“எனக்குன்னு வாங்குனத முச்சந்திலையா எறக்குவாக? என்ன பேசுதீய?…” என்றாள் வெண்மணி உடனே.
தேனரசன் அவளை திரும்பி பார்க்க அதற்கு மேல் அவள் முறைத்து பார்த்தாள் அவனை.
“ஏத்தா கம்மின்னிரு. பேசிக்கிட்டிருவக்காவள…” என பொன்னி சொல்லவும் அமைதியானாலும் சலிப்பாய் பார்த்தாள்.
“பாத்துக்கிட்டே இருங்க, ஒங்க மவென் என்னிய ஒத்த குத்துச்சட்டிய கூட வாங்க விடமாட்டாவ. எல்லாரும் போவட்டும், இருக்கு…” என பொன்னியின் காதில் வெண்மணி சொல்ல,
“யாத்தே, இருடி…” என சிரித்தார் பொன்னி.
அதற்குள் அரசன் பேசி எதையும் வேண்டாம் என்று சொல்லிவிட உடுத்தும் உடைகள் மட்டுமாவது கொண்டுவந்து தருவதாக கூற சரி என்றான்.
“எங்கய்யன் சம்பாதிச்சது. எல்லாத்தையும் அம்மையா கொண்டுவந்து எறக்குச்சு? ஒவ்வாயில என்னத்த வெச்சிருந்தண்ணே?…” என தனியே வைத்தியை பிடித்து மல்லுக்கு நின்றாள்.
“மணி என்னிக்கா இருந்தாலும் ஒனக்கு தான சேரவேண்டியது. செத்த நாக்கழிச்சி வரபோவுது…” என்று சொல்லவும் தேனரசன் அழைக்க அமைதியாக வந்து நின்றாள்.
மாலை வரை யாராவது இருந்துகொண்டே தான் இருந்தார்கள். வெண்மணியும் கூட்டத்தின் நடுவில் இருப்பதை போல தான் இருந்தாள்.
தேனரசனால் சட்டென யாரிடமும் சுமூகமாக ஒட்டிவிட முடியவில்லை. அதைவிட அவன் வாய் வாஸ்து சரியில்லை.
போகிற போக்கில் ஒருசிலர் உரிமையாக கிண்டல் பேசுகிறேன் பேர்வழி என்று அவனின் அமைதியை சீண்டுவதை போல,
“பொறவு அரசா, செலவே இல்லாம கலியாணத்த முடிச்சிட்ட…” என்று கேட்க,
“இல்லாங்காட்டி நீயி வந்து செய்ய போறியா?…” என பேசுபவர்களிடம் எடக்குமடக்காக தான் பேசவே வந்தது.
அவர்கள் எல்லாம் முன்பு அவனை எத்தனை இகழ்ச்சியாக பேசியிருக்க சட்டென அவர்களை போல துடைத்து போட்டுவிட்டு போக முடியவில்லை.
இரண்டு மூன்றுபேரை பேசிவிட முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு தான் சென்றனர்.
“என்னாலே செய்யுத? நீயி பேசாட்டியும் ஒன்னிமில்ல. கம்மின்னிரு ராசா…” என கையெடுத்து கும்பிடாத குறையாக கதிர் வந்து சொல்லி சென்றான்.
அதன் பொருட்டு அரசனும் அமைதியை கடைபிடிக்க முயல சில நேரம் பார்வையிலேயே அந்த நக்கல் வந்தமர்ந்தது.
‘ஐயோ’ என்றானது அரசனுக்குமே. தானாகவே தன்னுடல்மொழியின் மாற்றத்தை தவிர்க்க முடியவில்லை.
ஒரேநாளில் எல்லாம் மாறிவிடுமா என யோசித்தவன் வாழ்க்கையின் முக்கிய பகுதியே மாறிவிட்டதே.
நினைத்து சிரித்துக்கொண்டான். இதில் அரசல்புரசலாக இரவு சடங்கு என்னும் பேச்சும் அடிபட தேனரசனுக்கு தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
அவனறியாமல் பார்வை வெண்மணியை தழுவி விலக என கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருந்தது.
அந்த பெரிய கரிய கண்களில் அவனின் பார்வையிடலை அழகாய் வாரிக்கொண்டாள் வெண்மணி.
அதற்கு பதில் சொல்லாதவன் புன்னகையும், கன்னக்குழியும் கண்ணோரம் சுருங்கிய சுருக்கங்களும் வெண்மணிக்கு பல கதைகள் சொல்ல,
“என்ன மாமோவ்?…” என்றுவிட்டாள் சற்றே சத்தமாக அடக்கப்பட்ட சிரிப்புடன்.
வெண்மணியின் குரலில் சட்டென அத்தனைபேரும் தேனரசனை தான் திரும்பி பார்த்தனர்.
அதிலும் அவளின் அழைப்பும், அவளை தான் பார்த்திருந்த பார்வையும், இந்த ரகசிய விழி தீண்டல்களை ஊரே கண்டுகொண்டதிலும் குப்பென முகம் சிவந்து போனது தேனரசனுக்கு.
“என்னா கலருல மயினி…” என்று வேறு கயலிடம் வெண்மணி சொல்ல,
“ஓஹ்ஹ்…” என குழலி சொல்ல உடன் இருந்த அவள் வயது பெண்கள் சேர்ந்து ஓஹ் என்று ராகம் போட்டு சிரிக்க தேனரசன் முறைத்து பார்த்தான் தன் வெட்கத்தை மறைக்க முயன்று.
“சேரி சேரி இன்னுமேட்டு நேரமிருக்கு…” என குழலி சொல்ல,
உள்ளுக்குள் தடதடக்கும் நெஞ்சத்தை மறைத்துக்கொண்டு கெத்தாய் அவள் பேச தேனரசனுக்கு தனக்கு தான் இப்படி தோன்றுகிறதோ என சந்தேகமே வந்துவிட்டது.
அங்கே வெண்மணியை கண்ணெதிரே வைத்துக்கொண்டு தேனரசனால் அமர முடியவில்லை.
அவளை கைபிடித்த நிமிடத்தில் இருந்து தன் மனைவி என்னும் உரிமைக்குள் வந்துவிட்டாள் வெண்மணி.
முன்பை போல சீனியம்மாவின் மகளாக காண முடியவில்லை. இப்போது மண்டபத்தில் தன்னை தாங்கி பிடித்தவள் மீது கனிவு கூடியது.
இரவு உணவு முடிந்து கயல்விழியும், குழலியும் வெண்மணியிடம் பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் எல்லாம் கலைந்திருந்தனர்.
தவராசன் இன்னும் வீட்டிற்கு கிளம்பவில்லை. வைத்தி மட்டும் அவ்வப்போது வீட்டிற்கு செல்வதும் வருவதுமாக இருந்தான்.
கயல்விழியிடம் தன்னோடு இரவு வீட்டிற்கு வந்தால் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டான் அவன்.
அதனால் நிம்மதியாக கயல்விழி அங்கே அவர்களுடன் கும்மாளமிட வெளியே வைத்தி, கதிர், வைரம், செண்பகத்தின் கணவன் மாணிக்கம் இவர்களுடன் தேனரசனும் அமர்ந்திருக்க செண்பகம் வந்து சேர்ந்தாள்.
“என்னடி இங்கிட்டு?…” என மாணிக்கம் கேட்க,
“ஒங்கள பாக்க வரல…” என சொல்லியவள்,
“யே கயலு…” என சத்தம் போட்டு அழைத்தாள் செண்பகம்.
தேனரசன் வீட்டின் முன் தார்சாவில் அவர்கள் மூவரும் அமர்ந்திருக்க பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்க கயல்விழி எழுந்து வெளியே வந்தாள்.
செண்பகம் பார்வை எல்லாம் தங்கையின் மீதும், அவளருகில் நின்ற தன் அண்ணன் மனைவியின் மீதும் தான்.
“அங்கின அம்மைக்கு மேலுக்கு சொவமில்லாம கெடக்கு. கஞ்சித்தண்ணி வெச்சிக்குடுக்க ஆவாம இங்கின ஒனக்கு என்ன சோலி?…” என கயல்விழியை கேட்க,
“யாத்தே, சொவமில்லையா? இப்ப வாரன்…” என கயல்விழி தன் மகனின் கையை பிடித்து வெளியே வந்தாள்.
“இந்தா நில்லுங்க மயினி…” என்ற வெண்மணி,
“யே ஒனக்கு மயினின்னு கூப்புட்டா கோரு கொறையுதாக்கும்? கயலுன்னுத?…” என்று தன் அக்காவை அதட்டியவள்,
“ஏண்ணே அவ பேசுதான்னு நீயும் பாத்துக்கிட்டு நிக்கித?…” என வைத்தியையும் ஏற்றிவிட,
“அதானத்தா நல்லா நாலு இறுக்கு விட்டு வாயிலையே சவட்டுனாத்தான செரியா வரும். பேசிக்கிட்டே கெடக்கீய?…” என்றான் மாணிக்கம் வெற்றிலையை மடித்து அதில் சுண்ணாம்பை தடவியபடி.
“இம்பிட்டு பாக்கு போதுமாட்டிருக்கா?…” என வைத்தியிடம் வேறு காண்பிக்க அத்தனைபேருக்கும் சிரிப்பு பீறிட்டது.
“என்னய்யா? மாமேன் கேக்குதேன். சொல்லமாட்டாம சிரிக்கீய?…” என்றவன் அதனை மடித்து வாய்க்குள் அதக்கிக்கொண்டு இரு தொடைகளையும் ஆட்டியபடி,
“பொறவு சொம்பா, அதன் காலம்பறல இருந்து ஒ அம்மை கூடத்தான இருக்க. அந்த கஞ்சிய தண்ணிய ஒனக்கு வெச்சா ஆவாதகாக்கும்?…” என்று சொல்ல செண்பகம் முகம் தணலாக மாறியது.
“ம்க்கும், நீ வெக்கித காஞ்சி கழனியாட்டந்தன் இருக்கு. அதன் அத்தே வெவரமா மருமவள கூட்டியாற சொல்லிருக்காவ. அதுக்கு கூட நீயி லாயிக்கு இல்லன்னு…” என பேசிக்கொண்டே செல்ல அத்தனை பேரும் இருக்க ஒருவரும் செண்பகத்திற்கு ஆதரவாக பேசவில்லை.
“செண்பா வந்து உண்கத்தான. ராத்திரி என்னத்த செஞ்சீயளோ?…” என பொன்னி அழைக்க,
“என்ன பொன்னியாத்தா ரோசிக்காம கூப்புட்டு போட்ட? அவிய எம்மாம்பெரிய ரோசக்காவக. கூப்புட்டா கூட கோரு கொறையும்ன்னுவாக. இங்கின உண்குவாவளா?…” என்ற மாணிக்கம்,
“அதுவும் எம்பொஞ்சாதி. ரோசத்துல கவரிமான எங்கேன்னு இருப்பா பாக்கனும். ஒத்த முடி போவாம சிலுத்துக்குவா. கூப்புட்டு அவியள கொறவாக்காதீய…” என்று அன்றைக்கு தீபாவளி கொண்டாடினான் மாணிக்கம்.
“யேம்ண்ணே எம்புட்டுநாத்து நெனப்பு. விட்டு வெளாசுதீய…” என கதிர் கிண்டலாக கேட்க தேனரசன் நமுட்டு சிரிப்புடன் இதனை பார்த்தான்.
“அட இருடே இப்பத்தேன் வசக்க முடியுமாட்டிருக்கு. இல்லாங்காட்டி எருமமாட்டுமேல பெஞ்ச மழதேன்…” என்றவன் மீண்டும் பழையபடி தெனாவெட்டாக அமர செண்பகத்திற்கு பற்றிக்கொண்டு வந்தது.
வீட்டிற்குள் இதைவிட பேசுவான் தான் மாணிக்கம். ஆனால் ஒருநாளும் அதனை காதில் வாங்கிக்கொண்டதில்லை. மதித்ததும் இல்லை.
இன்று அத்தனைபேரின் முன்பும் பேசியிருக்க செண்பகத்திற்கு தாங்கவே முடியவில்லை.
“எங்கருந்தீய மாமோவ், பொறி பறக்குது…” என வெண்மணி விசிலடிக்க,
“ஏத்தா…” என்றார் தவராசன்.
“இந்த மணி…” என அதட்டினான் வைத்தி.
“சிமித்திர…” என கண்டிப்புடன் பார்த்தான் தேனரசன்.
பொன்னியும், வைரமும், மற்றவர்களும் இதில் வாய் கொடுக்கமுடியாமல் மௌனமாக வேடிக்கை பார்க்க,
“நெசமாத்தான புள்ள….” என மாணிக்கம் சந்தோஷமாக பார்த்தான்.
“சேரி ஒ அம்மைய வர சொல்லு. மருமவப்புள்ளையும் கால்ல விழனுமில்ல. நீயும் நானும் விழுந்தாங்காட்டி…” என்று வேறு சொல்ல அவனை தீயாய் முறைத்துவிட்டு சென்றாள் செண்பகம்.
“ஆனாலும் மனுசென் நின்னு அடிக்காருய்யா…” என கதிர் சொல்லி சிரிக்க,