அவர் அத்தனை குறுகி போய் தளர்ந்து நின்றுக்க பார்க்கவே சகிக்கவில்லை அவர் பெற்றவர்களுக்கும், மருமக்க பிள்ளைகளுக்கும்.
“ஐயா…” என வைத்தி அவரின் கையை பிடிக்க,
“என்னத்தலே செய்ய சொல்லுதா ஒங்கம்மை? இம்பிட்டு பேசுதாளே, மவ வாழ்க்கன்னு ஒன்னு அவ கண்ணாம்பட்டையில நிக்காமையா கெடக்கு?…” என்று கலங்கி போனார்.
“மாமோவ், விடுமய்யா…” என்ற தேனரசனுக்கு வேறு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.
ஒருவிதத்தில் இதெல்லாம் அவனை கட்டி வைக்கும் தளைகள் போலவே தோன்ற ஆரம்பித்திருந்தது.
அத்தனைக்கும் காரணம் மனைவி மட்டுமே. அவனும் அதை பழகுவதற்குள் படாதபாடுபடவேண்டும் போலிருந்தது.
“இதுக்குத்தன் நா மொதவே சொன்னன் காச நீதேன் குடுத்தன்னு சொல்லுவோமின்னு. கேட்டியாடா நீயி? கோட்டிப்பயலே…” என வைரம் ஒருபக்கம் கத்திக்கொண்டு வந்தார்.
அவர் யாரும் மாடியில் இல்லை என்றதும் கீழே வர பொன்னி அழுதபடி இதனை சொல்ல சீனியம்மாள் அசையாமல் அமர்ந்திருந்தார்.
கேட்டதும் சீனியம்மாவை எரிக்கும் பார்வை பார்த்த வைரம் பொன்னியின் இறைஞ்சும் பார்வையில் இறங்கி வந்தார்.
“மொத அவியள போயி பாரும்ய்யா…” என்றார் பொன்னி.
அவரால் சீனியம்மாவை விட்டு வரமுடியவில்லை. அனைவருமே விட்டு சென்றால் மனதொடிந்து போய்விடுவார் என பொன்னி அவருடன் தான் இருந்தார்.
ஆனாலும் தனது ஆற்றாமையை சொல்லாமல் இல்லை. சீனியம்மாவிற்கு வலிக்காமல் எடுத்து கூற முயன்றார் பொன்னி.
எதுவும் சீனியம்மாவின் காதில் ஏறினால் தானே? மகள் பேசியது, தன் முன்னரே தேனரசன் அவளை தூக்கி சென்றது இவை எல்லாம் கூட அவர் பொருட்படுத்தவில்லை.
நீ உண்ட உணவு என் புருஷன் சம்பாத்தியம் என நெஞ்சை நிமிர்த்தி சொல்லிய மகள் முகத்தின் பெருமிதம் எத்தனை உண்மையோ, சீனியம்மாவுக்கு இத்தனை பேசிவிட்டு அவனின் கை காசில் உண்டுவிடோமே என்று வேறு அவமானம் தின்றதும் நிஜம்.
எங்கே எவ்விடம் அவனை வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தோம் என்று இப்போது நினைத்தாலும் ஞாபகமில்லை.
ஆனால் வெறுத்து வெறுத்தது தான். அதிலும் தன் முன்னே எப்போதும் எதிர்த்து நிற்பவன் மேல் வளரத்தான் செய்தது.
நீ வாழும் வாழ்க்கைக்கு உனக்கு இத்தனை திமிரா என்னும் ஏளனம் அவரை அவனின் நியாயத்தை பார்க்கவிடவில்லை.
தவராசன் வந்து அத்தனை பேசிவிட்டு சென்றுவிட்டார் சீனியம்மாவை. அதில் உக்கிப்போய் நின்றிருந்தார்.
கட்டிக்கொடுத்த பெண்ணின் வாழ்வை நீயே சீரழிக்கிறாய் என்ற வார்த்தைகளுடன் கூடிய கடும் குற்றச்சாட்டுக்கள்.
“நா போறன்…” என சீனியம்மாள் எழுந்துகொள்ள,
“இல்ல மயினி இங்கின இருக்கத்தான. புள்ளைய வரட்டும். தனியா என்ன செய்யிவீக?…” என பொன்னி விடவில்லை.
எங்கே தான் பேசி அவரை சங்கடப்படுத்துவதாக நினைக்கிறாரோ என்று சொல்ல சீனியம்மாவால் கிளம்பவும் முடியவில்லை.
இன்னும் செண்பகம் கீழே வரவில்லை. மாடியில் மாணிக்கத்துடன் வருபவர்களை கவனித்துக்கொண்டு இருக்கிறாள்.
எங்கேயும் எப்போதும் வளையாமல் வேலை செய்யாமல் வலம் வரும் மனைவியை அன்று உண்டில்லை என்றாக்கிக்கொண்டிருந்தான் மாணிக்கம்.
இடையே கதிர் வந்து நடந்ததை அவனிடம் சொல்ல மாணிக்கத்திற்கு கட்டுக்கடங்காத கோபம்.
“இந்தம்மாவ என்னதென் செய்யிதது? இதெல்லா ஆவட்டும். பொறப்படவும் பேசிக்கிடுவம். நீயி போயி ஒந்தம்பி கூட இரு….” என அவனை அனுப்பி வைத்தான் மாணிக்கம்.
கதிர் கீழே வருகையில் வைத்தியுமே தேனரசனிடம் மன்னிப்பை கேட்பதை போலிருக்க,
“நீயி சொல்லுடி…” என்றான் தேனரசன் வெண்மணியிடம்.
இத்தனை பெரும் சேர்ந்துகொண்டு தன்னிடம் மன்னிப்பை கேட்க நெருப்பில் நிற்பதை போலிருந்தது.
கோபத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளை தாங்கிவிடுபவனால் கண்ணீருடனான மன்னிப்பை தாங்க முடியவில்லை.
“அவக பேசினதுக்கு நீய கேப்பீயலா? இதெல்லா நல்லாவா இருக்கு?…” என்று சொல்லிவிட்டான் தேனரசன்.
“இனிமேட்டுக்கு இத பேச வேணா. விடுங்க…” என முடித்துவிட்டான்.
வைத்தியும், கயல்விழியும் வெளியேற தவராசன் அங்கேயே அமர்ந்துவிட்டார் மகளுடன்.
மகளின் மனது எத்தனை தவித்திருக்கும் தாயே தன் கணவனை பேசுகையில் என்று அவளுடன் இருக்க வெண்மணி முகத்தில் சிறு புன்னகை.
“என்னாத்தா வெசனமாருக்கியா?…” என்று கேட்க,
“இல்லங்கய்யா என்னத்துக்கு தவிக்கிதீரு? அதெல்லா போச்சு…” என்று புன்னகையுடன் சொல்லியவள் குரலில் இன்னும் சிறு சுணக்கம்.
“அம்மை பேசிச்சே?…” என்றதும்,
“அவக இனிமேட்டுக்க பேச வேணாமின்னு சொல்லிட்டாவ. வேற பேசத்தானப்பு?…” என்றவள்,
“ஆமா அந்த ஊஞ்ச என்னிக்கு வருதாம்? ஒன்னியும் தாக்கல காணும்?…” என பேச்சை மாற்றினாள் வெண்மணி.
இரவு வரை அனைவரும் அங்கே தான் இருந்தனர். விருந்து எல்லாம் முடிந்திருந்தது.
அன்றைக்கு வைரமே வீட்டினரிடம் சொல்லிவிட்டார் செலவுகள் எல்லாம் தேனரசன் செய்தது தான் என்று.
தவராசனுக்கும், வைத்திக்கும் பெருமை என்றால் சீனியம்மாவுக்கு தலைதூக்க முடியவில்லை.
“இம்பிட்டு காச எங்க வெச்சிருந்தியான்?…” என்று கேட்ட செண்பாவின் வாயில் அடிக்காத குறையாக மாணிக்கம் ஒருவழி செய்துவிட்டான்.
“மருவாதியா கூப்புடு. அவென் இவெங்க? ஓங்கி வாயிலையே நாலு மிதிதன் பாத்துக்கிடு…” என்று சொல்ல வாயை மூடிக்கொண்டாள்.
அன்றைக்கே இரவு ஊஞ்சலை கொண்டுவந்து இறக்கிவிட்டனர். முதல்நாள் தவராசன் கேட்கையில் பாதி வேலைகளுக்கு மேல் முடித்திருந்ததால் மீதியையும் உடனே முடித்து ஊஞ்சல் வந்துவிட்டது.
“அதேன் ஒரு ஊஞ்ச இருக்குல. இத நா கொண்டு போவட்டா?…” என செண்பகம் கேட்டாள்.
அத்தனை அழகாய் இருந்தது ஊஞ்சல். அவளால் கண்ணை திருப்பமுடியவிலை அதிலிருந்து.
“அது மணி கேட்டு செஞ்சது…” என வைத்தி சொல்ல,
“பொன்னியத்த வீட்டுல இல்ல. அதேன் கேட்டா. இப்பத்தேன் ஊஞ்ச வீட்டுலயே இருக்கால…” என வாய் குறையாமல் செண்பகம் சொல்ல மாணிக்கத்திற்கு கோபம்.
“அவ நவநட்டு வேணாமின்னு இத கேட்டா. நீயி?…” என்று வைத்தியும் விடவில்லை.
செண்பகத்தால் அதற்கு பதில் சொல்லமுடியவில்லை. வைத்தியிடம் பேசினால் வேலைக்கு ஆகாதென்று தவராசன் பக்கம் திரும்பினாள்.
“எப்போவ் எனக்கு வாங்கி தரமாட்டீயலா?…” என செண்பகம் பங்குக்கு வர,
“மாமோவ் வாங்குனா ஒம்ம வீட்டுலதேன் தொங்கவிடனுமாட்டிருக்கும். எவ்வீட்டுல எடமில்ல…” என்று சொல்லி பல்லை கடித்தான் மாணிக்கம்.
“எங்கய்யன்கிட்ட நா கேக்குதன்…” என அடங்கிவிட்ட குரலில் செண்பகம் கேட்க,