“என்னத்த சொல்லுவாவ? ஒம்மவனுக்கு கேளு, நூறு பொண்ண காட்டுதேம். அவனுக்கு ஆவாதுன்னு சொல்லிட்டாவ…”
“சேரித்தே இது என்ன புதுசா? இவ இல்லன்னா வேற? சீமையில இல்லாத பொண்ணா?….” என சமாதானம் செய்தாள் குழலி.
“துள்ளத்துடிக்க ஒறவ அத்துட்டு ஓடி போனவ எங்கிட்டோ நல்லாருக்கா. ஆனா…” என்றவருக்கு தேனரசனை பெற்றவள் மீது ஆத்திரங்கள் கூடியது.
அதனுடன் அழுகையும் அப்படி வெடிக்க உள்ளே நடு அறையில் போட்டோவில் சாந்தமான முகத்துடன் இருந்த தங்கப்பனை எண்ணியும் ஆற்றாமை கொண்டார்.
கார்குழலி எத்தனை சமாதானம் சொல்லியும் பொன்னிக்கு ஆறவில்லை. அதுவும் இன்றைய நாளும், வைரத்தின் அந்த வார்த்தையும், அரசனுக்கு பெண் பார்க்க முடியாது என்ற மறுப்பும் அவரை அலைகழித்தது.
இதன் சுவடு எதுவும் இன்றி குளித்து முடித்து சமைக்கவும் ஆரம்பித்திருந்தான் தேனரசன்.
அந்த வீடு முழுவதும் ஊதுபத்தியின் வாசனை நிறைந்திருக்க அத்தனை அறையிலும் விளக்குகள் எரிந்தது.
வெளியே வானம் இருட்ட ஆரம்பித்திருக்க சமையலை துவங்கிவிட்டான் இரவு உணவிற்கு.
தனிமை. பதினைந்து வயதில் இருந்தே தனியானவன் தான். அந்த வயதில் தன்னையும், குடும்பத்தையும் நினையாமல் பெற்றவள் பெரும் அசிங்கத்தை உண்டுசெய்துவிட்டு கண்காணாமல் யாருடனோ ஓடி மறைந்துவிட்டாள்.
அந்த அவமான சுவட்டை தாளவியலாது மகனை பற்றிய எண்ணமின்றி தன்னை தானே மாய்த்துக்கொண்டார் தங்கப்பன்.
ஓடுகாலியின் மகன் என்ற பெயர் மறைந்து அவன் பிறப்பே கேள்விக்குறியாகி இருந்தது.
காலப்போக்கில் அதுவே தங்கப்பன் தான் உண்மையில் அவனின் தகப்பனா என்னும் பேச்சுக்களாக உருவெடுக்க அதுவே தேனரசனை யாரையும் நெருங்கவிடாத அளவிற்கு கொட்டும் தேனீயாக மாற்றி இருந்தது.
கேட்டு கேட்டு படிந்துவிட்ட சொற்கள் அவனை பாறையிலும் இறுக்கமாக இறுக்கிவிட அவனுக்கு பொன்னியை தவிர்த்து அங்கே சொந்தமும் இல்லை, நண்பர்களும் இல்லை, தோள் சாய்ந்து ஆறுதல் அளிக்கும் உறவுகளும் இல்லை.
எத்தனை மாற்ற முடிந்தாலும் அவன் உருவம். அது மட்டும் அவனிடம் மாற்றம் அடையவில்லை.
தாயின் பேரழகை அப்படியே கொண்டு பிறந்திருந்தவன் ஆணழகனாக ஊரினரின் வயிற்றெரிச்சல்களை கொட்டிக்கொண்டான்.
ஆளை மயக்கும் சிறு புன்னகையும் மற்றவரின் வாய்ச்சொல்லுக்கு வசைபாடாய் வயப்பட்டது.
பொன்னிற மேனியும், கருகரு சிகையும், அவனின் நெடு நெடு உயரமும், பதினைந்து வயதில் இருந்து உழைத்து சம்பாதித்து அதில் படித்து வளர்ந்தவன் நடையுடையில் தெறிக்கும் கம்பீரமும் தனியாய் காட்டியது.
எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பதை போல அவனின் வாய் பேச்சுக்கள் மற்றவர்களை வெறுப்பேற்ற, பதிலுக்கு பெற்றவளை கொண்டே அவனை நோகடிக்க முயன்றனர்.
முயற்சி தானே தவிர முடியவில்லை. பதிலுக்கு அவன் பேசும் பேச்சுக்கும், கேட்கும் கேள்விக்கும் முன் நிற்கமுடியாமல் போக அவன் முன் வாய் திறக்கவும் யோசித்து தள்ளி நின்றனர்.
இப்படி அவனை நெருங்கமுடியாத ஒரு வளையத்தை அவன் உருவாக்கி இருக்க பொன்னியை தவிர்த்து யாராலும் அவன் வட்டத்திற்குள் நுழைய முடியவில்லை.
காய்கறி நறுக்க ஆரம்பித்தவன் தனது போனில் பாடல்களை ஒலிக்கவிட்டு வேலையை பார்த்தான்.
தனியாக இருக்கிறாயே என பொன்னி அங்கலாய்க்கும் நேரங்களில் எல்லாம் புன்னகை மட்டுமே பதிலாய் கிடைக்கும்.
என்றைக்கும் தனியாய், தனிமையை உணர்ந்ததே இல்லை தேனரசன். ஒவ்வொரு பாடல்களும் அவனுக்கு துணையாய் தாலாட்ட தனிமை எப்படி?
அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் உயிரற்ற பொருட்களிடம் அவன் பேசாமல் வேலை செய்ததே இல்லை.
இதோ இப்போதும் சமைத்து முடித்து ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு தட்டில் சூடான சாதமும், வெண்டைக்காய் குழம்புமாக அமர்ந்துகொண்டான்.
விரைவிலேயே சாப்பிட்டு முடித்து கழுவி விட்டு வந்தவன் தலையணை போர்வையை அவனின் ஆஸ்தான இடமான அந்த மர ஊஞ்சலில் போட்டவன் புத்தகத்துடன் அமர்ந்துவிட்டான்.
இனி விடியும் வரை அவை மட்டுமே அவனருகே இடம் பிடித்திருக்கும். பாடல் ஒலித்துக்கொண்டிருக்க வெளியே கதவு கொண்டி ஓசை கேட்டது.
புத்தகத்தின் பக்கத்தில் ஒரு பேனாவை சொருகியவன் அதை ஊஞ்சலில் வைத்துவிட்டு வெளியே எட்டி பார்த்தான்.
மாலை வயல்வரப்பில் அவளுடன் வம்பளந்த தேனரசன் இவனில்லை. தனியே அதுவும் ஆள் அரவமற்ற நேரத்தில் வயதுப்பெண் அவள் வந்து நிற்கவும் எட்டி நின்றான்.
“இந்த வீட்டு படில கால வெச்சா எங்கம்மா என்னைய வெட்டி கொழம்பாக்கிடும். சேவல புடிச்சு தாய்யான்னா….” என்றவள் அதிகாரத்தில் பல்லை கடித்தவன்,
“சின்னம்மா…” என்றான் அந்த பக்கத்தில் பொன்னிக்கு எட்டி குரல் கொடுத்து.
“யே ஒமக்கு சேவ புடிக்க கூடவா ஆவாது?….” வெண்மணிக்கு வாய் அடங்கவில்லை.
அவன் தனியே இருக்கையில் வார்த்தையாடுபவன் அல்ல என அறியாதவளில்லையே.
மற்ற நேரமென்றால் ஆட்கள் இருக்கும் நேரமென்றால் அவனிடம் பேசி தப்பித்துவிட முடியாதே என இப்போது பேச அவளை பாராமல் முறைப்புடன் நின்றவன் பொன்னி வர காத்திருந்தான்.
பொன்னிக்கு பதில் கார்க்குழலி வந்து நிற்கவும் பொன்னி எங்கே என பார்வையால் தேட,
“ஏஞ்சின்னம்மா என்னத்துக்கு ஊரெல்லா சேதி சொல்லி பொண்ணு கேக்குத? இந்த சிமித்திரய புடிச்சு எனக்கு கெட்டி வைய்யி. வசப்பாட்டுக்காவது ஆவும்…” என்று கிண்டலாக பேச,
“சேவ புடிக்க வார நேரத்த பாரு. அதேம் ஒவ்வீட்டு மலமாடு ஒங்கண்ணே சுத்துதியான்ல. அவன அனுப்பத்தான? ராத்திரிக்கு பேயாட்டம் ஒலாத்துற?….” என கண்டிக்கவும் செய்தான்.
“எனக்கென்ன இங்கிட்டு வர பயமா? மொத சேவல கொண்டாரும்…” என கை நீட்டவும் அவளின் கையில் சேவலை கொடுத்தான் தேனரசன்.
வாங்கும் பொழுது வெண்மணியின் கண்கள் திறந்திருந்த வீட்டின் உள்ளே ஒருபகுதி ஊஞ்சலும் அதன் பொன் சங்கிலியும் தெரிய விழிகள் விரிந்தது.
தேனாடும் பூவெல்லாம்
பாய் போடும்
ஒருகிளி மடியினில் ஒருகிளி உறங்குது
ஓ மைனா ஓ மைனா
பாடல் ஒலித்துக்கொண்டிருக்க அவளின் பார்வை உள்ளே செல்வதை கண்ட தேனரசன்,
“இந்தா கெளம்பு மொத….” என்று வீட்டை மறித்து நின்றான்.
“இந்த வவிசுக்கொண்ணும் கொறச்சலில்ல…” என்றவள் தோளில் இடித்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.
குழலி அதனை பார்த்து சிரித்தபடி உள்ளே சென்றுவிட பொன்னி வெண்மணி செல்லும் திசையை பார்த்துவிட்டு தேனரசனை பார்த்தார்.
“அவ தனியா வந்து நின்னுட்டா சின்னம்மா. இங்க எவனாச்சும் எதையாச்சும் புதுசா கத கெளப்பக்கூடாதுல. அதேம். ஒங்கண்ணே மவ தான. சொல்லி வைய்யித்தா…” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போனவன் கை பிடித்தவர்,