வெண்மணி காண்பித்த பெயர் பலகையை பார்த்தவனுக்கு கண்கள் தாம் கலங்கி போயின.
கூடவே அவள் அணிந்திருந்த உடையில் படிந்திருக்கும் அந்த கடற்கரை மணல். நெற்றியில் வீற்றியிருந்த கோவில் பிரசாதம் எல்லாம் அவனுக்கு புரிய வைக்க தேனரசனுக்கு தாளமுடியவில்லை.
இத்தனை அன்பு அவன் சுமக்க இயலாததாக இருக்க மூச்சடைத்தது. யாரையும் பார்க்காமல் அவன் விருட்டென்று உள்ளே சென்றுவிட்டான்.
அத்தனை கூட்டத்தையும் கவனித்தும் கவனியாத வெண்மணி ஒரு சுத்தியலை எடுத்து வந்து வாசலில் ஆணியடித்து தான் வாங்கி வந்திருந்த பலகையை அதில் மாட்டி தள்ளி நின்று அழகு பார்த்தாள்.
“ஒம்மேல கடுங்கோவத்துல இருக்கன். நாளக்கி விடியவாட்டி வந்து பேசிக்கிடுதன். இப்ப நீயி உள்ள போவத்தான…” என்றாள் கயல்விழி.
“நாளக்கிதானம், இப்ப போயி அதிகாரிய பாருத்தா. பலவயெல்லா மாட்டிருக்க. பொறவென்ன?…” என குழலி அந்த சூழலை இலகுவாக்க முயன்றாள்.
வெண்மணிக்கு அடுத்து வீட்டில் அப்பா, அண்ணன் வந்து மீண்டும் துவங்குவார்களே என்றிருந்தது.
“அவியள எல்லா நா பேசிக்கிடுதன். நீயி போவேன்…” என கயல்விழி சத்தம் போட வெண்மணியும் தலையை அசைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
“இந்தாடி, மணி நில்லுங்கன்ல. இம்பிட்டு நேரமிட்டு நா கெடையா கெடந்து அல்லாடிருக்குதன். நீயன்னனா…” என்ற சீனியம்மாவை திரும்பி பார்த்த வெண்மணி கை நீட்டி பேச்சை நிறுத்தினாள்.
“மயினி இனிமேட்டு இவகட்ட நா ஒத்த சொல்லு பேசினா என்னிய அவிய கால்ல கெடக்கறத எடுத்து சவட்ட சொல்லு…” என்று சுளீரென சொல்ல,
“மணி, ஏட்டி…” என்றார் சீனியம்மாள்.
இத்தனை பிரச்சனையிலும் பேசமாட்டேன் என்று என்றும் சொன்னதில்லை வெண்மணி.
பதிலுக்கு பதில் பேசி மல்லுக்கு நிற்கும் பெண் இப்போது இப்படி தன் முகத்தை ஒருமுறை பார்த்ததோடு சரி.
பேசமாட்டேன் என்று வைராக்கியத்துடன் சொல்ல சீனியம்மாள் விக்கித்து போனார் மகளை பார்த்து.
காவல்நிலையத்தில் நிற்க வைப்பாராமே? என மனது கிடந்து தவித்து போனது வெண்மணிக்கு.
அதனை கேட்கையில் எவ்வளவு தூரம் அவன் தவித்திருப்பான்? எண்ணுகையில் தன் மீதே அத்தனை கோபம் வெண்மணிக்கு.
இன்னுமே பேசியிருப்பார்களே? எத்தனை பேச்சுக்களையும் தாங்கி அமைதியாக இடத்தைவிட்டு நகராமல் இருந்தான் என்றால் பேச்சுக்களின் கனம் எத்தனையானதாக இருந்திருக்கும்?
அவன் எழுந்து செல்லமுடியாதபடிக்கு என்றால் நினைக்கவே மனதெல்லாம் பற்றிக்கொண்டது.
“மணி…” என்ற சீனியம்மாவை பாராமல்,
“மயினி என்னமேட்டும் பேசனுமின்னா எவ்வீட்டுக்குள்ளாற வந்து பேசு. அது ஆரா இருந்தாலுந்தன்…” என்ற வெண்மணி,
“பொன்னியாத்தா மாமேன்கிட்ட சொல்லிரு. வாரன்…” என்றவள் பையில் இருந்த சுருள்களை எடுத்து பொன்னியிடம் தந்தாள்.