“அவமானத்துல நிக்கிததுனா என்னன்னு எனக்கு தெரியும்டி. அத திருப்பி காட்ட நேரமாவாது. ஆனா வேணா. ஒருத்தேன் பட்ட கஷ்டத்துல கெடச்ச வலிய இன்னொருத்தனுக்கு தரனுமின்னா அவென் மனுசெனா இருக்கமாட்டியான்…”
“எங்கிட்ட வாரப்ப நா என்னத்தையாச்சும் செய்யிவெனோன்னு அஞ்சி நிப்பானுவள, ஒத்த பார்வை பாப்பானுவள. அங்க நா மனுசெனா நிக்கிததுதேன் அவனுகளுக்கான பதிலு. எனக்கு அது போதுமாட்டிருக்கு வெண்மணி…” என்று அவளின் முகம் பார்த்து ஆத்மார்த்தமாக கூறினான் தேனரசன்.
“என்னமோ போய்யா, நீயி செய்யாட்டி என்ன? நா செய்யுதன். நீயி என்னிய பாரு, அதுவே எனக்கு போதுமாட்டிருக்கு…” என்று சொல்லியவளின் கன்னம் கிள்ளியவன் மனதும் அதில் மயங்கி போனது.
இதோ வேலைக்கு கிளம்பி வாசலில் வந்து நின்று அவனின் புல்லட்டில் ஏறி அமர்ந்தான் தேனரசன்.
வேலைக்கு என பணம் கொடுத்து வாங்கியிருந்தால் நிச்சயம் இந்த நிறைவும், நிமிர்வும் அவனுக்கு இருந்திருக்கவே இருக்காது.
சுத்தமான மனிதனாக எதற்கும் குறைவில்லாதவனாக அவன் தனியாய் சாதித்திருந்தான். வாழ்ந்து காட்டியிருந்தான்.
நெஞ்சில் ஆர்ப்பரிக்கும் அந்த மனமகிழ்ச்சி. இதோ அத்தனைபேரின் பார்வை மாற்றம் அதுவே அவனை இதழோரம் புன்னகையை நெளியவிட செய்தது.
சில நாட்கள் முன்பிருந்த அதே மனிதர்கள். ஆனால் பார்த்த பார்வையும், அதில் உண்டான மாற்றமும் அவனுக்குள் தைக்கத்தான் செய்தது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மீண்டும் ஒருமுறை நினைத்துக்கொண்டான் தேனரசன்.
இங்கே மனிதர்களுக்கு, அவர்களின் தனிப்பட்ட உணர்விற்கு மதிப்பு எதுவுமில்லை என மீண்டும் மீண்டும் சுயநலம் கொண்டவர்கள் காட்டிக்கொண்டே இருந்தனர்.
மனதை அமைதிப்படுத்திக்கொண்டான் தேனரசன். ஒரு நொடி தோன்றி எழுந்த மமதையை காலடியில் போட்டு நசுக்கியவன் வெண்மணியை திரும்பி பார்த்தான்.
தான் எதுவுமில்லாத ஒருவனாக தேனரசனாக இருக்கையில் எதையும் எதிர்பாராது தன்னை தன் வாழ்வோடு பிணைத்துக்கொண்டவள்.
மணம் புரிந்த பின்னர் மனம் புரிந்துகொண்ட உள்ளங்கள் வார்த்தைளின்றி அங்கே உறவாட மெல்லிய கண்ஜாடை அவளிடம்.
மற்றவர் எதிரே பேசிவிடும் வார்த்தைகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் விதமானதாக இருக்க, இந்த மௌனங்கள் இங்கே இருவருக்கு மட்டுமே புரிய கூடிய பரிபாஷையாக அவர்களை வசீகரித்தது.
அந்த வசியத்தில் இதழ்விரியா புன்னகை செய்தவன் ஆளுமையாய் அவன் வாகனத்தை நகர்த்தி சென்றான்.
அந்த வீதியை கடக்கும் வரை, அவன் அங்கிருந்து கண்ணிலிருந்து மறையும் வரை வெண்மணியின் பார்வை அங்கேயே தான் இருந்தது.