அதிலும் தவராசன் இறுதியாக பேசி சென்றது இன்னும் சீனியம்மாவின் நெஞ்சை அறுத்தது.
“ஒம்மவ கலியாண முடிச்சி ஒவ்வீட்டுக்கு கூப்புட்டு ஒருவா தண்ணி தர வக்கத்து நிக்கித நீயி அந்த புள்ளைய பேச ஆவுமா? இன்னொரு வார்த்த எம்மவ, மருமவன பேசின சங்கறுத்துவன்…” என்று சொல்லி சென்றிருந்தார்.
அவர் செல்லவும் உறவுகளும் கலைந்துவிட்டனர். திருமண சமையலை எல்லாம் முடித்திருக்க அத்தனையும் வைரமுத்துவின் வீட்டிற்கு மாற்றப்பட்டது.
அங்கே வைத்து அனைவருக்கும் விருந்து என்று சொல்லியிருந்தனர் தவராசனும் வைரமும்.
மண்டபம் மண்டபம் போலில்லாது சீனியம்மாள் செய்த காரியத்தின் விளைவாய் அத்தனையும் கலைந்து கன்னாபின்னாவென்று இரைந்து கிடந்தது.
கூந்தலை அள்ளி கொண்டையிட்டவர் முந்தானை தலைப்பில் முகத்தை, கண்ணை துடைத்துவிட்டு எழுந்துகொண்டார்.
மண்டபத்தைவிட்டு வெளியே வர வைத்தி மட்டும் நின்றிருந்தான் மண்டபத்தில் வேலை செய்பவர்களுடன் பேசிக்கொண்டு.
கூடவே அவர்கள் காலை வீட்டிலிருந்து வந்த காரும் மணமக்கள் அழைப்பிற்கு ஏற்றவிதமாய் முழுவதும் வண்ணவண்ண ரோஜாப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்தபடி நின்றவரை கண்டுவிட்ட வைத்தி சீனியம்மாவின் அருகே சென்றான்.
“ம்மோவ், வீட்டுக்கு போவலாம். வா…” என காரின் கதவை திறக்க,
“அதேன் சாணிய கரச்சி உச்சிலருந்து ஊத்திட்டீயல அம்புட்டுபயலும் சேந்து. இதுல பவுமானமா நா காருல வேற போவனுமாக்கும்…” என்று சொல்லியவர் அதில் ஒட்டியிருந்த ரோஜாப்பூக்களை வெறிகொண்டு பிய்த்தெறிந்தார்.
“ம்மோவ், என்ன செய்யுதா? கிறுக்கா ஒனக்கு?…” என அவரை பிடித்த வைத்தியின் கையை உதறினார்.
அவனை முறைத்துவிட்டு விறுவிறுவென்று செருப்பை கூட அணியாமல் வெறும் காலில் வீடு நோக்கி வேகமாய் நடக்க வைத்தி பெருமூச்சுடன் தனது வண்டியை கிளப்பினான்.
“நாளைக்கி வந்து காருக்கு மீத காச வாங்கிக்கய்யா…” என கார் கொண்டுவந்த ட்ரைவரிடம் சொல்லிவிட்டு தானும் வீட்டிற்கு கிளம்பினான்.
செண்பா அண்ணனும் இருப்பதனால் எதுவும் சத்தமாக பேசிவிடவில்லை. அறை வாங்கிய தடம் வேறு கன்னத்தில் வீக்கத்துடன் எரிந்தது.
“ம்மோவ் ம்மோவ்…” என இருமுறை அழைத்தவன் சீனியம்மாள் திரும்பாததால் மீண்டும் அழைக்கவும், கெஞ்சவும் இல்லை.
வீடுவரை அவருடனே சென்று அங்கே தார்சாவில் சாய்ந்து அமர்ந்துகொள்ள வைத்தியும் வந்து நாற்காலியில் அமர்ந்தான்.
“ஏட்டி கயலு…” என மருமகளை அழைத்த வேகத்தில் வைத்தி அவரை நிமிர்ந்து பார்க்க,
“ஒ மயினிக்காரி உள்ள இருந்தா கூட்டியாடி…” என மகளிடம் சொல்ல உள்ளே சென்ற செண்பகம்,
“நாந்தன் அங்கின மணி வீட்டுக்கு போயி கூடமாட ஒத்தாசையா இருந்துட்டு வர சொன்னேன்… என்றான் வைத்தியலிங்கம்.
“என்னிய கொன்னு கூறு போடமின்னே அப்பேன், மவென், மவ, மருமவன்னு கூட்டு சேந்துக்கிட்டு இருக்கீயளா? அந்த வீட்டுக்கு போயி…” என முகத்தை சுழித்தவர் கண்ணில் நீர் நிறைய மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு அப்படி அழுதார்.
எத்தனை முறை தேனரசனிடம் சொல்லியிருப்போம் உனக்கு வருபவளும் உன் தாயை போல ஓடுவாள் என்று. இப்போது அந்த இடத்தில் தன் மகள்.
திகுதிகுவென்று வயிறெல்லாம் எரிந்தது சீனியம்மாவிற்கு. ஒருபக்கம் தான் பேசியதெல்லாம் வைத்து மகளை எதுவும் செய்வானோ என்னும் எண்ணம் வேறு.