் செண்பாவின் கணவன் மாணிக்கம்.
செண்பாவை அடித்து அடக்க முடிந்ததே தவிர சீனியம்மாவை அடக்க முடியவில்லை.
மகளை அழைத்துகொண்டு வரும் வரை தேனரசன் அவன் பிறப்பு, அவன் தாய், தந்தை என இழுத்து நாறடித்துவிட்டார்.
ஆனாலும் ஒரு நம்பிக்கை மகள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று. வரவும் பார்த்துக்கொள்ளலாம் என மேடையின் அருகே அமர்ந்திருந்தவர் வாய் ஓயவில்லை.
“எம்மோவ், ஒனக்கு நா இருக்கேனில்ல…” என்று செண்பா தாயை தூண்டிவிட்டபடி இருந்தாள்.
மற்றவர்களுக்கு அடுத்து என்ன நடக்குமோ என ஒரே பதட்டம். அந்த பதட்டம் குறைவதற்குள் தேனரசன் வெண்மணியுடன் உள்ளே வந்துவிட்டான்.
வரும் வழியில் தேனரசன் விஷயத்தை மேலோட்டமாக சொல்லியிருக்க வெண்மணி முகத்தில் சலனமில்லை.
பதுமையாய் இறங்கி வந்தவள் மீது அனைவரும் பரிதாபமாக பார்த்து வைக்க நிமிர்ந்தே வந்தாள் ஒவ்வொருவரின் பார்வையையும் எதிர்கொண்டு முறைத்தபடி.
“வா தாயி….” என்ற தவராசன் முகத்தில் சஞ்சலமும், பெண்ணை இப்படி நிறுத்திவிட்டோம் என்ற குற்ற உணர்விலும் குறுகி போயிருந்தார்.
“என்னத்துக்குப்பு இப்பிடி நிக்கித? இப்ப என்னவாகி போச்சு?…” என்று கேள்வி எழுப்பியவளை புருவம் உயர்த்தி பார்த்தனர் அனைவரும்.
“உள்ளத சொல்ல வக்கத்து பயந்து ஒளிஞ்சு பொண்டாட்டி புள்ளைய காமிச்சு ஓடி ஒளிஞ்சவனே நிமிந்துட்டு போயிட்டியான். ஒனக்கென்னங்கேன்?…” என்று கேட்ட கேள்வியில் வைரமுத்துவை சேர்ந்தோர் கூனி குறுகினர்.
“அந்த மனுசேனுக்கு நாலு வார்த்த மனசு ஆற சொல்லுண்ணே…” என கிண்டல் பேசியவள் அவ்விடத்தின் சூழலை இலகுவாக்கினாள்.
“மணி சொல்லுத்தா…”
“இங்காருண்ணே அம்மை சொல்லுச்சுன்னு அந்த பயலுக்கு செரின்னே. மத்தவடிக்கு நெனப்பு வேறொன்னுமில்ல. அவென் பல்லைகாட்டி என்னத்தியாச்சும் பேசிருந்தா கூட செரிம்பேன். ஆனா அதுவும் இல்லங்குதப்ப எனக்கு ஒன்னும் பெருசா இல்ல….” என்றவள்,
“இப்ப அப்பாரு சொல்லுதாரு. இவியலும் எங்கிட்ட எஞ்சம்மதத்த கேட்டு நிக்காவ. அவேனுக்காவ நா என்னத்துக்கு மூலையில மூக்க சிந்தனும்? அதுவுங்காட்டி அரசரு வீட்டுல யே ராசியந்தேன். நாஞ்சொல்லுததுதேன் அங்கின…” என்று வேறு கிண்டலுடன் கூற,
“அடிப்பாவி…” என பார்த்தான் தேனரசன்.
“இல்ல, இல்ல. இத நா நடக்கவிட்டா என்ன பொம்பள நானு?….” என்ற சீனியம்மாள் வெறி பிடித்தவர் போல மேடையில் இருந்த தட்டு தாம்பாலம் முதற்கொண்டு எல்லாவற்றையும் வீசி வாரினார்.
அத்தனை ஆக்ரோஷத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. திருமணம் நடக்கவே கூடாதென்பது மட்டுமே அவரின் நோக்கமாக இருக்க மண்டபத்தை கலவரமாக சிதறடித்தவர் திருமாங்கல்யத்தை கையில் எடுத்துக்கொண்டார்.
“இத நீயி எப்புடி எம்மவ கெட்டுதன்னு பாக்கன்டா. ஒன்னால குண்டுமணி தங்கத்த வாங்கி போட ஆவுமா எம்மவளுக்கு. ஒழுக்கமத்தவ மவனுக்கு எம்மவளா?…” என்று பேச,
“யே நிறுத்தும்மா, அம்புட்டுத்தேன் மருவாதி. எம்பொண்டாட்டிக்கு என்னத்த வாங்கி போடனுமின்னு நா பாத்துக்கிடுதேன். தாலிய வெச்சிக்கிட்டா கலியாணத்த பண்ண முடியாதாக்கும்?…” என்ற தேனரசன் தவராசனை பார்த்தான்.
“அரசா…” என்றவர் மன்னிப்பை கேட்கும் முன்,
“ஒக்காந்து தாலிய கெட்டினாத்தேன் கலியாணமாக்கும்?…” என்றவன் வெண்மணியை அழைத்துக்கொண்டு அங்கிருந்த பிள்ளையார் முன்பு சென்று நிற்க கயல்விழி மஞ்சள் சரடில் மஞ்சள் கிழங்கை கட்டி கொண்டுவந்துவிட்டாள்.