இப்படி தேனரசன் கேட்பான் என நினைக்கவில்லை. ‘இவள் உங்களுக்கு மகள் இல்லையா?’ என்பதை போன்ற கேள்வியில் மகளை பார்த்தார் சீனியம்மாள்.
‘மகள் சும்மாவே ஆடுவாள், இல்லை என சொன்னால்?’ நினைக்கவே கண்ணை கட்டியது.
“என்ன மசமசன்னு நிக்கிதீய? சொல்லத்தான?…” என தேனரசன் கேட்டதில் அவர் வீட்டிற்குள் செல்ல திரும்ப,
“என்னம்மோவ் தல முழுவிட்ட போலுக்க?…” என்ற கூர்மையான கேள்வி மகளிடமிருந்து வர தவித்து போய் நின்றுவிட்டார் அவர்.
இப்போதும் இந்த கோபம் எல்லாம் தேனரசன் மீது தான் திரும்பியது. அவனால் தானே இத்தனையும் என தீயாய் அவனை முறைத்தவர்,
“என்னலே எவ்வீட்டுக்கே வந்துபோட்டு எம்மவள பேச வெக்கிதியா? நீயெல்லா நல்லாவே…” என சொல்லி பல்லை கடித்துவிட்டு சட்டென வெண்மணியை பார்த்தார்.
“நேத்திக்குத்தேன் கலியாணமாயிருக்கு. இன்னிக்கு நீ பேசுத பேச்சாத்தா? நெஞ்சு நெறஞ்சு போச்சு….” என்றவள்,
“சேரி பேசு பேசு. கேப்பம்….”
“கோட்டிக்கழுத இரேம்டி…” என்றார் சீனியம்மாள்.
“எங்க இருக்க சொல்லுத? என்ன நெனப்பு ஒன்னோடதுன்னு அம்புட்டுக்கிடுச்சே ஒவ்வாயாள. நீயி சொன்னா நாங்க நல்லாயில்லாம போவோமா?…” வெண்மணியும் பேச,
“அவெங்கூட சேந்துக்கிட்டு தெனவெடுத்து பேசுதியாடி நீயி? எவ்வாய புடுங்காம போயிரு…” என மகளையும் மிரட்டிவிட்டு அவர் நகர பார்க்க அதற்குள் கயல், வைத்தி, தவராசன் என அனைவருமே வந்துவிட்டனர்.
“ஏம்ய்யா வீதில நிக்கீய, உள்ள வரத்தான? வாங்க வாங்க…” என அழைத்தார் தவராசன்.
“இந்தாம்மா நிப்பாட்டுங்க மொத. நானும் பாக்குதேன் இவேன் அம்மை அம்மைன்னு பேசுதீய. போனா போவட்டுமின்னு விட்டா?…” என தேனரசன் அமர்ந்திருந்த வண்டியில் இருந்து காலை தூக்கி போட்டு கீழே இறங்கிவிட்டான்.
அவன் இறங்கிய வேகத்தில் அத்தனைபேரும் பதறி பார்க்க வெண்மணி அவனின் கையை பிடித்து நிறுத்தியும் முன்னே சென்றான் தேனரசன்.
“இவேன் அம்மை பாத்துட்டு போன சோலின்னா? நா அத விட்டாச்சு, அதுவும் போயிருச்சு. வருசமாச்சு. அது போனது இன்னும் ஒம்ம மனச விட்டு போவல போல? என்ன என்ன கேக்கனும், கேளுங்க…” என சீனியம்மாவின் முன் செல்ல அவர் பின்னே நகர்ந்தார் அவனின் ஆக்ரோஷத்தில்.
“அது போயிருச்சு சேரி. அதால ஒமக்கு என்ன வந்துச்சு? சொல்லும். இப்ப, ஒவ்வீட்டு ஒல கொதிக்கலயா? அடுப்பெரியலயா? இல்ல அது போனதுக்கு நீய ஒப்பாரி வெக்குதீயலா? இந்நா வரைக்கி இழுத்து பிடிக்கிதீக. என்ன நெனப்பு? சொல்லும்…” என்று கேட்க,
“மருமவனே, அய்யா நில்லு ராசா…” என தவராசன் அவனை நிறுத்த பார்த்தார்.
“லே என்ன மெரட்டுத மாரி கேக்குத. எவ்வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு என்னியவே எதுக்குற. ஒன்ன பெத்தவ ஓடி போனவ தான?…” சீனியம்மாவும் அடங்குவதாக இல்லை.
“இப்பத்தான சொன்னன். இது எம்மாமன் வீடு. பொண்டாட்டி வீடு. நீக ஒன்னும் கொண்டாந்து உண்டாக்குன வீடில்ல. வாழ வந்திருக்கீய. அம்புட்டுதேன்….” என விரல் நீட்டி சொல்லியவன்,
“வாசப்படியா? உள்ளார வரைக்கி போவன். என்ன செய்யுவீய?…” என்றவன்,
“வெண்மணி….” என மனைவியை அழைக்கவும்,
“என்ன மாமா…” என்று அவன் விரித்த கரத்தில் தன் கையை கோர்த்து அவனருகில் வந்து நின்றாள்.
தேனரசனின் கையை பற்றியதுமே அவன் என்னவகையான உணர்வில் இருக்கிறான் என வெண்மணிக்கு புரிந்தது.
தாயை வெறித்து பார்த்தாள். உணர்வுகளை கூறிட்டு குத்தி சாய்த்து மகிழும் இவர் என்னவகையான மனிதம் வாய்ந்தவர் என்று தான் தோன்றியது.
வெளியில் நிமிர்ந்து நிற்பவனின் உள்ளம் படும்பாடு அவன் விரல் நடுக்கத்திலும், விழியின் சிவப்பிலும் உயிருடன் கலந்தவளுக்கு புரிந்துபோனது.
“வா உள்ள போவம்…” என்ற தேனரசன்,
“என்ன மாமோவ், நாயமடிக்கிதத பாத்துக்கிட்டு நிக்கீய. எங்கள வா நெறஞ்சு கூப்புடல…” என்று அவரிடம் கேட்க,
“மவராசனா வாய்யா. வா தாயி…” என்று மகிழ்ச்சியுடன் தவராசன் அழைக்கவும்,
“செத்த நில்லுக…” என உள்ளே ஓடிய கயல்விழி ஆரத்தி தட்டுடன் வர,
“ஏட்டி…” என்றார் சீனியம்மாள்.
“ம்மோவ்…” என வைத்தி தாய் அந்த தட்டை தட்டிவிடும் முன் அவரை பிடித்துக்கொண்டான்.
“அவென உள்ள விட்டா என்னிய உசுரோட பாக்க முடியாது….” என சீனியம்மாள் மறைத்து நிற்க முயல,
“இந்தா….” என்று தவராசன் பல்லை கடித்துக்கொண்டு முறைத்து முன்னால் வரவும் அவரின் அதட்டலில் சீனியம்மாள் நடுங்கினாலும் தேனரசனை உள்ளே அனுமதிக்க கூடாதென்பதில் உறுதியாக இருந்தார்.
“நீயி எடுத்தா….” என்று கயலிடம் தேனரசன் கையசைக்க கயலும் ஆரத்தி எடுத்ததும் இருவருமாக வீட்டின் வாசலை மிதித்தனர் ஒன்றுசேர.
“இந்த வீட்டுல பொறவு எஞ்சொல்லுக்கு என்ன மருவாதி?….” என கத்த ஆரம்பிக்க தேனரசன் தனது போனை எடுத்து பார்த்தான்.
மாணிக்கம் தான் அழைத்திருந்தான். உடனே எடுத்தவன் அங்கே வந்திருப்பதாக சொல்ல,
“இந்தா வந்துட்டேன்….” என மாணிக்கமும் கிளம்பிவிட்டான்.
“மாணிக்கண்ணே வாராக….” என்று வைத்தியிடம் அரசன் சொல்ல,
“நீங்க மொத உள்ள வாங்க…” என தவராசன் மகள், மருமகனை நிலைவாசல் தாண்டி உள்ளே அழைத்து சென்றும்விட்டார்.