சீனியம்மாள் கோபத்துடன் இரவு உணவிற்கான வேலைகளில் இருந்தார்.
சத்தமாக பாத்திரங்களை எடுத்து போடுவதும் தள்ளுவதுமாக இருக்க வெண்மணி கண்டுகொள்ளவே இல்லை.
“கயலு வட்டல அலம்பிட்டியா?….” என்று பின்பக்கத்தில் வேலையாய் இருந்த மருமகளிடம் குரலை உயர்த்தினார்.
“அலசி கவுத்திட்டேன் த்தே….” என்றவள் அங்கே வெளித்திண்ணையில் அமர்ந்து வெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“அலம்பிட்டா அங்கின என்ன ஒனக்கு சோலிக்கழுத அலையுந்துங்கேன்? உள்ள வாடி…” என அதட்டி கூப்பிட்டார்.
“ம்க்கும், ஒங்கம்மாவுக்கு எப்பத்தேன் சாமி வந்து பூந்துக்குமோ? நாளக்கி விசேசம் ஆவமின்ன என்னன்ன காட்டு காட்ட போவுதோ?…” சலித்துக்கொண்டு கயல்விழி எழுந்து செல்லவும் சீனியம்மாள் மருமகளை முறைத்தார்.
“அவகூட ஒனக்கு என்ன நாயம் வேண்டி கெடக்கு? வீட்டுக்குள்ள சோலியே இல்லியாக்கும்?…”
“ம்க்கும், வேலையத்தவ வெஞ்சனதுக்கு வெந்தாலாம். வாக்கப்பட்டு போற கழுதைக்கி புத்தி சொல்ல ஆவல. அவ கூட சேந்து சிலுத்துக்கற. ஒங்க சிப்பானி இங்க வரைக்கி கிழியுது…” என்று இட்லி பாத்திரத்தை இறக்கி கீழே நங்கென்று வைத்தார்.
“நா எடுக்கன்…” கயல்விழி அதை எடுக்க,
“இந்தா வெங்காய, மொளவாவ கிள்ளி அடுப்புல போட்டுருக்கேன். அத தெவட்டி கொண்டுபோயி ஆட்ட குடு…” என்று சொல்லியவர் தானே சூடான இட்லிகளை பாத்திரத்தில் மாற்றிவைத்தார்.
வெளியே தவராசன் கங்காணியை பிடிபிடியென பிடித்துவிட்டார். இனிமேல் இப்படி புகாரே வர கூடாது என்று சொல்லி எச்சரித்து அனுப்பிவிட்டு உள்ளே வந்தார்.
“கயலு சின்னவள எங்க?…” என்றார் வரும் பொழுதே மருமகளிடம்.
“சேரிம்மா ஆவட்டும்…” என்று ஈஸிசேரில் சாய்ந்து அமர்ந்தார்.
கயல்விழி உள்ளே வர இன்னொரு ஈடிற்கு இட்லியை ஊற்றி அடுப்பில் வைத்த சீனியம்மாள் பருப்பை களைந்து அதையும் இன்னொரு அடுப்பில் ஏற்றினார்.
“எவ்வாய் பாக்காம நாலு வெங்காயந்தக்காளிய நறுக்கு கயலு. நேரமாவுது….” என்று மடமடவென்று வேலை பார்த்தார்.
அவர் சொல்லியதை செய்துவிட்டு பின்கட்டிற்கு வந்த கயல்விழி வெண்மணியை பார்க்க அவள் கார துவையலும், தேங்காய் துவையலும் அரைத்து முடித்து உரலை கழுவிக்கொண்டு இருந்தாள்.
கார துவையலின் மிளகாய் எரிச்சல் அவளின் கையில் தெரிய கிண்ணங்களை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
மகளை பார்த்ததும் முகம் கடுகடுக்க அவள் மேல் இன்னும் கோபத்துடன் தான் இருந்தார் சீனியம்மாள்.
அவரை சட்டையே செய்யாது எண்ணெய் ஊற்றிவைத்திருந்த தூக்கில் இருந்து தன் உள்ளங்கையில் சில துளிகள் விட்டுக்கொண்டவள் கை முழுவதும் தேய்த்தபடி பின்னே சென்று கயலுடன் அமர்ந்தாள்.
“இப்பதான். என்னய்யா? மருந்து பூசவா?…” என்றாள் தகப்பனிடம் அமர்ந்து.
“உண்கிட்டு தேச்சுக்கறன்த்தா. இப்ப வேணா…” என சொல்லியவர்,
“என்னவாம்த்தா சீனி வெடிக்கிதா?….” மகளிடம் ரகசிய குரலில் அவர் கேட்டது மனைவிக்கும் கேட்டுவிட வந்துவிட்டார் முன்னறைக்கே.
“என்னத்த சொல்ல? இவ பாத்த சோலிக்கு? போயும்போயும் அந்த ஆவாதவேன் வீட்டுக்கு கோழி அமுக்க போயிருக்கா. இவ கால வெட்டி ஒடப்புல போட வேணா?….” என வந்து படபடவென பொரிய,
“அங்கின எனக்கென்ன போவனுமின்னு நேந்துக்கிட்டேனா? கம்மின்னிருக்க மாட்டியாத்தா?…” என்று வெண்மணியும் பதிலுக்கு பேச,
“வாய கிழிச்சு தெச்சிப்பிடுவேன் பாத்துக்கிடு. மொவறையும் அவளும். கூறு வேணாமாட்டி? கோட்டிக்கழுத. பேச்சம்புட்டும் ஆவாதபோவாததுதேன்…” என கையிலிருந்த கரண்டியால் மகளின் கன்னத்தை பதம் பார்க்க வர தாயின் கையை பிடித்துவிட்டாள் வெண்மணி.
“இந்தா கம்மின்னிருக்கமாட்டீய? இப்ப என்னத்துக்கு போட்டு அவள ஏசுத? நாளைக்கி விசேசத்த வெச்சிக்கிட்டு பேசுத பேச்சாடி?….” என்று கத்தினார் தவராசன்.
“ம்க்கும், என்னிய பேச மட்டும் வாய் கிழியும். மவன்னா முக்குக்கும், முடுக்குக்கும் முட்டிக்கும். எல்லா யே நேர கெரயம்….” என அங்கேயே அமர்ந்து மூக்கை சீந்த ஆரம்பித்துவிட்டார் சீனியம்மாள்.
“என்னாத்தா?….” தவராசன் மகளிடம் கேட்க,
“அந்த வாயாடி வீட்டு மச்சில நம்ம சேவ மாட்டிக்கிச்சுய்யா. அத புடிக்க போயிட்டு வந்ததுல இருந்து வசவுதேன். இழுத்து வெளுக்குது. அங்கின பொன்னியத்தையும் இருந்தாவ. அக்காவும் இருந்தாவ…” என்று வெண்மணி சொல்ல,
“இம்புட்டுத்தானாக்கும்?…” என்றார் தவராசன்.
“என்ன பேசுதீய? இம்பிட்டுத்தானா? அந்த வீட்டு வாசமின்னுக்க நிக்கலாமா? நாளைக்கி விசேசத்த வெச்சிக்கிட்டு? அந்த ஆக்கங்கெட்ட கூவப்பயலும் பாக்குத எடமெல்லா இவள கெட்டிக்குதியான்னு கேட்டு வெக்க எனக்குல எரியுது…” சீனியம்மாள் பொறும தவராசன் சிரித்துவிட்டார்.
“அவ கெடக்கா, நீ கேளு தாயி…” என்று வாஞ்சையுடன் மகளின் தலையை வருடினார் தவராசன்.
“நவநட்டு எல்லா வேணாம்ய்யா. எனக்கு அந்த ஊஞ்ச மாரியே ஒன்னு வாங்கி தரீயளா? அதே மாரி வேணும். நீட்டமும், அகலமுமா பலவ, பவுனு கலருல சங்கிலி, அந்த சங்கிலில ஆடுத மணி, அத சுத்தி யான பொம்ம எல்லா அதேமாரி. வாங்கி தரீயளா?….” என வெண்மணி கேட்டதும்,
“அப்ப அதத்தேன் கழட்டிட்டு வரனும்….” என சிரித்துவிட்டார் தவராசன்.
“வெளில மயினி கூட என்னமோ ரவசியமா பேசுதியான். அவகளுக்குள்ள என்னவோ? எனக்கென்னத்துக்குன்னு நா வந்துட்டன்…” என்று சொல்லிவிட்டு,
“வந்தவள வான்னு ஒத்த வார்த்த கூப்புடுதாளா ஒஞ்சின்ன மவ? அவ விசேசத்துக்குத்தான அடிச்சுபுடிச்சு மொதநாத்தே வாரன்?….” என வெண்மணியை வம்பிழுக்க,
“விசேசம் என்ன இப்பவேவா நடக்குது? நாளைக்கி சாய்ங்காலம் நடக்கற விசேசத்துக்கு இப்பவே நீ முந்திரிக்கொட்டயாட்டம் வந்து லாத்துற? இதுல நா வேற அழைப்பனும் ஒன்னிய?…” என்றாள் கேலியாக வெண்மணி.
“இதுக்குத்தேன் எனக்கு போன போட்டு அம்புட்டு கூப்புட்டியாத்தா நீயி? இந்த ஏச்சு பேச்சு வாங்கத்தேன் அங்கின உண்காம கொள்ளாம வந்தேனா நானு?….” என்று சீனியம்மாளிடம் செண்பகம் புகாரை வாசிக்க,
“இங்க ஒனக்கு இட்டிலி அவிச்சிட்டேன்டி. மொத உண்கு. மத்தத பொறவு பேசு…” என்று முதலில் தன் மகளை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார்.
“ஒரலுல தான ஆட்டுனது? இல்லன்னா எனக்கு வேணா…” என பின்னே நடந்தாள் செண்பகம்.
“ஆமாடி, இல்லாங்காட்டி ஒங்கய்யாவுக்கு தொண்டையில எறங்குமாக்கும்? வவிசுக்கு மிக்சிய வாங்கி போட்டுட்டு இதுல இன்னுமாட்டு ஆட்டிட்டிருக்கு…” என புலம்பினார்.
“ஆட்டு ஒரலுல இருக்க ருசி அதுல வருமாக்கும்?…” என்று கேட்டபடி அங்கேயே நின்று சூடாக இட்லியையும் சட்னிகளையும் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள் செண்பகம்.