“ஒவ்வொருத்தன் சவட்டையும் பேத்துவுட்ருந்தா அப்ப தெரிஞ்சிருக்கும். ஒரு வேலக்கின்னு போயி அந்த பதவிக்கின்னு செத்த அடங்கி போனா ஏறி மேயுதானுவ…” என்று சொல்லியவன் முகத்தில் அத்தனை ஆக்ரோஷம்.
“எம்பொண்டாட்டிய நா பேசிக்கிட்டுதன். சொல்லிக்கிடுதன். இப்பிடி ஒன்னொன்னுத்திக்கும் எங்கிட்ட மன்னிப்பா கேட்டு மருவி நிக்காதீரும். எவ்வாய கெட்டி போடுததே அதுதன். அந்த ஒன்னுக்குத்தன் ஒம்ம வீட்டம்மா நேத்திக்கி வீடு போயி சேந்துருக்கு…” என்று கண்ணில் தீப்பொறி பறக்க சொல்ல,
“ஏலே அரசா…” என பதறினார் பொன்னி.
“விடுத்தா. எம்பிட்டுக்குத்தன் செரின்னு அடங்கி போவ. இந்த இவளுக்காண்டிதன் அம்பிட்டையும் கேட்டுக்கிட்டு போனன். என்னமோ தூக்கி உள்ள வெப்பெனுதே? என்ன வெக்கிதுன்னு நானும் பாக்குதன்…” என்று சொல்ல தவராசன் மட்டுமல்ல அனைவருமே அவனின் கோபத்தில் மிரண்டு பார்த்தனர்.
வெண்மணியும் ஒரு நொடி முகம் மாறி திகைத்து நின்றுவிட்டாள் அவனின் பேச்சில்.
திருமணத்தின் பின்பு அவனின் நிதானத்தை மட்டுமே பெருமளவு பார்த்தவளுக்கு மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக தேனரசன் சண்டியர் பேச்சு பேச அவனை பார்த்துவிட்டு தன் வீட்டினரை பார்த்தாள்.
வைத்திக்கு முகமே சின்னதாகி போனது. கயல்விழியும், பொன்னியும் கையை பிசைந்துகொண்டு பார்க்க,
“அப்பிடி போடுடா தம்பி அரசா. இதேன் சேரி, இதத்தன் நா எப்படான்னு பாத்தன்…” என மாணிக்கம் அவனின் பேச்சில் கை தட்டி சந்தோஷிக்க,
“பொறவென்னண்ணே, அந்தம்மா பேச நா கேக்க. என்னமோ அவக மவள மயக்கி ஏமாத்தி கட்டிட்டு வந்துட்டமாட்டுக்கல பேசுது…” என்று பேச பேச விழி பிதுங்கியது அனைவருக்கும்.
அவன் கேட்ட கேள்விகள் எதற்கும் யாராலும் பதில் சொல்லமுடியவில்லை. அதனைக்கொண்டு அமைதியாக நிற்க,
“மாமோவ்…” என வெண்மணி அவனின் கையை பிடித்தாள்.
“இருடி…” என்றவன்,
“வெண்மணிய நா பேசிக்கிட்டுதன், இனிமேட்டுக்கு அவ என்ன செய்யனுமின்னு நா பாத்துக்கிடுவன். அவள ஏசுததோ என்னவோ நா பண்ணிட்டு போறன். மொத ஒங்க வீட்டம்மாவ கம்மின்னிருக்க சொல்லுங்க. இனிமேட்டுக்க பேசுனாவன்னா மறுக்கா நா என்ன பேசுவன்னு தெரியாது…” என்று சொல்லி வெண்மணியிடம்,
“அவகள ஒக்கார சொல்லி என்ன வேணுமின்னு கேட்டு கவனி. நா கெளம்புதேன்…” என்று சொல்லிக்கொண்டே,
“உசுர குடுத்து படிச்சு வாங்குன வேலைய இந்தம்மா ஒத்த நா என்னிய உள்ள தள்ளி புடுங்குமாம். நா இனிமேட்டு பாக்குதேன். எவ்வேலைய என்னத்த சொல்லி புடுங்குதுன்னு…” என்று பேசிவிட்டவன் வெளியே சென்றுவிட்டான்.
“போதும்ய்யா…” வெண்மணிக்கு கோபமே வந்துவிட்டது.
அவன் செல்லவும் அவனின் பின்னால் சென்றவள் தார்சாவில் நின்ற வண்டியை தேனரசன் வெளியேற்றும் போது மறித்து நின்றாள்.
“எம்புட்டு பேசுத நீயி? என்னிய பேசத்தான. என்னத்துக்கு அவியள பேசுத?…” என கேட்க,
“ஒன்னிய அவக முன்னுக்கா என்னத்துக்கு நா பேச? போயிட்டு வந்து பேசிக்கிட்டுதன்…” என்றவன் அப்போது தான் இங்கே நடப்பவற்றை கவனித்தபடி வெளியே இருந்த கிழவியை கவனித்தான்.
அதிலும் வீட்டு வாசலுக்கு அருகில் சுவற்றோடு நின்று காதை வைத்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்க,
“கெழவி…” என்ற தேனரசன் அழைப்பில் திடுக்கிட்டு திரும்பி எட்டி பார்த்தது.
அவர் பார்த்த நொடி அதற்கே காத்திருந்ததை போல வெண்மணியை இழுத்து முத்தமிட்டு விலகியவன்,
“கேக்க மட்டுந்தான செய்யித. இப்ப பாத்துக்கிடு. நெறையுதா? குளுந்துச்சா?…” என்று கேட்க தேனரசன் தன்னை பார்த்ததோடு அவன் செய்ததையும் பார்த்தவருக்கு அதிர்ச்சியில் எப்புலனும் வேலை செய்யவில்லை.
“போவமாட்டியா நீயி?…” என்றவன் மீண்டும் வெண்மணியை இழுக்க,
“யாத்தே…” என குடுகுடுவென ஓடினார் அவர்.
“இனிமேட்டு இங்கிட்டு ஒங்காது, கண்ணு திரும்புச்சு உள்ள தூக்கிட்டு போயி ஒக்காத்தி வெச்சிருவன் நா குடும்பம் பண்ணுதத கூடவே இருந்து பாருன்னு…” என சத்தமாக சொல்ல கிழவியின் காதில் அதுவுமே விழுந்தது.
“ராத்திரிக்கி எங்கிட்ட வா பேசிக்கிட்டுதன்…” என பல்லை கடித்தாள் வெண்மணி.
“நா என்னத்துக்கு வர? எம்பொண்டாட்டி என்னிய தேடி வருவா. போடி சிமித்தர…” என இடக்காக சொல்லிவிட்டு செல்ல வெண்மணிக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
அதற்குள் வீட்டினுள் இன்னும் சலசலப்பு. பொன்னி தேனரசன் பேசியதற்கு வருந்தி பேச தவராசன் அதற்கு காரணம் தன் மனைவியும், மகளும் தான் என சொல்ல என்று மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தனர்.