“கயலு அந்த சுள்ளியல இதுக்குள்ள வெய்யித்தா. சூடத்த எங்க வெச்சேன்?…” என பையில் தேட கயல் பொங்கல் வைக்க தேவையான சுள்ளிகளை எடுத்து பிரித்து அடுப்பில் வைத்தாள்.
மருமகளும் அவர்களை போலவே இருக்க தான் மட்டும் அந்த இடத்தில் ஒட்டாததை போலவும், அவர்களை விடவும் குறைவாகவும் தெரிந்ததில் குன்றி போய் அமர்ந்திருந்தார்.
மனதெங்கும் இது தான். இன்னும் நன்றாக வந்திருக்கலாமோ என்று கிடந்து உள்ளே அவிந்தது.
மருமகள் கூட கண்டுகொள்ளாமல் இருக்க பொறுக்கமுடியவில்லை அவரால். ஒருவார்த்தை தன்னிடம் பேசுகிறாளா என்று.
அங்கிருந்து எழுந்தவர் மகனிடம் சென்றார் வேகமாக. பின்னோடு செண்பகம் வரவும் இருவரையும் பார்த்தவன்,
“ என்ன ம்மோவ்…” என்றான் வைத்தி.
“ஒங்கிட்ட…” என்னும் பொழுதே தாயின் அருகே ஒட்டிக்கொண்டு செண்பகமும் அதே பாவனையுடன் நின்றாள்.
“அவ கிட்ட நீயி பேசல. எங்கிட்ட சொணங்கிக்கிட்டேதன் கெடந்தா. நாந்தன் ஒங்கூட பேச வேணாமின்னு சொல்லி அதட்டி வெச்சிருக்கன்…” என்று சொல்ல அதிர்ச்சியாய் பார்த்தார் சீனியம்மாள்.
அவர் சொல்ல சொல்ல இருவருமாக பொங்கல் வைக்க ஆவன செய்ய தேனரசனுக்கும் அங்கே ஒரு மனையை போட அமர்ந்துகொண்டான் வெண்மணியுடன்.
கயலும், குழலியும் கேலி பேசி சிரித்தனர். அன்றொருநாள் தேனரசனுக்கு வெண்மணி பொங்கல் வைத்ததை பற்றி சொல்லி கிண்டல் பேச,
“நெசமாவாடி சிமித்தர?…” என்றான் தேனரசன்.
முகமெல்லாம் புன்னகை ஒளிர அப்படி ஒரு நிறைவான அகத்தின் மகிழ்ச்சியையும் அரசன் முகத்தில் அன்று தான் அனைவருமே பார்த்தனர்.
“அன்னிக்கே சொன்ன ஒம்பொண்டாட்டி கவருமண்டு காசுல மொத கவரு அவளுக்குத்தேன்னு. இப்ப நெசத்துக்கே அவதேன் வாங்க போறா. பாத்துக்கிடு…” என பொன்னியும் சொல்ல சீனியம்மாள் பார்த்தது பார்த்தபடி நின்றார்.
“மொத கவரு மட்டுமாக்கும்? இனிமேட்டு மொத்த கவரும் அவளுக்குத்தேன். சாமி போட்ட கணக்க ஆரு மாத்தக்கெடக்கா?…” என்றாள் குழலியும்.
சீனியம்மாவுக்கு மனதில் படும் படியே பேசிவைக்க அவரால் எதிலும் கலந்துகொள்ள முடியவில்லை.
மகளின் இந்த சந்தோஷ முகமே அவரின் மனதெல்லாம் நிறைந்திருந்தது. வாயை அடைத்திருந்தது.
ஏற்கனவே முதல்நாள் வீட்டு வாசலில் வைத்து தேனரசனை சாபம் கொடுக்க போய் மகள் பேசியதில் ஆடித்தான் போயிருந்தார்.
இப்போதும் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் மகள் நன்றாக இருக்க வேண்டுமே என மனது தவித்தது.
“ம்மோவ் பாத்தியா சீல புதுசாட்டம் இருக்குத்தா. மூக்குல கூட கல்லு வெச்சி போட்டுருக்கா? பவுனுலதான போட்டுருந்தா மொத? சங்கிலிய பாரு. பொன்னியாத்தா நவயா இருக்குமாத்தா?…” என கேட்க,
“என்னத்துக்கு எங்கயித்த நவ? குடுத்தாமாட்டுக்கு போடுவாளா ஒந்தங்கச்சி? அவ பூத்திருக்க அம்பிட்டும் கொழுந்து வாங்கியானது பூட்டுனது. அதுவும் அவிய சம்பாதனையில…” என்று குழலி வெடுக்கென்று சொல்லிவிட்டு சென்றாள்.
பொங்கல் வைத்து முடிந்ததும் பூஜைக்கு எல்லாம் படையல் போட்டு வைக்க பெரிய தாம்பாள தட்டில் மாலைகள் கூடவே திருமாங்கல்யத்தையும் எடுத்து வைக்க அதையும் பேச்சற்று பார்த்தார் சீனியம்மாள்.