அவனின் அழைப்பை மறுக்க முடியவில்லை. சரி என தலையசைத்தவர் மகளையும் பார்த்தார்.
“ஒன்னியும் நெனைக்காதீகய்யா…” என்றாள் மகள் புன்னகையுடன்.
அவளின் மலர்ந்த சிரிப்பு மனதை இலகுவாக்க எல்லாம் பின்னுக்கு சென்றதை போலிருந்தது.
“இங்க வாத்தா….” என அருகில் அழைத்து அவளின் தாடையை பிடித்து வருடியவர்,
“எந்தாயி வாரன்ய்யா…” என்றார் மகளிடம் குரல் உருக.
“சேரி பாத்து சூதானமா வாங்க….” என்ற வைத்தி முன்னே சென்றுவிட அதற்கு முன்பே கதிரும், மாணிக்கமும் சென்றிருந்தனர்.
தேனரசன் வெண்மணியுடன் காரில் சென்று அமர்ந்துகொண்டான். வீடு வரும் வரை குழலி, கயல், என பேச்சில் கலந்துகொள்ள வீடு வந்ததும் வாசலில் பொன்னி தயாராக நின்றார் ஆரத்தியுடன்.
ஆலம் சுற்றப்பட்டு அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு வீதியில் அதனை ஊற்றவும்,
“என்ன பொன்னி, நாளைக்கு கறிக்கஞ்சி தான?…” என்றார் பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்.
“பொறவு அது இல்லாங்காட்டி கலியாணமா?…” என்றார் பொன்னியும்.
“என்ன செய்யிவ? செஞ்சி தான ஆவனும். அப்பனுமில்ல. ஆத்தாவும் போயிட்டா. எல்லா ஒந்தலையில விடியுது பாரன்?…” என்றார் அந்த பெண்மணி.
“என்ன சின்னாத்தா பேச்செல்லா சின்னத்தனமாட்டுல அம்புடுது…” பொன்னி முகம் சுருங்க கேட்கவும்,
“பொறவு ஊருக்குள்ள கூலி வேல செஞ்சவேன் கறிக்கஞ்சி ஆக்கி போடுததுக்கு காசுக்கு என்ன செய்யிவியான்? இந்த வண்டி கூட தவணைக்கி வாங்கினதால பேசிக்கறாவ? நீயி எடுத்து போட்டு செஞ்சாத்தேன் ஆவும். இல்லாங்காட்டி…” என்றார் அவர்.