பொன்னிக்கும் சிரிப்பு தான். புன்னகையுடன் அவள் சொல்வதை கேட்டு தலையசைத்தவர் பூஜைக்கு என மாலைகள் வாங்கி வரும்படி அவளை அனுப்பி வைத்தார்.
குழலி வருவதற்குள் பானையில் இருந்த அரிசியும் பருப்பும் நன்கு குழைந்திருந்தது.
“சக்கரய போடத்தானத்தா?…” என வெண்மணியிடம் பொன்னி சொல்ல,
“சீவிட்டேன் பொன்னியாத்தா. இந்தா…” என்று கீற்றாய் சீவி இருந்த நாட்டு வெல்லத்தை எடுத்துக்கொண்ட வெண்மணி வண்டி சத்தத்தில் திரும்பி பார்க்க தேனரசன் வந்திருந்தான்.
அவன் பார்வை மொத்தமும் வெண்மணி மேல் தான். அவள் செய்யும் அலப்பரைகள், அதில் துள்ளும் அவள் மனநிலைகள் என அவனை வசீகரித்தபடியே இருந்தது.
“இந்தா ஒம்ம மவென் தேனு வந்தாச்சு…” என கிண்டல் பேசினாள் வெண்மணி.
“அவேன் அரசன்டி…” என்றார் பொன்னி பெருமிதத்துடன்.
“செரிதன், மொத இனிப்ப போடுவம்…” என்றவள்,
“வா மாமோவ்…” என தேனரசனையும் சேர்த்து இனிப்பை அள்ளி பானையில் போட சொல்ல வெல்லத்தை அள்ளி அதில் கலந்தான் தேனரசன்.
மனம் நிறைந்துவிட்டது இந்த நிகழ்வில். இருவரும் எப்பவும் இப்படி மனமொத்து குறையாத சந்தோஷத்துடன் நிறைவாய் வாழவேண்டும் என வேண்டிக்கொண்டார் பொன்னி.
வைரமும் வந்துவிட அவருடன் பேசியபடியே குழலி மாலைகளுடன் வந்து சேர்ந்தாள்.
“நாந்தன் வர சொன்னன்ய்யா. இப்ப என்ன? அங்க அரிசி வாங்க ஆளுங்க அப்பிடியே நெம்பி தட்டுதாக்கும்?…” என்று முறைத்தவர்,
“கொழலி…” என்று மருமகளை அழைக்க,
“யாத்தே இந்த வூட்டு மனுசமக்க சங்காத்தமே வேணாங்கிட்டு போனா என்னங்குது. எங்கம்மை வராங்காட்டி அம்மில வெச்சி நசுக்கிப்பிடுதன். எப்ப பாரு கொழான்னு…” என்று சொல்லியபடி மாலைகளை, தேங்காய், பழங்களை எல்லாம் தட்டுல் அடுக்கினாள்.
வெண்மணி பொங்கல் பானையை சூட்டோடு தூக்கி அருகிருந்த குழாயடிக்கு சென்று சுற்றிலும் தேங்காய் நாரால் ஈரம் தொட்டு தேய்த்து விட்டாள்.
அடுப்பு கரி மொத்தமும் சுற்றிலும் கலைய நீரை சிறிது சிறிதாய் ஊற்றி சூட்டோடு அதனை தேய்த்து பொங்கலில் தெறித்துவிடாமல் பக்குவமாக கழுவி முடிக்க குழலி வந்துவிட்டாள்.
பானையை சுற்றிலும் மீண்டும் விபூதி, குங்குமம், சந்தானம், மஞ்சள் வைத்து பொட்டுக்களை இட்டு முடித்து சந்நிதானம் தூக்கி சென்றனர்.
கொண்டுவந்த பூஜைபொருட்களை எல்லாம் கொடுத்து சாமியை கும்பிட்டு முடிக்க தேனரசன் வெண்மணியை தான் பார்த்தான்.
அவள் இதழ்கள் எதையோ முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. பலமான வேண்டுதல் என நினைத்தவன் மனது கனிந்தது.
“சிமித்தர…” என அவளின் காதருகே மெல்லிய குரலில் அழைக்க நிமிர்ந்தாள் இல்லை.
“எப்போவ்…” என சிரித்துக்கொண்டான் தேனரசன்.
தேர்வில் வெற்றி என்றதற்கே இத்தனை ஆர்ப்பாட்டமா என எண்ணி சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.
அவனின் வெற்றியை அமரிக்கையாக உள்ளேயே வைத்துக்கொண்டான் தேனரசன்.
இதில் வெற்றி மட்டும் போதாதே? இன்னும் எத்தனை இருக்கிறது? அதற்குள் அவளின் செயல்கள் எல்லாம் ஆர்ப்பரிப்புடன் இருக்க தவிர்க்க தோன்றவில்லை.
இதில் இன்னும் எத்தனைபேர் அவளிடம் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார்களோ என்று வேறு நினைக்கவும் அடக்கமாட்டாமல் சிரிப்பு பொங்கியது.
மனக்கண்ணில் சீனியம்மாவை முறைத்து அதிகாரமாய் நிற்கும் மனைவியை நினைத்து பார்த்தவனால் பொங்கி வரும் புன்னகையை அடக்கமுடியாமல் போக சத்தமிட்டு சிரித்தும்விட்டான்.
“யோவ், அதேன் சாமி கும்புடுதன்ல? கொஞ்சமாச்சும் கூறு இருக்காய்யா?…” என்று திரும்பி அவனை முறைத்தவள்,
“கம்மின்னிருக்காம, சாமி நா பேசுதத கேக்க வேணா?…” என சொல்லிவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டாள்.
“பையடி, சாமி ஓட போவுது…” என்று கிண்டல் பேசியவன் குரல் அவளின் காது மடலை சூடாய் தீண்ட,
“கோவில்ல வெச்சி என்னத்தய்யா பேசுத? நவண்டு நில்லு…” என்று தானே இரண்டடி முன்னே நகர்ந்தவள் பின் தன்னைப்போல அடுத்த நிமிடம் அவனுக்கருகே வந்து நின்றுகொண்டாள்.
“என்னடி சிமித்தர?…” தேனரசன் சிரிக்க,
“ஒனக்காண்டி வேண்டுதன், சேந்து நிக்கனுமில்ல?…” என்று சொல்லி நின்றவள்,
“என்னத்தையாச்சும் கேளுய்யா. கம்மின்னு நிக்காம…” என்றும் பொரிந்தாள் அவனிடம்.
வேறு என்ன கேட்டுவிட முடியும் தேனரசனால்? மனதெல்லாம் எல்லாம் கிடைத்துவிட்ட நிறைவு.
எதையும் கேட்டு பெற அவன் என்றும் நினைத்ததில்லை. எதுவும் இல்லையென்ற பொழுதில் கூட மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் கூட கேட்டதில்லை.
கோவிலுக்கு வருவான், இப்படியாவது தன்னை வைத்திருக்கிறானே என்று இறைவனுக்கு நன்றி சொல்வான்.
அவ்வளவே அவனின் உணர்வு. அதற்கு மேல் எதுவும் வேண்டும் என என்றும் நினைத்து வேண்டியதில்லை.
இப்போது தோன்றுவது ஒன்றே ஒன்று மட்டும் தான். அவனுக்கான உறவாய் அந்த இறைவன் கொடுத்தவளை என்றென்றும் தன்னுடனே இதே மகிழ்ச்சியுடன் வைத்திருக்க ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டான்.
தீபாராதனை முடித்து கற்பூரம் வர கண்ணில் ஒற்றிக்கொண்டதும் நெற்றியில் பூசாரி பூசிவிட்ட பிரசாதத்துடன் பொங்கல் பானையில் இருந்தவற்றை பரிமாறி எடுத்து தந்தாள்.
“சேரி நீயி இருந்து பைய வாத்தா, நா பொறப்படுதன்…” என்று வைரம் கிளம்ப,