கறிவிருந்து அமோகமாக நடந்துகொண்டிருந்தது. பொன்னியின் வீட்டு மாடியில் தான் அதுவுமே நடந்தது.
செண்பகத்தை அதிகாலையே அதட்டி அழைத்து வந்திருந்தான் மாணிக்கம். செண்பகத்துடன் சீனியம்மாவும்.
செண்பகத்தை ஓரிடத்தில் விடவில்லை. இருவரும் சேர்ந்து இருந்தால் எதையாவது சொல்லிக்கொண்டிருப்பாள் என தன் கூடவே அதை செய், இதை செய் என நிறுத்திக்கொண்டான் மாணிக்கம்.
தவராசன் வா என்றதும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டார் சீனியம்மாள். ஆனாலும் எதிலும் பட்டுக்கொள்ளவில்லை. ஒட்டிக்கொள்ளவும் இல்லை.
“என்ன சீனி, மருமவேன் கூட ராசியாயிட்ட போலுக்க? சேரி சேரி…” என வருபவர், செல்பவர் எல்லாம் கேட்டு சிரித்துவிட்டு செல்ல அது வேறு எரிச்சலாக இருந்தது.
இத்தனைக்கும் வீட்டின் கீழே அடுக்களையில் சென்று அமர்ந்துகொண்டார் எதையோ செய்வதை போல.
வீண் வம்புக்கென்ற தேடி வருபவர்களிடம் பெரிதாய் பதிலேதும் சொல்லாமல் இருந்தாலும் அவரின் கோபத்தை சிடுசிடுப்பான முகமே காட்டிக்கொடுத்துவிட்டது.
“ம்க்கும், ராசியாவலன்னா மட்டும்? இவ பேசுத பேச்சுக்கு கெடச்சான் பாரு…” என கிண்டலும் செய்து செல்ல,
“நா பொறப்படுதன்…” என சிலிர்த்துக்கொண்டு எழுந்தார் சீனியம்மாள்.
“மயினி ஒக்காருங்க. அவிய பேசினா பேசிட்டு போவட்டும். வாய் கெடக்குன்னு என்னத்தையாட்டும் அவிப்பாளுவ….” என்ற பொன்னிக்கு அவரை செல்ல அனுமதிக்க முடியவில்லை.
“ஏத்தா கொழலி…” என மருமகளை அழைக்க,
“அம்மைக்கும் மவனுக்கும் ஒத்த தொண்ட. என்ன ஒன்னு அவுக கொழான்னு நேருக்கா கூப்புடுவாக. நீய நீட்டி மொழக்குதீய…” என சலித்துக்கொண்டு வந்தாள் குழலி.
“சேந்து உண்குத்தா பொன்னியாத்தா? எங்க நவுருத?…” என பொன்னிக்கும் சேர்த்தே இலையை போட பொன்னியின் முகத்தில் சாந்தமான புன்னகை மட்டுமே.
“வசம்ப கூட்டி வாயில தேக்க. ஒரு மட்டு மருவாதி வேணா? மருவாதியா அயித்தன்னு கூப்புடத்தான?…” என நேரடியாக மகளிடம் சொல்லாமல் இலையை பார்த்து சொல்ல,
“எங்கம்மை அம்புட்டு கூறோட வளத்துருந்தா மருவாதியா பேசிருப்பன். பாசக்காரியால வளத்துவிட்டுட்டாவ. என்ன செய்ய? உரிமையா கூப்புட பொன்னியாத்தாதன் செரின்னு ஆவுது…” என்று இலையில் சோற்றை வைத்தாள்.
சீனியம்மாவுக்கு நெஞ்சை அடைத்தது. மகளின் பேச்சும், வார்த்தைகளும். பதில் சொல்லமுடியாமல் பருக்கையை விரல் கொண்டு அளக்க,
“யே மயினி, அவளுக்கு இல்லாத உரிமையாக்கும்? அரசன் பொண்டாட்டி. அவ என்னிட கூப்புட ஒடமப்பட்டவ தான?…” என்று பொன்னியும் சொல்ல,
“அப்பிடி சொல்லுத்தா பொன்னியாத்தா. என்னிய பெத்தவளுக்கு காதுல விழுதான்னு பாப்பம்…” என வெண்மணி கண்ணீருடன் குரல் தழுக்க துள்ளலாக கூற சீனியம்மாவின் கண்ணிலிருந்து துளி நீர் சோற்றில் சிந்தியது.
“உசும்பாம கம்மின்னு உண்கத்தான…” என அதட்டியவள் கறிக்குழம்பை ஊற்றினாள்.
“எங்கய்யன் கெடா கொண்டாரலையே சொல்லுவாரு, அம்மைக்கு ஈரல தவட்டி தந்துருன்னு…” என்று சொல்லி ஈரல் வறுவலை அள்ளி வைக்க சீனியம்மாவுக்கு கண்ணீரில் கவளம் இறங்கவே இல்லை.
“இந்தா செத்த கம்மின்னிருக்கமாட்டியாடி நீயி?…” என்ற பொன்னி சீனியம்மாவின் உணர்வுகளை புரிந்தவராக,
“மயினி கை நெறைய அள்ளி உள்ளாற தள்ளுங்க….” என்றார் சீனியம்மாவிடம்.
வெண்மணியும் அங்கே எதிரே அமர்ந்துவிட்டவள் சீனியம்மாவை தான் பார்த்தபடி இருந்தாள்.
“சீனியாத்தா மவளுக்கு ஒருவா கஞ்சி ஆக்கி போட வக்கிருக்குன்னு நெனச்சா உண்கட்டும் பொன்னியாத்தா. இதெல்லா அவியவியளுக்கா அம்புடனும். நீயேம் சொல்லுத?….” என பொறுக்கமாட்டாமல் சொல்ல சீனியம்மாள் கண்ணீரை துடைத்துவிட்டு உணவை அள்ளி உண்டார்.
கண்ணிலிருந்து கடகடவென நீர் வடிய வெண்மணி அதனை புடவை தலைப்பில் துடைத்துக்கொண்டாள்.
உண்டு கொண்டிருக்கும் பொழுதே வேகத்தில் சீனியம்மாவிற்கு புரையேற சட்டென அவரின் தலையில் தட்டியவள்,
“பைய உண்கத்தான. ஓடியா போவுது? எப்ப பாத்தாலும் அவசரந்தேன். ஒன்னிய எந்த நேரத்துல ஒங்கம்மை பெத்தாளோத்தா?…” என கோபத்துடன் சொல்லியவள் தண்ணீரை எடுத்து நீட்டி சீனியம்மாள் குடித்து முடிக்கும் முன் அத்தனை பேச்சு தாயை.
மகள் நேராகவே கேட்டிருக்க சந்தோஷத்திலும், வைராக்கியத்திலும் நெஞ்சை அடைத்தது சீனியம்மாவுக்கு.
“எம்மூஞ்சிலையா அள்ளி தட்டிருக்கன். எலைய பாத்து முழுங்குத்தா…” என்ற மகளின் அதட்டலில் எடுத்து சாப்பிட்டவருக்கு இன்னும் சுருக்கென்று தான் இருந்தது.
இதுவே தன் விருப்பப்படி மகளின் திருமணம் நடந்திருந்தால் இந்த விருந்து எவரோ போட்டு உண்பதை போலவா இருந்திருக்கும்?
இதுவும் வைரத்தின் ஏற்பாடு தானே? என நினைக்கையில் நெஞ்சில் முள் குத்திய உணர்வு.
இதை கூட செய்யமுடியாத ஒரு இடத்தில் மகள் வாழ்க்கை சிக்கிக்கொண்டதே என்று தோன்றியது.
அவரின் எண்ணவோட்டத்தை கவனித்துக்கொண்டே வந்த வெண்மணியின் முகம் மெதுவாய் கசங்க ஆரம்பித்தது.
அவள் நினைத்ததை போல பொன்னியிடம் சீனியம்மாவும் பேச்சை துவங்கினார் சாப்பிட்டு முடித்ததும்.
“யேம்த்தா நீயாச்சும் சொல்லத்தான ஒம்மவேன்கிட்ட?…” என கேட்க,
“என்னத்த மயினி?…” என்றார் பொன்னி எப்பவும் போல வெள்ளந்தியாக.
வெண்மணி எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு மாடிக்கு சென்றதும் தான் இதையுமே சீனியம்மாள் கேட்டார்.
“இப்ப மணிக்கு சங்கிலி ஒடனே அவசியந்தான? அந்த காசுக்கு வவிசா இந்த விருந்த நடத்திருக்கலாமில்ல? அண்ணே வயசுக்கு அவியளே இவேன தூக்கி சொமக்க ஆவுமா?….” என்று கேட்டுவிட்டார்.
மகளுக்கு தேனரசன் பெருமிதமாக இத்தனை நகை போட்டது மகிழ்ச்சி தான் இருந்தாலும் ஊரின் முன்னே இப்படி சொல்லாகிவிட்டதே என ஆற்றாற்று போனார் சீனியம்மாள்.
அதிலும் அவனிடம் காசை வைத்துக்கொண்டு எதை செய்யவேண்டுமோ அதை அல்லவா செய்திருக்கவேண்டும் என்று தோன்றியது.
தன் காதுபடவே வைரம் இல்லை என்றால் தேனரசனுக்கும், வெண்மணிக்கும் இந்த திருமண விருந்து நடந்திருக்குமா என்று இளக்காரம் கூட்டி பேசி செல்ல தாங்க முடியவில்லை.
அவை வார்த்தைகளாக வந்துவிட பொன்னிக்கு அவரின் கேள்வியில் ஆற்றாமையும், ஆதங்கமும்.
“என்ன பேசுதீய மயினி? சொல்ல வேணாமின்னு பாக்கேன்…”
“யே என்ன இப்ப தப்ப கேட்டுட்டன்? எப்பிடி இருக்க வேண்டியவ எம்மவ? அவெங்கூட சந்தோசமாத்தேன் இருக்கா. ஆனாங்காட்டி அவ அவ…” என்றவருக்கு சட்டென்று எதையும் பேச சொல்ல வார்த்தை வரவில்லை.
“அரசு கவருமண்டு உத்தியோகத்துக்கு போவான் மயினி…”
“அட போத்தா. நா இன்னிக்கி நெலமைய பேசுதன். எங்கிட்டவே நாக்குமேல பல்ல போட்டு சொல்லுதாவ ஒம்மவளுக்கு சின்ன மாமனாரு வீட்டுல செய்யுததுதன் சவுகரியம் போலுக்க? கடேசி வர அவியதேன் கை குடுப்பாவன்னு. இப்பிடி வக்கத்து…”
“ம்மோவ், வாப்பெடிய சாத்துதியா? என்னமோ குன்னிப்போயி ஒக்காந்திருக்கியேன்னு மனசு நோவ வந்தா என்ன பேசுதத்தா?…” என கேட்ட வெண்மணி கண்ணில் கண்ணீரின் தடம்.
சற்று முன் பாசத்தில் பெருகியது என்றால் இப்போது கோபத்தில் கண்ணீர் கரை கடந்தது.
“இப்ப என்னத்தடி தப்பா சொல்லிபோட்டேன் வாப்பெட்டிய சாத்த?…” என்று சொல்லிய சீனியம்மாள்,
“இதுக்கு பொறவு நீயி என்ன இருப்பு இருக்க போறியோன்னு நானே கெதக்குன்னு இருக்கன். வீம்புக்கு அரப்பவுன்னு தங்கத்த ஒங்கழுத்துல போட்டுட்டா எல்லா ஆச்சா?…” என்றவர்,
“அம்பிட்டு ஏச்சு ஏசினாவ இந்த ஊரு மனுசமக்க. ஒருவா கஞ்சி காச்சி அவிய வாயடைக்க ஆச்சா? ஒன்னுத்துக்கும் இங்கின குடுப்பின இல்லியே?…” என சீனியம்மாள் மூக்கை உறிஞ்ச,