“என்னிய பெத்தவ போறப்ப வீட்டுல இருந்த நவநட்டுலருந்து, காட்டு குத்தவக்கி குடுத்த காசு, பேங்குல அப்பாரு சேத்து வெச்சிருந்ததுன்னு அம்புட்டையும் தொடச்சி, வழிச்சி, லவட்டிட்டு போச்சு. அது போவவும் ஒத்த துட்டு எங்கட்ட இல்ல…”
“அது போன வேவத்துல எங்கய்யனும் என்னிய ஆருமத்து நிறுத்திப்புட்டு போய் சேந்துட்டாரு. மவென நட்டாத்துல வுட்டு போறமே, அவென் என்ன செய்யிவியான்னு ரோசிக்கவே இல்ல அந்த மனுசெனும்…”
“அப்பைக்கே நா ஐயோன்னு நிக்கலடி. இப்ப சாமியாட்டம் எனக்கு நீயி தொணையா நிக்கித. எனக்கென்ன? நா ராசாடி. நீயி வெசனப்படாத…” என்று சொல்ல வெண்மணிக்கு அவனின் பேச்சில் விழியோரம் கண்ணீர் துளிர்த்தது.
“இந்தாடி ச்சீ…” என அவளின் கண்ணீரை துடைத்தான் தேனரசன்.
“ஒன்னிய கெட்டின நாள்லருந்து என்னிய அழவிடுத நீயி…” என அதற்கும் அவனையே சொல்லியவள்,
“சாமி நமக்கு ஒரு கொறவும் வெக்காது பாத்துக்கிடு…” என்று சிரித்தாள்.
“இப்ப சந்தோசந்தான?…” என தேனரசன் கேட்க,
“எனக்கென்ன? அது கெடக்கு கொறவில்லாம…” என்று முகமெல்லாம் விகசித்து புன்னகையுடன் கூறினாள் வெண்மணி.
“மொத பொங்கச்சோற எங்கம்மை வாயில திணிக்கனும் மாமோவ். வா வா…” என அவனை கூட்டிக்கொண்டு கிளம்ப அங்கே என்னென்ன செய்ய போகிறாளோ என்று வண்டியை கிளப்பினான் தேனரசன்.
இருவருமாக தவராசன் வீட்டு வாசலில் வந்து வண்டியில் இறங்க அங்கே அவர்களுக்காக காத்திருப்பதை போல அவர் தார்சாவில் நின்றிருந்தார்.
“வா தாயி, வாய்யா அரசா…” என முகம் கொள்ளா புன்னகையுடன் வரவும் சீனியம்மாள் உள்ளிருந்து எட்டி பார்த்து அங்கேயே நின்றார்.
“ப்போவ், ஒம்மவ இனிமேட்டு அதிகாரி பொண்டாட்டி. எம்புருசென் VAO. வாய தொற…” என்று தூக்குவாளியில் இருந்த பொங்கலை எடுத்து தகப்பனுக்கு ஊட்ட,
“சந்தோசந்த்தா. சந்தோசம்…” என்று அவருக்கு மகிழ்ச்சி.
வாசல்படியில் இருந்து இறங்கி ஓடிவந்து அரசனை அணைத்துக்கொண்டார் தவராசன்.
“சாதிச்சிட்டய்யா. எனக்கு மனசே நெறஞ்சு போச்சு…” என்று அவனை ஆரத்தழுவி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
தேனரசனும் புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டவன் வெண்மணியை பார்த்தான்.
“மயினி உள்ளாற என்னத்த நவுத்திட்டிருக்கத்தா? இங்கின வரத்தான?…” என்று தெருவே கேட்கும்படி சத்தம் போட கயல்விழி புடவைத்தலைப்பில் கையை துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“சோறு வடிச்சன் மணி. ஒனக்காண்டிதன் இம்பிட்டு நேரமும் தார்சாவுல நின்னன்…” என்று வந்தவள் வெண்மணி நீட்டிய பொங்கலை வாங்கி உண்டு அரசனுக்கும் தன் வாழ்த்தை தெரிவித்தாள்.
“இனிமேட்டு ஆராச்சும் எம்புருசென என்னவாச்சும் சொல்லட்டும். பொறவு தெரியும்பாரு இந்த மணி ஆருன்னு…” என்று சீனியம்மாவிடம் சொல்ல அவர் முறைத்தார் வெண்மணியை.
விருந்தன்று மகளை பார்த்தது. அதன்பின்னர் அவள் அவரிடம் முகம் கொடுக்கவே இல்லை. இன்றுதான் பார்த்தார் மகளை.
“என்னம்மோவ் மொறக்கித? ஒனக்கெல்லாம் இந்த பொங்கச்சோறு எறங்காதுல. நா குடுத்து நீயி வேணாமின்னு பவுமானம் பண்ணி? என்னத்துக்கு? அதேன் நானே ஒனக்கு நீட்டல…” என்று சொல்ல இன்னும் பொடுபொடுவென வந்தது சீனியம்மாவுக்கு.
“நா என்ன ஒனக்கு எதிரியாடி? இம்பிட்டு பேசுத?…” என்று வெளியே வந்துவிட்டார் சீனியம்மாள்.
“நா ஆரையும் நெனக்கல. ஆனா ஒந்நெனப்பு என்னன்னு எனக்கு தெரியுமில்ல…” என்றாள் வெண்மணி.