“நீயி என்ன செய்யிதன்னு பாக்கத்தேன். பாத்துட்டன்த்தா. இப்ப போ…” என்று சொல்லவும் ஒன்றும் புரியாமல் செண்பகமும் சென்றுவிட்டாள்.
உள்ளேயும் இவ்வளவு நேரம் செண்பகம் பொன்னியிடமும், வெண்மணியிடமும் புலம்பல் தான்.
தான் வரவில்லை என்றாலும் தன்னை, தன் பிள்ளைகளை பார்க்க சீனியம்மாள் நினைக்கவில்லையே என அத்தனை ஆற்றாமை.
மீண்டும் உள்ளே வந்து அதை தான் பேச ஆரம்பிக்க வெண்மணியின் பொறுமையும் குறைந்தது.
“இம்பிட்டு அளக்குதியே? நீயி போயி அம்மைய பாக்கத்தான?…” என்று வெண்மணி கேட்டுவிட,
“ம்க்கும், ஒம்மாமேன் சொன்னாரு, இதுல பாத்துக்கிடு ஒ அம்மை எம்பிட்டு பாசத்த வெச்சிருக்குன்னு. வரலாங்காட்டி நீயும் கம்மின்னு இரு. ஒனக்கென்ன ரோசமில்லியான்னு கேட்டு போட்டாக. இந்த அம்மையும் அதுக்கேத்தாங்காட்டிதன் நடக்குது…” என மூக்கை உறிஞ்சினாள்.
“போதாமட்டுக்கு இந்த மனுசென் எம்பொண்டாட்டிய மருவாதியில்லாம பேசி போட்டாவ. நீயி போனா எனக்கு அங்கின என்ன மருவாதி? நானா அவியளான்னு பாத்துக்கிடுன்னு வேற சொல்லிட்டாரு. நா என்னத்த போவ?…” என்றும் அழுதுகொண்டே தான் இருந்தாள்.
வெண்மணிக்கு ஒரு பக்கம் பாவமாகவும் இருந்தது. இன்னொருபக்கம் சிறிது நாட்கள் இதுவும் சரி என்று தான் தோன்றியது.
இல்லை என்றால் செண்பகத்தின் பேச்சுக்கள் சீனியம்மாவை இன்னும் தூண்டிக்கொண்டே இருக்கும்.
“இந்தம்மைக்கு எம்புள்ளைய கூட கண்ணுல அம்புடல பாரு மணி? நா என்னத்த பெருசா கேட்டுப்பிட்டன். இம்பிட்டு நா ஒம்மவ, மருமவேன் கண்ணுக்கு தெரியலையாக்கும்னு கேட்டது குத்தமாத்தா?…” என்று சொல்ல வெண்மணிக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது.
“இந்தா ஒவ்வாப்பெட்டிய சாத்துதியா? சும்மா போட்டு மொனமொனன்னு. போயி அங்கின ஒக்காரு. நா ஆக்கிட்டு வாரன்…” என அவளை அனுப்பி வைத்தாள் வெண்மணி.
“இந்த புள்ளைய என்னன்னு நெனைக்க மணி?…” என பொன்னிக்கே ஆயாசமானது.