அவன் அந்தபக்கம் சென்றதும் சீனியம்மாள் முறைப்புடன் தவராசன் எதிர் வந்து நின்று,
“இன்னொருத்திய சோடியாக்குவேன்னு சொல்லுதாவ மருமவேன், கேட்டுக்கிட்டு கம்மின்னு இருக்கீயலே? ஒமக்கும் அந்த நெனப்புத்தானா? ஒத்த வார்த்த எதுத்து கேப்பீயன்னு பாத்தா எஞ்சங்க அத்துட்டீயலே?….” என்றார் கண்ணீருடன்.
“அவக அப்பிடி கேக்கும்படிக்கி வெச்சது ஆராம்டி? நீயிதான? ஒன்னாலத்தன் எனக்கிம்பிட்டு பேச்சு….” என தவராசன் அப்படியே அவர் பக்கம் திருப்பிவிட சீனியம்மாள் திகைத்து பார்த்தார்.
“மொத கெளம்புதியா? இல்லயா?….” என்றதும் கோபத்துடன் அறைக்குள் நுழைந்தவருக்கு தாள முடியவில்லை.
இப்படி செய்கிறார்களே என்று ஆத்திரங்கள் வந்தாலும் காட்டுவதில் பிரயோஜனமில்லைஎ என்பதில் இன்னும் கோபம் கொண்டார்.
“என்னம்மோவ் சீலய கெட்டிட்டியா?…” என்று கேட்டு உள்ளே வந்த மகள்,
“ம்மோவ், ஒரு நல்ல சீலய உடுக்காம என்னத்தா இது?…” என்று அதிர்ந்து பார்த்தாள்.
“ம்க்கும், பெரிய சீமானு இவேன். இவேன் வெக்குத பொங்கலுக்கு இது போதுமாட்டில்லாம கெடக்கு? போடி இவளே…” என்று கோபமாய் ஒரு பழைய புடவையை கட்டிக்கொண்டு நிற்க,
“அவென் படிச்சவேன், டவுனுல பவட்டா இருக்கானேன்னுதென் மவள குடுக்க நெனச்சேன்…” என்றார்.
“சொம்பா…” என மாணிக்கத்தின் குரல் வெளியே கேட்க,
“சேரி பொறவு பேசத்தான. வாம்மோவ்…” என இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு ஓடினாள் செண்பகம்.
“உள்ள வந்து பைய சொல்லத்தான?…” என மாணிக்கத்திடம் கேட்க,
“ம்க்கும், ஒன்னிய தேடி வீடேறி வருவாக. கெளம்பிட்டா வர வாச தெரியாதாக்கும். விட்டா ஊரையே வித்து ஒலையில போட்டு அவிக்க மாட்டீய?…” என்று அவன் பேச சீனியம்மாள் பதில் கொடுக்கமுடியாமல் நின்றாள்.
“ஆட்டோ நிக்கிது. போயி ஏறு…” என்றவன் சீனியம்மாள் உள்ளே அமரவும்,
“இந்தாடி ஒங்கம்மைய நல்லா புடிச்சிக்க. இல்லாங்காட்டி மனசு மாறி போறவாக்குல குதிக்க எகிறிடாம…” என்று சொல்லிவிட்டு தனது வண்டியை நோக்கி வந்தான் தவராசனுடன் செல்ல.
“பாத்தியாடி ஒம்புருசெனுக்கு ஏத்தத்த? மாமியான்ற மட்டுமருவாதி அத்து போச்சு…” என்று புலம்பிக்கொண்டே வந்தார் வரும் வழியெல்லாம்.
இதில் ஆட்டோக்காரர் இந்த பக்கம் திரும்பினால் கூட அவருக்கும் ஏச்சுபேச்சு தான்.
கோவில் வரை இதுதான் நடந்துகொண்டிருக்க செண்பகத்திற்கு தலைவலியே வந்துவிட்டது கேட்கையில்.
அத்தனையும் மாணிக்கத்தை பற்றிய குறைகள் தான். பேசிக்கொண்டே இருந்தார்.
“இதுல ஒம்புருசென் அவேனுக்கு கொம்புசீவி விட்டாருன்னா அம்புட்டுத்தேன். இப்பிடியாடி எனக்குன்னே வாய்க்கனும்?….” என சொல்லி முடிக்க கோவிலும் வந்துவிட்டது.
“ஒம்மருமவ காலம்பற கெளம்பையில பாத்தனே? அதேன் சொன்னன். கேட்டியா நீயி?…” என சொல்ல,
“நாந்தேன் அவ மொவரையே பாக்கலியே? இதுல அவ என்னத்த கெட்டினா என்ன? ஒம்புருசென் வந்து செஞ்ச அழிச்சாட்டியத்துல…” என சொல்லிக்கொண்டே இன்னும் உள்ளே செல்ல பிள்ளைகள் எல்லாம் அங்கே விரித்திருந்த ஜமுக்காளத்தில் விளையாடிக்கொண்டு இருந்தது.
பொங்கல் வைக்க அடுப்பை தயாராக வைத்திருக்க பானைக்கு மஞ்சள் குங்குமம் பூசிக்கொண்டிருந்தார் பொன்னி.
“வாங்க மயினி, இப்பதேன் குழலி சொன்னா ஆட்டோ சத்தத்த கேட்டாங்காட்டியே சொல்லிட்டா அம்மோவ் வாராகன்னு. ஒக்காரத்தான…” என்று சொல்லியவரை தான் அப்படி பார்த்தார் சீனியம்மாள்.
பட்டும் நகையும், கழுத்தை ஒட்டிய அட்டிகையும் என பொன்னி மகனின் திருமணத்தில் கூட அப்படி இல்லை.
“எம்மோவ்…” என காதுக்கருகே பேச வந்த செண்பகத்தை இழுத்து போட்டு சப்பு சப்பென்று அறைந்துவிடும் வேகம்.
ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பதை போலிருந்தது மகளின் இந்த பேச்சுக்கள்.